30 ஆகஸ்ட் 2011

ஈகைத் திருநாள் நற்செய்தி!



ஈகைத் திருநாளை கொண்டாடும் தீன்நெறிச்செல்வர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இனிய ரமலான்:

இத்தனை நாட்களாய் பசித்திருந்து விழித்திருந்து தனித்திருந்து தொழுதிருந்து மறை விரித்திருந்து, ஜக்காத்தும், சதக்காவும் நிறைவாய் கொடுத்திருந்து, மனமும், மெய்யும் உண்மை மகிழ்வினில் அமிழ்ந்ததாய் தவக்கோலம் தரிக்கச் செய்து தனக்கே உரிய அற்புத பேரின்பத்தை அல்லாஹ்வின் அருளை சொறிந்து சென்றிருக்கிறது இனிய ரமலான்.

மெய்யாகவே ரமலானின் தனிச்சிறப்பும் உயர்வும் எந்த மாதத்திற்கும் இல்லை அது போல் எந்த மாதமும் தராத பேரின்பத்தையும், மனமகிழ்வையும், அமைதியையும், குணநலப் பேணல்களையும், நற்செயல்களையும் மற்றும் தூய சிந்தனைகளையும் தந்து கனிவும் இனிமையும் கலந்து நம்மை சுகந்தமாய் அது சூழ்ந்திருந்தது.

அந்த ரமலானில் அல்லாஹ்வும், அண்ணல் நபிபெருமானார் (ஸல்..) அவர்களும் சொன்னபடி அதனை மகிமைபடுத்தி அதனால் மகிமை அடைந்திருக்கிறோம். நம் உள்ளங்கள் மட்டட்ற்ற மகிழ்வின் திகைப்பிலும், நிறைவான திருப்தியிலும் இருக்கிறது. ஆனாலும் நம்மால் இயன்ற அளவு ரமலானின் புனிதச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தியும் இந்த காலகட்டத்தில் இருக்கும் கலாச்சார மாற்றத்தாலும், நவீன ஊடக தீயசக்திகளாலும், பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடக்கும் தீமைகளினாலும் இன்னும் பல சூழல்களாலும் மனிதனுக்கே உரிய பலகீனத்தாலும் நம்மில் பல தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவைகளை எல்லாம் பொருட்படுத்தாது.. எங்கள் இறைவா! கருணையாளனே! உன் அளப்பறிய கருணையினால் எங்கள் அனைவரின் செயல்பாடுகளையும் அங்கீகரித்து எங்களுக்கு உன் அருளின் முழுமையையும், உன் அருட்தூதர் (ஸல்..) -ன் பேரன்பையும் அள்ளித்தருவாயாக! எங்களுக்கு உன்னையன்றியோ அல்லது உன் வாசலையன்றியோ பிறிதொரு தளம் கிடையாது ஆகையால் எங்களை கிருபைக்கண்கொண்டுப்பார் நாயனே! என்று அவனின் அருளுக்காய் இறைஞ்சுவோமாக!

நன்றிக்கடன்:

இந்த மகிழ்ச்சி நிறைந்த இவ்வேளையில் நமக்கு இந்த உயர்வான மார்க்கத்தை அளித்த பேரிறைக்கு நன்றி செலுத்தும் அதே வேளை அந்த பேரிறையின் பெருங்கிருபையாய் இந்த பூவுலகில் வந்துதித்து தங்களுக்கு நிகரான பேரறிவாளர் யாரும் இலராய் தரணியில் தோன்றி அழகான மார்க்கத்தை நம் போன்றவர்களுக்கு வகுத்து அதை நிலைபெறச் செய்ய மனிதகுல வரலாற்றில் எந்த தீர்க்கதரிசியும் (நபியும்) பெறாத அவ்வளவு இடுக்கண்களையும், துன்பங்களையும் நமக்காக பெற்று பிறகு அதில் வெற்றியும் கண்டு நீங்களும் நானும் பின்பற்றும் அழகு மார்க்கம் அளித்த பெருமானார் நாயகம் (ஸல்..) த்தை நாம் உளமாற நாயகமே உங்களுக்கு எங்களின் மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு.. நீங்களே மனித சமுதாயத்தில் எல்லோரைவிடவும் எங்களின் மீது மெய்யன்பு செலுத்தியவர்கள்! எங்களுக்காய், எங்கள் நல்வாழ்வுக்காய், எங்களின் ஆத்ம நலனுக்காய் எங்களின் இம்மை, மறுமைக்காய் தாங்கள் எவ்வாரெல்லாம் சிரமப்பட்டீர்கள், எவ்வாறெல்லாம் தியாக வாழ்வு வாழ்ந்தீர்கள் என்று அவர்களை நாம் நன்றிப் பெருக்கோடு நெக்குருகி மனமார போற்றிட வேண்டும்,

மேலும் நம் பெருமானார் அவர்களை பெற்றெடுத்த அன்னை ஆமினா (ரலி) தந்தை அப்துல்லாஹ் (ரலி) வளத்தெடுத்த பாட்டனார் அப்துல் முத்தலீப், பால்கொடுத்த அன்னை ஹலீமா(ரலி) மிகப்பெரும் பலமாக இருந்த சிரிய தந்தையார் ஆருயிர் அபூதாலிப் அவர்கள், நிகரில்லா முறையில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்கு மனத்தெம்பூட்டி மிகப்பெரும் பக்க துணையாய் இருந்த அருமை மனைவியார் அன்னை ஹத்தீஜா நாச்சியார் (ரலி), அருமை மகளார் அன்னை ஃபாத்திமா நாச்சியார்(ரலி), மருமகனார் அலி (ரலி), பேரர்களான தியாக சீலர்கள் இமாம் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) மற்றும் அனைத்து திருக்குடும்பத்தினர்கள், அன்னவர்களின் அருமை தோழர்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), மற்றும் அஷ்ரத்துல் முபஷ்ஷராக்கள், முதல் அன்றைய பயங்கர சூழலில் முதலில் நபிகள் நாயகம்(ஸல்..) த்திற்காக இஸ்லாமிய பரப்புரைக்கு தனது இல்லம் வழங்கிய அருமை அர்க்கம் (ரலி), இஸ்லாத்தினை ஏற்று நமது நாயகதிற்கு உறுதுணையாக நின்றதற்காகவே மிகமோசமாக துன்புறுத்தப்பட்டு உயிர் துறந்த அனைத்து ஆண், பெண் தியாக சீலர்கள், பிற்காலத்தில் போரிட்டு வீரத் தியாகம் செய்த மேன்மக்கள், வழி வழியாக இந்த இஸ்லாத்தினை நம்வரை கொண்டு சேர்த்த உத்தம பெரியார்கள் என அல்லாஹ்வின் அருள் சூழ்ந்த அத்தனை மேலான ஆன்மாக்களுக்கும் நாம் அனைவரும் மிக..மிக.. அளவின்றி சொல்ல முடியாத அளவு வார்த்தையில்லாத அளவு கடமை பட்டிருப்பதால் அவர்களையும் அன்பொழுக நன்றியோடு நாம் நினைத்து பார்ப்போமாக! இவைகளெல்லாம் குறைந்தபட்ச நன்றி உணர்வாவது இருப்பவர்கள் செய்யது ஆகும்.

இறைஞ்சுதல்:

இந்த பெருநாளில் நாம் எல்லோரும் அருள் நபிநாதர் எண்ணப்படி பரந்த மனதுடன், விரிந்த சிந்தனையுடன், நான் நினைத்தது தான் இஸ்லாம் என்ற குறுகிய வட்டத்துள் சிந்திக்காது அதன் அகமியங்களை உணர்ந்திடவும், ஆன்ற அறிவினை பெற்று மகிழ்வெய்திடவும் முயல்வோமாக! இஸ்லாத்தின் பெருமேதைகளை மதித்து அவர்களின் தத்துவ முத்துக்களை போற்றி அவைகளை நம் வாழ்வு மேம்பட பயன்படுத்தி சிறப்புறுவோமாக!

சமுதாய ஒற்றுமையுடன் சீறிய முறையில் நட்புணர்வுடன் அனைத்து மக்களோடும் அன்பும், பாசமும், நேசமும் பாராட்டி அண்ணல் நபிகள் நாதரின் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைக்கு வலு சேர்ப்ப்போமாக!

நம் வாழ்வில் மகிழ்ச்சி என்றென்றும் சூழட்டுமாக! நம் அனைவரின் வாழ்வு இன்னும்.. இன்னும் மேம்பட்டு அமைதியான பெருவாழ்வை நாம் வாழ்வோமாக! நாம் வாழ்வதோடு மட்டுமின்றி நம்மால் முடிந்தவரை பிறரையும் மகிழச்செய்யும் அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோமாக! பிறர் வாழ நாம் சந்தோசப்படும் உயரிய பண்பு நம்மில் தழைத்தோங்குமாக! நமது இந்தியத் திருநாடும், இவ்வைகயகமும் அமைதியுடன், செழிப்புடன் திகழட்டுமாக! இந்நன்னாளில் வல்ல இறைவன் இவ்வனைத்திற்கும் அவனது அருள் தூதரின் பொருட்டாலும் மற்ற அவனின் நேசர்களின் பொருட்டாலும் இதை நமக்கு என்றும் குறைவின்றி அருள்வானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்புடன்,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா (ராஜா முஹம்மத்)

ஃபுஜைராவிலிருந்து (அமீரகம்)

29 ஆகஸ்ட் 2011

இதயங்களில் இளம்பிறை விதைப்போம்!


எனது தந்தையார் மரியாதைக்குரிய ஜனாப். ஜாபர் சாதிக் அவர்களோடு கரம்பற்றி அவ்வளவாக உலகம் தெரியாத அந்த ஏழு அல்லது எட்டு வயதில் திருச்சியா அல்லது மதுரையா என்று கூட இன்றும் எனக்கு நினைவுக்கு வராத... நான் அழைத்துச்செல்லப்பட்ட‌ அந்த மிகப்பிரமாண்டமான முஸ்லீம் லீக்கின் கூட்டம் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.. மிக நீளமான மேடை.. மேடை எங்கிலும் மிக நீண்ட வரிசையில் தலைவர்கள்.. நடுநாயகமாக சிராஜுல் மில்லத் மற்றும் சம்சீரே மில்லத் உட்பட பல தலைவர்கள், மேடையிலிருந்து எங்கோ நான்.. அங்கிருந்து பார்க்கையில் மேடை மிகச்சிறியதாக எங்களுக்கு தென்பட, என் தந்தையாருடன் அமர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஊடாகத்தான் பார்க்க முடிந்த அந்நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தானியாய் பதிந்திருக்கிறது.

நிகழ்ச்சிக்கு முன் நடந்த பேரணி, தொடரோட்டாம்.. எல்லாம் நேற்றய கனவில் நான் கண்டது போல என் நெஞ்சத்திரைகளில் இப்போதும் வந்து வந்து போகிறது, அது என்னில் நான் அறியலேயே மனரீதியாக நிகழ்த்திய முஸ்லிம் லீக் சார்பான ஆராய்ச்சிகளுக்கும்.. தேடல்களுக்கும்.. காரணமாகி அதன் மீது எனக்கு மரியாதையும்.. பற்றையும் விதைத்தது என்றால் மிகையில்லை! இவ்வளவுக்கும் நான் பள்ளிப்பருவங்களிலோ அல்லது கல்லூரி கால முன்நாட்களிலோ கூட லீக் உடனான தீவிர களப்பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டவனில்லை அதுவெல்லாம் முடிந்து சுய சிந்தனையுடன் எப்போது நான் சமூக ஓடையில் கலக்க நேர்ந்ததோ அப்போது என் சிந்தனையில் ஒளிர்ந்த.. மிளிர்ந்த ஓரியக்கம் என்றால் அது முஸ்லிம் லீக் தான்.

சமூக அரங்கில் நாங்கள் தான் இப்போதைய மக்களின் விடிவெள்ளிகள் என்றும் இஸ்லாமியர்களுக்காவே இறைவனால் அனுப்பப்பட்ட இரட்சிக்க வந்த தேவதூதர்கள் என்றும் இழந்த உரிமைகளை மீட்டுத் தருகிறோம்.. உடைத்த பள்ளியை கட்டப்போகிறோம்.., இளைஞர்களே! வாருங்கள்.. வாருங்கள்.. என்றெல்லாம் எத்தனையோ புதுப்புது இயக்கங்கள்.. கழகங்கள்.. ஜமாத்துக்கள்.. எல்லாம் வந்து அழைத்த போதிலும் அவைகளையெல்லாம் நாடாமல் நான் தேடி சென்ற இயக்கம் முஸ்லீம் லீக் என்ற தாய்சபை என்றால் அதன் பின்னனியில் நான் சிறுவயதிலிருந்தே என் பாட்டனார் வாங்க படிக்க நேர்ந்த மணிச்சுடர் பத்திரிக்கையும் அதில் ஒவ்வொரு பிரச்சனை குறித்து முஸ்லிம் லீக்கின் கருத்தும்.. நிலைப்பாடும்.. நம் தலைவர்களின் செயல்பாடுகளும் தெரிந்திருந்ததும் மேலும் புத்தகங்கள் மூலமாகவும் மற்றும் முதிர்ந்த‌ சரித்திரம் தெரிந்த பெரியவர்களை சந்தித்து நான் பெற்ற வரலாற்றறிவும் தான் என்பதே இங்கு உண்மை!

மேற்படி நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததன் பின்னணி என்னவென்றால்..சமூகத்தில் சாதாரணத்திலும் சாதாரண குடிமகனான என்னை.. என் சிந்தனையை லீக் எப்படி ஆக்கிரமித்தது என்ற ஆராய்ச்சியும்.. இப்போதுள்ள சூழலில் நாம் எப்படி உத்வேகத்தோடு சமூகத்தில் நம் இயக்கத்தை புதுப்பித்துகொள்ள வேண்டும் என்று சிந்தனையும் தான். ஆக இளம்பசும் நெஞ்சில் இடப்பட்ட பொறியும்.. தொடர்ந்து என் சிந்தனைக்கு பலவகையிலும் கொடுக்கப்பட்ட இயக்கத்தின் தகவல்களுமே அதற்கு பிரதானம்.

அவ்வாறாயின் இன்றைய இளம்நெஞ்சங்களில் இளம்பிறையை எவ்வாறு பதிப்பது பழைய வரலாற்றுச் சுவடுகளோ தழிழ் இஸ்லாமிய சமூகம் கடந்து வந்த பாதைகளோ.. நேற்றைய அரசியல் பக்கங்களோ.. நம் கண்ணியமிக்க தலைவர்களின் முற்போக்கு சிந்தனைகளோ அவர்கள் இந்த சமூகத்தினை வழிநடாத்திய பாங்குகளோ.. தெரியாத அல்லது தெரிவிக்கப்படாத மேலும் தாய்சபை சார்ந்த அதனோடு கூடிய சூழலோ நெருங்காத மற்றும் ஏதேதோ இயக்கங்களால் கவரப்பட்ட அதுவே நமக்கு நலன் காக்கும் என்று பொய்யெண்ணம் புகுத்தப்பட்ட நமது இளம் தலைமுறையினர் இங்கே வந்து நிலைபெறுவது எங்ஙனம்.. அவர்கள் எல்லாமே தாமாக முன்வந்து நமது இயக்கத்தினை பின்பற்றி நிற்பதோ உடன் பிறைக்கொடி ஏந்தி வலம் வருவதோ இயலாத காரியம் அவ்வாறெனில் அவர்களை ஈர்க்கும் அல்லது இழுக்கும் கைங்கரியம் தான் யாது!

நமது சமுதாயத்தை தகர்க்க இனி தான் யாரும் வரவேண்டியது என்பதெல்லாம் இல்லை. பலரும் பலவித முகபாவங்களோடும், பொய்த்தோலோடும் மக்களை மயக்கி தயக்கம் இன்றி இயக்கம் நடத்திவரும் இந்த காலகட்டத்தில் நமது பிரச்சார யுக்தி நவீன மனோதத்துவ முறையில் அதி தீவிரப்படுத்தப்பட வேண்டும்.. மக்களை, இளைஞர்களை, பெண்களை குறிப்பாக நான் முன்பு கோடிட்டுக்காட்டியது போன்று இளந்தளிர்களான மாணவச் செல்வங்களை மனோ தத்துவ ரீதியில் அணுக வேண்டும். அவர்களின் இதயங்களை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொண்டே இருக்கும் தகவல்கள் தரப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் கண்கள் பதிக்கும் இடங்கள்.. காதுகள் வாங்கும் ஒலிகள், மனம் நாடும் விசயங்கள் என இவைகளில் நம் இயக்கத்தின் செய்திகள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்தக்காலங்களில் மேடை பேச்சுக்களும், செய்தித் தாள்களும் தான் மக்களை சேரும் அல்லது சந்திக்கும் வகையாக இருந்தது ஆனால் இன்றோ பற்பல விதங்களில் மக்கள் தொடர்பு மிகைப்பட்டு கொண்டே இருக்கிறது. உண்மையை சொல்லப் போனால் இன்று பொய்க்காலூன்றி ஆடிக்கொண்டிருக்கும் இயக்கங்களின் தற்காலிக வளர்ச்சிக்கு மேடைகள் மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமின்றி அவர்கள் இது போன்ற நவீன சாதனங்களை பயன் படுத்திக்கொண்டது மிகப்பெரிய காரணி.

நமது பிரச்சாரப்படை என்பது தாய்ச்சபை தலைமை அமைக்கும் அதி நவீன பிரச்சாரக்குழு மட்டுமல்லாது நமது இயக்க சகோதரர்களான நாம் ஒவ்வொருவரும் பிரச்சாரப் படையாக பரிணமிக்க வேண்டும். முக்கியமாக லீக் தொடங்கப்பட்ட ஆதியிலிருந்து சுதந்திர காலகட்டத்தில் அதன் வீரிய செயல்பாடு, தியாகம், அதன் தலைவர்களின் வலிமை, பெற்றுத்தந்த நலன்கள் இவ்வாறென நமது மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட வரலாறுகளை இன்றைய ஊடங்களில் மறுபதிப்பு செய்யவேண்டும்.

பிஞ்சு நெஞ்ங்கள் இஸ்லாமிய நெறியை கற்க செல்லும் மதரஸாக்கள் தமிழகம் எங்கும் நடைபெற கேரளாவைப் போன்று நாம் முழுதீவிரமாக செயல்பட்டு நடைமுறை படுத்தப்பட வேண்டும் அவ்வாறு நடைபெறும் மதரஸாக்களின் உஸ்தாதுமார்கள் நமது பழைய வரலாறுகளை சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே நமது பிரைமரி மற்றும் இளைஞரணி செயல்பட வைக்கப்பட வேண்டும். அவ்வாறு உஸ்தாதுமார்கள் செயலாற்ற அவர்களுக்கு போதிய ஆவணங்களுக்கும் ஊதியத்திற்கும் ஏற்பாடு செய்து தரப்படுதல் வேண்டும்.

முக்கியமாக ஆலிம்கள் உருவாகும் மதரஸாக்களில் நமது கவனம அதிகம் இருக்க வேண்டும். அந்த மதரஸாக்களுக்கு நமது பத்திரிக்கைகளையும் நமது இயக்க செய்திகளையும், வரலாற்று ஆவணங்களையும் சென்று சேர்க்க வேண்டும். அந்தந்த வட்டார மதரஸாக்களின் நிகழ்ச்சிகளை நாமே நடத்தி அதில் நமது கருத்துக்களை பதிக்க வேண்டும் இவ்வாறு வெளியாகும் ஆலிம்கள் மட்டுமே அவர்கள் பணியாற்றும் பள்ளித்தலங்களின் உரைகளில் முஸ்லிம் லீக்க்கின் செய்திகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வார்கள். இப்போது வரை நமது இயக்கம் மட்டுமே சமுதாய இயக்கமாக எல்லா ஜமாத்துக்களாலும் அங்கீகரிக்கப்படுவதாக இருப்பது நமக்கு ஆருதல் என்றாலும் இதை நினைத்தே நாம் செயல் மவுனம் காத்தால் வருங்காலம் என்பது கேள்விக்குறியாகும் ஆகையால் நாம் இன்றே களம் இறங்குதல் சாலச் சிறந்தது.

இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் நாமே சென்று அதன் நிர்வாகத்தை அணுகி பள்ளிவிழாக்கள் அல்லது சிறப்பு தினங்களில் பள்ளிவளாகத்தில் உரை நல்கி மாணவர்களின் மனதில் ஊடுருவுதல் முக்கியம். வாட்டாரம் தோறும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று அந்த சமயங்களை நாம் பயன்படுத்திக்கோள்ளுதல் வேண்டும்.
இத்தோடு தொருமுனைப்பிரச்சாரங்கள்.. அந்தந்த பகுதியில் அடிக்கடி உள்ளூர் இயக்க பொதுக்கூட்டங்கள், இப்படி என பல நிகழ்வுகளை அடிக்கடி நிகழ்த்தி செய்திகள் பறிமாறப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். மேலும் பிரச்சாரத்திற்காக சென்று போன தலைமுறைகளில் இருந்த வீர தீர பேச்சாளர்கள் மீண்டும் நடமாடுவது போன்ற பிரிதொரு கர்ஜனை சூரர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நாம் வீடு தோறும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை இக்காலகட்டத்தில் பயன்படுத்தத் தவறக்கூடாது.. ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு அரசியல் கட்சி என்றால் ஒரு டிவி சேனல் இருப்பது தான் அவர்களின் பலமாகவும் அடையாளமுமாகவே போய்விட்டது. ஆக நம‌க்கென ஒரு சேனலை தோற்றுவிக்கும் முயற்சியில் இறங்கப்பட வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியம், அதே நேரம் அதுவரை மற்ற தொலைக்காட்சி சேனல்களில் ஏதேனும் ஆவணப்படங்கள், விவாதங்கள், உரைத்தொகுப்புக்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகளை தயார் செய்து மக்களின் இதயத்தில் இன்னும் இன்னும் இடம் பிடிக்கவும் புதிய தலைமுறை இளைஞர்கள், பெண்கள் இவர்களுக்கு நமது செய்திகள் மூலமாக இதய ஒளியூட்டி நேரான பாதைகாட்டவும் இது தான் காலம். இவ்வாறெல்லாம் நாம் முயன்றே ஆக வேண்டும்.

தவிர‌வும் நமது பிரச்சாரத்தில் வரலாற்று செய்திகள் சொல்லும், நமது இயக்க சாதனைகளை சொல்லும், நமது தலைவர்களின் மகத்துவம் பற்றி பேசும், தற்கால அரசியலில் நாம் செய்ய வேண்டியது இவ்வாறெல்லாம் குறும்படங்கள் எடுத்து இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமானவர்கள் மனவியல் ரீதியாகவே அடிமையாகிவிட்ட இணையங்களை பயன்படுத்தி அதில் நமது கருத்துக்கள் பறிமாறப்பட வேண்டும். நமது இயக்கம் சார்பாக இன்று இணையதளம் இருந்து செயல்பட்டு வருவது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் நமது தலைவர்கள் மற்றும் நமது பேச்சாளர்களின் காணொளிகள் தினம் தினம் அதில் வெளியாகிக்கொண்டே இருப்பது போல் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். ஏனெனில் இன்றைக்கு மக்களிடம் சென்று சேரும் அதிவிரைவு மக்கள் தொடர்பு சாதனம் இணையமே.

இந்நாட்களில் நம்முடைய இயக்கப்பணிகள் நன்றே நடந்து வந்துகொண்டிருந்தாலும் கால சூழலுக்கேற்பவும், இருப்பதைவிட பிரச்சாரங்கள் இன்னும் தீவிரப்படுத்தவும் நவீனப்படுத்தவும் படுதல் வேண்டும் என்பதும் மேலும் அது எவ்வாறெல்லாம் மனரீதியாக எல்லாதரப்பினரையும் குறிப்பாக புதிய இளந்தளிர்களையும்,இளைஞர்களையும், பெண்களையும் நமது இயக்கத்திற்குரியவர்களாக ஆக்குதலோடு ஒரு அழகான ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தே பகிர்ந்து கொண்டோம். இதற்கு நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நமக்கு நாம் நாடும் சமூக புரட்சியும், மறுமலர்ச்சியும் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் இறைவனின் அருளுக்குறிய சமுதாய நலனையே நூறு சதம் தன் உயிர் நாடியாக கொண்டிருக்கும் இயக்கம் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே! வரும் நூற்றாண்டுகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு மக்கள் சேவை செய்ய தகுதியான பேரியக்கம் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே!!

நவீன பிரச்சாரம் குறித்து பேசும் இக்கட்டுரையில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஊடகவியளார் சகோதரர்.முதுவை ஹிதாயத்தின் பணி பாரட்டி நினைவுக் கூற தக்கது.



வழுத்தூர்.ஜே.முஹையத்தீன் பாட்ஷா
கொள்கைபரப்புச் செயலாளர்,
அமீரக காயிதே மில்லத் பேரவை, ஐக்கிய அரபு அமீரகம்.


மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2011-ல் இடம் பெற்ற கட்டூரை.

27 ஆகஸ்ட் 2011

லைலத்துல் கத்ர் - புஜைரா (26-08-2011)




இன்று புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புத்தொழுகை அமீரகம் ஃபுஜைராவில் ரம்மியமாக மிக அமைதியான சூழலில் தொழுத அனுபவம் மனதிற்கு நிறைவாய் இருந்தது. தராவீஹ்க்கு பிறகு நல்ல தொரு சிறப்புப் கூட்டு பிரார்த்தனையை இங்குள்ள அரபிய இமாம் ஷேக்.அப்துல் காதிர் அவர்கள் நல்கி இரவு 10.30க்கு தஸ்பீஹ் நஃபீல் என அறிவிப்பு செய்து ஓய்வு அறிவித்தார். திக்ரிலும், ஸலவாத்திலும் சபை இருந்த்தது.பிறகு இரவு 10.30க்கு இமாம் ஷேக்.அப்துல் காதிர் வர அவர் அங்கிருந்த பாக்கிஸ்தானிய இளைஞரை தொழுகை நடத்த ஏவினார். அவர் அழகுற 45 நிமிடத்திற்கும் மேலாக தொழ வைத்தார்.புனித ரமலானின் 'லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க் இரவு) ன் புனிதத்தின் பொருட்டால் உலக அமைதிக்கும், நல வளத்திற்கும், தனிமனித நிம்மதிக்கும், மனத்தூய்மைக்கும், தன்னிறைவடைந்த சிறப்பான வாழ்விற்கும், உள்ளத்தெளிவிற்கும், மிகச்சிறந்த வாழ்வியல் நெறியான இஸ்லாத்தினை தந்த நமது நாயகத்தினை உவப்பு வைப்பதற்கும் என தனது நீண்ட இறை வேட்டலில் (துஆ) அல்லாஹ்வின் திருநாமங்களை கூறி..கூறி.. நபிகளாரை முன் வைத்து துஆ செய்து மஸ்லிஸை நிறைவாக்கினார் இமாம் ஷேக் அப்துல் காதிர் அரபி அவர்கள்.

'லைலத்துல் கத்ர்' அதாவது லைல் என்றால் இரவு கத்ர் என்றால் கண்ணியம் ஆக கண்ணியமிக்க இரவு என்று பெயர். அன்றைய காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களின் வாயிலாக இதை கேள்விப்பட்ட காந்தியவர்கள் கைத்தறி மூலம் நெய்யும் பருத்தி ஆடைக்கு கண்ணியமிக்க ஆடை என பொருள் படும் கத்ர் ஆடை என்ற பெயரை சூட்டினார் என்பது வரலாறு.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஆகஸ்ட் 2011

ஒற்றுமை..?



"ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” - இவையெலாம்
ஒன்று பட்டு வாழ்ந்து வென்ற நம்
தோன்றுத்துறைக்கு மூத்தவர் சேர்த்த
அறிவின் சொத்து!

எங்கும் இந்த பூமியில் நீர் இருந்தது
தங்கும் காலமாற்றத்தால்-அது
முங்கும் என ஆனபோது
அங்கே ஆனது நிலங்கள்.

பரிணாம வளர்ச்சியால்
பாரினில் வந்தான் மானிடன்.
பெற்றவர் ஆதாம் ஏவாள்-இதை
கற்றவர் நினைவு செய்த போதும்
உற்றுணர மாட்டாமல்
மறந்தான்...மறுத்தான்...மறதியாள மானிடன்.

தேசக்கோடுகள் இட்டான்
பாசை வெறி கொண்டான்
துவேசப் பார்வை கண்டான்

ஒன்றை மறந்தான்-அனைவரும்
ஒன்றென்பதை மறந்தான்
அன்றிலிருந்து அல்லல் உற்றான்-தினம்
அவதிகள் பெற்றான்.

ஒருமைக்கு வறுமை வந்தது,
சந்தோசம் செத்தது உல்லாசம் போனது,
அறிவால் உணர்ந்து அருமை அறிந்து
ஒருமை வளர்க்கத் தவறினான்.

கடலில் பிரிவில்லை - கண்டவன்
மானிடன் மட்டும் தான். - அது
நீரென்றே ஒருமைப்பட்டுள்ளது அதில்
உள்ளே உலாவும் மீனுக்கு
அரபிக்கடலா ? இந்தியப்பெருங்கடலா?
சத்தியமாய் தெரியாது.

கதிரோ-மதியோ விதிப்படி உலகப்பொதுதான்!
பயன்படும் மொழிகள் ஆயிரமானாலும் பயன்பாடொன்றே!
பறிமாறப்படும் உணர்வுகள் ஒன்றே!
பல வண்ண துணியானாலும்
பருத்தியைத்தான் விரித்துக்காட்டும்.

ஆயினும்..
ஏன் ஒரு முதுகந்தண்டிலிருந்து
வந்தவனுக்குள் மட்டும் ஒராயிரம் வேற்றுமைகள்?

ஏன்-இவன் தன் விரலால் முள்ளெடுத்து
ரணப்படுத்துகிறான் தன் விழிகளையே?

இவன் விழிகளில் ரத்தம் கசிய
சித்தம் உருகிப்போகிறார்களே அன்பு கோண்டோர்!

ஆம்!
இருந்ததே ஒன்று தான்
இருப்பதும் ஒன்று தான்

பிரித்தான் மானிடன்
வினைச்சுட்டது,
பாவி-இவன் பட்டான்...படுகிறான்..
தொடர்ந்தால்..படுவான்.

ஓ..மானிடர்கால்!
இல்லாத வேற்றுமை வகுத்து-உயர்வில்
தள்ளாத கிழம் ஆக்காதே உன்னை.

ஆறறிவு உள்ளவனாம் இவன்
அடித்துகொண்டு சாகிறான்
பகுத்தறிவிருந்தும் பிரிந்தே வீழ்கிறான்.

ஐந்தறிவு உயிரியிடமிருந்து
இவன் கற்க வேண்டியதோ ஏராளம்.
காக்கைதேனிஎறும்புஇன்னும் பல..
இவற்றிலிருந்தாவது கற்றால்..
தேறுவான்-முன்னேருவான்!

மாமிசப்பட்சிகளோ காடுவாழ் கடும் மிருகங்களோ கூட
அவ்வளவாக அதனுள் சண்டையிட்டு சாவதில்லை.
அவைகளெலாம் அமைதியை நாட
அனைத்து வெறியையும் இவனுக்கு
அணிவித்தது யார்?

ஏன் இந்த கேவலத்திற்கு -இவன்
அடிமையானான்?
இவனை மனிதனாக்க வந்தவையே மதங்கள்-
அது கூறும் ஒற்றுமையை விட்டுவிட்டு
விதவிதமாக கலகம் வளர்த்து உலகம் அழிக்கிறான்.

மேலும் திருந்தாவிடில் மனிதன் எனும் சொல்
இவனுக்கு பொருந்தாது.
அகராதியிலிருந்தே அழிக்கச்சொல்லி
ஆக்க வேண்டும் கடுஞ்சொல்.

மனித மாண்பு மாசுபட்டது போதும்
அடகுவைத்த அழகறிவை மெய்யறிவால் மீட்டு
மனிதனை கெடுத்து நிற்கும் வேற்றுமையை ஓட்டு
யாருக்கும் மனிதனென்ற பார்வையில் ஆதரவுக்கரம் நீட்டு
அப்போது இன்பமெலாம் வைக்குமே உன்னிடம் கூட்டு
ஒற்றுமையால் உயரே நீ உலக அமைதியை நாட்டு

-ஜே.எம்.பாட்ஷா 

அமீரக தமிழர்கள் அமைப்பு வெளியிட்ட ஆண்டுமலரில் 2003- ல் நான் எழுதி வெளிவந்து பலரின் பாராட்டைப் வென்றது.

11 ஆகஸ்ட் 2011

அன்னையர் திலகம் கதிஜா நாயகியார் நினைவு நாள்



இஸ்லாமிய உலகின் முழுமுதற் நன்றிக்குரியவர்.. அவர் கி.பி 555 ல் அரேபியாவின் குரைஷி குலத்தில் பனு ஆசாத் என்ற கிளையில் உதித்தவர், அவரை நீங்கிய நபிகள் நாயகத்தின் வாழ்வை யாராலும் நினைத்துக்கூட பார்க்க இயலாது, இவ்வுலகில் அவருக்கு முன்பும் சரி அவருக்கு பின்பும் சரி அவரது இடத்தை யாராலும் எந்த சூழலாலும் நிறப்ப முடியாது என்பதே பிரபஞ்ச பேருண்மையாகிப் போனது, இறைவனே தனது மிக உவப்பிற்குரிய நபிகள் நாயகத்திற்காக தியாகமே வடியாய் அன்பே உருவாய் அவர்களை தயார் படுத்தி வைத்திருந்தான்.. நபிகள் நாயகத்திற்காக அவரது இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டிற்காக அவர் தன்னையே தியாகம் செய்து தியாகத்தின் உச்சத்தில் போய் சரித்திரமாகிப்போனார் அவர் இல்லாத இஸ்லாமிய பிரச்சாரம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது பகிரங்கமான கேள்விக்குறியே! உண்மையில் இஸ்லாம் தோன்றி 1432 ஆண்டுகள் தொடும் இத்தருணத்தில் அதன் அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் கிட்டி இருக்கிறது என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் நன்றியை அல்லாஹுக்கும், நபிகளாருக்கும் அடுத்த படியாக செலுத்த வேண்டிய நபர் அவரே!

ஆம்! மேற்சொன்ன அத்தனை வாசகங்களுக்கும் ஒரே விடை நம் அன்னையர் திலகம் செய்யிதா கத்தீஜா நாச்சியார் என்ற கத்தீஜா பிந்த் குவைலித் அவர்கள் தான். தங்களின் வாழ்வில் இரண்டு கணவன்மார்களுக்கு வாழ்க்கைப்பட்டு அந்த இரு திருமணமும் விரைவில் பட்டுப்போய்விடவே அவர்களின் வாழ்வே வசந்தமில்லாத நிலையில் இருந்தது, அந்நிலையில் தன்னை வாழ்வில் மூன்றாவதாக திருமணம் செய்ய எத்தனை எத்தனையோ அரபக சீமான்கள், குலத்தலைவர்கள், பெருவணிகள் என்று பல பேர் அவர்களை போட்டிப் போட்டுக்கொண்டு மணக்க எத்தனித்தாலும் ஏனோ யாவரையும் திருமணம் செய்யாது வாழ்ந்தே வந்தார்கள் அது அவர்களது வாழ்வில் அஸ்ஸாதிக் (வாய்மையாளர்) மற்றும் அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று அன்றைய அரபிகளால் போற்றப்பட்ட முஹம்மத் என்ற சிறப்பான மனிதப்புனிதரை சந்திக்கும் வரை நீடித்தது.

எப்போது சந்தித்தார்கள் ? ஆம்! மிகப் பெரிய வணிக‌ சாம்ராஜ்யத்தின் சீமாட்டியான கத்தீஜா நாயகியார் தனது வியாபாரப்பொருட்களை சிரியா நாட்டிற்கு அனுப்பி வியாபாரம் செய்ய முனைந்த போது தான். வியாபார நுணுக்கங்கள் அறிந்தவர் என்ற முறையில் அன்றைய காலத்தில் கத்தீஜா நாயகியார் நபிகளாரின் சிறிய தந்தையார் அபூ தாலிபை நாட அபூ தாலிபோ நபிகள் நாயகத்தை அனுப்பியது தான் நபிகள் நாயகத்தின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம். இது தான் பின்னாளில் எல்லாவற்றிற்குமான அடித்தளமாகிப்போனது.

கத்தீஜா நாயகியாருக்காக வியாபாரம் செய்ய நபிகள் நாயகம் அவர்கள் மைஸரா என்ற உதவியாளரோடு சிரியா செல்ல அங்கே நபிகள் நாயகம் அவர்கள் மிகத்திறமையோடும் நீதத்தோடும் வியாபாரம் செய்தது, சென்ற அனைவர்களைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டித் திரும்பியது, செல்லும் பயணத்தில் மைஸரா கண்ட நபிகள் நாயகத்தின் குணநலன்கள், நிகழ்ந்த அற்புதங்கள் இப்படி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் ஒப்புவிக்க இருபத்து ஐந்தே வயதான இளைஞர் நபிகள் நாயகத்தின் மீது கத்தீஜா நாயகி அவர்களுக்கு திருமண ஆசை வர அதை தோழியர் மூலம் நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் தெரிவிக்க ஒருவாராக நபிகள் நாயகமும் சம்மதிக்க திருமணம் நடந்தேறி நல்வாழ்வை துவக்கினார்கள். அப்போது கத்தீஜா நாயகியார் அவர்களுக்கு வயது நாற்பது.

வயது வேறுபாடு அதிகமாயினும் மனங்கள் வேறுபாடு காணாததால் மணவாழ்வு சிறக்க வாழ்ந்து அதன் பயனாக காஸிம், அப்துல்லாஹ் என்ற ஆண்மக்களையும் ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா என்ற பெண்மக்களையும் பெற்று இல்லறம் நடத்தினர். அதில் ஆண்மக்கள் இருவரும் பால பருவத்திலேயே இறையடி எய்தினர்.

கதீஜா நாயகியார் அவர்கள் பெண்களுக்கே உரிய சிறப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து மிகத்தூய்மையான பெருவாழ்வுக்கு உரியவராக திகழ்ந்ததனால் அன்றைய காலத்தில் அவரை எல்லாம் ‘தாஹிரா’ தூய்மையானவர் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தனர். அன்னை அவர்கள் மற்ற பெண்களைப்போல் இல்லாது மிகப் பரந்துபட்ட சிந்தனையும் அறிவு நுணுக்கங்களும் கொண்டவராக திகழ்ந்தார் இது அவர்களை மணந்த நபிகள் நாயகத்தின் சிந்தனைக்கும், செயல்பாடுகளுக்கும் மிகவும் துணைபுரிவதாய் அமைந்தது.

தற்போது நாயகியாருக்கோ வயது ஐம்பத்து ஐந்து அன்றைய அரபகத்தின் அத்துமீறிய ஒழுக்கங்கெட்ட வாழ்வு, நீதிநெறி தவறிய நிலை, அறியாமையின் ஆதிக்கம் இவைகளெல்லாம் நபிகள் நாயகத்தை மிக வாட்ட மக்களின் சஞ்சாரமற்ற மக்காவிலிருந்து இரண்டு மைல் தூரம் இருந்த ஹீரா மலையின் உச்சியில் உள்ள குகைக்கு தனிமை நாடி தவம் சென்ற போது சற்றும் தயக்கம் காட்டாது அதை ஆர்வப்படுத்தி அதோடு மட்டுமல்லாது அந்த ஐம்பத்து ஐந்து வயது முதிர்விலும், தன் மனம் நிறைந்த கணவருக்கு சில பல தினங்களுக்கு ஒரு முறையாய் உணவு தயாரித்து அதை தானே அத்தனை சமனற்ற கற்களுக்கும், பள்ளங்களுக்கும், மேடுகளுக்கும் மத்தியில் பயணம் செய்து மலையேறி சுமந்து சென்று கொடுத்து ஆதரவளித்தார்கள் இது உலகில் எந்த கணவருக்கும் கிடைக்காத பேராதரவு ஆகும். ஏனெனில் இது போன்ற நடைமுறையை கணவர் தான் தவம் செய்ய போகிறேன் அல்லது தனிமையில் சிந்தித்து அமைதி தேடப்போகிறேன் என்று சொல்லும் போது எந்த மனைவியிடமும் இருந்து பெற முடியாத அபூர்வ ஆதரவும் ஒத்துழைப்பும் இவர்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டது என்றால் அங்கேயே அவர்களின் அறிவு முதிர்வும், அன்பின் இலக்கணமும் தன் கணவரின் மேல் அவர்கள் கொண்டிருந்த உயர் நம்பிக்கையும் புலப்படும். இத்தகைய குணங்களால் இங்கே இவருக்கு நிகர் இவரே என நிரூபித்து இருக்கிறார்.

ஹீராவில் தவம் செய்த நேரத்தில் இறைவனின் புறத்திலிருந்து ஜிப்ரயீல் என்ற வானவர் வந்து தொன்றி ஓதுவீராக! என்று கூற மிகப்புதிய ஒன்றை சந்தித்த பெருமானார் பயத்துடன் நான் ஓதி அறியேன் என்று கூற அவ்வானவர் நபிகள் நாயகத்தை இறுக கட்டித் தழுவி மீண்டும் ஓதுவீராக! என்றார்கள் மீண்டும் நபிகளார் முன்பு போலவே பதிலுரைக்க மூன்று முறைகள் அது போலவே கட்டி அணைத்து 96 ஆம் அத்தியாயமாகிய அல்-அலக்கின் ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِى خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ ) இக்ரஃ எனத்துவங்கும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் பேரதிர்ச்சி அடைந்த நபிகள் நாயகம் அவர்கள் மிகவும் உடலெல்லாம் வியர்க்க நடுங்கிய நிலையில் வீட்டிற்கு வந்து கதீஜா.. கதீஜா.. என்னை போர்த்துங்கள்.. என்னை போர்த்துங்கள்.. என்று வந்த நேரத்தில் கணவரின் நிலை கண்டு கனிவோடு அணைத்து பெருமானாரை போர்வையால் போர்த்த பெருமானார் எல்லா விபரத்தையும் எடுத்து சொல்லி தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் பயப்படுவதை சொன்ன நேரத்தில் ஒரு மனைவியாக கதீஜா நாயகி அவர்கள் அவர்களுக்கு அன்பு பொங்க சொன்ன வார்த்தைகள் பெருமானாருக்கு மிக தெம்பூட்டியவை. அது....


فَقَالَتْ خَدِيجَةُ ” كَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا ، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

நாயகமே நீங்கள் அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். அந்த நேரத்து இந்த வார்த்தைகளுக்கு நிகர் எது. அத்தோடு நில்லாது மறுநாள் தன் அன்புக்கணவரை தமக்கு உறவினரான வேத நூல்களை கற்று தேர்ந்தவரான கிருத்துவ பாதிரியார் வரகா இப்னு நெளபலிடம் அழைத்து எல்லாவற்றையும் கூறி ஆலோசனை பெற்றார்கள். அப்போது வரகா அவர்கள் நாயகத்தை முன் வேதங்களில் கூறப்பட்ட நபி இவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்த தன் கணவரின் நிலை குறித்து பேருவகை எய்தி நாயகத்திற்கு தெம்பூட்டி மட்டுமல்லாது உலகிலேயே முதலாவதாக நபிகள் நாயகத்தை நபியாக நான் உங்களை ஏற்கிறேன் நீங்களே அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் என்று ஏற்றனர். ஆஹா அன்னையவர்களின் செயல்பாடுகள் எல்லா புகழ்களுக்கும் அப்பால் சென்று விட்டன!

அதுமட்டுமல்ல.. நபியவர்களை இஸ்லாமிய பரப்புரை செய்யச்சொல்லி ஊக்க்மளித்ததோடு இல்லாமல் மக்காவிலிருந்து வணிகத்திற்காக ஒட்டகங்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறதென்றால் மொத்த ஒட்டங்களில் பாதிக்கும் அதிகமானவைகளுக்கு சொந்தக்காரராக இருந்து அரபகமே புகழும்படி சம்பாதித்த பொருட்களை எல்லாம் அன்னையவர்கள் தன் கணவனாரின் காலடியில் கொட்டி என் எல்லா பொருட்களையும் தங்களின் கொள்கைப் பிரச்சாரமான அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தினை பரப்புவதற்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்களே இவர் போன்றவரை சரித்திரம் இதுவரை கண்டிருக்கிறதா..?

இல்லை, தன் கணவரின் பிரச்சாரம் தீவிரம் அடைந்த நேரத்தில் குரைஷியர்களால் ஊர் தள்ளி வைத்த நிலையில் மக்காவிற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் இரண்டு வருடத்திற்கு மேல் இருக்க நேர்கையில் மிகவுயர்ந்த வாழ்வு வாழ்ந்த அன்னார் தன் கணவரை நம்பி வந்தவர்களுக்கு தன் சொத்தை முழுவதுமாக உணவுக்காகவும் பிறவற்றிற்காகவும் கொடுத்து..கொடுத்து.. பிறகு தன் முதிர்ந்த நிலையில் சாப்பிடவும் ஏதுமில்லாது பசி, பட்டினியால் வாடியும், தொற்று நோயால் பீடித்தும் வறுமை எல்லை கடக்க துணிகளையும் தோல் பொருளை ஊறவைத்தும் வயிற்றுக்கு பசி போக்க முயன்ற நிலையும் பிறகு நிலைமை மிக மோசமாக அதிலேயே கி.பி 619ல் இன்றைய இரமலான் பிறை 10ல் தான் அவர்கள் தங்களின் இறப்பை ஏற்றுக்கொண்ட நிகழ்வும் சரித்திரமே அழும் மிகத்துயர நிகழ்வுகள் ஆகும். இவைகள் அத்தனையும் தன் கணவர் நபிகள் நாயகத்திற்காக அவர்களின் சத்திய நெறியை நிலைநாட்டுவதற்காக அவர்களின் மனைவியாக இருந்து அவர்கள் செய்த தியாகம் ஆகும்.

இத்தகைய தன்னிகரில்லா செயல்பாடுகளால் நபிகள் நாயகத்தை அன்னைவர்கள் போலே அவர்தம் வாழ்நாளில் பாதித்தவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அன்னையவர்களை நினைத்து அண்ணலார் பல முறை அவர்களின் தாடி நனைய அழுததாக சரித்திரம் கூறுகிறது. பதுருப் போரில் சிறை கைதியாக பிடிபட்ட கதிஜா நாயகியாரின் மகளாரின் கணவரை மீட்க அம்மகளார் அவர் வந்த போது கொண்டுவந்த நாயகியாரின் நெக்லஸை பார்த்து மிக உருகிப்போனார்கள் நாயகம் அவர்கள். மேலும் தங்கள் தோழர்களிடம் இது தங்களுடைய அருமை மனைவியார் அவர்கள் அணிந்திருந்த ஆபரணம் என்றும், அதை மகளாரிடமே மீட்பாக ஏற்காது திருப்பி கொடுத்துவிடும்படியும் கணவரையும் ஏதும் இன்றி அனுப்பிவிடவும் பணித்தார்கள். வீட்டில் ஆட்டின் இறைச்சி உணவு செய்யும் போதெல்லாம் அதன் முன் தொடையை தன் அன்பிற்குகந்த மனைவியாரின் நினைவாக அவரின் தோழியருக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். தன் மற்ற மனைவியரிடத்தில் அவர்களே பொறாமைபட்டும் சில சொற்கள் சொல்லும் அளவிற்கு அன்னை அவர்களோடு தாங்கள் வாழ்ந்த வாழ்வியல் சம்பவங்களை மீண்டும்.. மீண்டும் வாழ்நாள் முழுவதிலும் சொல்லிக்கொண்டே இருக்கும் பழக்கத்தை நாயகம் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

அன்னையவர்களின் தியாகங்களை, சிறப்புக்களை, மேன்மைகளை சரித்திர பின்னனியோடும், குர் ஆன் ஹதீஸின் புகழாரங்களோடும் சொல்லிக்கோண்டே செல்லலாம் அதற்கோர் முடிவில்லாது நீளும் மகிமைமிக்க தியாக சரித்திரம் அது. ஏனெனில் அவர்களின் ஈடில்லா இந்த சரித்திரம் இல்லா நபிகள் நாயகத்தின் வாழ்வே நினைத்துப் பார்க்க முடியாதது. அவர்களின் பங்களிப்பில்லா இஸ்லாமும் நினைத்துப்பர்க்க முடியாது. ஆகவே அல்லாஹுவை இறைவனாகவும் அவனது திருத்தூதராக நபிகள் நாயகத்தையும் ஏற்ற ஒவ்வொரு இஸ்லாமிய நெஞ்சமும் அன்னையவர்களுக்கு தீர்க்க முடியாத பெரும் நன்றிக்கடன் பட்டவர்கள்! அந்த வகையில் அவர்களின் நினைவு தினமான இரலான் பிறை 10த்தில் அவ்வுயர் பெருமாட்டியின் சரித்திரத்தை பகிர்ந்து கொள்வதை பாக்கியமாக கொள்கிறேன். வல்ல‌ பேரிறையும், பெருமானார் நபிகள் நாயகமும் நம்மை என்றும் அவர்களுக்கு நன்றிக்குரியவர் -களாக ஆக்கியருள்வார்களாக! ஆமீன்.

கட்டூரை ஆக்கம்; ஜே.எம்.பாட்ஷா