10 ஆகஸ்ட் 2020

தேஜஸ் காணும் ஹாஜத்!

ஸல்லு அலல் முஸ்தபா யா ரசூலல்லா எங்கள்
சர்தாரே ஹாமீம் நபி யா ஹபீபல்லா

சங்கைமிக ஓங்கும் எங்கள் யா நபியல்லா 
தங்கள் திங்கள் முகம் காண்பதென்னாள்
யாசஃபியல்லாஹ்

அண்ணலுங்கள் காலத்திலே
பாவி நானும் வாழவும் வில்லை
அழகு வதனம் காணுகின்ற
அரியபேற்றை பெறவும் இல்லை
அன்பு முகம் நானும் காணும்
அந்தச் சனம் மெய்ப்படுமா
அண்ணலரின் பொற்பதத்தை
கண்ணில் முத்த வாய்த்திடுமா

ஆவல் கூடி வாடுகின்றேன்
அழுதழுது தேடுகின்றேன்
தூயவரை பார்த்திடவே 
துடித்து நிதம்  வேண்டுகின்றேன்
பூசரிக்கு கனவில் வந்தீர்
பூமானே நாயகமே
பாசத்தால் தவிக்கும் எனக்கும்
மாசில்லா தரிசனம் தரூவீர்

ஒருமுறையேனும் எங்கள்
கனவினிலே வாருங்கள் 
உன்னத திருகரத்தால்
உச்சந்தலைத் தடவுங்கள்
தேஜஸ் வடிவை காணும் எங்கள்
ஹாஜத்தை நிறைவேற்றுங்கள்
ராஜருக்கு ராஜரான 
ரஹ்மத்துலில் ஆலமீனே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
05-08-2020




ஞானத்தின் பாடம் (கொரானா காலப் பாடல்)

ஞானத்தின் பாடத்தை நாயன் நடத்துகிறான்
அடங்காத ஆட்டம் முடங்கியே ஒடுங்கியது
நுண்மக்கிருமியினால் நூதனம் நடக்கிறது
மாயத்தில் இருந்த மனங்கள் திறக்கின்றது

கனவிலுமே நினைக்காத
கண்களுமே நோக்காத
கொடிய காலம் நொடியினிலே வந்ததுவே
நம்முடைய திட்டமொன்று
அவன்போட்ட திட்டமொன்று
தலைகீழாய் எல்லாமும் மாறியதே
பரவும் கொரனாவின் பீதியிலே வாழும்
இரவுப் பகலெல்லாம் இரட்சிப்பை தேடும்

நமக்கு மட்டும் உலகமில்லை
இருக்கும் யாவும் சொந்தமில்லை
அனைத்துயிரும் வாழ்திடவே நாடுவோமே
உறவின் அருமை அறியாமல்
 உற்ற நட்பை நாடாமல்
பணமொன்றே வாழ்வென்றே வாழ்ந்தோமே
பறந்த றெக்கைகளை இழந்துவிட்ட நாமும்
உணர்ந்து கொண்டோம் இப்போது வாழ்க்கையின் நாதம்.

ஆதரவு அற்றவரும்
அன்றாடங் காய்ச்சிகளும்
வாடுகின்ற இடர்மிகுந்த காலத்திலே
இரக்ககுணம் உள்ளவரே
இனிய அண்ணன் தம்பிமாரே
விரைந்து சென்று மனிதத்தோடு உதவிசெய்வீர்
நடக்கும் கொடுமைகளால் வைக்கின்றான் பரிச்சை
நாமும் தேர்வாகி வென்றிடுவோம் 
இறைவனின் பரிசை.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா
19-04-2020
12.14 am

பாடகர் அபுல் பரக்காத் பாடி முகநூலில் பகிரப்பட்டது.


இறைவா என்னை காப்பாற்று..!

பல்லவி: 
இறைவா என்னை காப்பாற்று -இந்த 
இருளில் இருந்து கடைத்தேற்று

 அனுபல்லவி: 
வழிந்திடும் கண்ணீர் துளிதுடைத்து
முறையிடும் மனதை நீ தேற்று.

சரணம்: 1 
அருளாய் கொஞ்சம் பார்த்திடடா - என் 
அழுகையை நீயும் தீர்த்திடடா
பொருளால் சூழ்ந்த பெருஞ்சோகம்
எனை புரட்டி எடுத்து வதைக்குதடா

நான்கு திக்கிலும் துயர் வெள்ளம்
தாங்கிடமுடியா பெருந் தவிப்பு
ஓங்கிடும் உன்கரம் என்றே தான்
இக்கணம் வரையென் உயிர்துடிப்பு
** 
 சரணம்: 2 
அருமை பெருமை சிந்தனைகள்
ஆயிரந்தான் என்ன லாபமடா
சிறுமை காசு இல்லையென்றால்
எந்த திறமையும் உலகில் சாபமடா

வறுமை எனும் பெரும் நோயதிலே
யாரும் வீழ்திடவேனும் கூடாதடா
பொறுமை இழந்திடும் நெஞ்சிற்கு
மருந்திடும் உன் கை வேண்டுமடா
**
 சரணம்: 3 
கவலை நெஞ்சத்தில் விளக்கேற்றி
நிம்மதி வெளிச்சம் நீ காட்டு
குறையாய் நானும் வாழ்ந்துவிட்டால்
பிழையாய் ஆகுமே என் பாட்டு

நிலமதில் நிலமையை  நீ மாற்றி 
வளமான வாழ்வால் மகிழ்வூட்டு  
திரையை கலைந்து நீ பார்த்து
எனக்கு திரவியங்களால் அணிகூட்டு.


 ஜா.முஹையத்தீன் பாட்ஷா
26-06-2020



நபியே..

சரணம்: 

நபியே..
நான் என்றும் உங்கள் அன்பனல்லவா
கதியே..
நீங்கள் என்றிருக்கும் அடிமையல்லவா 

அனுபல்லவி: 

நிதியே..
அருட்பார்வை யன்றி வேறு இல்லையே
பதியாம்..
மதினா எனக்கு புனித சுவனமல்லவா

சரணம் 1 
சின்னஞ்சிறு வாழ்வில் கிடைத்த பெரிய பொக்கிசம்
எண்ண மெலாம் ஊறிகிடக்கும் இஷ்கின் மதுரசம்
நபி இஷ்கின் மதுரசம்
எண்ண எண்ண நானும் இல்லை என்னில் என்வசம்
எண்ணி விட்டால் அடைந்திடுவேன் மோட்சபரவசம்
நபியால் மோட்சப்பரவசம்

எது இருந்த போதும் வாழ்வின் நிரப்பம் இல்லையே
நபியருள் போதும் வேறு வேண்டியில்லையே
வேறெதுவும் வேண்டியில்லையே
காசுபணம் பாசமெல்லாம் மாயை அல்லவா
காசினியை தாண்டி வரும் நேசமல்லவா
அழியா நேசமல்லவா

சரணம் 2 
காலதூரம் எம்மை நபியை பிரித்திருக்கலாம்
வாழும்நபி காலங்கடந்தும் அணைக்கும் அன்னையே 
நபி அணைக்கும் அன்னையே
நாளும் என்னில் சுவாசம் போல வாழும் நாதரே
காலமெல்லாம் ஆளுமுங்கள் புகழைப்பாடுவேன். 
என்றும் புகழைப்பாடுவேன்

கற்றுத்தந்த தெல்லாமும் ஞானமல்லவா மெய்ஞ் ஞானமல்லவா
பெற்று பெற்று வாழ்வதெனது வாழ்க்கையல்லவா 
நபியிடம் பெற்று பெற்றே வாழ்வதெனது வாழ்க்கையல்லவா.
முற்று பெறா ஆத்மஉறவின் தூயவடிவமே
வெற்றிபெற தயவு வேண்டும் மறைந்த பின்புமே. 
நான் மறைந்த பின்புமே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-07-2020

பாடகர் அபுல் பரக்காத்திற்காக எழுதியது.