01 நவம்பர் 2011

கன்னி..!



அவள் என்றும் கன்னி தான்

ஆனாலும் அனைவருக்கும் தாய்!

அவள் எளிதில் கிடைத்திடாத மலைத்தேன்,

ஆனாலும் நம் நாவினில் அமிழ்தாய்!


என்ன தவம் செய்தோமோ

அவளோடு பிறந்து உறவாட,

இறைவனவன் அனுப்பிவைத்தான்

அவளையே பேசி மகிழ்ந்தாட.


அடியே..!

என் உணர்வுகளை

பூங்குழலோசையென

புவிதனில் நிறப்புவது நீதானடி!


பிறப்பெய்தியது முதல்

இறப்பெய்துவது வரை

எனக்கு அன்னைமடி நீதானடி!


தாயே.. தமிழே!

உன் அன்பு உயிரெல்லாம் வேண்டுமடி

என்றும் நீ அணைக்கையில் மகிழ்வேணடி!


நான் வாழ இதயமும் நீ தானடி

என் வாழ்வின் உதயமும் நீ தானடி

நாளும் நீ இன்றி நான் ஏதடி!


என் பிரியத்தமிழே

என்றும் உனைப்பிரிய என்னால் முடியாது

என்னுயிர் பிரிந்தால் ஒழிய!


நான் வாழ உயிராதாரம் நீயே அம்மா

நீவாழ நானென்றும் பணி செய்வேனம்மா


ஆயினும் அம்மா..!

உன்னருமை அறியாது

இன்றோ நம்மவர்கள்,

எல்லை தாண்டிவிட்டாலோ…

இல்லம் தாண்டி விட்டாலோ…

இவளெப்படி எனை அணைப்பாள்

மாற்றாள் தானே மார்பு தருவாள்,

என்கிறார் சட்டென!

தாயையே தள்ளுகிறார் பட்டென!


புரிவீர் தமிழர்கால்!

ஆயிரம் பெண்டீர் இருக்கலாம்

ஆயினும் அவளெல்லாம் அன்னையாகுமா?

எத்தனைப்பேர் மடிகொடுத்தாலும்

தாயின் மடிக்கு ஈடாகுமா..?


தாயன்பு போலவே

நற்றமிழ் நம்மீது கொண்ட அன்பு!

தமிழா இதை நீ நயமுடன் நம்பு!!

தமிழ் வளர்க்க பெற்றிடு புதுத்தெம்பு!!!



-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது 2009

29 அக்டோபர் 2011

அவர்கள்..!


அவர்கள்..!
உன்னையே நினைத்தவர்கள்
உயர்நபியை துதித்தவர்கள்
சத்திய சஹாபாக்களை,
சன்மார்க்க சீலர்களை,
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
சந்தோசமாய் நேசித்தவர்கள்
சதா உன் அருளையே யாசித்தவர்கள்.

முன் சென்ற சிலர்
முகங்கள் யாபகம் இல்லை,
அவர்கள் எனக்கு
முகவரி தந்தவர்கள்.
மூத்தவர்கள் சொல்ல-அவர்களின்
முத்தான விசயங்கள் அறிவேன்.

சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சிலர் சென்றனர், - சிலர் சென்றனர்...
சிலகாலம் முன்னர்.

இளவயதில் அவர்களோடு
இன்பமான காலங்கள்,
இதயத்தில் நிறைந்த
இதமான தாளங்கள்.

ஆயிரம் அனுபவங்கள் நிறைந்த
அறிவுப் பொக்கிசங்கள்
அவர்கள் .

வாழ்க்கையை கற்றுத்தரும்
வண்ணமிகு களஞ்சியங்கள்
அவர்கள்.

வசந்தம் தேடிச்செல்லும்
வாசமலர் தோட்டங்கள்
அவர்கள்.

வெற்றாய் விரவிய
வெட்டவெளிக்கு ஒப்பானவர்கள்
அவர்கள்.

மனதால் வெகுளிகள்,
பாமர ஞானிகள்
அவர்கள் மீது பாபமில்லை.

சரிஅத்தின் சட்டம் மீதும்
சடங்கான விசயங்கள் மீதும்,
சங்கை நபிக்காதல் மீதும்,
சற்குண வலிமார் நேசத்தின் மீதும்
ஆசான்கள் அவர்கள்.

திருநபிக் குடுபத்தாரெனில்
திருவுளத்தோடு சங்கை செய்வர்,
பாசநபியின் பெயரைக் கேட்டால்
பயபக்தியோடு சலவாத்து சொல்வர்.

அவர்கள்.....! - நம்
கண்களுக்கு மறைந்திருக்கிறார்கள்,
தூலஉடல் இப்போது இல்லையாயினும்
மறைவாய் வாழ்கிறார்கள்..!
மகிழ்வாய் வாழ்கிறார்கள்..!

ஆத்மாவில் அண்ணலாரின் நேசம்
சுமந்ததால் என்றும் சுகமாய்
நம்முடன் அவர்கள்!.

இறைவ..!
அவர்களுக்கு ஆத்ம சுகமருளி
ஆனந்தம் செய் நாயனே!
அருளால் அணைத்துக்கொள் நாயனே!
அகமதிய அம்சத்தில் பிணைத்துக்கொள் நாயனே!
அனைத்திலும் நிறைத்துக்கொள் நாயனே!




-ஜே.எம்.பாட்ஷா


4 அல்லது 5 வருடங்களுக்கு முன் எழுதியது

24 அக்டோபர் 2011

அநியாயம் இல்லையா..!



பல்லவி
அஹ்லுல் பைத்தை மறந்து நாம் வாழ்வதா
அநியாயம் இல்லையா.. அநியாயம் இல்லையா..!
அல்லா ஹுவே வாழ்த்திக் கூறினான்
குர்ஆனில் இல்லையா.. குர்ஆனில் இல்லையா..!

அனுபல்லவி
அவர்கள் தந்ததே இந்த வாழ்வு நமக்கு..!
அவர்கள் தியாகத்தில் நம் வாழ்க்கை இருக்கு..!

சரணங்கள்
அன்னையவர் கதிஜாவின் வாழ்க்கை யெல்லாம் தியாகமம்மா
ஆருயிராம் பாத்திமாவின் ஆயுளெல்லாம் சோகமம்மா
ஆட்சிசெய்ய விடவில்லையே மாட்சிமிக்க அலிதனையே
சூழ்ச்சிசெய்து விசம்கொடுத்தார் ஆட்சிக்காக ஹஸனவர்க்கும்
நம்மநபி குடும்பம் பட்ட பாடிதுதான்…!

ராஜநபி பிரியர்ஹுஸைன் பீடமேற விரும்பவில்லை
இறைவனையே விரும்பியவர் இரவுபகல் இயம்பிவந்தார்
(கூஃபா)மக்களெல்லாம் மிகஅழைக்க விருப்பமின்றி மனதிசைந்தார்
மிக்கமோச மானஏஜீது படைஅனுப்பி சினந்து நின்றான்
கலிமாவின் முஹம்மதை மறந்து நின்றான்...!

பொறுமையுடன் வீரர்ஹுஸைன் போர்வேண்டாம் என்றுரைத்தும்
கருமையுள்ளம் கொண்டவர்கள் கர்பலாவில் தொடங்கினரே
பிறைஒன்றில் ஆரம்பித்து முறையின்றி போர்நடக்க
இறைத்தூதர் வம்சத்தாரின் உயிர்குடித்தார் பாவிகளே
சத்தியத்தை காத்து நித்ய மானார்ஹுஸைன்…!

ஹக்கன்நபி நாட்டிவைத்த தத்துவத்தை மீட்டெடுக்க
இத்தனைபெரும் தியாகங்களை செய்ததந்தத் திருக்குடும்பம்
இன்றுநாம் முஸ்லிமென முழங்குதற்கு காரணமே
அவ்வுத்தமர்தம் இணையில்லா நெக்குருகும் தியாகங்களே..
அதைநித்தம் நினைத்தாலே ஈமானில் முக்திபெரும்!

குறிப்பு : கூஃபா என்பது மாத்திரை அளவு குறைவாக ஒலிக்க வேண்டும்.


சங்கை நபி இசைக்கோர்வையில் 2016ல் வெளிவந்தது.

-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

21 அக்டோபர் 2011

தழுவல்!

உணர்வுகளின் கீதம்..தொடர் -1


போனும், ஸ்கைப்பும் எல்லாம் போதவில்லை.. நீ வைக்கிறேன் என்று சொல்லிய பிறகும் வேறு வழியில்லாமல் நானும் ஆமோதிக்கிறேன். எவ்வளவோ வார்த்தைகள் வெளிவந்த பிறகும் இன்னும் ஏதோ ஒரு கனம் மனதிலேயே நின்று கொண்டு கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தோசத்தை.., மகிழ்வை.., கோபத்தை.., கூடலை.., ஊடலை.., முத்தத்தை.., செல்ல வார்த்தைகளை.., மொத்தமாய் கொட்ட முடியாமல் பேசி.. பேசியும் பேச்சுக்களால் முடியாத மீதி வைக்கப்பட்டு கிடக்கும் மனதின் அந்த கனம் எப்படி நீங்கும்?.
ஈராயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு ஒலியிலும்.. ஒளியிலும் மட்டுமே நாம் நடத்தும் நம் குடும்பம் ஒலியும், ஒளியுமாக மட்டுமே ஆகிவிட்டது. காற்றலைகளில் காதலையும்.., காமத்தையும்.., திட்டங்களையும்.., நேற்றையையும்.., இன்றையும்.., நாளையையும்.., குடும்பத்தையும்.., வாழ்க்கையையும்.., பேச்சுக்களாலும், அசையும் நிழல்களாலும் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் வாழ்வின் அர்த்த சங்கதிகள் தீருமா..?.
அது ஆத்மா கேட்கும் இணையோடு தழுவும் பேராவலின் தழுவலில் உண்டாகும் பறிமாற்றத்தில் நிகழும் மனமகிழ்வில்.. அழுகையில்.. பூரிப்பில்.. நிம்மதியில்.. அல்லவா தீரும்! அந்த தழுவல் தானே இங்கு தேவை.. அவ்வாறான ஒரு நிமிட தழுவலில் இறுக்கி அணைக்கும் ஏதோ ஒரு மைக்ரோ வினாடியில் என்னை நானும் உன்னை நீயும் நமக்கே தெரியாது மறந்து மீண்டெழும் அந்த சனத்தின் புண்ணியத்தில் எல்லாவிதமான ஆன்ம- உடலியல் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு மனமே லேசாகிவிடுமே.. அந்த கனநேர தழுவலின் நிறைவை பலமணி நேர பேச்சுக்கள் தர முடியுமா..?.
எல்லா நேரங்களிலும் மனிதனின் மனநிலை ஒரே மாதிரி இருக்குமா.. சில நேரம் நிகழும் மனஅழுத்த சூழலுக்கு மருந்தாக தேவைப்படும் உன் ஸ்பரிசமும், பாசமும், அன்பும், ஆதரவும் கிடைக்காத ஏக்கத்திற்கு தனிமை தான் எப்படி பதிலளிக்க முடியும்? அல்லது சில சமயம் எழும் ஏகாந்த நினைவுகள் விரக்தியின் ஆரவரமற்ற எல்லைகளில் எங்கெங்கோ செல்ல பகிர்ந்து கொள்ள யாருமற்று போகும் வேளையில் அதன் உள்ளீடாய் மனதில் புழுக்கத்தையும்.. வெளிப்பாடாய் முகத்தில் இறுக்கத்தையும் கொண்டு அலையும் வேளையில் உன்னிடத்தில் மட்டுமல்ல எல்லோரிடத்திலும் சுடுசுடுப்பும், கோபமும் தான் என்னிலிருந்து பிரதிபலித்துவிட நேர்கிறது. அதுபோன்ற ஆதரவு தேடும் உணர்வுகள் அது கிடைகாத போது என்னை அறியாமல் கண்கள் குளமாகி ததும்ப.. வரும் விழியோர நீர் தாரைகள் விடைதேடி வடியும்போது அதன் சூடும்.. கரிப்பும் மனதின் ஏக்கங்களை ஏகபோகமாக சுமந்து கொண்டு வருவது தானே உண்மை!
இது இவ்வாறிருக்க.. இங்கே உள்ள சூழலிலோ அல்லது அங்கே உள்ள சூழலிலோ நம்மில் யாரேனும் சற்றே சகஜமாய் பேசுவது தவறினாலோ சட்டென நிறுத்திக்கொள்ள நேர்ந்தாலோ அல்லது சரியாக பேசாமல் போனாலோ.. நன்றாக பேசி வைக்கையிலேயே திருப்தி அடையாத அந்தராத்மா.. இப்போது இன்னும்.. இன்னும் அழுதழுது வெம்மி தனக்குள் புழுங்கி புலம்புமே அதை என்னவென்றுதான் சொல்ல..! ஐயோ! மனம் தேடும் உறவுகளை, உணர்வுகள் கேட்கும் உயிரான விசயங்களை, ஆதரவை, அமைதியை, தோழ் சாய்தலை, தோழமையை, அன்பினை, ஆலிங்கனத்தை, அடையாத வாழ்வெல்லாம் நாமே தேடிக்கொண்ட சாப வாழ்வேயன்றி வேறென்ன!.
ஆயிரம் தான் பணம் ஊரில் நம் மானத்தினை காப்பதற்கும்.. வீட்டில் தினம் அடுப்பில் ஆணத்தினை வார்ப்பதற்கும் மிக.. மிக.. முக்கியமாக இருக்கிறதே என்றாலும் அந்த அத்தியாவசியத்திற்காக மட்டுமே நாம் முயன்றிருந்தால் நாம் அல்லது நம் சமூகம் இத்தனை உயிரும்.. உறவும்.. உணர்வும் சார்ந்த சோதனைக்கு உள்ளாகி இருக்காது.
மாறாக, நாம் தேர்ந்தெடுத்த இவ்வாழ்வின் பிண்ணனியில் ஓர் சமூக பொறாமையும்.. போட்டியும் ஒளிந்துள்ளது.. மட்டுமல்ல வெற்று படோடோப வாழ்விற்கும்.., பெரும் பெரும் தொடர் கனவுகளுக்கும்.., ஆசைவைத்த பெருங்குற்றம் மறைந்துள்ளது. மேலும் ஒன்றுக்கு பத்தாக கிடைக்கும் என்ற நப்பாசையும், நம் நாட்டில் கஷ்டப்பட்டு உழைக்க மனமில்லாத சோம்பலும், துணிச்சலும்.. திராணியும் அற்ற நிலையும் தான் இதன் பின்ணனி. இந்த பின்ணணியின் முன்னணியில் நிற்பவர்கள் நம் சமூகவாதிகளான இருக்கும் நம் குடும்பத்தவர்களும் இன்னும் நமக்கு வேண்டிய அத்தனை ஆத்மாக்களும் தான்.
நாம் முளையென முளைத்து எட்டி வளர எத்தனிக்கையில் சரியான வழிகாட்டி நம் நாட்டிலேயே உழைத்து சிறக்க கைத்தூக்கி விடாது, பிழைப்பா..!! ஓடிப்போ எங்காவது வெளிநாடு என்னும் திருந்தாத சித்தாந்தம் தான் இதற்கு காரணம்! ஏனெனில் அவர்களும் நம்முடைய இதே சூழலில் சிக்குண்டு தாயகத்தில் உரிய பின்புலம் இல்லாது நிற்கையில் அவர்கள் நமக்கு உதவும் கரங்களாக இருப்பார்கள் என்று நாம் எங்ஙனம் எதிர்பார்க்க முடியும்? என்ன செய்ய இப்படியே எழுதிக்கொண்டு போனால் கேள்விகளால் தான் தாள்கள் நிறையும்..!!!
(தற்போது இது போன்ற நடைமுறை இடர்பாடுகளை அறியும் இளைஞர்கள் நன்றாக படித்து நாட்டிலேயே பணியில் அமர தொடங்கியுள்ள சமூகசூழல் மாற்றம் மனதிற்கு மகிழ்வை தருகிறது)
-ஜே.எம்.பாட்ஷா