கவிதை - மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2020

நான் ராஜா

எவன் புறக்கணித்தால்
எவன் அரவணைத்தால் எவன் முகம் சுழித்தால் எவன் கை கொடுத்தால் எவன் கழுத்தறுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? நான் இளவம்பஞ்சு பறந்துகொண்டே இருப்பேன் நான் கடற்கரை காற்று வீசிக் கொண்டே இருப்பேன் நான் மேற்குத்தொடர்ச்சி மலை ஆற்றெழுந்து பொங்குவேன் நான் தொடமுடியாத சூரியன் தகித்து நிதமும் ஒளியுமிழ்வேன். என் ராஜாங்கத்தில் நான் ராஜா.

ஜா.மு. 19-11-18

FB link

29 ஏப்ரல் 2019

வியாபாரம்

சில சந்திப்புக்கள்
சில சந்தர்ப்பங்கள்
சில மேஜைகள்
சில வியாபாரங்கள்
கெடுத்துவிடுத்துத் தான் விடுகிறது

நம் எதார்த்தத்தை! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

25 அக்டோபர் 2018

மாறி.. மாறி..

இனிமையாய் மட்டுமே
இருந்துவிடுமா வாழ்வு
கசப்பும் வந்து வந்து தானே போகும்
அது வாழவும் தேவை வாழ்க்கைக்கும் தேவை
வாழ்வுக்கும் தேவை

உணவில் கூட
கசப்பு இல்லாத இனிமையை
மனம் என்றும் நாடலாம்
கசப்பு தேடாத நாவுக்கு
பின்னாளில் பிணி மூலம்
குப்பிகளில் அடைத்து அதற்கு
கொஞ்சம் இனிமையூட்டி
குடித்தே ஆக வேண்டுமென்று
மருத்துவரின் பரிந்துரை நிர்பந்திக்கலாம்

வசந்தகாலங்களால் மட்டுமே
அலங்கரிக்கப்படாது வாழ்வு
சில நேரங்களில் மகிழ்ச்சி மேட்டில்
துள்ளல்புரிகையில் கூட
முகட்டிலிருந்து உருள நேரலாம்

நீர்வீழ்ச்சியில் தலை நனைத்திருக்கும் நம்மை
திடீரென கொதிநீர் கொப்புலங்கள் கூட அனுகலாம்
மிக மென்மையாய் இருக்கும்
வெல்வெட் கேக்கில் கூட
கற்கள் இருந்து நம் பற்கள் உடைபடலாம்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
மே -08, 2007

கனத்தில் உடல் சாரும்!

அளவுக்கும் மீறிய துன்பத்திலோ..
அலகுகள் இல்லா இன்பத்திலோ

மனம் தோய்ந்தால்...
வார்த்தைகளுக்கே மொழி மறந்துவிடும்!

மெளன பாஷையில் தவிர
மொத்த பாஷையிலும் சித்தம் சிதறும்.

கண்களும்.. உதடுகளும் தான்
உள்ளூர உள்ளதை பிரதிபளிக்கும்!

மனத்தின் கணமோ இதமோ

கனத்தில் உடல் சாரும்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
 [25.03.17 19:47]

08 மே 2018

காற்றானவன்

நடுவில் நிற்கிறது
வெற்றுத் தராசின் முற்களைப்போன்று மனம்.
நிறைகிறது இன்று கவிதைகளின் ரசனைத்துணை!
*
நிறமுமில்லை மணமுமில்லை
திடமுமில்லை இடமுமில்லை
அழுத்தம் உள்ள திசையெலாம்
அலைவேன் ஆனாலும்.
உணர்ந்தாரும் மறந்தாரும்
வாழ்வெலாம் என்னோடு
வையகம் வாழ வைக்கும்
நான் காற்றானவன்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2-5-18, 23.04.



13 செப்டம்பர் 2017

அவன் கொடுப்பான்!

பரமனிடம் பாமரன் நமக்கோ
தேவையானதைக் கேட்கக்கூட
தெரியாதென்பது தான்
தெரியாத பேருண்மை.
எதைக் கேட்டாலும்
எப்படிக் கேட்டாலும்
மலை போல தங்கத்தையோ
மகுடம் தரித்த பேரரசையோ
தாவெனக் கோரினாலும்
பெருமாண்ட பேரிறையோன்
அருளாகவே இருப்பவனவன்
அண்ட சராசரமாகி நிற்பவன்
அவனுக்கது அற்பமே..
ஆகையால்....
நம் பிக்கை வைத்து
நம் கைகளை உயர்த்தினால்
வாட்டத்துடன் கேட்டதை
தேட்டத்துடன் மகிழ்ந்து
அருளாமலா போய்விடுவான்
பெரிதென நாம் நினைப்பவை யாவும்
பெரிதல்லவே, அற்பமன்றோ அவனுக்கு
நிரப்பமாக தருவதினால்
நிரம்பியதிலேதும் குறையாத வனவன்
குறைவாக கொடுப்பதை
குறையாக நினைப்ப வனவன்
உன்னை யன்றி
கேட்பதற்கும் யாருளர்?
தருவதற்கும் யாருளர்?
தா என் தாயே..
தா என் தயையே..
தா என் இறையே..
ஜா. முஹையத்தீன் பாட்ஷா
13-09-2017, அஜ்மான். அமீரகம்.

03 பிப்ரவரி 2017

யாசகன் மனசு

உன் வாசலில் எப்போதும் போல்
நான் யாசகனாக நிற்கிறேன்
தட்டை நிறப்புவது என்றைக்குமே
உன் வள்ளல் தன்மை தான்.

இதுவரை என்னிடம்
தனிப்பட்ட பிரயத்தனங்கள் இல்லை
நீ பாதை காட்டுகிறாய்
என் பயணம் தொடர்கிறது

சில கற்கள் என்னை இடறிவிடும் நிலையில்
சிராய்ப்புகளால் காயப்பட்டிருக்கிறேன்
எவ்விதம் உன் அருமருந்து
வருமென்று அறிகிலேன்
ஆனாலும் நான் சுகமடைந்திருக்கிறேன்.

வாசல்கள் அடைபடும் போது நான்
நொந்துகொள்வதில்லை
தயாளம் தான் உன்னிடம் இருக்கிறதே

உள்ளம் சொல்லியும்
கண்களுக்கு கண்ணீர்
உகுக்க மட்டுமே தெரியும்
அக்கண்ணீரை துடைக்க
உன் அருட்கொடைகள் விரியும் என்பது
எனக்குத்தானே தெரியும்.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

31 ஜனவரி 2017

மலர்வனமும் -மலர் மனமும்

"மலர்வனத்திற்கு வா"
அழைத்ததன் பேரில்
சென்றிருந்தேன்.
பூத்திருந்த மலர்வனத்தில்
சரம் தொடுக்க வேண்டினேன்
சில மலர்கள்.
என்னென்ன மலர்கள்
பிடிக்கும் உனக்கென கேட்டான்
மலர்வனத்தான்
பிடித்த மலர்கள் இவைகளென
சுட்டிக்கொண்டிருந்தேன்
அவைகளையெல்லாம் பறித்துவர
பணியாளுக்கு ஏவளிட்டான்
மலர்வனத்தான்.
கூடை நிறைந்த பூக்களை
என் மேடை முன்னால் கொட்டினான்
எனக்கும் பூக்களுக்கும்
ஜென்மங்களின் உறவு இருப்பதால்
பூக்களின் மென்மையில்; மென்மையிலானேன்
அதன் வாசத்தில் வாசம் செய்து லயித்திருந்தேன்
ஏனோ தெரியவில்லை
மலர்வனத்தான்
திடீரென திராவகம் கேட்டான்;
என் முன்னே அனைத்தையும் எரித்தான்
புகைந்து கருகின பூக்கள்,
பூக்களோடு எறிந்து
வெளியெங்கும்
கலந்து கொண்டிருந்தேன் நான்.
இப்படித்தான் பலநேரங்களில்
மலர் வனமும்
மலர் மனமும்
எறியூட்டப்படுகிறது
எறியூட்டிகள் அறிவதில்லை
எப்போதும் இவையிரெண்டும்
பூத்திருக்கும் என்று.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
31-1-2017


07 செப்டம்பர் 2016

எந்தச் சணத்திலாவது..!



திடீரென எந்தச் சணத்திலாவது
எதிர்பாராத ஒன்று நடந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
கொடுங்கேள்விகள் அழுத்துகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
குலுங்கிக் கதறி அழத்தோன்றுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
உன் நாளை எதுவாகுமென வினாதொடுக்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
ஏதும் இதுகாறும் செய்திட்டாயாவென்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
துணைமனம் தேடி நெஞ்சம் விம்முகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
பெரும் காரிருள் சூழ்ந்து போகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம்பதைக்க பயமுறுத்திச் செல்கிறது
திடீரென எந்தச் சசணத்திலாவது
அதிர்ச்சிப் பேய் அறைந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மரணத்தை கண்முன்னே காட்டிச்செல்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
சலனமற்று இருத்தி வைக்கப்படுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம் மிகஒன்றி இதைமட்டும் தாவென வேண்டுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
இவையெல்லாம் மறந்து மனமாற்றம் பிறக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 செப்டம்பர் 2016

வாழ ஆசைப்படும் மனிதர்கள்

அவன் "சுப்ஹானல்லாஹ்" சொன்னான்
எதிர்பாரா உதவி என்மூலம் கிடைத்ததும்,
நானும் கண்டேன் அவன் முகத்தில்!
(சுப்ஹானல்லாஹ் - இறைவன் மிகத்தூய்மையானவன், நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு.)

***
தனிமைகூட துயரமல்ல
தனிமைப்படுத்தப்படுவதல்லாமல்!


***

எல்லோரும் அதிகம் வாழ
ஆசைப்படுகிறார்கள்

துயரமெல்லாம்
இதுவரை வாழ்ந்த வாழ்வில்
அவர்கள் என்றுமே வாழாதது தான்.

மேலும் அவர்கள்
மிகுந்த சிரமப்பட்டு
யோசிப்பதெல்லாமும் கூட
வாழ்க்கையில் வாழ்வதற்கு தான்.

ஆனாலும், வாழ்தல் என்பது தான்
பெரும்பாலும் நிகழ்வதில்லை.

***

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 ஏப்ரல் 2016

சிரி

அகப்பூ மலர
முகப்பூ மலர்ந்தால்
இதழ்பூ விரிய
சிரிப்பூ பூக்கும்
எதிர்ப்படுவோர்
வெறுப்பு வீழூம்
எதிர்ப்பு தாளும்
இணைப்பு நிகழும்
பிணைப்பு இறுகும்
மதிப்பு உயரும்
மனிதம் மகிழும்
மகிழ்வே முகிழும்.
ஆதாலால் நாட்டீரே
சந்திக்கும் வேளையில்
முகமன் கூறி
முதலில் புன்னகைப்பீர்.


# பலபேர் அதுக்கு தா ரொம்பவே யோசிக்கிறாய்ங்க... ஏதோ நாம சிரிச்சு; அவன் சிரிச்சுட்டா.. ஐயோ அவனுக்கு சந்தோசமா போய்டுமே... வேண்டவே வேண்டாஞ்சாமி நான் சிரிக்க மாட்டேங்கிறான்.


30-8-15 ஊர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

05 ஏப்ரல் 2016

ச்சீய்.. நாயே

"சும்மா தானே செல்கிறேன் நான்..
ஏன் கல்லெடுத்து அடிக்கிறாய்..?"
குரைத்துச் சொல்கிறது
தெருவோரம் செல்லும்
அடிபட்ட நாய்.
"அடச்சீய்... மனிதா!'
என்பது தான்
நாய்களுக்கிடையேயான
கோபதாபச் சொல்வழக்காம்.
'ச்சீய்.. நாயே' என்கிறாய்..
சக மனிதனைப் பார்த்து நீ..,
கேவலம் மனிதர்களென
கூடிச்சிரிக்கிறது நாய்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 மார்ச் 2016

சமாதானம்

'வா..வா.. ட்ரஸ் போட்டுக்கோ'
எல்லோரும் வெளியே போகிறோமென
வீட்டில் விளையாட்டில்
திளைத்திருந்த குழந்தையை
கூட்டிச்சென்றார்கள்.
சென்ற சூப்பர் மார்கெட்டில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
அழகான சாக்லெட்கள்
குழந்தையை அகலாதிருக்க செய்து
கனைகள் வீச..
‘அந்த சாக்லெட்ட வாங்கித்தா…..’
விரல் நீட்டி அதைக் காட்டி
கேட்டு…. கேட்டு.. அழுகிறது
அந்தச் சுட்டிக்குழந்தை.
ஒருவரோடொருவர்
முகம் பார்த்துக்கொள்கின்றனர்
தாயும் தந்தையும்…,
எடுக்க நெருங்கிய தகப்பனிடம்
வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்கிறாள் தாய்
கண்ணால் சமிக்கை செய்து.
அழும் குழந்தையிடம் அக்கரையாக
“வேண்டாண்டா… என் செல்லம்ல…
வ்வே… அது.. நல்லாவே இல்லியாம்..
நம்ம பக்கத்தூட்டு அக்கா சொன்னா..
அம்மா சொன்னா கேட்டுக்கனும் என்ன…
இது பாப்பாவோட உடம்புக்கும் நல்லதில்லையாங்..
அடுத்த தடவ வேற கடையில
நல்ல சாக்லேட்டா பாத்து
அம்மாவே வாங்கித்தருவேணாம்... ஓகே…,
என் செல்லம்ல.., உம்ம்ம்மா!!!”
என சொல்லின் ஈற்றில்
ஒரு முத்தம் தைக்கிறாள்,
ஆசைப்பட்ட குழந்தை
அழைத்துவரப்படுகிறது
நிறைவேறாத ஏக்கத்தோடும்
அழுது வடிந்த கண்ணங்களோடும்…!
சற்றுநேர கொஞ்சல்கள் சில்வற்றில்
சகஜமாகிறது குழந்தை.
வாழ்வின் நிறைய எதிர்பார்ப்புகளோடு
பல நேரங்களில் நாம் சமாதானம் ஆவதைப்போல.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 மார்ச் 2016

விலையுர்ந்த எழுதுகோல்!



அது ஓர் விலையுர்ந்த எழுதுகோல்!
மனங்கவர் வண்ணம்,
அத்தனை வசதி அதில் எழுத,
கம்பீரம் மினுங்கும்
சட்டைப்பையில் சொருகியிருந்தாலே,
விரல்பிடித்து எழுதினால் வீசும் பெருமை,
பல முக்கிய கையெழுத்தெல்லாம் அதில் தான்
மை தீர்ந்து போனது,
.
.
.
பின்னாளில்
கைகளும் தேடா அது
அள்ளப்படுகிறது, 

குப்பைகளோடு சேர்த்து .

*****

இறுகிய மனம் 
எழுத மறுக்கிறது
கவிதை.


*****


மதவாதப்பேய்கள் நடத்திய
ஊர்வலத்தில்
கலவரத்தை அடக்கிய
காவலரின் குதிரைக்கால்கள்
முறிக்கப்படுகிறது
மேனகாக்கள் மெளனம் காக்கிறார்கள்.


‪#‎உத்ரக்காண்ட்‬ பாஜக பேரணி கலவரம்
*****

போகிற போக்கில் 
எதிர்படும் தூசுகள் போலத்தான்
யாருக்கோ நேர்திட்டதாய்
கவனத்திற்கு வந்திடும்
எல்லா பெருஞ்சோகங்களும்,
அந்த முள் நம்மை தைக்காதவரை.




-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 மார்ச் 2016

கொண்டாடுவோம் தாய்மையை!


காலம் பூராவும் கடன்பட்டு
பணிவுடன் கனிவுகூட்டி
பாசத்துடன் பணிவிடைதனை
வாழும் நாளெல்லாம்
வாழ்த்தி நிதம்செய்தாலும்,

தாயே... தாரகையே..
தாரணியில் என்னொளியே என்றாலும்

உனைச்சுமந்த கர்ப்பக்காலத்தில்
உதைத்தாயே உன் தாயை
நீ உதைத்த அந்த ஓர் உதைக்கு
இவையெல்லாம் ஈடாகாதே,

ஆதலால் மானிடர்கால்
தாயை போற்றுவீர்
எங்கெங்கோ சுவனம் தேடி
எதற்கும் அலையாதீர்,

உன் தாயின் காலடியில்
உனக்கான உயர் சுவர்க்கம் - அவள்
உள்ளம் குளிரவைத்து
உயர்வுடன் நீயும் அடைந்துகொள்
என்றார்கள் ஆறாம் வயதில்
அருந்தாயை இழந்தே
அன்பு தேடி வாடிய
அண்ணல் முகம்மது நபியவர்கள்!

கொண்டாடுவீர் அன்புடையீர்
பெண்மையின் உன்னதத்தை.

-வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா

02 மார்ச் 2016

எங்கே செல்லும் இந்த பாதை!



எங்கேயோ அழைத்துச்செல்கிறது
வாழ்க்கை,
எங்கே என்று தான் தெரிவதில்லை!

போட்டிருக்கும் பாதையில்
போடலாம் நடை என்றால்
சற்றும் அறியாத
முற்றும் தெரியாத
புதியதோர் பாதை 
புரியாது விரிகிறது
புதிராகவே விரிகிறது!

எடுத்த அடி தான் எங்கேயோ
அடுத்த அடி தான் எங்கேயோ
என்பது தான் விளங்கவில்லை!

நடப்பது தான் நடக்கும்
இதில் நாடாள்பவனும்
நாதியற்றவனும் அடக்கம்!

மாட்டேனென 
மறுதலிக்க முடியாது,
எனக்கானதல்லவென - யாருக்கும்
மாற்றிவிட முடியாது!

இயற்கையின் நியதியாய்
இயங்கிவரும் இதையெல்லாம்
எள்ளளவும் மனிதனினால்
வெல்லவெல்லாம் முடியாது!

எப்படி.. எப்படியெல்லாம்
எட்டியவரை சிந்தித்து
எதைச்செய்து சுழன்றாலும்
சுற்றிவரும் காடிகாரம்
எப்படிச் சுழற்றுமென்று
எவருக்குமே தெரியாது!

நொடிமுள்ளின் அடுத்த நொடி
இன்பத்தின் பிடியிலா - அல்ல
இதயம் நொருங்கும் இடியிலா
இது யாருக்கும் தெரியாது!

எல்லாம் அவன் செயலென
எல்லோரும் சொல்லுகின்றார்
எல்லாமுமான அவனை
எதுவுமே அறியாது! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 செப்டம்பர் 2015

பழங்களைப் பெற்றுச்சொல்லுங்கள்.

பக்கத்திலிருந்து பார்க்கிறார்கள்
அதனால் அவர்கள்
நன்றாகவே அறிவார்கள்
எங்கள் தோட்டத்தில்
விதைத்ததும்.. 
முளைத்ததும்..
வளர்வதும்...
கனிமரங்கள் தானென!
ஆனாலும் வெளியே சென்று
வினோதக் கூச்சலிடுகிறார்கள்
அவன் விசச்செடியை
விவசாயம் செய்கிறான் என்று.
பிரச்சனை இல்லை
வாருங்கள் அறுவடைக்காலத்தில்
கூடை நிறைய
பழங்களை தருகிறோம்
பெற்றுச்சொல்லுங்கள்.
-முஹையத்தீன் பாட்ஷா
காலை 10.38
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 செப்டம்பர் 2015

அவசரம் ஏன்..?

ஏன் அந்தக் கவிதையை 
அத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
*
பரபரப்புடன் அந்தக்கவிதையை
அப்படிப் படிக்க என்ன தான் அவசியம்?
*
ரசிக்க மறந்து அவசர அவசரமாய்
பசிக்கு திணிக்கும் உணவைப்போல
அந்தக் கவிதையை படிப்பதில்
உன் உணர்வில் உன் சுயத்தில்
என்ன தான் நிகழ்ந்துவிடப்போகிறது?
*
இங்கனம் அந்தக் கவிதை புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே
*
மரியாதையாய் வைத்துவிடு
இல்லையேல் உடன் அதை தீயிலிடு.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 செப்டம்பர் 2015

காலக்குதிரையின் முதுகில் !



ஒன்று போக
பிரிதொன்று..
இதை முடித்தால்
மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்று! 

அங்கே போ..
அடைந்துவிட்டால் பின்
இங்கே செல்!
ஆதுவும் எய்தினால் மீண்டும் ஓடு
வேரெங்கவது
ஓடு… ஓடு.. ஓடு…!

அயர்ச்சியின் மிகுதியில்சோர்வா..
இருந்தாலும் ஓய்வெல்லாம் கூடாது
ஓடு.. ஓடிக்கொண்டேயிரு..!

பிறகு..
எங்கோ சில புள்ளிகளில்
கொஞ்சம் பெருமூச்சு வாங்கும்;
அங்கும் சிறு ஆசுவாசம்
மட்டும் தான் அனுமதி..!

பின்பும் தொடரும்
ஓடு… ஓடு… ஓடென்ற குரல்
முன்பு போலவே..!

ஒன்று போக
பிரிதொன்று
இதை முடித்தால் மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்றென...?

எதையுமே சட்டைசெய்யாது
அதிவேகமாய்
நீண்டு நகர்ந்திடும்
காலக்குதிரையின்
முதுகில் நாம்!

குதிரையே ஓரு நாள்
நம்மை இடறி சாய்த்துவிட்டு
ஓட்டம் தொடரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

31 ஆகஸ்ட் 2015

எமகாதகன்


"அடடா அவன் என்னமாய் பணிகிறான்...!
அடடா அவன் என்னமாய் குனிகிறான்...!
அடடா அவன் என்னமாய் புன்னகைக்கிறான்...!
அடடா அவன் என்னமாய் அன்பொழுக கதைக்கிறான்...!"
என்றேன்.

"ஐயோ! 
இல்லை.. இல்லை...இல்லவே இல்லை!!!

அவன் பணிகிறானுமில்லை..!
அவன் குனிகிறானுமில்லை..!
அவன் புன்னகைக்கிறானுமில்லை..!
அவன் அன்போழுக கதைக்கிறானுமில்லை..!

எல்லாம் நடிப்படா..
எமகாதகன் அவன்!
அங்கனமதை உண்மையென நினைப்பதுவோ
உன் பத்தாம் பசலித்தனமன்றி வேறில்லை!
அதையெல்லாம்குறித்து
வருத்தப்பட நேரமுமில்லை!

நெஞ்சில் வஞ்சகத் தீகுண்டம் எரிய
அழகாய் மயக்கி அமுதம் தெறிக்கச்சிரிக்க
அவனுக்கு மட்டுமே தெரியும்!

தீய சக்தியை பார்க்காதவர்கள்
அவனைப்பார்த்து பாக்கியமெய்தலாம்
அப்படி ஒரு அற்புத பிறவியவன்

பிழைக்கத்தெரிந்து பவனிவந்துகொண்டிருக்கும்
பிணியவனை குறித்து 
பிழையாய் கருத்து கொண்டிருக்கிறாய்

ஏனோ.. நீ 
இன்னும் திருந்தவே இல்லை 
வெளுத்ததையெல்லாம் பாலென்கிறாய்;
உலகை அறி..உலகோர் புரி!
மனிதர்களில் அவன் 
மனிதன் போலத்தானேயன்றி வேறில்லை"
என்று சொல்லிச் செல்கிறார்
நிழலை மட்டுமே காணமுடிந்த அவர்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா