இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 அக்டோபர் 2022

நாவலர் கெளஸ் முஹைதீன்



"பூமான் நபியின் புனித வாழ்க்கை" எழுதிய நாடறிந்த எழுத்தாளர், நாவலர் கெளஸ் முஹையத்தீன் மறைந்தார் என்ற செய்தி திடுக்கிட வைத்தது.
வெகுளியான வெள்ளந்தி மனிதர், சஃபாரி உடை தான் அவருக்கான பேவரைட் எப்போதும் அதில் தான் காட்சி தருவார். இன்முகம் மாறாத அவரது வாஞ்சைமிகு அன்பு எல்லோரையும் அவரிடம் இழுக்கும் காந்தம்.
அவர் பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவரின் பூமான் நபியின் புனித வாழ்க்கை என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்று நூல் தான் அவருக்கான மிகப்பெரிய அடையாளம்.
எண்பதுகளில் முதல் பாகம் வெளியிட்டார் தொடர்ந்து நான்கு பாகமாக நபிகள் பெருமானின் முழுவாழ்க்கையையும் எழுதியிருப்பார். அந்த புத்தகம் தான் நான் என் குழந்தைப் பருவத்தில் படித்த நபிகள் நாயகத்தின் முதல் வரலாற்று நூல். ரமலான் காலங்களில் ஈசி சேரில், தாழ்வார முற்றத்தில், திண்ணையில் என அந்த புத்தகத்தோடே கழிந்த நேரங்கள் இன்றும் மனதில் பசுமையாய் இருக்கிறது.
பூமான் நபியின் புனித வாழ்க்கை புத்தகம் குழந்தை பருவத்தில் என்னை ஈர்க்க மிக முக்கிய காரணம் இருக்கிறது. அது மற்ற புத்தங்களைப் போல அல்லாமல் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடை அத்தோடு குழந்தைகளிடம் அன்பொழுக கேள்விகள் கேட்டு அதற்கான பதிலாக கதை சொல்லும் நடையோடு கூடிய அழகிய சொல்லாடல். அதனால் நான் அந்த புத்தகத்தோடு குழந்தை நான் எட்டு வயதில் அதிலேயே கட்டுண்டு விட்டேன்.
ஒரு பாகம் படித்து முடித்த பின் அடுத்த பாகம் எப்போது வருமென ஆவல் மிகுதியாக காத்திருப்பது வழக்கம். அப்போதெல்லாம் ஒவ்வொரு பாகத்தின் விற்பனைக்கும் தமிழகமெங்கும் ஜும்ஆ பள்ளிகளில் பயான் செய்து விற்கச்செல்வார். அப்படி ஜும்ஆ நாள் பயானில் அவரைக் கண்டுவிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியும் குதூகலமும் தொற்றிக்கொள்ளும்.
பார்க்க உருவத்தில் அமைதியாக சற்று உயரமில்லாமல் இருந்தாலும் மேடையேறிவிட்டால் சிங்கத்தின் கர்ஜனை போல முழங்குவார். அவரது வசீகரப்பேச்சு எல்லோரையும் தன்வயப்படுத்தும் வசியம் நிறைந்தது. அதில் நபிகளாரின் வரலாற்றுச் சம்பவங்களை கேட்கும் போது நாம் நம்மை இழந்திருப்போம் என்பது என் அனுபவம். இப்படித்தான் பூமான் நபிகளின் புனித வழ்க்கை புத்தகத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். இன்றும் பெரும்பாலான வீடுகளில் அவற்றை பார்க்க முடிகிறது.
மேலும் ஜும்ஆ நாளில் பள்ளிக்கு வருபவர்களோடு சேர்ந்தே சாப்பிடும் பழக்கம் எனது பாட்டனார் மறைந்த சி.தா. சுல்தான் முஹைதீன் அவர்களுக்கு எப்போதும் உண்டு என்பதால் அன்றைய ஜும்ஆவிற்கு பிறகு எங்கள் மதிய விருந்தில் பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டின் விருந்தாளியாக இருப்பார். உணவு முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் ஒரு பயானும் உண்டு.
மறைந்த நாவலர் துபாய் வந்த 2013ல் அவரோடு முஸ்லிம் லீக் சார்ந்த கூட்டத்தில் மறைந்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு, என்னைப் பார்த்ததும் அவ்வளவு ஆவல் மிகுந்து விசாரித்தார், வழுத்தூரின் பல பேர்களைச் சொல்லி கிண்டலோடு அவர்களின் சேட்டைத் தனத்தைக்கூறி ஒவ்வொருவராக விசாரித்தார். அந்த அளவிற்கு எங்கள் வழுத்தூரோடு அவருக்கு நெருக்கமும் இருந்தது.
கடைசியாக 2017ல் அன்பிற்குரிய லைன்.பசீர் அஹமது அவர்களின் இல்லத்திருமணத்திற்காக வழுத்தூர் வந்திருந்த அவரிடம் விருந்து முடிந்தும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தேன். பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் நாட்டு வைத்தியம் மற்றும் நாடி வைத்தியத்திலும் சிறந்தவர் என்பது தான் தெரிந்தது. எல்லா வயதுக்காரர்களிடமும் அன்போடு பழகும்மனிதர் திருமணமான குழந்தையை எதிர் நோக்கும் இளைஞர்களுக்கு தாம்பத்திய டிப்ஸ் கூட சொல்லிக்கொடுத்து பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு சினேகமாகிப்போவார்.
விழாக்கள், நண்பர்கள் வீட்டு விசேசம் என்றால் தூரம், செலவு பார்க்காமல் வந்துவிடுவார். மிகச்சிறந்த சமூக சேவகர், இஸ்லாமிய சிந்தனையாளர், தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேச்சாளர், முஸ்லிம் லீக் தலைவர்களோடு பயணம் செய்த அனுபவம் மிக்கவர். பல நூற்கள் எழுதி சமூகத்தின் அறிவுக்கண் திறந்தவர். எல்லா ஆளுமைகளையும் போலவே சமூகத்தால் வாழும்போதே கண்டு கொள்ளப்படாமல் இருந்த மேதை இருந்தும் வலிந்து எனக்கு இது வேண்டும் என யாரிடமும் கேட்காதவர்.
அவர் இன்று மறைந்து விட்டார் அவரெழுதிய பூமான் நபிகளின் புனித வாழ்வு நூல் அவரின் பெயரை யுகங்களுக்கு தாங்கி நிற்கும் மகிமைகள் சேர்க்கும். அவரின் நினைவுகள் நினைவு இருக்கும் வரை எங்கள் நெஞ்சகங்களில் ஆர்பரிக்கும்.
அல்லாஹ் நாவலர் கெளஸ் முஹைதீன் அவர்களின் ஆன்மாவை பொருந்திக்கொள்வானாக.
துஆவுடன்,

- ஜா.மு



28 செப்டம்பர் 2021

சுல்தான் பாட்ஷா மாமு



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் என்பது குறள். அது போல பொறாமையோ, பேராசையோ, வெறுப்போ, தீஞ்சொற்களோ பேசாத மிக பாமரத்தனமான மனிதர்.

வயது பார்த்து பழக்கம் கொள்வதெல்லாம் இவருக்கு தெரியாது சிறியவர்கள் முதல் எல்லோரும் இவரின் கூட்டாளிகள்.

என் மிகச்சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் இவரோடு என்போன்ற சின்னஞ்சிறுவர்கள் கூட்டம் பின்னால் போகும். காடோ செடியோ வயலோ வரப்போவெனச் சுற்றுவோம்..

அந்நாளில் ஒரு மொட்டை தென்னை மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்க, வளர்க்க விருப்பமா?வேண்டுமா எனக் கேட்டு எனக்கு பரிசளித்தவர். முடியோ சிறகுகளோ முளைக்காத அதை பிள்ளை போல வளர்த்ததும், ஈராண்டுக்கு பின் பெரிதாக பின் பறந்து சென்றதும் தனிக்கதை.

சென்றமுறை ஊர் சென்றபோது கூட சந்தித்து மகிழ்ந்தேன் (போட்டோ அப்போது எடுத்தது தான்11th SEP'2020) இவர் போன்றோரை சந்திக்கும் போது தான் நம் ஆன்மாவே மகிழ்வது போல உணரலாம்.

சூதுவாதற்று மனதில் ஏதும் வைக்காமல் இருப்பவர்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள். எவருக்குத் தான் இவரோடு ஆசை தீர கதைக்கவும், நேரம் செலவிடவும் அவாவிருக்காது. அவனும் விரும்பினான் போல..

செல்ல ஆன்மா விடை பெற்றுச் சென்றுவிட்டது.
இன்று சுல்தான் பாட்ஷா மாமு காலமாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீள்வதுமாகும்.)

துஆ செய்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 மே 2021

கி.ரா. புகழஞ்சலி


நேற்று (28-05-2021) வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் நினைவேந்தல் நிகழ்வு அமீரகத்தின் உம்முல் குவைனில் அமைந்துள்ள மாங்ரூவ்ஸ் UAQ, the Mangroves. சதுப்புநில கடற்கறையில் சிறப்பாக நடந்திருந்தது.
ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில் நடந்த கி.ரா. நிகழ்வேந்தலில் நண்பர்களை சந்தித்ததில் பெருமகிழ்வு.
நிகழ்வு சம்பிரதாய இரங்கல் கூட்டம் போல அழுது ஒழுகாமல் தொன்னுற்று ஒன்பது வயது வரை வாழ்ந்து கரிசல் இலக்கியத்தில் உச்சம் தொட்டு மறைந்த பிதாமகனை கொண்டாடித் தீர்த்த மகிழ்வான நிறைவான நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வில் அறிமுக உரையை Bilal Aliyar நிகழ்த்தி கி.ரா வை அறிமுகம் செய்து வைத்து பேசி அவரின் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கி எழுத்தாளர் சமூகத்தையே மகிமை படுத்திய முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும் அதற்கு முன்னெடுப்பை செய்த தொழில்துறை அமைச்சர் அண்ணன் Thangam Thenarasu அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் கி.ராவின் முகஸ்துதி என்ற கதையை முகஸ்துதி குறித்தும் அதன் வகைகள் குறித்தும் அது எப்படி அழிவிற்கு வழி வகுக்கும் சிங்கம், நரி, கழுதை மூலமாக அவை கி.ராவின் வட்டார மொழியிலேயே மிக சுவாரஸ்யமாக பேசி அசத்தினார் நிழற்பட நிபுணர் Subhan Peer Mohamed. பேச்செல்லாம் சிரிப்பலை.
பஸ்பயணத்தில் அதுவும் கடுகடுப்பான நடத்துநர் மற்றும் இறுக்கமான சூழல் நிலவிய பஸ்பயணத்தில் ஒரு இளம்பெண் கைக்குழந்தையோடு ஏற அந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களின் மனநிலையை எப்படி உற்சாகமாக மாற்றியது எத்தனை இயல்புள்ள்வர்களை எத்தனை முகபாவங்கள் உருவங்கள் கொண்டவர்களை கிரா ஒரு சகபயணியாக இருந்து கவனித்து மிகநுண்ணிய முறையில் கதையாக படைத்துள்ளார் என்று Jazeela Banu அவர்கள் கூறிய விதம் எல்லோரையும் கவர்ந்தது
அடுத்ததாக அன்பு அண்ணாச்சி Asif Meeran புறப்பாடு என்ற தலைப்பின் கதையை சொன்னால் கூட கி.ராவின் வட்டார வழக்கின் சுவையை தவற விட்டு விடுவோமோ என்று வாசித்தார்.
கிராமத்தில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்து நிறைய பேரன் பேத்திகள் எடுத்த நஞ்சை புஞ்சைகள் கிராமத்து பெருங்குடியாக வாழ்ந்த அண்ணாரப்ப கவுண்டர் என்ற பெரியவரின் மரணப்படுக்கை பற்றியது, அவர் பல மாதங்களாகவே மரணப்படுக்கையில் கிடப்பதால் ஊரிலும் குடும்பத்திலும் எந்த விஷேசகாரியங்களும் செய்யமுடியாத அவர்கள் குடும்பம் சகிதமாக கிராமமே அவரது மரணத்தை எதிர்ப்பார்த்து கடைசியில் அவரின் கதையை முடிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள்.. அத்தனைக்கும் ஈடுகொடுத்து அவர் உயிர் பிரிய மறுத்து தொடரும் முயற்சிகள் பின்பு ஒருவழியாய் மரணம் நிகழ அவரை சுடுகாடு கொண்டு செல்வதுவரை அவ்வளவு நகைச்சுவையாய் கிராமத்து அசல் தத்ரூபங்கள் குறையாத கிராவின் அந்த கதை கிராமத்து கதைமாந்தர்களை கண்முன்னே நிறுத்தியது.
முத்தாய்ப்பான மூன்று சிறப்பு பேச்சாளர்களோடு நிகழ்வு முடிந்தது. ஆசிபண்ணன் புத்தகம் அனுப்பியும் என் போன்றோர் வெட்டித்தனமாக பொழுது கழித்து படிக்காததினால் பேசவில்லை.
குழுமிய இடம் அதிகம் பேர் அறிந்திராத அழகிய சதுப்புநில கடற்கரை. நிகழ்விற்கு வந்திறங்கிய போது வடை, டீ, சமோசா, பக்கோடா தொடங்கி உட்கார சேர், விரிப்புகள், டிஸ்யூ, தண்ணீர் பாட்டில்கள் பிறகு நிலாச்சோறாக டேஸ்டி பிரியாணி, சிக்கன்65, பிரட் ஹல்வா என Balaji Baskaran Kausar Baig Bilal Aliyar, Ahamed Zayed என குழுமத்தின் அன்புள்ளங்கள் அசத்திவிட்டனர். தவிர அபுதாபியிலிருந்து Firdhous Basha நித்யா குமார் பால்கரசு போன்றோரும் துபாய் ஷார்ஜாவிலிருந்து Jazeela Banu &Family, Charu Mathi - Shroo, Sabeer Ahamed மற்றும் பல நண்பர்கள் ( மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) வந்திருந்தனர்.
எழுத்தாளளின் அதிர்வலைகள் அவன் இறந்தாலும் ஓய்வதில்லை என்பதை நேற்றைய நிகழ்வு உணர்த்தியது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
29-05-2021

17 மே 2021

ஃபக்கீர் லியாக்கத் அலி மறைவு:


தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் ரிபாயிய்யா ஃபக்கீர் கலீபா லியாக்கத் அலி அவர்கள் (10-05-2021) மறைந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றேன்,
இஸ்லாமிய சூஃபி வழி முறையில் ரிபாயியா என்ற ஞானப்பாட்டை(தரீக்கா)யின் தமிழகத்தின் முக்கிய கலீபாவாக திகழ்ந்தவர் அவருக்கு ரஹ்மத்துல்லாஹ் ஷாஹ் என்று பட்டம் சூட்டப்பட்டு அந்த ஞானப்பாட்டையினர் மகிழ்ந்தனர். ரிபாயாயியா பக்கீர்மார்கள் தனக்கென்று எதையும் சேமித்து கொள்ளாதவர்கள் பேராசை இல்லாதவர்கள் வழிப்போக்கர்களைப் போல வாழ்பவர்கள். அந்த பாட்டையின் கோட்பாட்டிற்கு அப்படியே தன்னை ஆட்படுத்திக் கொண்டு இயற்கையோடு இயற்கையாய் எதாரத்தமாய் வாழ்வை வாழ்ந்த பெருமகனார் தான் மறைந்த லியாக்கத் அலி மாமு.
ரிபாயா ஃபக்கீர்மார்கள் "தஃப்" என்ற ஒலிப்பறையை இசைத்து பாடல்களாக ஆன்மீக கருத்துக்களையும் இறைநேசர்களின் புகழ்களையும் பாடி அதன் மூலம் கிடைக்கப் பெறும் அன்பளிப்புகள் மூலம் தங்கள் வாழ்வை நடத்தக் கூடியவர்கள்
(இது போன்ற ரிஃபாயிய்யா பக்க்கீர்கள் தான் நாட்டினுடைய சுதந்திரப் போராட்டத்தில் சுதந்திர வேட்கையை தங்கள் பாடலிசை மூலம் பரப்புவதில் பெரும் சேவை செய்தவர்கள்).
அந்த வகையில் ரிபாயிய்யா தரீக்காவின் கலீஃபாவாக இருந்த லியாக்கத் அலி மாமு அவர்கள் அவருடைய ரிபாயிய்யா குழுவிற்கு தலைமை ஏற்று தமிழகத்தில் எல்லா திக்கு திசைகளும் சென்று அங்குள்ள இறைநேசர்களின் கந்தூரி விழாக்களில் பங்கெடுத்து தங்கள் ஆன்மீக பணியை திறம்பட நடத்தியவர், ஞான பாடல்களையும் ராத்திபு என்ற இறை நினைவை கூறும் கூட்டங்களான திக்ரு மஜ்லிஸுகளையும் ஏராளமாக நடத்தியவர்.
லியாக்கத் அலி மாமு அவர்கள் வாள் வீச்சு சிலம்பம் போன்ற பல கலைகளில் வித்தகர் தங்களுடைய முன்னோடிகளின் வழிமுறையை பிசகாது பிறழாது பற்றிப்பிடித்து அந்த கலை வடிவங்களுக்கு கடைசி சாட்சியாய் இருந்தவர், தங்களது வாழ்நாளில் எண்ணிறந்த பேர்களுக்கு அந்த கலையை கற்றுக் கொடுத்தவர்.
இன்று சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளை கற்று கொடுப்பவர்களும், இது போன்ற வீர கலைகளும் மறைந்து போன அல்லது அருகிப் போன சூழலில் லியாக்கத் அலி மாமு அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
எங்கள் வழுத்தூரில் நடக்கும் மெய்ஞான பேரொளி முஹ்யித்தீன் ஆண்டகையின் விழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிலம்ப ஒத்திகையும் மற்றபிற வீர கலைகளின் ஒத்திகைகளும் தொடங்கிவிடும் அந்த காலங்களில் தெரு நிறைய இளைஞர்கள் கூட இரவு நேரங்களில் இளைஞர்களுக்கு சிலம்பக் கலையை அவர் கற்றுக் கொடுத்த பசுமை மாறாத நினைவுகளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
சமீபத்தில் அவருக்கு ஏதும் நோய்நொடி என்று ஏதும் அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அவரின் திடீர் மறைவு பெரும் மன வலியை ஏற்படுத்தியது, நேற்று கடைத்தெருவில் பார்த்ததாக என் மகன் கூறினார்; நேற்று முன்தினம் என்னைப் பார்த்து சிரித்தார் என்று எனது தங்கை மகன் கூறினார் இன்றோ எல்லோரையும் அழவைத்து விட்டு சிரித்த முகத்துடனே கண் மூடிக் கொண்டார் லியாக்கத் அலி மாமு.
நோன்பு கால கட்டங்களில் சஹர் நேரங்களில் மக்களை துயிலெழுப்பும் பாரம்பரிய நிகழ்வைதவறாமல் ஆண்டாண்டு காலமாய் செய்து வந்த லியாக்கத் அலி அவர்கள் இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் வரை அதையே செய்து முடித்திருக்கிறார்.
லியாக்கத் அலி மாமு அவர்கள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் பாக்கு போட்டு கரை படிந்த பற்கள் வாயின் இருபுறமும் கடைசிவரை தெரியும் அந்த வெள்ளந்தி மனிதரின் சிரிப்பு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும் கள்ளம் கபடமில்லாத அற்புத மனிதர் அவரை நினைத்தாலே அந்தக் கபடமற்ற சிரிப்பு மட்டும் தான் நினைவில் வரும்.
அதுபோல ஊர் பக்கீர்ஷா என்ற முறையில் எல்லா நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொண்டு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஊரில் யார் இறந்தாலும் அவர்களுக்காக குழி வெட்டுவதிலிருந்து இறுதி காரியங்களை மிக நேர்த்தியாக செய்வது வரை அவரின் அர்பணிப்பான சேவை மனம் வேறு யாருக்கும் வராது.
வீண் ஜம்பம் காட்டும் சிலர் வார்த்தைகளால் அவரை துளைக்கும் போதும்கூட; ஊரார் முன்னால் தன் வறட்டு ஆளுமையை காட்ட வேண்டும் என்று கீழாக நடத்திய போதும் கூட அந்த புன்னகை மாறாமல் சிரித்துக்கொண்டே ஏற்கும் அவரது பெருந்தன்மையும் பக்குவமும் அரிதினும் அரிதானது.
லியாக்கத் அலி மாமு அவர்களது இழப்பு இஸ்லாமிய பாரம்பரிய சமூக பண்பாட்டு கலாச்சாரத்திற்கான பெரும் பேரிழப்பு. பக்கீர்கள் குறைந்துவிட்ட அல்லது முற்றும் அருகி விட்ட இந்த காலத்தில் அந்த துறைக்காக அப்பழுக்கற்ற வெள்ளை மனத்தோடு சேவை செய்த வித்தகரின் மறைவு என்றுமே ஈடு செய்யமுடியாதது.
அவரது வாழ்க்கையில் தான் எத்தனை சோகங்கள் எத்தனை இடர்பாடுகள் எல்லாவற்றையும் மெய்ஞானிகளின் பேரின்ப வழிகாட்டுதல்களாலும் அவர்களின் நினைவுகளாலும் கழித்து இன்பத்தையும் துன்பத்தையும் ஒருவாறே அணுகி வெற்றி அடைந்த அந்த உயர்ந்த நல்ல மனிதரின் ஆன்மா இன்று இறையேகி பரிபூரணத்தில் நிறைந்துவிட்டது; அவர் ஆன்மா அத்தர் ஜவ்வாது போன்று மணக்கிறது; அவர் சதா காலமும் நினைத்துக்கொண்டிருந்த முஹைய்யதீனிய பெருஞானநிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அவரின் சூக்குமம் ரிஃபாயிய்யாவின் ஞானக்கூத்தை ஆடி மகிழ்ந்து கொண்டிருக்கும்.
இனி அவரின் தாயிரா "தஃப்" (ஒலிப்பறை) ஏகாந்த நிறைவில் எந்நாளும் இடையறாது இசைத்துக்கொண்டே இருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஷைகு முஹையத்தீன் குத்புல்லாஹ்.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-05-2021
1:34 அதிகாலை.

27 மார்ச் 2021

நியாஸ்

தற்காலம் கொடுங்காலமாகத்தான் தோன்றுகிறது, அது இரக்கமே இல்லாமல் ஜீரணிக்கவே முடியாத அளவிற்கு அகால மரணத்தால் நம் அன்பிற்கினியவர்களை ஒரு அரக்க சுனாமி போல வாரி கொண்டு செல்கிறது, இதுவரை இல்லாத அளவிற்கு சமீபகாலமாக மிகச்சிரிய வயது மரணங்கள் தொடர்ந்து தொடர்கதையாகிவருகிறது..
அப்படித்தான், இன்று கூட அன்பிற்கினிய சகோதரர் முஹம்மது நியாஸ் அவர்களின் இறப்பு பேரதிர்ச்சியாய் வந்து சேர்ந்தது. அவருக்கு வெறும் நாற்பத்து நான்கு அல்லது நாற்பத்து ஐந்து மட்டுமே அகவை இருக்கும், அதற்குள் அகால மரணம் சம்பவித்து அனைவரையும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆக்கிவிட்டது.
நியாஸ், இஞ்சினியரிங் படித்துவிட்டு சிங்கப்பூரில் பணி செய்தவர். அங்கு சென்ற ஒருசில ஆண்டுகளிலேயே அது நமக்கானது அல்ல என்று உணந்த அவர் உடனே ஊர் வந்து MSM பில்டர்ஸ் என்ற கட்டுமான கம்பெணியை நிறுவி எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகமதிகம் வீடுகளை பார்ப்போர் வியக்கும் அழகில் கட்டிக்கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் தொழிலை முழுமனதாக பக்தியோடு செய்த காரணத்தால் கட்டுமானத்துறையில் பெரும்பாலும் நம்மூர்களில் பின்பற்றப்படாத காலவரையறை மற்றும் பொருட்செலவு வரயறையை மிகவும் கவனமெடுத்து பின்பற்றி தன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்போடு நன்முத்திரையை பெற்றுச்சிறந்தார். இவரது நிறுவனம் மிகச்சிறந்த குழுவினரால் சிறந்த கட்டிடங்களை உரிய நேரத்தில் கொடுப்பதால் மற்ற எல்லா நிறுவனத்தைவிட அதிகம் அதிகம் மக்களை ஈர்த்து தொழில் ரீதியாக ஏறுமுகமாகவே இருந்தார்.
தொழிலையும் தாண்டி எல்லோரிடத்திலும் இன்முகம் மாறாது பழகுபவர், எனது கட்டிடப்பணிகள் சம்பந்தமாக சில ஆலோசனைகளை கேட்டபோதும் அவர் கட்டாத எனது கட்டிடத்திற்கும் ஆலோசனைகளை அன்போடு பகிர்ந்து கொண்டவர். நியாஸும் நானும் ஒன்றாக குர்ஆனை வழுத்தூர் மதஸா பள்ளியில் பாவா அப்துல் ஹை அவர்களிடத்தில் ஓதியவர்கள் என்ற அடிப்படையில் பாலிய நட்புணர்வு எங்களிடம் உண்டு அதை என்றும் நினைவு கொண்டு நட்பு பாராட்டியவர்.
அவர் தந்தை முஹம்மது சுல்தான் எனது தந்தையாரின் மிகநெருங்கிய நண்பர் மிகச்சிறந்த குணநலம் கொண்டவர், அவர் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த போது ஐம்பத்தெட்டு அறுபது வயதிற்குள் இறந்தபோதே இப்படி சிறுவயதில் இறந்துவிட்டாரே என்ற அதிர்ச்சி எங்களை ஆட்டிபடைத்தது, ஆனால் நியாஸ் வெறும் நாற்பத்து சொச்சம் வயதிலேயே இறையழைப்பை ஏற்றதை என்னவென்று சொல்வது.. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எவ்விதம் ஆருதல் வந்து சேரும்..???? இது அவர்களுக்கு பெரும் துயரத்தின் பெருங்கடல் அல்லவா!!!
இறைவா! அன்னாருக்கு ஆத்ம சாந்தியை கொடுத்து நித்திய ஜீவனாக்கு. அவரின் குடும்பத்தாரை அரவணைத்து உதவு.
நண்பர்களே, இவ்வாறான அகால மரணங்கள் உணவுக்கலாச்சாரம் வாழ்வியல் முறைகளில் மாறி உடல்நிலையை பராமறிக்காது குருட்டாம்போக்கில் போகும் நமக்கு நம் உடல் நலத்தை பேணுதல் என்ற ஒற்றை அலாரத்தை தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறது, அதற்கு செவியும் கொடுத்து உணர்ந்து செயல்படுவோம். இது நமக்காக இல்லாவிட்டாலும் நம் குடும்பத்திற்காகவாது காலத்தின் கட்டாயம் ஆகும்.
- ஜா.மு.
05-02-2021
6:26 pm

25 ஜூன் 2020

செட்டியார் தாஜுத்தீன் மாமு

பொதுவாழ்வில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டு சமூகப்பணி ஆற்றியவர் செட்டியார் தாஜுத்தீன் மாமு. திமுகவில் தீவிரமாக இருந்து பிறகு தாய்ச்சபை முஸ்லிம் லீக்-கில் இணைந்து தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரைமரிக்கு பக்க பலமாய் இருந்தவர், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் போன்ற பதவியிலும் இருந்திருக்கிறார். தான் இறந்தால் உடலில் பிறைக்கொடி போர்த்த வேண்டும் என்ற அளவிற்கு அர்பணிப்போடு இருந்து தாய்ச்சபைக்கு தொண்டூழியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்,வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாய் பணி செய்தவர், வஹ்ஹாபியத்திற்கு எதிரான சுன்னத் வல் ஜமாத் கொள்கைகாக உணர்வோடு உழைத்தவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பள்ளிவாசலில் நடக்கும் ஊர் கூட்டங்களில் ஏதேனும் சலசலப்பென்றால் இவரின் ஒரே கத்தல் போதும் சபை அமைதி பெறும். நிறைய வாழ்வின் அனுபவங்களை சுமந்திருந்தவர். அவரது மறைவு பெரும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக; அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. --வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

இப்புகைப்படம் நாலு கொடி கந்தூரிக்கு தயாராகும் நாளில் 2014 ஜனவரியில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் எடுக்கப்பட்டது .

12 மே 2018

செ.ப. ஜாபர் அலி மாமு நினைவுகள்

நேற்றைய முந்நாள் காலையில் முகநூல் பார்க்க அதில் செ.ப.மன்சூர் அண்ணன் (ஆலஞ்சியார்)
“ தம்பி .. உனக்கு பொன்னாடை போர்த்தியதை பாத்தேன்டா .. ரொம்ப சந்தோச இருந்துச்சுடா..
இனி எப்போது கேட்பேன்..
இந்த வெள்ளந்தி மனுசனின் குரலை..
..
போய் வா அண்ணனே..
..
கொஞ்சம் அழவேண்டும்’ என்று எழுதி இருந்தார் பார்த்து திடுக்கிட்டேன்.. மிக அதிர்ச்சிக்குள்ளானேன்..
ஆமாம் அது எங்கள் எதிர்வீட்டு அண்ணன் செ.ப.ஜாபர் அலி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி, மறைந்த செ.ப. ஜாபர் அலி அவர்களும், ஆலஞ்சியார் மன்சூர் அண்ணன் அவர்களும் எங்கள் நன்னி வீட்டுக்கு எதிர்வீட்டுகாரர்கள் தான்.( தஞ்சை மாவட்டம், வழுத்தூர்) இருவரும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பி உறவு. அதனால் ஜாபர் அலி அண்ணனின் மறைவை அத்தனை பதைப்புடனும் தவிப்புடனும் எழுதியிருந்தார். பிறகும் ஒரு பகிர்வும் ஒரு இரங்கற்பாவும் கூட எழுதி ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்தார். நானும் படிக்க படிக்க மனவேதனைக்குள்ளானேன்.
யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு செய்தி இவ்வளவு சீக்கிரம் காதுகளில் ஒலிக்கும் என்று, அவர் உடம்பு சுகவீனமாக இருந்தவரில்லை, நல்ல திடகாத்திரத்துடன் வலுப்பமாக இருந்தவர் தான். இருபது நாட்களுக்கு முன்பு கூட நேரில் பார்த்து பேசியிருக்கிறேன், எப்போதும் அன்பும் பாசமும் தன் பேச்சில் கொட்டிப்பேசுவார். மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்த்தாகவும், கடைசி நேரத்தில் பெரிய பிள்ளைகள் யாரும் இல்லாது அந்த இக்கட்ட்டான சூழலில் மாரடைப்பு ஏற்பட்ட அவரை டாக்டரிடம் காரில் அழைத்துச்செல்ல அல்லது அம்புளன்ஸை அழைக்க என படாது பாடு பட்டிருக்கிறார்கள் வீட்டார்கள் என அறிய மனதில் பெரிய வலி உண்டானதை தவிற்க இயலவில்லை.
மறைந்த் செ.ப.ஜாபர் அலி மாமு கீழ்நிலையிலிருந்து உழைப்பால் மேலே வந்தவர். ஏழ்மையின் ஏக்கம் அதன் மனவலி எல்லாம் அறிந்திருந்தவர். அதனாலேயே எங்கள் வழுத்தூர் கீழத்தெரு பிள்ளைகள் மற்றும் உறவுபிள்ளைகளுக்கு அவர் மலேசியாவில் நடத்திவந்த ஹோட்டலில் வாய்பபளித்து பேருதவி செய்தவர், குடும்பங்களில் விளக்கு எரிய காரணமாய் இருந்தவர்.
எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது, தொன்னூறுகளின் ஆரம்பத்தில் டிவி எஸ் 50யில் ஒரு சுத்து சுத்தி வருவதே கிடைக்காத பெரும் விசயம், அப்போது தனது மகன் ஹாஜா மைதீனை ராஜா போல வளர்த்த அவர் மகனுக்கு “யமஹா 100 சீசீ” கருப்புக்கலர் மோட்டார் வாங்கி கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் அது மிக அபூர்வம்.. அந்த பைக்கை சுற்றி தெருபசங்க பட்டாளம் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும், உண்மையில் அந்த வண்டியை ஓட்டி வருவதிலும் அதன் மோட்டார் ஓடும் மனதை வருடும் சப்த்த்தை கேட்பதிலும் ஒரு அலாதி மகிழ்ச்சி தான் ஏற்படும். நானும் கூட பலமுறை ஜாபர் அலி மாமு அவர்களிடம் “ஒரே ஒரு சுத்து சுத்திட்டு வந்திடுறேன் மாமு” எனக் கேட்டு வாங்கி வாங்கி எனது ஆசைகளை தீர்த்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் மனிதர் மறுப்பே சொல்ல மாட்டார், கீழத்தெரு பங்களில் பலரும் அப்போதெல்லாம் அந்த பைக்கில் தான் மோட்டார் ஓட்ட கத்துக்கொண்டனர் பலமுறை கீழே விழுந்தும் வண்டியை கொண்டு வருவார்கள் ஆனால் அதே சிரித்த முகம் தான். பிறகும் அதே பையன்களுக்கும் வண்டியை ஓட்டக்கொடுப்பார். ஏழை சிறுவர்களின் ஏக்கங்களைவிட அவருக்கு அந்த அபூர்வ பைக் பெரிதாகப்படாது அவரது அந்த மனநிலை அப்போதே எனக்கெல்லாம் பிரமிப்பை ஊட்டும்.
தனது கடின உழைப்பால் மெயின் ரோட்டில் அரச்சலை ஜாபர் அலி அவர்களிடம் இடம் வாங்க, அவரது கனவு இல்லத்தை எனது மாமா சி.தா.அலி அக்பர் சிறந்த முறையில் அழகுற கட்டிக்கொடுத்தார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டியதை செய்து சிலகாலமாக ஊரில் ஆன்மீகத்தேட மிகுந்தவராய் பார்ப்பவர்களுக்கே சிலிர்ப்பூட்டும் வகையில் தேஜஸ் மிக்கவராய் கண்ணியமிக்க நீண்ட தாடியுடன் தலைப்பாகையும் தரித்து ஐவேளை தொழுகையும், திக்ருகளும் என தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்துவந்தார். கிட்டே நெருங்கினால் நிறைய ஆன்மீகம் பேசுவார், யார் என்ன பேசினாலும் பொறுமையுடன் அதை ஏற்பார் எதிர் கருத்தையும் ஏன் வசவுகளையும் கூட சகிப்பார். ஒரு காலத்தில் கட்டை மீசையுடன் டிப்டாப்பாக நல்ல ஸ்டைலாக உடைநேர்த்தியுடன் இருந்தவர் வெள்ளை ஜிப்பா போதும் என்ற நிலையில் யாரைப்பற்றியும் கவலைப்படாது தன்னை வடிவமைத்துக்கொண்டார். தன்னோடு நெருங்கியவர்களுக்கெல்லாம் சூஃபியிசக்கருத்தை எத்திவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவரது இழப்பு தாங்கொணா மனக்கவலையை தருகிறது.
வெளிநாட்டில் மகன்கள் இருந்தாலும் ஊரில் தான் இருந்தாலும் உழைக்க மறக்காதவர் தனது செலவின்ங்களுக்கும் குடும்பத்திற்கும் தானே ஏதாவது ஹலாலான தொழில் செய்து வருவாய் ஈட்டி சாப்பிட நினைத்தவர் மகளின் பிள்ளைகள், மகன்களின் பிள்ளைகள் எனக் கொஞ்சி அவர்களை பள்ளிக்கு கொண்டு சென்று அழைத்துவந்து இன்பம் கண்டவர், நான் எனது மகள் ஜைனபை அலிப் பள்ளிக்கு கொண்டு சொல்லும் போதும் அழைக்க செல்லும் போதும் அவரை பார்ப்பேன் அன்பொழுக பேசுவார், இது என் மகன் பிள்ளை, இது எனது மகள் பிள்ளை என அந்த மழலையர்களை அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார், இனி யார் அவர்களை கொஞ்சுவதற்கும், பள்ளியிக்கு ஆசை மொழி பேசி கொண்டு செல்வதற்கும் ஆர அணைத்துத்தழுவி பின் வீடுக்கு அழைத்துச்செல்வதற்கும்…?  
பாவம் அந்த பிஞ்சு பேரக்குழந்தைகள் மட்டுமல்ல.. எல்லோரிடமும் அன்பைக்கொட்டும் அவரது துணைவியார் பீபி மாமியும் தான். வீட்டிலும், சொந்த பந்த்ததிலும் ஊரிலும் அவரது இழப்பு மிகுந்த தாக்கத்தை எல்லார் நெஞ்சிலும் ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. நபிகளார் சொன்னது போல மறைவுக்கு பிறகு அதிகமானோர் அன்னாரின் நல்லனவற்றை பிரதானமாக சொல்லுவதிலிருந்தே அவர் மிகச்சிறந்த ஆன்மா என்றும், சுவர்க்கவாதி என்பதையும் நாம் அறுதியிட்டுச்சொல்ல்லாம். நல்லோர்கள் ஆன்மா அவரை ஆசீர்வதிக்கட்டும். வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக, ஆமீன்.
நிச்சயமாக நாம் அவனிலிருந்தே வந்தோம்… அவனிடமே மீளுகிறோம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
12—05-2018, 2.34 பிற்பகல், ஷார்ஜா.
Thanks for Photo: Abdul Kader Rizwan

06 ஆகஸ்ட் 2017

சமரசம் செய்யாத கருத்தாளர் எச்.ஜி. ரசூல்



ஊன்றிய கருத்தால்
உள்ளத்துள் சமரசமானவர் என்பதால்
உலகத்தோரே எதிர்த்த போதும் அவர்
கருத்தில் சமரசம் செய்யாதவர்
தீட்டும் இலக்கியத்தில்
தீவிரம் காட்டினார்
திட்டும் உலகத்தினை
தரமறிந்து விட்டுக்கொடுத்தார் - ஆனாலும்
அவர்கள் நலம்பெற
ஆக்கங்கள் பலவால்
கற்றுக்கொடுத்தார்
சூஃபியிச கருத்துலகில்
ராஜாளியென பறந்தார்
சூஃபியாக்களின் பாதங்களை
பலமாக பற்றி நின்றார்
அறியாது எதிர்த்தோர்
புரியாது போரிட்டோர்
எவரையும் விட்டதில்லை யவர்
நையபுடைப்பார் பதில்படையெடுத்து அவர்
அதியற்புத கவிதைகள் செய்வார்
அதனினில் பொதிந்திருக்கும்
அத்தனை பொருள்வளம்
வித்தகம் செய்யும்
கற்பனையும் சேர்த்து
சிற்பம் செதுக்குவது போல
செதுக்கிவைப்பார்
தம் படைப்புகள் அனைத்தையும்
எல்லாம் ஒன்றென பேசிய கவிஞர்
வல்ல ஒன்றில்
வகையாய் இணைந்தார்
அதனோடு நிறைந்திட
உடல் கொஞ்சம்
தடையாயிர்ருந்தது
உயிரது உடல்விட்டேக
அத்தடையும் நீங்கிற்று
அதிர்ச்சி செய்தி சொன்ன போது
அந்தோ இங்கனம் நேர்ந்ததே என
அழுதார் ஓர் தோழர்
பின்னர் உரைத்தார்
நிச்சயம் அவருக்கு நிறைந்த
சுவர்க்கம் உண்டென்று!
கவிஞரவர்
சொர்க்கம் தாண்டி
நரகம் தாண்டி
மெய்ப்பொருளின் நடனத்தில்
மெய்மறந்தவர்
ஆதலால் இப்போதும்
அதனிலே தன்மெய்யை கலந்திட்டார்
மெய்யுறவே கலந்திட்டார்
இனி அவருக்கு கவலையில்லை
எதன் குறித்த வருத்தமும் இல்லவேயில்லை
என்று தோழரிடம் நான் உரைத்து
இன்னொன்றும்
திண்ணமாய் சொல்லிவைத்தேன்
"அவரை உலகில் இழந்ததனால்
அவரின் சிந்தனை முத்துக்களை
நாளை நாம் பெறப்போவதில்லை
அவர் பெற்ற ஞானமுதிர்ச்சியில்
எந்தப் புதிய பழத்தினையும்
இனி ருசித்தல் இயலாது
இவ்வாறான வெற்றிடத்தை
இனி யாராலும் நிறப்பிட முடியாது
இது தான் இழப்பு..
அதற்கே தவிப்பு"
***
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
6-8-2017 அதிகாலை.

கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மறைவு மிக வருத்தம் தந்தது, அண்ணன் அபுஹாசிமா அவர்கள் கவிஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியை பகிர்ந்திருந்தார் ஆனால் இத்தனை விபரீதமாய் முடியும் என நினைக்கவில்லை, மாலை (5-8-17)  கவிஞர் தஞ்சாவூரான் அவரின் பிரிவுச்செய்தியை சொன்னபோது மனம் மிக வாடினேன். இறக்கும் வயதல்ல இன்னும் நிறைய இலக்கியம் தரவேண்டியவர், என்ன செய்வது இறைவன் நியதி.
மறைந்த உயர்வான சிந்தனையாளரின் வியாபகத்தை நேற்றிலிருந்து முகநூலில் உணரமுடிந்தது. ஏனோ எப்போதும் அறிஞனை, கவிஞனை செத்த பிறகே போற்றும் சமுகமாய் இது உள்ளது என்ற கேள்வியும் என்னுள் அழமாய் விழுந்தது.
அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை வழங்கப்போதுமானவன்.

03 பிப்ரவரி 2017

இன்னொருவர் இனி யார்?


கண்ணூரில் பிறந்த நீர்
இந்தியா முழுமையும்
என்னூர் என்றல்லவா வாழ்ந்தீர்
இன்னுயிர் பிரியுமட்டும்
மண்ணுயிர் காக்கவே உழைத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
சொந்த மண் கேரளாவிற்கு
பட்டியலில் அடங்காத பலவற்றை செய்தீர்
பத்தொன்பது ரயில்களை மலையாள மண்ணுக்கு
விட்டுத்தராமல் பேராடி பெற்றீர்
மலப்புரத்தில் அலிகார் கல்லூரி கண்டீர்,
மட்டுமல்ல..
ஹஜ் ஹவுஸும், பாஸ்போர்ட் ஹவுஸும்
தன் மண்ணின் மக்களுக்கு கொடுத்தீர்
பாழும் சிறையில் வாழ்விழந்து கழித்தோரை
தொடர்போராட்ட்த்தால் வெளிக்கொணர்ந்து
பலருக்கு புதுவாழ்வளித்தீர்.
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
அன்றே உதயமாகி ஆங்கிலேயரை எதிர்த்து களம் கண்ட
இனிய தன் தகைமைசால் இயக்கம்
இந்தியாவெங்கும் இனிதே புத்தெழுச்சி கண்டிட
கேரள முஸ்லிம் லீக்கை
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கென
சட்டப்பூர்வமாக மாற்றி சரித்திரம் காண
தமிழ்நாட்டிலும் முஸ்லிம் லீக் தனிச்சிறப்பு பெற்றிட
தலைவர் காதர் முகைதீனுக்கு தளிர்க்கரம் தந்தீர்
எள்ளி நகையாடிவருக்கெல்லாம்
சொல்லி வைத்தடித்தாற்போல தனியாய்
ஏணிச்சின்னம் தந்து ஏற்றம் செய்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
பெல்லட் குண்டுகளால் சிதைக்கப்பட்ட
காஷ்மீரத்து இளைஞர்களின்
ஒளியிழந்த கண்களின் கண்ணீர் கதையை
மீறப்படும் சமூகநீதியை
இழைக்கப்படும் பெருங்கொடுமையை
நேரில் கண்டு அவர்களோடு தானும் அழுது
ஆளும் வர்கத்திற்கு அவர்களின் வருத்தத்தை
அறிக்கையென அறிய தந்தீர்
அவர்களுக்கே மனசு வலித்த்து
அதை சுஸ்மாவின் வாசகமே உரைத்தது.
இது போல எளிவருக்காய் இதயம் இரங்க
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
காவிப்பேய்களின் கோரப்பற்கள்
முசாஃபர்ப்பூரில் ருத்ர தாண்டவமாட;
பவிகளால்; அப்பாவி ஏழைமக்கள்
வாழ்வாதாரம் அழிந்து
சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட,
அன்னையில்லா பிள்ளைகளாய்
அழுது மாண்டிருந்தார்,
கலங்கிய மனதோடு கலவர பூமி சென்று
அள்ளி அணைத்தீர் அவரனைவரையும்.
அச்சமின்றி வாழ பேராதரவும்
இனி வாழ புதுவீடும் கூட தந்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இருபத்தேழு முறை .நாவில்
இந்தியாவின் நாவாய் பேசினீர்
அருந்தவ இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும்
உரிய பாலமாய் இருந்தீர்
ஈராக்கில் இதயமில்லா தீவிரவாதிகள்
இந்தியர்களை பிணைக்கைதியாக்கிய போது
முதலில் நின்று மீட்டீர்
பலஸ்தீனத்திற்காகவும் சிரியாவிற்காகவும்
பரவிவரும் பாசிசத்திற்கெதிராகவும்
என்றும் போர் குரல் தொடுத்தீர்
இன்னொருவர் இனி யார்;
இனியார் அஹமது போல!
****
இன்று நீங்கள் இல்லையே
.அஹமது ஸாஹிபே..
இதயம் வலித்து அழுகின்றோம்
இனி நீங்கள் வரப்போவதில்லை,
தன் நண்பரின் பிரிவை தாங்கிடாமல்
இரங்கல் கூட்டத்தில் என் தலைவர்
காதர் முகைதீன் கண்ணீர் வடித்து அழுதாரே
பார்த்த நாங்களும் விழிகள் பனிக்க
மீண்டும்.. மீண்டும்.. அழுதிருந்தோம்
****
மயங்கினீர் உணர்விழந்தும்
நாடாளுமன்றத்திலே தான்
நடந்தீர் இறுதி மூச்சுவரை
காயிதே மில்லத்தின் கண்ணிய வழியினிலே
வாழ்ந்தீர் மானிடத்திற்காய்
வாழ்ந்திருந்த நாள் முழுதுமே.
****
மக்களுக்காக உழைத்த உங்களை
மக்களின் மனதும் போற்றும்
மறுமையும் பெரிதே போற்றும்
மகிமை செய்தே ஏற்றும்
இனிதே நிகழ்க உங்கள் இனிய சுவர்க்கப்பயணம்.
அழியாது உங்கள் புகழ்
அருமை தலைவர் .அஹமது சாஹிபே!
****
துஆக்களுடன்,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா

3-1-2017