போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.