22 ஜூலை 2016

அன்பின் வள்ளல் வழுத்தூர் லப்பாத்த. ராஜ்முஹம்மது மறைந்தார்

காலம் பூராவும் மலேசியாவில் இருந்து பிறகு இப்போது ஏழெட்டு ஆண்டாக ஊரில் தங்கியும் சும்மா இருக்கக்கூடாதென பள்ளிக்கூடத்திற்கு எதிரில் பிள்ளைகளுக்கான சிறிய மிட்டாய்கடை நடத்தி இன்றுவரை உழைத்த உழைப்பாளி, மிகத்துடிப்பான முஸ்லிம் லீக்காரர், எப்போதும் இன்முகத்தோடு மிக வயதில் இளையவராக யார் இருந்தாலும் மரியாதையும் கண்ணியமும் கொடுத்து பேசும் அழகர், இறைத்தூதர் நாயகம் ஸல்லால்லாஹு அலைஹிவசல்லம், இறைநேசர்கள் என்றால் அவ்வளவு நேசம், திக்ரு மஜ்லிஸ், பயான் மஜ்லிஸ் என எல்லாவற்றிற்கும் முந்தியடித்து முதலில் ஆஜராகும் ஆன்மீகவாதி, எங்கள் ஊருக்கு பரக்கத்தாக எப்போதும் இறையருளை எல்லோருக்கும் யாசிப்பவராக நடமாடிக்கொண்டிருந்த மதிப்புமிகு லப்பாத்த. ராஜ்முஹம்மது மாமு அவர்கள் இன்று மறைந்த செய்தி வந்தது, உள்ளபடியே மனம் வாடிப்போனேன்.
வழுத்தூரில் முன்பு இருந்த பெரியவர்களில் எல்லோரும் பெரும்பாலும் முஸ்லிம் லீகர்களே.. அதில் துடிப்புமிக்கவர் மறைந்த ராஜ்முஹம்மது மாமு, எங்கு முஸ்லிம் லீக் மாநாடு, கூட்டம் என்றாலும் அலாதி பிரியத்துடன் முன்பே வாகனம் முதற்கொண்டு முன்பதிவு செய்துகொள்வார். தன்னுடைய இறப்புக்கு கூட நெருங்கிய நண்பர்களிடம் நான் இறந்தால் என் உடம்பில் முஸ்லிம் லீக்கின் பிறைகொடியை போர்த்துங்கள் என்று சொல்லி இருக்கிறாராம்.
அவரோடு பழகிய நாட்கள், பேசிய நேரஙக்ள் என எல்லாம் மனதில் விரிந்தன. அத்தனை அன்பை கொட்டிப்பேசுவார், என் மீது அத்தனை அன்பு அவருக்கு, ஊர் வரும்போதெல்லாம் இனிக்கப்பேசுவார். நலம் விசாரித்து மகிழ்வார், நமது பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது குறித்து அத்தனை ஆதங்கமும், அவாவும் இருக்கும், அது பாழ்படும் நிலைகளை குறித்து வருத்தத்துடன் பகிர்ந்துகொள்வார். தினமும் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் அவரை பார்க்கலாம், பழங்கால கதைகள் பேசி அனுபவங்கள் பலவற்றை பேசிக்குளிப்போம். இன்று அவர் மறைந்துவிட்டார், இனி ஊர்போனால் அவரின் நடமாட்டத்தை பார்க்கமுடியாது. மிகச்சிறப்பான மனிதரை இழந்துவிட்டோம்.
ராஜ்முஹம்மது மாமு அவர்களின் இழப்பு வழுத்தூரின் மீதமிருந்த முத்துக்களில் ஒரு முத்தை இழந்தது போலத்தான். அவர் மிக நேசித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம், ஆஹ்லுல் பைத்துக்கள், இறை நேசப்பெருந்தகைகள் ஆசிகள் சூழ இறைவன் அவரது தூய ஆன்மாவை என்றும் நித்திய சாந்தியில் நிலைக்கச்செய்வானாக, ஆமீன்.
இந்த புகைப்படம் பெரியப்பள்ளிவாசலில் ரபிய்யுல் அவ்வல் ஹந்தூரி நடைபெற்ற காலைப்பொழுதில் 2014-ல் எடுத்தது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 ஜூலை 2016

முகநூல் பதிவுகள் -ஜூலை 17

மனதிற்கு உகந்தவர்கள் என்றும் நலமோடிருக்க நாம் நம்மை அறியாமலேயே பிரார்தித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் அன்பின் ஆளுமை!

***
எல்லாம் மனநிலையை சார்ந்ததாக இருந்தாலும் மனநிலையை நாம் பெரும்பாலும் நல்லதாய் மட்டும் சொல்லி.. சொல்லி.. கட்டுக்குள் வைக்க தவறிவிடுவது தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

***

திருமண தினங்கள் வந்து செல்கிறது
திருமணமான மனங்கள் தான் ஒன்று சேர வழியில்லை
வெளிநாட்டு பிளைப்பு.. !
வெளிநாட்டுக்கு போனிங்கள ஒங்களுக்கு வெணும்.. அப்படீன்னு அங்கெருந்து நெனக்காதீங்க... பஜ்ஜி சொல்லிடும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈகைத்திருநாள் - 2015 ( பதிவுக்காய்)

இனிதாய் கடந்தது ஈத்!
இன்றைய ஈத் அமீரகம் அஜ்மானில் குடும்பத்தோடு மிகச்சிறப்பாக சென்றது, வழக்கம் போல் நேற்றைய இரவிலிருந்தே ஏற்பாடுகள் செய்து உறங்கச்செல்லும் போது மணி இரண்டரையை தொட்டிருந்தது
பிறகு மனைவி எழுப்புகையில் முடியாமல் எழுந்தது நாலே முக்கால். குழந்தைகளும் மிகத்தாமதமாக தூங்கியதால் அந்த நாலே முக்காலுக்கு எழ மறுக்க கொஞ்சம் அதிரடியாய் தூக்கிச்சென்று ஷவரில் கொண்டு நிறுத்த களம் களைகட்டியது. பிறகு எப்போதும் போல ஊரில் இளமையில் என் தாய் தந்தையர்புத்தாடை அணியத்தந்து வாழ்த்திடும் நிகழ்வுகள் மனதில் நிழலாட புத்தாடை அணிந்து நபிகள் நாயகத்தின் வழிமுறைப்படி எல்லோரும் ஒற்றைப்படையில் பேரித்தப்பழங்கள் சாப்பிட்டு அந்த ஐந்தரைக்கு அஜ்மானின் ஷேக் ஜைத் பள்ளிக்கு சென்றடைந்தாலும் அதற்குள் பள்ளி நிறைந்திருந்தது. உள்பள்ளி, மேல்தளம் என எங்கும் செல்ல முடியாததாகி வெளியில் நீண்டு விரித்திருந்த கம்ளங்களில் அமர்ந்தோம். (ஊராக இருந்தால் பெருநாள் தொழுகை காலை 9மணி பத்து மணி என்றிருக்கும்)
இந்த ஈத் பெருநாளின் காலை சென்ற ஆண்டு ஈத் பெருநாட்களைப்போல வெம்மையாக இல்லாமல், வியர்த்துக்கொட்டாமல் கடுங்கோடையாக இருந்த போதிலும் அதிகாலையில் எங்களை இரம்மியமான அருங்காற்றே வருடி இன்னும் இன்பத்தை கொட்டிச்சென்றது.
பிறகு தொழுகை முடித்து வாழ்த்துக்கள் பறிமாறி வீட்டிட்ற்கு வந்து காலை உணவை மகிழ்வோடு உண்டு மீண்டும் பிரியாணி தயாரிப்புக்களத்தில் குதித்தோம்.. உறவினர், நண்பர்கள் வாழ்த்து என உற்ச்சாகமாய் கொண்டாட்டம் தந்தது இன்றைய ஈத்.
ஊரில்பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எனது உளங்கனிந்த ஈத் முபாரக். நமது மகிழ்வும் உற்ச்சாகமும் இன்னும் இரட்டிப்பாகட்டும்.. நமது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் இன்னும் பண்மடங்காகட்டும்.
நாட்டில் எல்லா சமூகமும் இணக்கத்தோடு இணைந்து சிறப்பான பெருவாழ்வை நன்றே வாழ இப்பெருநாள் எல்லோருக்கும் புரிந்துணர்வை நல்கட்டும். மீண்டும் என் வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஜூலை 2016

திருமணநாள் நினைவு - ஜூலை 16



ஜூலை மாதம் வந்தாலே ஜோடி சேர்ந்த நினைவு தான்... அப்படியே ரொமேன்டிக்கில் மூழ்கிவிடுவேன், பழைய நினைவுகளை நினைத்தாவது தேற்றிக்கொள்வோமென்று தான். அவற்றை நினைத்தாலே அப்படி ஒரு சுகம்.
என் அழகிய ராட்சசி இருக்கிறாளே அவள் எனக்கு கிடைத்த வரம். நேற்று பார்த்த சுல்தான் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சல்மான்கான் சொல்லுவார்.. "மனைவிகளெல்லாம் பிறவி சண்டைக்காரிகள்" என்று ஆனால் அந்த சண்டைக்காரிகள் இல்லாத அல்லது சண்டைகள் இல்லாத வாழ்வு சுவாரஸ்யமாய் இருக்காது, அது தான் ரசம் கூட்டுகிறது, அது தான் திடீரென தூரமாக்கி.. பின் இடைவெளியே இல்லாமலும் ஆக்கி சுவர்க்க சுகம் கொண்டுவரும். அதே படத்தில் இன்னொரு அழகான வசனம் கூட சொல்வார் கணவன் மனைவியின் அன்பென்பது "எக்ஸ்பெயரி டேட் இல்லாத லவ் அதாவது முடிவுறாத அன்பு" என்று அந்த அன்பில் தான் பிணைக்கப்பட்டு உனக்கு நான்.. எனக்கு நீ.. மொத்தத்தில் "நமக்கு நாமே" என்று நீள்கிறது எங்கள் வாழ்க்கைப்பயணம். மேலும் எங்களின் பெற்றோர், குடும்பத்து பெரியவர்கள் மற்றும் நல்ல ஆன்மாக்களின் தூய வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள் இவற்றோடு வளங்கள் சேர, பலங்கள் சேர செவ்வனே நல்லற வாகனம் பயணம் தொடர்கிறது. பயணத்துணைக்காய் வலது இடதென நளீர் மற்றும் ஜைனப் என்ற இருமலர்களை இறைவன் தனது அன்பின் கரங்களால் அவனே அளித்து இன்னும் இன்பம் கூட்டியிருக்கிறான்.

காலம் தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது, ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த இன்ப நிகழ்வு, அதற்குள் ஒன்பது ஆண்டு நிறைவுற்று பத்தாவது ஆண்டில் எங்கள் இல்லறம். இன்று எங்கள் திருமணநாள்.
எல்லோரும் சிறந்து வாழ்வோம்.

(இத்தனை வருடங்களில் இது தான் நான் இடும் முதல்
திருமண நாள் பதிவு)

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மனிதகுல விரோதிகள்

Abu Haashima அண்ணனின் ஸ்டேடஸ்-ம், நான் இட்ட பின்னூட்டமும்
முஹம்மது என்று பெயருள்ள ஒருவன் ப்ரான்சில் தாக்குதல் நடத்தி பத்து குழந்தைகள் உட்பட ஏராளமானவர்களை கொன்றிருக்கிறான்.
இன்றைய பத்திரிகைகளில் " ஐஎஸ் தீவிரவாதி முஹம்மது என்பவன் ...."என்று செய்தி பிரசுரித்திருப்பதை படிக்கும்போதுஉண்மையிலேயே உண்மையிலேயே மனம் கொந்தளித்து கொந்தளித்து
வேதனித்துக் கொண்டிருக்கிறது.
முஹம்மது என்ற பெயர் வைத்துள்ள ஒரு உண்மை முஸ்லிம் இதுபோன்ற நீசத்தனமான காரியத்தை செய்திருக்க மாட்டான். அப்படிச் செய்தால் அவன் முஸ்லிமாகவே இருக்க மாட்டான். அவன் யாரென்பது நமக்குத் தெரியாது. அவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.
அல்லாஹ் அவனை ...
அவனைச் சார்ந்தவர்களை மண்ணோடு மண்ணாக
நாசமடையச் செய்வானாக.
முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் காலத்திலும்
பல போர்கள் நடந்தன.
போருக்கு முன்னர் நபிகளார் விதித்த நிபந்தனைகள் ....
* போரில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்
கொல்லப்படக்கூடாது.
* பெண்களுக்கு எந்த இழிவும் ஏற்படக்கூடாது.
* விளை நிலங்களை அழிக்கக் கூடாது.
* கால்நடைகளை கொல்லக் கூடாது.
இப்படித்தான் அவர்கள் காலத்திலும்
அவர்களின் வபாத்துக்குப் பிறகு நடந்த போர்களிலும் போரின் விதிகள் கடைபிடிக்கப்பட்டன.
ஆனால் ...முஹம்மது என்ற பெயரை வைத்துக் கொண்டு
முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமாக அப்பாவிகளை படுகொலை செய்பவன் எப்படி முஸ்லிமாக இருப்பான் ?
நிச்சயம் அவன் முஸ்லிமில்லை.மனிதனும் இல்லை.
இப்படிப்பட்ட சண்டாளர்கள் மனித குலத்தின் விரோதிகள்.இவர்களை அடையாளம் இல்லாமல் அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் !
குறிப்பாக ...
புனிதமிக்க நபிகளாரின் பெயரை வைத்துக்கொண்டு
பாவச் செயல் புரியும் இவனைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது.
************
ஆமாம் நான் வழிமொழிகிறேன், இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான இஸ்லாமியர்கள்
முன்பும் குடியுறிமை பெற்றிருக்கிறார்கள், இப்போதும் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நான் அறிந்த வகையில் 15 ஆண்டுகளின் அனுபவத்தில் எத்தனையோ பேர் ஜெர்மனில் நாட்டில் எனது குடியுரிமை, கனடாவில் எனது குடியுரிமை, பிரிட்டனில் எனது குடியுரிமை என இருக்கிறார்கள். எல்லாம் பலஸ்தீன், ஈராக், சிரியா மற்றும் அரபிய, ஆப்பிரிக்க நாட்டினர். இது போன்ற ஈனச்செயல்கள் அந்த நாட்டினரை இஸ்லாமியர்கள் குறித்த வேறு பார்வைக்கு கொண்டு சென்றுவிடும். ஏர்கனவே ட்ரம்ப் போன்றவர்கள் குதித்துக்கொண்டிருக்கிறார்கள், சென்றமுறை பிரான்ஸில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ப்ரான்ஸே ஸ்தம்பித்தது, இஸ்லாமியர்களுக்கு கெடுபிடி அதிகமானது, இனி அகதிகள் வேண்டாம் என எல்லோரும் போராட்டம் நடத்தினர்..இதற்கிடையில் இப்படி நட்டந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இந்த ஐஸ் காரனை பற்றிய மர்மங்கள் விலகவே மாட்டீங்குது... ரெண்டு நாட்டையே அழிக்கிறான், கொடூரமா எல்லா எழவையும் செய்றான், கேட்டா இஸ்லாமிய கலிபா ஆட்சியை உருவாக்க போறானாம், இதில் எள்ளவும் உண்மையில்லை, எல்லா புனிதர்களின் அடக்கத்தலங்களை இடித்து, பெண்களை கற்பழித்து சிறுபான்மை எஜீதிகளை கூறு கூறாக வெட்டி, சந்தையில் வைத்து விற்று மலை முகட்டில் ஓட்டிச்சென்று லட்சக்கணக்கான எஜீதி இன மக்களை (அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை, தென் இந்திய பாரம்பரிய ஹிந்துக்கள் போன்றவர்கள், இவர்கள் முருகனை வணங்குவது போல அவர்கள் மயிலை வணங்குபவர்கள்) ஓட்டிச்சென்று வெயிலில் பட்டினி போட்டு சாகடித்து, பெரிய மார்பகம் இருக்கும் இளம்பெண்களை ஆசை தீர கற்பழித்து பின்பு அறுத்து குழந்தைகளை கணக்கின்றி கொன்று, சிரியாவில் இதுவரை 7லட்சம் பேரை இப்படி கொலை செய்து,
ஈராக்கில் கணக்கின்றி கொன்று........
இதெல்லாம் என்ன வென்றே சொல்ல முடியல.. யாரால் நடக்கிறது....???????????????
இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும்... யாராக இருந்தாலும்,
அல்லது வேறு யாரோவின் சூழ்ச்சியாக இருந்தாலும்
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்.. அவ்வளவு தான்.

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 ஜூலை 2016

முலைப்பால் கவிதையும், அலுவலக நினைவும்..



கவிஞர் ஈரோடு கதிர் அவர்கள் இந்த கவிதையை பகிர்ந்திருந்தார், அதை படித்ததும் எனக்கு என் அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது...
நான் பணிபுரியும் பணிமனை பல பன்னாட்டு கம்பெணிகள் ஒருங்கே இருக்கும் ஒரிடம், இங்கே ஆடுத்த ஹாலில் எனது நிறுவனம் அல்லாத வேரொன்றில் வேலை செய்யும் ஃபிலிப்பினோ பெண் சென்ற மாதம் குழந்தை பெற்றுக்கொண்டார் அதனால் நமக்கொன்றும் பிரச்சனை இல்லை நன்றாக இருக்கட்டும் மப்ரூக் சொல்வோம், பிறகு 3வது நாளே வேலைக்கு வந்துவிட்டார். அவர் மூன்று நாள் கழித்து வந்ததையே மிக ஆச்சர்யமாக மூன்று நாள் தானே ஆகிறது எப்படி அதற்குள் ஆபிஸ் வேலைக்கு வந்துவிட்டாய் என்றோம் பிள்ளையை பேபி கேரில் விட்டுவிட்டேன் என்றாள் அதுவே கோபமாக இருந்தது. பிறகு வந்தது முதல் இரண்டு மணிக்கொரு முறை வாஸ்ரூமிற்கு பையில் ஒரு சிறு பம்ப் மிசின் போல ஒன்றை எடுத்துச்சென்று.. சென்று.. வந்துகொண்டிருந்தார், என்னவென்று கேட்க பால் சுரந்து முலைக்கட்டிவிடுமல்லவா அதை தவிர்க்க அடிக்கடி இந்த பால் கரக்கும் மிசின் மூலம் எடுத்து வெளியே ஊற்றிவிட்டு வருகிறேன் என்றாள். மிக உறைந்து போனேன்.. உள்ளம் உடைந்து போனேன்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த பரிதாபம் தான் இன்றைக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான புதிய பிள்ளைகளின் நிலைமை.
தாயின் அரவணைப்பு இன்றி பிறந்த உடனேயே இப்படி பேபிகேரில் சித்ரவதைக்கு ஆளாகும் பிள்ளைகளை நினைத்தால் வார்த்தைகள் வற்றிவிடுகிறது, இந்த நூற்றாண்டில் இது பொன்ற பொற்றோருக்கு பிள்ளைகளாய் பிறந்ததற்காய் பாவம் அந்த பிள்ளைகளை துர்ரதிஷ்டசாலிகள் என்று தான் சொல்லவேண்டும்.
கொடும் கார்பரேட் உலகம் இன்றைய மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி இயற்கைக்கு முரணாக ஆக்கி அடிமைபடுத்தி வைத்திருப்பதற்கு இதைவிட ஒரு சான்று பிரிதில்லை. இது ஏதோ அந்த பிலிப்பினோ போன்ற வெளிநாட்டவர் மட்டும் செய்வதாய் எண்ண வேண்டாம் நிறைய நம்மவர்களும் அந்த நடைமுறைக்கு மாறிவிட்டனர் என்பதே நிஜம்.
- முஹையத்தீன் பாட்ஷா

12 ஜூலை 2016

யானை கொலை


எங்கே தான் போவோம்..
எங்களுக்கான இடங்களை
நீங்கள் திண்று செரித்த பின்...
எப்படி பசி போக்குவோம்
எங்கு போனால் எங்கள் தாகம் தீரும்
அட்டகாசம் செய்கிறோமாம்
பயிரை அழிக்கிறோமாம்
நாங்களோ சுயம் இழந்து
வாழ்வாதாரம் தேடுகிறோம்,
நீங்களோ துப்பாக்கி ஏந்தி
கொல்ல வருகிறீர்!
ஊரே திரண்டு
தம்பட்டமடித்து துரத்துகிறீர்
தீ எறிந்து சுடுகிறீர்
ஓடினால்....
நாங்கள் அறிந்திராத
சாலைகள் குறுக்கிடுகிறது
வாகனங்கள் மோதி
அழிக்க எத்தனிக்கிறது!
முன்பிருந்த நீர்நிலைகளை
தும்பிக்கை கொண்டு தேடுகிறோம்
நாங்கள் அமைத்திருந்த
வழிப்பாதைகளை தேடுகிறோம்
அதில் எங்கள் முந்தைய கால் தடம் தேடுகிறோம்
நீங்களோ எங்களை கொல்ல தேடிவருகிறீர்
நேற்று கூட உங்கள் எமக்கூட்டம் வந்தது,
எங்கள் செல்ல மகராஜாவை
பிடித்து சித்ரவதை செய்தது,
துப்பாக்கி கொண்டு
மருந்ததனை விசமாய் ஏற்றியது,
அவனை அநியாயமாய் கொன்றது!
வேறொரு சினேகிதனும்
அவன் தொழுது வேண்டினான்
காடு சேரவேண்டி,
ஓடி ஓடி ஓய்ந்தான்
வழிதான் தெரியவில்லை
ஏதோ ஒன்று நெருங்கிவந்தது,
ரயிலாம்..
அது அத்தனை விசையுடன்
சீறி சிதைத்தது
சாகடித்து வீசிச்சென்றது!
என்ன செய்ய முடியும்
களிறுகள் நாங்கள் பிளிறுவதை தவிர!
உங்கள் ராஜாங்கம்
இன்னும் எவ்வளவு காலம்???
நாங்கள் இல்லாமல் நீங்களா.....
காடுகள் இல்லாமல்
நீங்கள் எழுதும் விதி
என்ன கதியாகும்?
குமாரசாமி கணக்கு போடுகிறாய் மானிடா!
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 ஜூலை 2016

ரமலானா.. ரம்ஜானா..? இந்து நண்பரின் சந்தேகம்

நோன்புப்பெருநாள் முடிந்துவிட்டது, இருந்தாலும் ஒரு இந்து நண்பர் வாட்சப்பில் வந்து கேட்டார்...
"ஒரு சந்தேசம் சார்"
"என்ன சொல்லுங்க"
"இந்த பெருநாள ஒருத்தர் ரம்ஜானுங்கிறார், இன்னொருத்தர் ரமலானுங்கிறார்.. இது ரம்ஜானா.. இல்ல ரமலானா? சொன்னா தேவலை"
"ஓ... அதுவா.. ரெண்டுமே ஒன்னு தான் பின்ன ஏன் இப்படி சொல்றாங்கன்னா... ரமலான் அப்டீங்கற்து தான் சரியான அரபி உச்சரிப்பு இந்த மாதத்தோட அரபிப்பெயர். (பொருள் கரித்தல், அதாவது பாபங்களை கரிக்கும் மாதம் நன்மை மட்டும் செய்யும் மாதம்) ஆனா உருது பேசுறவவங்க ரம்ஜான்.. ரம்ஜான்ன்னு சொல்லி அதை பலரும் ரம்ஜான்னும் சொல்றாங்க, அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா.. அரபி எழுத்தை உச்சரிக்கும் போதுஉருது பாணியில சில எழுத்துக்களை உச்சரிச்சு அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு, குறிப்பா அரபி எழுத்தான.. "ல்லாது" என்ற எழுத்த "ஜ்ஜாது" என்பார்கள், அல்ஹம்து சூரா எனும் அத்தியாயத்தின் இறுதி "ல்லாலீம்" என்று முடியும் ஆனால் உருது பெருமக்கள் "ஜ்ஜால்லீம்" என்று தான் உச்சரிப்பார்கள். அதுபோலத்தான் ரம"லா"ன் என்பது ரம்"ஜா"ன் ஆனது. இந்த உச்சரிப்பு மாற்றம் அரபிமொழி பல தேசங்களுக்கு போகும் போது அடுத்த நாட்டினரால் பல நேரங்களில் அதன் எதார்த்த உச்சரிப்பை வழங்கமுடியவில்லை, காரணம் அவர்கள் பழக்கப்பட்ட நாவசைப்பிற்கு முற்றும் வித்தியாசமான மொழியின் உச்சரிப்பை சில நேரங்களில் அவர்களால் உச்சரிக்க முடியாமல் முயற்சி செய்யும் போது அவர்கள் படித்த மொழியில், பேசும் பொழியில் அந்த உச்சரிப்பு இல்லாத நிலையில் அரபின் சில எழுத்துக்கள் வேறு உச்சரிப்பு வடிவம் பெற்றிருக்கிறது. அது இங்கே உருது மக்கள் பேசும் போது மட்டும் இல்லை, எகிப்தியர்கள், ஈரானியர்கள், ரஷ்ய, ஆப்கானிகள் என பலர் பேசும் பேசும் அரபியிலும் அதுபோல பல மாறுமாடு காணமுடியும், ஆக உருது மக்கள் ரமலானை ரம்ஜான்ன்னு பிரபலப்படுத்தீட்டாங்க அவ்வளவு தான், புரிஞ்சதா"
"நல்லா இருக்கீங்கீங்களான்னு கேட்பதை.. ஏம்பா கீறயான்னு மெட் ராஸ் தமிழ்ல கேப்டது மாதிரீன்னு சொல்லுங்க"
"கிட்டத்தட்ட அப்படித்தான்னு வச்சுக்கோயே"
-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

முகநூல் பதிவை பார்வையிட

06 ஜூலை 2016

ஈகைத்திருநாள் -2016

எல்லா பெருநாளைய இரவு போல நேற்றிரவும் தூங்கவில்லை, அதிகாலை முன்றரைக்கு படுத்து ஒரு குட்டித்தூக்கம், பிறகு நாலரைக்கு அலாரம் அடிக்கும் முன்னேயே எழுப்பிவிடப்பட்டேன் பார்த்தால் அலாரம் 4.20 தான், சரியென கண்கசக்கி குளித்து அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு தயாரானேன். கோடைக்கால அதிகாலை கூட இப்பொழுதுகளில் வெம்மை சூழ்ந்தே இருக்கும் ஆனால் அப்படி ஒரு வெம்மையில்லை.. பள்ளிக்கு நடந்து செல்கையில் அருகிலுள்ள அரபியர்களின் வீடுகளில் சேவல் கூவும் ஓசை மனதை என் பாலிய காலத்தில் என் பாட்டி வீட்டின் வாசல் திறந்த கூடத்தில் படுத்துறங்கி எழும் இதே பெருநாளைய அதிகாலையில் மூனரை நாலுக்கெல்லாம் துவங்கிடும் அந்த சேவலின் கூவலுக்கு இட்டுச்சென்றது, அக்கூவல் காதில் ஒலித்து மனதில் பதிந்த ஒன்று கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் அதிகாலை சேவல் கூவல் மனதிற்கு குதூகலம் தந்தது. நினைவுகளை புதுப்பித்தது. அந்த அரபி வீட்டு சேவலுக்கு நன்றி.

பிறகு அதிகாலை தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீட்டிற்கு வந்து சிறுபிள்ளை காலங்களிலிருந்து என் தாய் தந்தையர் கைகளால் வாழ்த்தி புத்தாடை கொடுக்கும் நினைவுகளோடு மனமெல்லாம் நல்மார்க்கம் ஈந்த நபிகளாரை மனதினில் இருத்தி புத்தாடைகள் அணிந்தேன். பிறகு கண்களுக்கு சுர்மா இட்டு, மணம் பூசி நபிகளாரின் வழியில் மூன்று பேரிச்சங்கனிகள் சுவைத்து அஜ்மானின் ஷேக் ஜாயித் பெரிய பள்ளிக்கு புறப்பட்டோம் அப்போது மணி காலை 5.15. வாகனத்தில் தக்பீர் என்னும் இறைத்துதி ரேடியோவில் ஒலிப்பதில் லயித்து பள்ளி ஏகினோம்.
அந்த ஐந்து முப்பதுக்கெல்லாம் பள்ளியின் பிருமாண்ட பார்க்கிங் நிறைந்திட பல சுற்று சுற்றி ஒரு வழியாய் ப்ளாட்பாரத்தின் மேலே ஏற்றி வண்டியை இருத்தினேன் சென்ற வருடம் போல. உள்பள்ளி நிறைந்திட மிக அதிக மக்கட்திரள், எங்கு பார்த்தாலும் பள்ளியைச்சுற்றி ராணுவ உடைகள், கருப்பு உடைகள், போலிஸ் உடைகள் என பல வண்ணத்தில் ரோந்து அதிகாரிகள், சிப்பாய்கள், காவலர்கள் அவர்கள் கைகளில் விதவிதமான துப்பாக்கிகள் என பாதுகாப்பு அரண்கள் சூழ்ந்திருந்தது மனதின் ஓரத்தில் பயத்தை உண்டாக்காமல் இல்லை, சென்ற வருடங்களில் இப்படி இந்த அளவுகு பாதுகாப்பு இல்லை ஒருவேளை சமீபத்திய சவுதி நிகழ்வுகளினால் இப்போது கூடுதலாக இருக்கலாம். அவர்களை கடந்து வெளிப்பள்ளியின் முன்னே உள்ள இடங்களில் அமர இடம் தேடிய போது ஒரு வெள்ளையான சூடானி கனிவுடன் அவர்தம் முசல்லாவெனும் தொழுகை இருக்கையை எமக்காக விரித்து இன்முகத்தோடு அமரப்பணித்தார். பரஸ்பரம் முகம் மலர்ந்து அமர என் இருமருங்கிலும் நல்ல பணக்கார அரபிகள் உட்கார்தார்கள் அவர்களும் நானும் சிரித்துக்கொண்டோம். ஆயினும் வாகன நிறுத்தம் மிகப்பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் பயமாகவே இருந்தது, சூழ்நிலை அப்படி என்ன செய்ய அமைதி மார்க்கத்தை குழைத்து உலகையே இம்சை செய்யும் அரக்கர்களின் குறுமதியையும், புரிந்துணர்வின் பழுதையும், உலக அரசியலையும் நினைத்து மனதால் வருந்தினேன்.

ஒரு வழியாக இமாம் பன்னிரெண்டு தக்பீருடன் பெருநாள் தொழுகையை முடித்தார். பிறகு குத்பா எனும் பிரசங்கம் தொடங்கி நிறைவடைய அறிந்தவர் அறியாதவர் என எல்லோரும் சலாம் உரைத்து நெஞ்சொடு நெஞ்சாக நீ என் சகோதரனடா.. என்று அணைத்துக்கொண்டார்கள் நானும் அந்த சூடானி, அரபிகளை இறுக பற்றிப் பிரிந்தேன். அக்கம் பக்கம் பார்த்தால் டெக்னாலஜியின் விளைவால் ஒருவரோடு ஒருவர் ஆரத்தழுவுவதில் இல்லாத ஆர்வத்தை ஆண்ராய்டு போனில் செல்பி எடுப்பதிலேயே காட்டிக்கொண்டிருந்தனர். குடும்பத்தோடு வந்தவரக்ள் பிள்ளைகளோடு குதூகலித்தனர், என் குடும்பத்தோடு இந்த பள்ளிக்கு தான் அஜ்மான் வந்ததிலிருந்து வந்த நினைவுகள் சூழ்ந்திருந்த்து, தற்போது அவர்கள் ஊரில்.

பிறகு நாங்களும் சில நிழற்படம் நினைவுக்காய் எடுத்து பள்ளிவிட்டகன்றோம்.
பிறகு காலைப் பசியாறி, மதியத்திற்கான பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரியாணி செய்வதில் என் தம்பி காலித் வல்லவர்.

நாளை ஊரில் பெருநாள் என்பதால் அது தான் கொண்டாட்டம், குதூகலம். அது பற்றி நாளை பேசுவோம்.

என் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் ஆலிங்கனமும் அகமலர்ந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களும்.

அன்போடு,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா.


05 ஜூலை 2016

நம் தவவாழ்வு விடைபெறுகிறது..!

நம் மாண்புமிகு முதல்வரின் தவவாழ்வு பற்றி யாம் அறியோம்! ஆனால் நாம் அனைவரும் கடந்த ஒரு மாதமாக மிகச்சிறப்பான ஆத்மபயிற்சி மேற்கொண்டு தவவாழ்வின் மெய்யுணர்வினை பெற்றிருந்தோம் என்றால் மிகையில்லை.
கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் சாப்பாடு.. சாப்பாடு.. சாப்பாடென உள்ளே தள்ளி.. இடைவிடாது வேலை வாங்கிக்கொண்டிருந்த குடல் & கோ-விற்கு 15 முதல் 16 1/2 மணி நேரம் வரை ஹாயாக காலியாக்கி குடலுக்கு குதூகளம் செய்தோம். முதல் நாள் என்ன இப்படி தண்ணிகூடவா உன்னால ஊத்த முடியாதுன்னு வாய் மூலமா பசியால.. தாகத்தால கேட்க சிம்டம்ஸ் கொடுக்கும் ஆனால் நாம நோன்புங்கிற எண்ணம் எல்லாத்தையும் மிகைச்சு நிக்கிறதால பாடி அப்பிடியே பதூசா கேட்டுக்கும், பிறகு ரெண்டாம் நாளிலிருந்து பாடிக்க்ளாக்கே மாறிப்போய்டும்,
தூக்கத்த பிச்சு.. பிச்சு பகல்ல கொஞ்சம், ராத்திரில கொஞ்சம்ன்னு ஆக்கி மொத்தமா மாத்திடுவோம், இந்த மாசத்துல ராத்திரி பூரா பகலா இருந்திச்சு. நேரம் ஓடுவதே தெரியாது.. இஃப்தார் அவசரமா முடிச்சுட்டு மஃரிப், பிறகு வந்ததே தெரியாது இஷாக்கு பாங்கு அப்புறம் தராவீஹ் தொழுகை முடிச்சு பாத்தா மணி 10க்கு மேல... இங்க நாங்க அப்பதான் ஊருக்கே போன் பேசுவோம்.. அப்புறம் சஹருக்கு சமையல்..அது, இதுன்னு பாத்தா மணி 12ஐ தாண்டி நிக்கும். பிறகு படுப்போம் இல்லேன்னா 1 மணி கூட ஆகிடும்.
அடுத்ததா 3.30க்கு மீண்டும் சஹர் உணவு, பஜ்ர் தொழுகைன்னு 5 மணிக்கிட்டதட்ட படுத்தா ஒருமணி கழிச்சு எழுதிரிக்கவே முடியாம தூக்கத்த பிச்சுப்போட்டு ஆபிஸுக்கு போகனும், 6மணி நேர ஆபிஸ் முடிஞ்சு
பிறகு மதியம் வந்து கொஞ்சம் குட்டித்தூக்கம். அப்பறம் இப்தார் இப்படீன்னு ஒரு மாறுபட்ட வாழ்வு.
ஒரு மாசமா நாங்க இந்த டீவி பெட்டிய தொறக்கல.. பாண்டே..அது இதுன்னு எந்த அடிதடி ரகளை டீவி விவாத நிகழ்ச்சியோ.. இல்ல சீரியலோ இல்ல வெரெந்த கருமாந்திரமோ பாத்து டெய்ம் வேஸ்ட் பண்ணல.. டிவி பாக்காமயே பழகிப்போச்சு இந்த மாசம், இப்படியே கண்டினிவ் பண்ணினாலும் பேஷா தான் இருக்கும்.
ஓரு மாசமா நோன்பு திறக்க பயறு, வெந்தயம், இஞ்சி, பூண்டு இன்ன பிறவும் அரிசியும் கலந்த நோன்பு கஞ்சி, பழவகைகள், ஹரீஸ் (அரேபிய கோதுமை, ஆட்டுக்கறி கலந்த கஞ்சி போன்ற உணவு) வகைறாக்கள்ன்னு நல்ல சமாச்சாரமா மட்டும் சாப்பிட்ட மாதம்.

ஆபிஸுக்கு காலைல டிபன், மதியம் சாப்பாடுன்னு லன்ச் பேக்க எடுத்துக்கிட்டு அழையற வேலையும் மிச்சம், அப்டியே ஃப்ரியா ஹாயா பேண்ட், சட்டைய போட்டோமா ட்ரைவ் பண்ணினோமா..ன்னு ரிலாக்ஸா பறவையா பறந்தோம். அதிகமா குர்ஆன் வசனங்களோடு வசனிக்க வைத்த மாதம், பள்ளிவாசலெல்லாம் ஹவுஸ்புல்லா இருந்த மாதம், வீட்டுக்கு காசனுப்பி லிஸ்ட் போட்டு எல்லாத்துக்கும் தான தர்மம் செஞ்ச மாதம், அறியாதவங்க, தொண்டு செய்ற இயக்கம்ன்னு யார் வந்து கேட்டாலும் கொடுத்து..கொடுத்து சந்தோசமடைந்த மாதம்.
நம்மை அறியாமலேயே ஒரு புண்ணிய உணர்வும், புனிதமும் நம்மை சூழ்ந்திருந்த மாதம், நானே நேரடியாக (தன்னையே) நோன்புக்கு கூலி கொடுக்கிறேன்னு இறைவன் சொன்னது போல அவனே நம்மை சதா அட்கொண்டிருக்கும் அருளார்ந்த நிலை எல்லாம் இந்த ரலமானில் பரிசாக கிடைத்தது. இந்த நிலையே இனி தொடராதா.. வருசம் முழுக்க ரமலானாகவே இருந்தா இன்னும் சந்தோசமா இருக்குமேன்னு மனசு ஏங்கத்தான் செய்கிறது ஆனாலும் நாளை இந்த வருசத்து கடைசி நோம்பாச்சே.
இன்ஷா அல்லாஹ் மீண்டும்... மீண்டும் வசந்தம் பூத்துக்குளுங்கிடும் ரமலான் வரும் வருடங்களில் நம்மை வந்து அடையட்டும் எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளி.. அள்ளி வழங்கிடட்டும்.

குல்லு ஆம் வ அன்த்தும் பி(b) ஹைர்.
எல்லோருக்கும் இனிய ஈத் முபாரக்.

- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
4-7-2016
இரவு 10.10 மணி

01 ஜூலை 2016

27ஆம் கிழமை எனும் லைலத்துல் கத்ரு இரவு

இன்றைய தினம் அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் ரமலான் பிறை 27, புண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு. லைலத்துல் கத்ர் இரவு பற்றிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொன்மொழிகள் ஏராளம் இருக்கிறது, அதில் பல கடைசிப்பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் தேடச்சொல்லி இருக்கிறது. ஆனாலும் அறுதியிட்டு என்றைக்கு என்று சொல்லக்கூடுமா எனும் விசயத்தில் பல மேன்மையான மார்க்க மேதையர்களால் மாற்று கருத்திற்கு அப்பாற்பட்ட 27ஆம் ரமலான் இரவே லைலத்துல் கத்ரு என்று நிருவப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படும் நிலையில், நவீன வஹ்ஹாபிய சித்தாந்த தலையீடுகள் ஈமான் கொண்ட பாமர ஜனங்கள் மத்தியில் அவர்களினின் குழப்பத்தை புகுத்தி 27ஆம் இரவு கொண்டாட்டத்தை அர்த்தமற்றவை என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது என்பது இன்றைய துர்ரதிஷ்டங்களில் ஒன்று.

ஏனெனில் இஸ்லாத்தை வெறும் கொண்டாட்டங்களற்ற மார்க்கமாக நிலைநிறுத்த நினைக்கும் நவீன சிந்தனை கொண்டவர்கள் ஆன்மரீதியான கொண்டாட்டங்களை, சமூகம் ஒருங்கிணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியான தருணங்களை எப்படி ஏற்றுக்கொள்வர் தனிமனித ஆன்மா மகிழ்ச்சி அடைவதையோ அல்லது சமூகம் மகிழ்ந்து நற்பேறடைவதையோ, எல்லோரும் கூடி ஒன்றித்து பிரார்த்தனை செய்து இன்று தான் லைலத்துல் கத்ர் என்ற அழுத்தமான எண்ணவோட்டத்தின் வெளிப்பாடாக அதையே பெற்றுக்கொள்ள நேர்வதையோ, அன்றைய இரவில் முகல்லாக்களில் எல்லோரும் ஒன்று கூடி குதூகலித்து சமூக  சுமூகம் நிலவுவதையோ அவர்கள் என்றென்றும் விரும்பமாட்டார்கள் ஆகவே தான் அவர்களுக்கு சாதகமாக “ஒற்றைப்படையின் இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள்”என்று நபிமொழி சொல்லி இருக்க எப்படி நீஙகள் 27ஐ கொண்டாடுகிறீர்கள் என்கிறார்கள். ஆக அவர்களின் பார்வையில் இந்த கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும்.. இந்த பாரம்பரிய நிகழ்வு நிறுத்தப்படுவதன் மூலம் அவர்களின் மூலக்கொள்கையின் சாரம்சம் உயிர்பெற வேண்டும் அவ்வளவு தான்.

தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் எண்ணிரந்த மார்க்க பெருமேதைகள் இருந்தார்கள், அவர்களுக்கு தெரியாத விசயங்கள் இல்லை எனும் அளவுக்கு அத்தனை ஆராய்ச்சி அறிவு பெற்றிருந்த உயர்வான கண்ணிய உலமாக்கள் இருந்த பூமி நம் தமிழகம். அவர்களுக்கு “கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் தேடிக்கொள்லுங்கள்” என்ற ஹதீஸ் தெரியாமல் இல்லை ஆனாலும் அவர்கள் 27 ஐ குறிப்பாக லைலத்துல் கத்ரு என்று பறைசாற்ற நிறைய காரணங்கள், ஆதாரங்கள் இருக்கத்தான் செய்தது. அதனால் இப்போது இருப்பது போன்ற  குழப்பஙக்ள் இருந்ததில்லை, மக்கள் ஒரே மனநிலையில் 27ஐ கத்ருடைய இரவாக புண்ணிய இரவாக ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக கொண்டாடினார்கள் லைலத்துல் கத்ரை பெற்றும் கொண்டார்கள். 

அந்த வரிசையில் நாம் கண்ட நன்முத்து மறைந்த மாபெரும் சூஃபி
 இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் போன்ற மாமேதைகள் இப்போது இல்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் வெதும்துகிறது... கண்ணியம் பொருந்திய இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது அரபி, உருது, பார்ஸி, ஆங்கிலம் என பல மொழி பாண்டித்தியம் பெற்ற பெருமேதை. அத்தனை மொழிகளிலும் பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை வாழ்ந்த நிறைய மார்க்க வல்லுனர்கள், ஞானப்பெருமான்கள் யாத்தளித்த நிறைய பொக்கிச கிரந்தங்களை கற்று கரைகண்ட அவர்களது விரிந்துபட்ட ஹதீஸ்கலை ஆராய்ச்சியின் ஊடாக தான் நடத்தி வந்த “அஹ்லுஸ் சுன்னத்” மாத இதழில் தொடர்ந்து நிறைய ஆதாரங்களை அடுக்கடுக்காக குறிப்பிட்டு குறிப்பாக அப்துல்லா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு போன்ற நிறைய சஹாபிகளின்  ஆதார கூற்றுகளின் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் முந்தைய நிலையில் எப்படி அறிவித்தார்கள், அதற்கு பின்னான ஒவ்வொரு நிலைகளில் எவ்வாறு லைலத்துல் கத்ரு இரவை பற்றிய அறிவிப்புகள் இருந்தன, பிற்கு 27ஆம் கிழமை குறித்து அது தான் லைலத்துல் கத்ரு என்று எப்படி உணர்த்தினார்கள், நமது பாரம்பரிய முன்னோர்கள் எப்படி 27 என  உறுதியாக்கினார்கள் என தர்க்கப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக தெள்ளிய நீரோடைப்போல விளக்கிய ஆக்கங்களை படித்த நினைவுகள் இன்று ஆட்கொள்கிறது.  (இந்த ரமலானின் லைலத்துல் கத்ரு இரவின் பொருட்டால் அல்லாஹ் அவர்களை இன்னும் இன்னும் மேன்மை படுத்துவானாக!)

சூஃபி மாமேதை இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத்
ஆகவே லைலத்துல் கத்ரை பூவுலோருக்கு கிடைக்கும் இறை பரிசை புண்ணிய இரவை மகிழ்ச்சி பொங்க புத்தாடை பூண்டு குடும்பத்தோடு புலங்காகிதம் பொங்க எப்போதும் போல நாம் கத்ருடைய இரவை மிக உற்சாகமாக கொண்டாடுவோம். நல்லமல்களை செய்வோம், திக்ரு, துஆக்கள் செய்வோம் இன்றைய இரவை பஜ்ரு வரை உயிர்ப்பிப்போம்.  நமது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரிய பெருமேதைகள் விட்டுச்சென்ற தடங்கள் குறித்து போதிப்போம்.நவீனசார்பு சிந்தனைகளை புறக்கணிப்போம். வஸ்ஸலாம். 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா