15 மே 2011

காலத்தை வென்றக் காயிதே மில்லத் (ரஹ்..)



நேர்மையின் சின்னம் காயிதே மில்லத்
வாய்மையெனும் வாளேந்தியவர் காயிதேமில்லத்
கட்டுப்பாட்டில் கத்திமுனை காயிதே மில்லத்


மதரஸத்துல் முஹம்மதியா
மலரும் நாளில் – எங்கள்
மன்னவருக்கு நூற்றாண்டு விழாவென்றால்
மகிழ்ச்சியில் துள்ளாதோ – எங்கள்
மானின மனங்கள்


நெல்லை மண் தந்தவர் தான்
நெஞ்சுரத்தில் வேங்கை தான்
புள்ளைக் குட்டிக் காகவும்
புறக்க வில்லை நேர்மைதனை,
எண்ணப்படி நினைத்திருந்தால்
எப்படியோ வாழ்ந்திருப்பார்.


அண்ணலாரை ஒன்றியதால்
அன்றொரு நாள் ஓரிரவு
அன்னையரின் வேண்டுகோளின்படி
அன்றிரவு முழுவதுமே
அழுத்தி விட்டார் காலதனை,
அன்னையரோ கண்ணயர்ந்தார் –எம்
மன்னவரோ அயரவில்லை


சுப்ஹூ வேலை எழுந்த அன்னை – எம்
சூஃபியாரின் செயலைக் கண்டு வியந்தார்
சுவன மதற்காக அவனிடத்தில்
கண்மணி காயிதே மில்லத்திற்காக
கரமேந்தி கண்ணீரோடு – ஆனந்தத்தில்
அப்பொழுதே துஆ செய்தார்.


சின்னவயதினிலேயே
சிறப்பதனை பெற்றவரின்
சிறப்பினை உணர்ந்த்தவே
வண்ணக்கோலம் கொண்டுள்ள – எம்
வழுத்தூரிலே வரலாற்றுப் பெருவிழாவென்றால்
வல்லவனின் வரமன்றோ!


ஜனநாயக நாட்டில்
ஜனங்களுக்காக உழைத்தவரென்றால் – எல்லார்
மனங்கவர்ந்த மன்னரேயன்றி – இம்
மாநிலத்தில் யார் இருப்பார்
காலத்தை வென்றக் காயிதே மில்லத்தைத் தவிர!


அரசியலில் வித்தகர் – முஸ்லிம்களுக்கு
அநீதி இழைக்கப்பட்டால் – எங்கள்
மகாநீதியரை யன்றி யார் இருப்பார்
ஆண்சிங்கமாய் சிரசு சிலிர்ப்பவர்
ஆன்மீகத் தந்தை நம் அமீரைத் தவிர


நேர்மையின் ஊற்று
நேசத்தின் அதிபதி
கண்ணியத்தின் காவலர்
புண்ணியம் சேர்த்த புதுமகனார்
நூற்றாண்டு விழாகாணும்
நூரே முஹம்மதின் பிரதிபலிப்பின்
புகழ் என்றும் மறையாது – இனியெம்
புன் முறுவல் நிலைத்திடுமே
உலகமெல்லாம் பரப்பிடுவோம்
உத்தமரின் புகழதனை.



அகவை 17. எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் 17-06-1995 அன்று அல் மதரஸத்துல் முஹம்மதியா (ஹிப்ளு) புதிய கட்டிடத்திறப்பு விழா மலரில் நான் எழுதியக்கவிதை.

மலரில் முதல் முதலாக எனது கவிதையைப் பார்க்க எனக்கு மக்ழ்ச்சி நிறைந்தது, அதைவிட எனது தகப்பனாரிடம் வரிவரியாய் நலவிரும்பி ஒருவர் படித்துக்காட்டி என்னை பாரட்டிய போது என் தந்தை நெகிழ்ந்ததை எதிர் பாராது திடீரெனப் பார்க்க பேரானந்தம் அடைந்த நிகழ்வு இன்றும் மனதில் பூத்து சிரிக்கின்றது. என்னிடம் இதை அண்ணன் லயன்.பசீர் அஹமது அவர்கள் என்னை சிறிய வயது பிள்ளை  என பாராது வேண்டி வாங்கி பிரசுரித்தார்கள்.



என்றும் உங்கள்,
ஜே.எம்.பாட்ஷா - இன்னும் புரியும்

02 மே 2011

மாயமாகி..


எங்கே போய் சொல்லுவேன்…
யாரிடம் போய் முறையிடுவேன்…
நான் ரசித்து..ரசித்து எழுதிய கவிதைகளை
தொலைத்து நிற்கிறேன்.


அரங்கேற்றிவிடலாம் என ஆசையாய்
என் கோப்புகளை புரட்டிப் பார்க்க
அது கிடைக்காமல் போகவே
ஓசையில்லாத அழுகையும்..
மன வெருட்சியும் கூடிக்கொண்டன..!


என் இதயத்திலிருந்த
பாசைதெரியாத அந்த உணர்வுகளை
அந்த நேரத்து பேனாவுக்குத்தான்
இயற்கை ஆணையிட அது எழுதியது
எங்கே தேடுவேன் -அந்த
அர்த்தமுள்ள சுவாசிப்புகளை..!

யாருக்குமே தெரியாமல்
நான் சமைத்து வைத்த
உயிரில் இனிக்கும்
இனிப்புப் படையல்கள் அவை.

பிரிவுகள் தந்த
பாடல்களில்
இரவுகளை ஆக்கிரமித்த
என் இதயம் வருடிய
வரிகள் தான் அவை.

படித்துப் படித்து நானே மயங்கினேன் - ஆனால்
கொஞ்சம் அந்த அம்மண தேகத்திற்கு
கொஞ்சும் அழகு சேர்க்க
சற்று சட்டைப்போட்டு
வெளியே அனுப்பலாம் என்றிருந்தேன்.

என்ன செய்ய..அதற்குள்
எங்கோ யாரோ ஏதோ செய்தார்கள்..
அறியவில்லை..

அன்றைய என்னை
அதில் தானே இறக்கி வைத்தேன்.. -இனி
காணாத அந்த நான்
அதிலும் தொலைந்தேனோ..

அந்த கவிக்குடுவையில்
நான் அடைத்து வைத்தது
என்னை தேடிய
என் அவளின் அழுகை,
என்னோடு என் மகனின் சிரிப்பு..
அவர்கள் எல்லாரிலும் கலந்த என் இதயம்..!
இன்னும் எத்தனை எத்தனையோ…!

ஏங்கி இருக்கும் எனக்கு -அது
எப்போது கிடைத்தாலும்
எல்லையற்ற மகிழ்வுதான்..!
அடங்காத துள்ளல் தான்..!

எங்கே போய் சொல்லுவேன்…
யாரிடம் போய் முறையிடுவேன்…
நான் ரசித்து..ரசித்து எழுதிய கவிதைகளை
தொலைத்து நிற்கிறேன்.






என்றும் அன்புடன்,
ஜே.எம்.பாட்ஷா