24 ஜூலை 2023

நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே !

முன்னுரை: 
நம் நாட்டின் நம்பிக்கை இளைஞர்களே என்ற அழகிய தலைப்பை வழங்கிய ஆசிரியப்பெருமக்களுக்கு முதற்கண் நன்றி, ஏனெனில் அதுவே மிகையில்லாத உண்மை ஆகும். நம் பாரத திருநாட்டின் பலமே இளைஞர்கள் தான் அவர்கள் தான் நம் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் எதிர்காலமாகவும் விளங்குபவர்கள். அதனைச் சற்றே விரிவாகக் காண்போம்.

 பொருளுரை: 

 இளைஞர் பலமே இந்தியாவின் பலம்: 

உலக மக்கள் தொகையில் நம் நாடு இரண்டாம் இடத்தில் இருந்தாலும் விரைவில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை மிஞ்சி முதலிடத்திற்கு வரப்போகிறது என நம்மில் பலரும் அலுத்துக் கொள்வோம், அதை ஒரு பெருங்குறையாக எண்ணிக்கொள்வதும் உண்டு ஆனால் உலக நாடுகளுக்குக் கிடைக்காத பெருமையும் பலமும் நம் நாட்டிற்குத் தான் உள்ளது, அது தான் இளைஞர்கள் பலம். 

 நாட்டின் கதாநாயகர்கள் இளைஞர்களே: 

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய நூற்று முப்பது கோடி எனில் அதில் அறுபது கோடிக்கு மேல் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கட் தொகையை விடக் கூடுதல் ஆகும். இந்த இளைஞர்களைஞர்களை முறையாக பயன்படுத்தி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பும், அவர்தம் சுய தொழிலுமே நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணிகள்.

தவிரவும் நாடு கடந்து சென்றும் இன்றைய வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணிகளாகவும் விளங்கி அங்கிருந்து நம் நாட்டிற்கு அந்நியச்செலாவணியை அளித்துவருவதிலும் இளைஞர் சக்தி நிரூபணமாகியிருக்கிறது என்றால் நாளை நமது ஒளிமயமான தேசத்திற்கும்  இளைஞர்கள் தான் கதாநாயகர்கள். மேலும், நம் இளைஞர்களின் சக்தியும் திறமையும் ஒன்று திரண்டால் உலகில் அசைக்கமுடியாத வல்லரசு நாமே.
 
 விவேகானந்தரும் அப்துல் கலாமும் போற்றிய இளைஞர் சக்தி: 

இளைஞர்களின் சக்தியை உணர்ந்ததால் தான் "என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் தேசத்தைச் சிறந்த முறையில் மாற்றிக்காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர். நம் இளைஞர்களே இந்தியாவின் நாளைய நம்பிக்கை என்று தீர்க்கமாக நம்பியதால் தான் பாரத ரத்னா நம் மேனாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் “கனவு காணுங்கள்.. கனவு காணுங்கள்” என்ற தாரக மந்திரத்தைச் சுமந்து நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பள்ளியாக, கல்லூரியாகச் சுற்றி மாணவர்களை இளைஞர்களை ஊக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார்.

 நம்பிக்கை நட்சத்திர இளைஞர்கள்: 

சென்ற 2021ஆம் ஆண்டில் விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ரா முதன் முதலாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டினார், அபிஜிதா என்ற ஏழு வயது சிறுமி உலகின் மிகக்குறைந்த வயதுடைய நூலாசிரியராக விளங்குகிறார், ஆர்யா ராஜேந்திரன் என்ற இருபத்திரண்டு வயது யுவதி இந்தியாவின் வயதில் குறைந்த முதல் முதல் மேயர் என்ற பெருமைக்கு உரியவர்,  ஆறுவயது அர்ஹாம் ஓம் எனும் சிறுவன் தான் உலகின் இளைய கணினி நிரல் அமைப்பாளர். தனது இருபத்து மூன்று வயதில் காஷ்மீரைச் சார்ந்த பெண் மாவ்யா தான் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சார்ந்த இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் இளவயது பெண் விமானி ஆவார். இப்படி இந்தியாவின்  நம்பிக்கை நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 

அவ்வளவு ஏன், நமது சென்னையைச் சார்ந்த லீடியன் நாதஸ்வரம் தனது பன்னிரண்டாம் வயதில் அமெரிக்காவில் நடந்த தி வேல்ட் பெஸ்ட் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்பரிசை வென்று உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

 முடிவுரை: 
ஆகவே அறிவுத்தெளிவும், பரந்த சிந்தனையும், தேசப்பற்றும், சுயதொழில் சிந்தனையும், விவசாயம் காத்தலும், பொதுநலம் பேணுதலும், நாட்டுக்காக  உழைக்க வேண்டும் என்ற வேட்கையும் உள்ள இளைஞர்களே நாளைய நம்பிக்கை என்பதிலும் நாளைய இந்தியாவை மற்ற நாடுகளைவிட பலம் பொருந்திய நாடாக, தன்னிறைவு பெற்ற நாடாக நம் இளைஞர்கள் மாற்றி உலக அளவில் ஒளிர வைப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. நம் திறமைமிக்க இளைஞர்களின் உழைப்பில் செயலாக்கத்தில் நாளைய இந்தியா உலகையே வழிநடத்தும் என்பதும் மாற்றுக்கருத்தே இல்லாத பேருண்மை. வாருங்கள் இளைஞர்களே நாளை உலகிற்சிறந்த பாரதம் படைப்போம்.

(மகனின் பள்ளியில் நடந்த போட்டிக்காக, 2022)

01 ஜூலை 2023

கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா




தமிழே
அமுதே
வாழி!
எண்ணே
எழுத்தே
வாழி!
அரசே
முரசே
வாழி!
அறமே
அருளே
வாழி!
உயிரே
உணர்வே
வாழி!
கருணையே
நிதியே
வாழி!
கலைஞரே
புகழே
வாழி
எங்கள்
இன்பமே
இதயமே
வாழி!
02-06-2023

மாமன்னன்





படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாமிருக்கும் சமூகத்தின் மீதான ஆயிரம் கேள்விகளை எழுப்பி, சாதிய உயர்வுத் தாழ்வு இழிவுகளை சாரமாக கொண்டு அது தரும் வலிகளின் அதிர்வலைகளால் பகுத்தறிவு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
எந்த சாதியினரையும் படத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் எந்த சாதியினரை மேலாகவும் கீழாகவும் காட்டியிருக்கின்றார்கள் என்பது வடிவேலு கதாபாத்திரம் அவரது மேக்கப் இல்லாத இயல்பான முகம் அவர் மகன் உதய் வளர்க்கும் பன்றிகள் - பஹத் பாசிலின் மீசை மற்றும் மிடுக்கான உடை வளர்க்கும் நாய்கள் மூலமே குறியீடாக கடத்திவிட்டார் இயக்குநர்.
படத்தில் எல்லோருக்கும் இயல்பான அறிமுகம் ஆனாலும் வடிவேலுவின் அறிமுகமே ஈர்ப்பு. படத்தின் உண்மையான மாமன்னனாக உணர்வுப்பூர்வமான நடிப்பில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். முதன் முதலாக குணச்ச்சித்திர வேடத்தில் வேறுவகை நடிப்பில் திரையை ஆள்கிறார் வடிவேலு.
உதயநிதியின் ஆகச்சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும் படம். ப்ரோமோவில் மாரி செல்வராஜ் சொன்னது போல உதயைத் தவிர வேறொருவர் தயாரிக்க & நடிக்க தயங்கும் கருக்களம், இதை மிகத் தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்ததற்கும் தயாரித்ததற்கும் மிகப்பெரிய பாராட்டு அவருக்கு உண்டு. இதைத் தேர்ந்தெடுத்ததில் அவரின் பெரியாரிய பகுத்தறிவுப் புரிதல் தெளிவாகிறது.
மேலும், படத்தில் ஒரு கட்சி சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்பதும் எதிர் கட்சி மறுமலர்ச்சி ச.ச.ம.கழகம் என்பதும், அந்த இரு கட்சிகளின் கொடிகள் வரை மறைமுகமாக திமுக - அதிமுகவை குறிப்பது தான் என்பது பார்ப்போருக்கு எளிதில் விளங்கும். படம் பேசும் பாத்திரங்களின் ஜாதிய அரசியல் உட்பட. அதில் தயங்காமல் நடித்தது தான் உதயநிதியின் பக்குவப்பட்ட மனமும் பரந்துபட்ட பார்வையும் அது இல்லாமல் இருக்குமானால் இப்படத்தில் நடிப்பது சாத்தியப்படாது.
இதை அவரின் பேட்டிகளிலும் பார்க்க முடிந்தது. எது எப்படியோ இப்படம் உதயநிதியின் அரசியலுக்கும் பயன்படப்போகும் படமாகிப்போனது அவருக்கு தனிப்பட்ட முறையிலும் பலம். இந்தப்படத்தில் பேரன் நடித்ததை கலைஞர் இருந்து பார்த்திருந்தால் நிச்சயம் உச்சி முகர்ந்து முத்திட்டு மகிழ்ந்திருப்பார்.
பஹத் பாசில் கண்ணாலேயேநடித்து பயமுறுத்துவதில் அசுரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். கீர்த்தியின் நடிப்பும் படம் முழுக்க வரும் தீரமான கதாபாத்திரம்.
முடியும்வரை படத்தில் தொய்வு இல்லை என்றாலும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு படம் காட்டுத்தீ! ரஹ்மானின் இசை படத்தோடு பயணிக்கிறது.
சமத்துவம்
சமூகநீதியை உரக்கப் பேசும் காத்திரமான அரசியல் படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய
அருமையான
படம்.
வடிவேலு - மாமன்னன்
உதய் - தளபதி
பஹத் - எதிரிப் படைத்தலைவன்

- ஜா.மு
29-06-2023