31 ஜூலை 2017

படுத்துக்கொண்டு உமிழ்பவர்கள்




சமூகம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது, அது எப்போதும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாது என்பதை மீண்டும்.. மீண்டும் நிரூபித்திருக்கிறது. அதையே கடந்த நான்கைந்து நாட்களாக மறைந்த முன்னால் குரயரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் விசயத்திலும் கடமை தவறாமையை உறுதிபடுத்தி இருக்கிறது.

“சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது” அதையெல்லாம் பொருட்படுத்தாதீங்க.. “காய்க்கிற மரத்துக்கு தான் கல்லடிகள் விழும்” என்ற சொல்வழக்குகள் எல்லாம் கலாம் விசயத்திலும் உண்மையெனவேபடுகிறது. ஏனென்றால் கலாம் ஒரு அறிவுச்சூரியன்.. கலாம் கனிந்த கனிகள் சுமந்த அறிவு மரம்.

அந்தக்காலத்திலிருந்து இந்த காலம்வரை அறிவார்ந்த மேதைகளுக்கும், சாதாரண மனித குலாமுக்கும் கொஞ்சநஞ்ச இடைவெளியல்ல கிழக்குக்கும் மேற்குக்குமான இடைவெளியே இருந்திருக்கிறது. அந்த இடைவெளியால் தான் இன்று மாபெரும் அறிஞரை, மிக விசாலமான பார்வை கொண்ட மனித நேயரை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவரின் சிந்தனை விசாலத்திற்கு இவர்களால் வர இயலவில்லை ஒரு போதும் வர முடியாது அதே நேரம் இவர்களது சிந்தனைக்கும் அவரால் கீழிறங்கி எப்படி வரமுடியும், சமூகத்தையும், மதத்தையும் குறித்த அளவிடுகளின் புரிதலில் அவரும், கூப்பாடு போடும் இவர்களும் எதிரெதிர் துருவங்கள் அதனால் கலாமை இஸ்லாத்திற்கு முரணானவர் என்று கூப்பாடுபோடுகிறார்கள்.

இங்கே பிரச்சனையே ஒவ்வொருவரும் அவரவர் சித்தாந்தம் சார்ந்து அதற்குள் கலாம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் இங்கே அவரை அவராக தனித்துவமிக்கவராக ஒருவரும் பார்க்க அவர்களால் முடியவில்லை. இவர்கள் நினைப்பது ஒரு காலமும் சாத்தியப்படாத ஒன்று. ஒருவர் இவர்கள் நினைப்பதைப் போல ஒரே நேரத்தில் எப்படி பல்வேறு அவதாரம் எடுக்க இயலும், எப்படி எல்லார் அபிலாசைகளையும் நிறைவு செய்யமுடியும்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியாவது போலகாம் ஆனால் மறைந்த அவரை தோண்டி எடுத்து அவரது உடம்பை சிதைப்பது போலவும் தங்கள் பற்களாலேயே குதறுவது போலவுமான செயலக்களில் பலர் மிக தரமிழந்து ஈடுபட்டுவருகின்றனர், கலாமை அசிங்கப்படுத்துவதும் அவர் ஒரு மோசமான பிறவி என்று நிரூபிப்பதிலும் இவர்களுக்குள்ள ஆர்வத்தை பார்த்தால் அவர்களது சொந்த குடும்ப விசயங்களில் கூட அவ்வளவு முனைப்பு காட்டமாட்டார்கள் போலும், இவர்கள் யாவரும் அவர்களது நிலைமையையோ அல்லது அறிவு நிலைமையையோ அறியாதவர்கள், பாவம் அவர்களின் நிலையையே, நம்பிக்கைகளே உயர்வென்று தங்களுக்கு தாங்களே சுயச்சான்றிதழ் அளித்துக்கொண்டவர்கள்.

போகட்டும், போகட்டும் இருக்கும் போதே இவர்களால் கலாம் விமர்சனத்தை சந்திக்காதவர் அல்ல, அவர் இருக்கும் போதும் இந்த விமர்சனவாதிகள் இருக்கத்தான் செய்தார்கள் இதுவரை இவ்விமர்சனவாதிகளால் இந்த சமூகத்திற்கு எந்த துரும்பையும் அசைக்க முடிந்திருக்கிறதா? ஆனாலும் கலாம் அவர்களின் ஒவ்வொரு படியிலும் ஏதாவதொரு விமர்சனத்தை செய்தே வந்தார்கள் இந்த வேலையற்ற வீணர்களின் செயல்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அறிந்திருந்த கலாம் ஒருபோதும் இவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டதே இல்லை, அவர் இவர்களது விமர்சன்ங்களுக்கு ஒரு நாளும் செவிசாய்த்த்தும் இல்லை, அவர் என்றும் இலக்கு நோக்கிப் பாயும் அம்பாகவே செயல்பட்டார் தேசத்தின் வளர்ச்சி குறித்தும், தேசத்தின் மனதவளத்தினை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது குறித்தும் சிந்தித்து அவரது பயணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ஒருவேளை அவர் இவர்களிடம் மாட்டிக்கொண்டிருந்தால் இவர்களது குறுகிய வலையில் சிக்கி என்றோ அவரும் முடங்கிப்போனவர்களின் ஒருவராய் இருந்திருப்பார்,

குறிப்பிட்ட சில காலமாக தமிழகத்தில் பல மார்க்க சர்ச்சைகளை ஏற்படுத்தி புதுப்புது குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருந்தனரே அப்போது கலாம் இவர்களின் எந்த மார்க்க சர்ச்சைகளிலும் ஈடுபட்டாரா.. எது கூடும்.. எது கூடாது என்பது பற்றி என்றாவது ஒன்று பகர்ந்திருக்கிறாரா அத்தனை தரம் தாழ்ந்து அவர் ஒரு போதும் வரமாட்டார், இவர்களின் தரம் அவருக்கு நன்றாகவே தெரியும். இவர்களைப்பற்றியும் இவர்களின் கொள்கை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றியும் எந்த கருத்தும் சொல்லாமல் தனது ஆக்கப்பூர்வ செயலைமட்டுமே முன்னெடுத்த ஒருவரைப்பற்றி இவர்கள் தங்களது சித்தாந்த்த்தோடு இணைத்து இத்தனை மூர்க்கமாக வந்து பத்துவா கொடுப்பது ஏன் என்பது தான் என் கேள்வி.

தமிழக இஸ்லாமிய மக்களின் இன்றைய நிலை மிகப்பரிதாபத்திற்குறிய நிலை, அவர்கள் ஓர் சீரிய, அறிவார்ந்த மற்றும் பக்குவட்ட ஆன்மிகத்தலைமையின் கீழ் இவர்கள் இல்லை, அதனால் தான் இவர்களை யார் பெரும்பான்மையாக வழிநட்த்துகிறார்களோ அவர்களின் கருத்தியலை இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் வெளிப்படையாக சொல்வதானால் உலகில் இஸ்லாமியர்களாலேயே பலவிதமாகவும், இஸ்லாமியர் அல்லாதவர்களால் வேறு வேறு விதமாகவும் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்ற அறிஞர்களின் கூற்றும் உண்டு இஸ்லாத்தின் எதார்த்த்த்தை, நபிகளார் கட்டமைக்க விரும்பிய அற்புத சாந்தி மார்க்கத்தை விளங்கிய பரந்த பார்வை கொண்டவர்கள் என்றால் மிக சொற்பமானவர்களே தேருவர்.

பொதுவாகவே அப்படி இருக்கையில் சித்தம் சிதைந்த இப்போதைய தமிழக இஸ்லாமியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழக இஸ்லாமிய பெரும்பான்மை இளைஞர்களின் சிந்தனையில் வஹ்ஹாபிய பாசி படந்திருக்கிறது அவர்கள் எதையோ இஸ்லாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், இஸ்லாத்தை வேரறுக்கும் இறையியியல் கருத்துக்களை, ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இஸ்லாமியனை வெறியனாகவே இருக்க தூண்டுபவர்கள் இவர்கள் சொற்படி கலாம் இருந்திருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் அவ்வாறு அவர் இருந்திருந்தால் கூடுதலாக தாடி வைத்திருந்திருப்பார் அதே பேப்பர் போட்டுக்கொண்டு இராமேஸ்வரத்திலேயே ஊருக்கே தெரியாத சடக்குத்தன சராசரி இஸ்லாமியராக எங்கோ வானத்தில் இருப்பதாக நினைக்கும் சொர்க்கம் வேண்டி செத்திருப்பார். ஆனால் சமூகத்திற்கு அந்த சராசரி கலாமால் எந்த பயனும் விளைந்திருக்க வாய்ப்பே இல்லை ஒருவேளை அப்படி ஒரு கலாம் வராது போயிருந்தால் இவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். இருந்தும் ஒரு பக்கம் நின்று நமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, மேல்நிலையில் நம்மில் ஒருவரும் வரமுடியவில்லை என்று தரம்தாழ்ந்த அரசியல் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

கலாம் மிக சிறப்பான வாழ்வை வாழ்ந்து சென்றிருக்கிறார், இன்று அவரைப்பற்றி அவதூறு பேசும் மனிதர்களில் எத்தனை பேர் அவரது வாழ்வை ஆராய்ச்சி நோக்குடன் பார்த்திருக்கிறார்கள், அவர் எழுதிய பதினெட்டு புத்தங்களில் ஏதொன்றையுமாவது முழுமையாக உள்வாங்கி படித்திருக்கிறார்களா? நான்கூட அவற்றில் சிலவற்றினை படித்தவன் தான் ஆனால் குறைந்தபட்சம் அவரின் உலகப்புகழ்பெற்ற “அக்னிச் சிறகுகள்” புத்தகத்தையாவது இவர்கள் படித்திருக்கிறார்களா? அதில் அவர் இஸ்லாத்தினைக்குறித்து சொல்லப்பட்ட்தை பார்த்திருக்கிறார்களா? “எனது வானின் ஞானச்சுடர்கள்” என்ற நூலில் திருக்குரானின் மகிமையைப்பற்றியும், கலிபா உமர் கத்தாப் அவர்களின் ஆட்சியின் மேன்மை பற்றியும், பிரபல இஸ்லாமிய மேதைகள் இமாம்கள் பற்றியும் அவர் குறிப்பிட்ட்தை இவர்கள் அறிவார்களா? நபிகள் நாயகத்தின் மேன்மையைப் பற்றி இஸ்லாமிய ஆன்மீகவழிபற்றி அவர் வாழ்வு நெடுக பகிர்ந்தவற்றை ஏன் பார்க்காமல் பேசுகிறார்கள்

அவர் கோவில்களுக்குச் சென்றார், அவர் சாமியார்களை சந்தித்தார், அவர் பகவத்கீதையை படித்தார், அதனால் அவர் மோசமானவர், காபிர், நரகத்தின் கொள்ளிக்கட்டை என்கிறீர்கள், சொல்லிவிட்டு தொலையுங்கள் உங்களின் ஈன அறிவு அவ்வளவு தான்.

இஸ்லாத்தின் ஒப்பற்ற கலிபாவாக கருதப்படும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோமாபுரி தேவாலயத்தை சுற்றிப்பார்த்த்தாக வரலாறு இல்லையா? நபிகள் நாயகத்தின் இளம்பிராய சிரியா பயணத்தில் நபித்துவத்தையே உறுதி செய்து முன்னறிவிப்பு செய்த “புகைரா” என்ற துறவி இஸ்லாமியரா இல்லை வேத வசனம் முதலில் இறங்க நடுங்கிய நாயகத்தை போர்த்திவிட்டு அன்னை கத்தீஜா அவர்கள் சென்று விளக்கம் கேட்டவர் “வரகத் இப்னு நவ்பல்” என்ற கிருத்துவ பாதிரியார் இல்லையா இஸ்லாத்தினை நிர்மானம் செய்த நபிகளார் இதை தனது மார்க்கம் என்று சொல்லாமல் இதுவரை வந்த தீர்க்கதரிசிகள் சொல்லிச்சென்றவற்றின் தொகுப்புச்சித்தாந்தம் என்று தானே சொன்னார்கள் ஞானமார்க்கத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இறைவனை தரிசிக்க, அந்த பேருண்மையில் லயிக்க மதப்போர்வை என்றும் தடையாய் இருந்த்தில்லை அவ்வாறு லயிக்கும் நேரத்தில் உண்மையின் காட்சியே வெளிப்படும் என்பதற்கு ஒப்பற்ற இந்திய பிரதேசத்தில் தோன்றிய ரிக், எஜூர், சாம, அதர்வண வேதங்கள், பவிஷ்ய புராணங்கள், கல்கியின் அவதார முன்னறிவிப்புகள் போன்றவற்றிலெல்லாம் நபிகளாரின் நபித்துவ முன்னறிவிப்பு சொல்லப்படுகிறதே.. சந்திரன் பிளந்ததை சேரமாள் பெருமாள் இங்குள்ள இந்து ஞானவான்களிடம் தானே இது என்ன அதிசயம் என்று கேட்க அவர்கள் நபிகளாரைப் பற்றிச் சொன்னார்கள். தொன்னூற்று நான்கு லட்சம் வடநாட்டு பிராமணர்கள் தங்களை இஸ்லாமியராக ஆக்கிக்கொள்ளும் மனமாற்றத்திற்கு ஆளானார்களே அதற்கு மேன்மைமிகு ஹர்ஜத் காஜா முயினுத்தீன் ஜிஸ்தி அவர்கள் நேரடியாக ஞானோபதேசம் செய்து தானே இருக்க வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம் உங்களுக்கு தான் பிறமத தொடர்பு என்றாலே தகாத பாவமாயிற்றே.

உங்களுக்கு பேரா. காதர் மொகிதீன் கோவிலுக்கு சென்றாலும் கழுவி ஊத்துவீர்கள் கலாம் சென்றாலும் ஊத்துவீர்கள். காதர் மொகிதீன் ஏன் சென்றார்? அவரது நோக்கம் என்ன என்றெல்லாம் சிந்திக்க உங்களுக்கு நேரம் இல்லை. இந்து முஸ்லிம் ஒற்றுமை யாத்திரைக்காக சென்ற காதர் மொகிதீன் தனது முதுமையின் கால்வலி காரணமாக பூமியை கைகளால் ஊன்றி எழுந்தாலும் அவர் சங்கராச்சாரியார் காலில் விழுந்து கும்பிட்டார் என்று எழுதும் தினமலருடன் ஒத்து ஊதுவீர்கள்.

கலாம் பிரமுக் ஸ்வாமி மகராஜ் என்ற சாமியாரின் காலடியில் உட்கார்ந்திருப்பதாக இருக்கும் போட்டோ முதல்முறை அவர் சந்தித்த போது எடுத்த்து அது உங்களுக்கு போதும், அதற்கு பிறகு பலமுறை அவர் சந்தித்த பல சந்திப்புக்களும் அதில் கலந்துரையாடப்பட்ட விசயங்களும் உங்களுக்கு தேவையில்லை தான், ஏன் சாமியார்கள் அறிவு ஜீவிகளாக இருக்க்க்கூடாதா அந்த பிரமுக் ஸ்வாமி (2016-ல் மறைந்துவிட்டார்) கலாமை அழைத்து நாட்டின் வளர்ச்சி குறித்த பல ஆலோசனைகளை கொடுத்த பெரியவர் என்பதும் அவரது கலந்தாலோசனையில் இரண்டு வருட கடுமையான உழைப்பில் நான்கு அம்ச எதிர்கால இந்தியா குறித்த வரைவை தயாரித்தார் என்பது உங்களுக்கு தேவை இல்லை தான். நீங்கள் பத்வா கொடுக்க, பித்னா பசாது செய்ய ஏதேனும் கிடைத்தால் நீங்கள் சமாதானம் ஆகிவிடுவீர்கள்.

ஆனால், "சீன தேசம் சென்றேனும் சீர்கல்வி பெறுக" என்றும் "கல்வி என்பது காணமல் போன ஒட்டகம் அதை பெறுவதில் விழிப்பாய் இருங்கள்" என்றும் நபிகள் கோமான் ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் கூறி இருக்கிறார்களே, "கல்வி என்பது கொடூரமான சிங்கத்தின் தலையில் இருந்தாலு எடுத்துக்கொள்" என்று சொன்ன இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் போதனை பெற்ற மார்க்கத்தில் இவ்வளவு மக்குமண்டுகளா எனும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.

முடிவாக ஒரு இஸ்லாமியன் சாதுர்யனாக, எந்த ஒரு தனிமனித நெறிமுறைகளையும் மாற்றான் கண் கொண்டு பார்க்காதவனாக சகல தரப்பினரையும் அன்பு செலுத்துபவனாக இருப்பான் அதையே கலாம் செய்தார். அவர் செய்த்தில் ஆயிரத்தில் ஒரு சதவீத உழைப்பையாவது அவரை அடுத்துவந்த ஜனாதிபதிகள் கூட செய்ய முடியவில்லை, அப்படி இருக்கும் போது நான் கலாமை இமயத்தில் வைத்து துதிக்கிறேன்.

கலாம் என்ன செய்தார், அவரது சிந்தனை எவ்வாறு இருந்த்து, அவர் எந்த மாதிரியான தாக்கத்தை மாணவர்களுக்கு மத்தியில் விதைத்தார் ஏன் அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, தவிர்க்க இயலாத தலைமையாக மக்கள் ஜனாதிபதியாக வலம்வந்தார் என்று சென்றால் அது மிக நீளும். இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான் கலாம் பிஜேபியால் முன்மொழியப்பட்டவர் தான் அது எல்லோரும் அறிந்த ஒன்று, அவருக்கு வாஜ்பாயிக்கும் தனிப்பட்ட நெருக்கம் இருந்த்து வாஜ்பாய் தன்னை ஜானாதிபதி வேட்பாளாராக அறிவிக்க இருக்கிறோம் ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் போது கூட உடனே ஏற்கவில்லை அவ்வாறு பிறகு ஏற்ற அவர் அதனை எவ்வாறு நேர்மறை காரணியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதை பொறுமையும், நிதானமும் அறிவாற்றலும் உள்ளவர்கள் சிந்தித்து விளங்கிக்கொள்வார்கள்.

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் போது சேற்றிலும் ஒரு செந்தாமரை மலரும் போது அதைபோற்றுதல் மட்டுமே அறிவார்ந்த பெருமக்களின் செயல். ஒரு அறிவு ஜீவியை நாட்டிற்காக வாழ்ந்த தலைமகனை இந்த சமூகம் புரிய மறுக்கும் அவலச்செயல் பார்த்துத்தான் இந்த பதிவே தவிர கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போதிலிருந்தும் அவருக்கு மணிமண்டபம் கட்டியது வரையிலான பிஜேபியின் நரித்தன அரசியல் குறித்து நான் இங்கே பேசவரவில்லை, அதில் எனக்கும் நிறைய முரண்பாடுகளும், வேறு கருத்துக்களும் உண்டு.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா


31-07-2017 2.05 am

29 ஜூலை 2017

வெளிநாட்டு மாப்பிள்ளை



ஆண்டுக்கணக்கில் சம்மந்தம் பேசி
மாதக்கணக்கில் திருமண ஏற்பாடுகள் செய்து
நாட்கணக்கில் தாம்பத்யம் நடத்தி
மணிக்கணக்கில் மனைவியை அழவைத்துச்செல்கிறான்
வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
வினாடிகள் தோறும் தோன்றி மறைகிறது
ஏக்கத்தின் மின்னல் கோடுகள்.
*
அலைபேசி எடுத்தால் - அவள்
சோக கீதம் இசைக்கிறாள்
கண்ணீர் வழிய – இவன்
ஆழுகையில் ஆலாபனை பாடுகிறான்
*
எல்லோரும் கூடித்தானே
எங்களை இணை என்றீர்கள்
எங்கனம் இணைவதாம்
இடையில் மூவாயிரம் மைல்கற்கள்
*
இப்போது எனை அவள் நினைக்கவும்
அவளை நான் நினைக்குமாக கழிகிறதே
ஒருவரின் கண்ணீர் ஒருவர் ருசித்து
நனவில் நாங்கள் நனைவது எப்போழ்தாம்?
*
திருமணம் என்பது
இருமனங்கள் கூடவா இல்லை
இருமனமும் அழுது புலம்பி 
அனுதினமும் ஒருவரையொருவர் தேடவா?
*
ஒருமனம் அங்கேயும்
மறுமனம் எங்கேயுமாய்
வேள்வித் தீ எரிய
ஏன் இந்த திருமணம் என்ற
ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன..
ஆயினும் சமூகம் பதில் என்ன சொல்லும்
*
பணமெனும் தாள்கள் நிரப்பி
அதையணைத்து நான் படுத்துறங்க - என்
பருவத்து ஆசைகள் நீங்குமா எங்கள்
துருவத்து வேட்கைகள் தான் அடங்குமா
இங்கே இருக்கும் எதுவும் என்னவள்
புருவத்தின் ஜாடைக்கும் கூட ஈடாகுமா?
*
ஆமாம், புலம்புகிறேன்
நான் வெளிநாட்டு மாப்பிள்ளை.
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
நம் பெரும்பாலான இளைஞர்களின் / வீட்டு பெண்பிள்ளைகளின் வாழ்வியலை நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன், மனதில் தோன்றியதை இப்போது வடித்தேன்.
x

27 ஜூலை 2017

கலாம்



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 ஜூலை 2017

வல்லோன் துதிக்கும் நல்லவர் நாமம்

எல்லோர் இதயமும்
நன்றே துதிக்கும்
ஓன்றின் நாமம்
இறைவ னதாகும்
வல்லோன் அவனோ
என்றும் துதிக்கும்
நல்லவர் நாமம்
ஒன்றும் உண்டு
அதுவே அழகாம்
அகிலத்தின் அருளாம்
உலகின் பொதுவாம்
உயரிய ஒளியாம்
சிந்தைக் கமுதாய்
விந்தைக்கும் விந்தையாய்
தந்தைத் தாய்க்கும் மேலாய்
முந்தி அணைக்கும்
அந்த நாமம்...
அண்ட இயக்கத்தின்
சந்த நாமம்
மனிதர்களுக்கு மனிதம்
தந்த நாமம்
அதுவே.. அதுவே
முக்காலம் போற்றும்
"முஹம்மத்" எனுமோர்
முழுமுதந் நன்னாமம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்.
ஜாஃபர்.முஹையத்தீன் பாட்ஷா

19 ஜூலை 2017

நாளை விடியும்

நாளை நயம்பட விடியும்
காலை கலைநயம் புரியும்
ஆனந்த மெளனம் அழகினைக் கூட்டும்
தேனினும் இனிதாய் வானம் சுவைக்கும்
கால்களை அலைகள் துழாவி மொய்க்கும்
தோள்களில் சுகமான கிளி வந்தமரும்
இதம் தரும் கானம் செவிகள் நுகரும்
மேகம் சூழ நடையது இருக்கும்
நிலவு சிரித்து என்னோடு பேசும்
நட்சத்திரங்கள் கைகளில் சிக்கும்
விரலதுபடவே கடல்நீர் இளநீராகும்
குடைகள் பறந்திட மழை நீராட்டும்
முடிவிலா தூரம் கண்கள் காணும்
புகழின் சட்டை மேனியில் மின்னும்
இனியதோர் ரசம் பருகி தாகம் தீரும்
அதிசய இசைமேடையில் நம் சந்திப்பிருக்கும்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
18-07-2017

11 ஜூலை 2017

பந்தலிடப்பட்ட தோட்டம்


பந்தலிடப்பட்ட தோட்டம்
உலகம்

பசிக்கும் ஆடுகள் நாம்

சில ஆடுகள் கீழே விழுந்த
சருகுகளையும்
பழுத்து விழுந்த இலைகளையும்
தின்று திருப்தி அடைகிறது

சில ஆடுகள் முன்னங்கால்களை
உயர்த்தி முயன்று
களைத்து இது சிரமம் என
மீண்டும் பொறுக்கப்போய்விடுகிறது

சில ஆடுகள் மட்டும்
வேறொரு ஆட்டின் மீதேறி
வேண்டிய மட்டும்
பசும் இலைகளை
சுவையோடு புசித்து
வயிறு நிறைக்கிறது


ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11.7.2017
12:10am

10 ஜூலை 2017

கீழே இறக்கிவிட்டுவிடாதே

தொடர்ந்து கொண்டிருந்த
நெடுந்தூர வழிப்பயணத்தில்
அடர்வனத்தின் நடுவினிலே
திடீரென தனித்துவிட்டேன்.
தகவல் தொடர்பே சாத்தியப்படாத
அரவமற்ற பெருங்காட்டில்
எப்படி வழியறிந்து கடைத்தேறுவதென
விழிநீர் வற்றுமளவு அழுதுநின்ற போழுதில்
பவுர்ணமி நிலவை வானில் அனுப்பி வைத்தாய்
பெருநிலா கண்டநான்
திருவிழா மனம்பூண்டு
வழியேகுவதைக் கூட மறந்துபோனேன்
என்னை மறந்து சிரித்தேன்
இன்னும் மறந்து ரசித்தேன்
ஒளி உருண்டையை
கண்ணெல்லாம் ஏந்திக்கொண்டேன்
கண்ணில் புகுந்த ஒளி
உடலெங்கும் பரவியது
வானின்று நீண்ட கரம் ஒன்று பற்றிட
நிலவில் ஏறிக்கொண்ட நானும்
ஒளிரத்தொடங்கினேன்
பூவுலோர் பார்க்கும் நிலவாகத்தான்
ஆகிப்போனேன் நான்
இப்போது வானகத்தில் எனது உலா!
என் பிரார்த்தனையெல்லாம்
அழுத குழந்தையை தூக்கியணைத்து
பின் இறக்கிவிடுவது போல
இனி நீ கீழே இறக்கிவிட்டுவிடாதே
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
10-7-2017 11.19pm


07 ஜூலை 2017

காப்பியக்கோ விருந்து..



முன்பு புரவலர் விருந்து கொடுத்தார் இன்றோ புலவரவர் விருந்தளித்தார். 

நெஞ்சம் நிறைந்து அழைத்த விருந்துக்கு சென்றோம், சுவைமிகுந்த உணவாலும், அன்பின் அதீத உபசரிப்பாலும் வயிறும், மனமும் நிறைந்து வந்தோம்.


ஆமாம் அறிஞர் பெருந்தகை இக்பால் சார் சொன்னது போல காப்பியக்கோ அவர்களது விருந்தோம்பல் எங்களை திக்குமுக்காட செய்து விட்டது. 

உண்மையில் பெருந்தகை இக்பால் சார் வேண்டியது என்னவோ ஒரு சிறிய அளவிலான தேனீர் விருந்தே ஆனால் காப்பியக்கோ அவர்கள் அதை ஏற்கவில்லை, நான் சொன்னாலும் எங்கள் வீட்டு பெண்மணிகள் அதை ஏற்கமாட்டார்கள், நீங்கள் எல்லோரும் இல்லம் வர வேண்டும் எங்கள் இலங்கை உணவை உள்ளம் மகிழ சாப்பிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். 

அதன்படி இரவு விருந்திற்காய் துபாயில் இருக்கும் காப்பியக்கோ அவர்களின் மூத்தமகனார் வீட்டிற்கு சென்றோம், உள்ளார்ந்த வரவேற்பு, எல்லோரும் கூடி வர வேற்றனர். அவர்களின் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம், எத்தனை மகிழ்ச்சி.

வீடே இரம்மியமான சூழல், மழலை மணம் நிறைந்திருந்தது, வீட்டின் அலங்காரமும் அன்பின் தோரணங்களும் காப்பியக்கோவின் கவிதை மனதை இன்னும் கவித்துவப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பேரப்பிள்ளைகள் சூழ காப்பியக்கோ மகிழ்ந்திருப்பதை காண மனமெல்லாம் நிறைவு, இன்னும் இன்னும் இன்னும் அவர்கள் இதே மகிழ்வுடன் இருந்து சிறப்புடன் வாழவும் இச்சமூகத்திற்கு நல்ல பல ஆக்கங்கள் தரவும் மனதால் வேண்டிக்கொண்டோம்.

சென்றவுடன் பழரசம் பறிமாறப்பட்ட்து, சில உரையாடல்களுக்கு பிறகு சூப்பில் ஆரம்பித்து வித விதமான இலங்கை உணவு வகைகள், இறைச்சி வகைகளும், மீன் உணவும், மரக்கறிஉணவுமென எதிலும் குறையில்லை உணவுப்பதார்த்தங்களை சிறப்போடு சமைத்த்து மட்டுமல்ல அத்தனை அழகுற ஸ்டார் ஹோட்டல்கள் தோற்க்கும் அளவுக்கு அழகூட்டி வைத்திருந்தனர் எல்லாமிருக்க காப்பியக்கோவும், அவரது இணையரும் இனிக்க.. இனிக்க எடுத்து வைத்தனர். காப்பியக்கோவின் மூத்த மகனார் சிறுபிள்ளையென ஒடி ஓடி சென்று எல்லாவற்றையும் குதூகளத்துடன் எடுத்துவந்து பாசமுடன் பறிமாறினார். இளைய மகனாரும் இணைந்து உபசரித்தார்.

எல்லாம் சிறப்பாக இருந்தாலும் விருந்தில் அந்த இரால் பிரியாணியை அடிச்சுக்கவே முடியாது, பிரமாதம். ஃபீப் வருவல், சிக்கன் ப்ரை எல்லாம் அவ்வளவு பதம். பைன் ஆப்பிளை காரம் கொடுத்து சமைத்து வைத்தது புதுமை இப்படி சொல்லிக்கொண்டே போகலா…….ம். அவ்வளவு வெரைட்டி. கடைசியில் விருந்து முடிந்த்து என்றால் டெசர்ட் சாப்பிடாமல் எப்படி விருந்து முடியும் என்றார் காப்பியக்கோ.. பிற்கு ஃப்ரஸ் ஃப்ரூட் சலாடும் ஐஸ்கிரீமும் வந்தது அத்தோடு பனை கரிப்பட்டி வெள்ளப்பாகு, தயிர் அடடே! அற்புதம் என அதிலும் நிறைய வெரைட்டி. அல்ஹம்துலில்லாஹ். போதும் வாப்பா என சொல்ல பெரிய மகன் எங்கள் இலங்கை வழக்கப்படி சுக்கு காப்பி தான் கடைசி ப்னீசிங் அதனால் அதை மறுக்கவே மறுக்காதீர்கள் என்றார். அதுவும் சுடச்சுட வர சாப்பிட்டு முடித்தோம், ஆனாலும் இன்னும் சாப்பாட்டின் ருசி நாவிலும் நெஞ்சிலும் ருசிக்கத்தான் செய்கிறது. மறக்க முடியாத விருந்து.

இனிய விருந்து முடிந்தாலும் எங்கள் அன்புள்ளத்தின் அளவலாவல் தொடரக்கூடியது. மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம், வாசல் வரை வந்து காப்பியக்கோவும் அவரது இல்லத்தினரும் எங்களை வழியனுப்பினர். 

தமிழ் எங்களை இணைத்தது நம் அன்னைத்தமிழ் புதிய இலக்கியத்தை அதுவும் அழிவுறாப்புகழ் இஸ்லாமிய இலக்கியத்தை விரைவில் அது தனக்குள் கைகொள்ளும். அது வளர்ந்து வருகிறது இதுவரை தமிழிலக்கியம் பெறாத ஓர் அழகோவியம் உருப்பெருகிறது அதை தீட்டும் ஓவியர் காப்பியக்கோ இவ்வரிய இலக்கியம் வளர்ப்பவர் அறிவியல் அறிஞர்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
06-07-2017

06 ஜூலை 2017

தமிழ் ஆசிரியரின் அமிழ்தான வாழ்த்து


எனது தமிழாசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனது இப்பிறந்த நாளுக்கு யாத்த வாழ்த்துக்கவிதை

தம்பி முஹைதீன் பாட்சாவுக்கு
இனியவை நாற்பது
நாங்கள் பெறாத பிள்ளைக்கு வரும் பிறந்தநாள்
எங்கள் பிறந்த நாள்களிலும்
இனித்து இனிப்பது.
ஞானிகள் ஆசான்கள்
நயம் மிக்க
நாவலர்கள் ஊட்டிய
அறிவுப்பால்
அருந்திய பிள்ளை!
இல்லத்தை,
உள்ளதைச்
சொல்லும் உள்ளத்தை,
தடுமாறிய பள்ளத்தை,
ஏற்கவியலா கள்ளத்தை
எழுதிக்காட்டிய
இனியவை நாற்பது
ஓர் இலக்கிய
வெல்லம்!
நாற்பது என்பது
நடுவுக்கும் குறைவு,
தமிழ்மகனே நீ
ஐந்திணை ஜம்பதாய்,
ஐந்திணை எழுபதாய்
திணைமாலை
நூற்றைம்பதாய்
அகநானூறாய்
நற்குணங்குடியாய்
நல் அருட்பாவாய்
வாழ்கவே!
பெருமான் மொழிபோல்
பெருகி மிளிர்கவே!


அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ? :


இந்த பொழுது சிறப்பானதாக சென்றது, வாழ்த்து மழையென பொழிந்தது. நேற்று இரவே என் தாய் தந்தையர் மனமார வாழ்த்தி துஆ செய்தனர், இரவு ஸ்கைப்பிலும் காலை வாட்ஸப்பிலுமாக மனைவியார் மனமுருக காதல் கசிந்து வாழ்த்தினார், என் மகனும், தங்கை மகளும் மழலைக்குரலில் பாடலாக பாடி வாழ்த்தனுப்பினர், என் மகள் தான் உரிமையோடு நான் பக்கத்தில் இல்லாத குறையால் பேச மறுத்தாள் ஆனாலும் அம்மா சொல்ல "ஹேப்பி பர்த் டே" ஒரே சொல்லில் சொல்லிவிட்டு சென்றாள் எல்லா பெண்பிள்ளைகளும் இப்படித்தான் போல. பொசசிவ்னஸ் ரொம்ப ஜாஸ்தி.
பிறந்த நாள் என்பதால் பிரியாணி சாப்பிட திட்டம் தான் ஆனால் எனக்கு தலப்பா கட்டு பிரியாணி வருமென நினைக்கவே இல்லை, திடீரென காலை 11.30க்கு போன் செய்த மெளலானா அண்ணன் மதியம் சாப்பிட வேண்டாம் என்றார் ஏன் அண்ணன்.. என்ன விசயம் எனக்கேட்க.. நான் இப்போது துபாய் கராமாவிலிருக்கும் தலப்பாகட்டு பிரியாணி ரெஸ்டாரெண்டில் இருக்கிறேன், இக்பால் சார் தங்களுக்கு பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இன்னும் சில நிமிடங்களில் நான் அஜ்மானில் இருப்பேன் என்றார், உடனே போன் செய்து " இதெல்லாம் ஏன் சார்.. எனக்கு, உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் இருக்கு அது போதும்" என்றேன் எப்போதும் போல அன்பை பொழிந்து மறுத்துவிட்டார்கள், சரியான நேரத்தில் வந்த மெளலானா அண்ணன் கையில் இரண்டு தலப்பாகட்டு பிரியாணி கூடவே மிளகுக்காரத்துடன் நல்ல மசாலா இட்டு பதத்துடன் பொறிதெடுத்த மட்டன் பொறியல். சிறப்பான ருசி, சீரக சம்பா பிரியாணி. வயிறும் மனமும் நிறைந்தது, பெருந்தகையை மனம் மொழி மெய்யால் வாழ்த்தினேன். அதுவும் நான் இந்நாளில் தனிமையில் சாப்பிட கூடாதென மெளலானா அண்ணனையும் அனுப்பி என் தனிமையை விரட்டி இந்நாளை இனிதாக்கியதை நினைத்து நெகிழ்ந்தேன். உண்மையில் இதுகாரும் எல்லா வருடத்திலும் பெருந்தகை இக்பால் சார் எனக்கு பிறந்த நாள் எனில் இரவே போன் செய்துவிடுவார்கள் அல்லது சரியாக அந்த 12 மணிக்கு குறுஞ்செய்தியாக வாழ்த்தனுப்பி மகிழ்விப்பார்கள். இம்முறை எல்லா வகையிலும் என் நெஞ்சம் நிறைய செய்த அப்பெருந்தகையாளரின் அன்பிற்கு முன்னால் சொற்களற்று நிற்கிறேன்.
எனது ஆசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனக்காக பேரன்புடன் அழகான கவிதையாத்து பாசமுடன் என்னை எங்கள் வீட்டில் பிறக்காத குழந்தை என்று விழித்து அழகு தமிழின் ஆழிய சங்கத்தமிழ் நூற்களின் பெயரால் என்னை மனமார வாழ்த்தினார்கள். இதுவும் எனது பாக்கியமே.
இவையல்லாது இப்போதுவரை என்னை அன்பொழுக
நெஞ்சார முகநூலிலும், வாட்சப் வழியேயும், குறுஞ்செய்திகாகவும் வாழ்த்திக்கொண்டிருக்கும் அன்பார்ந்த உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என் நல விரும்பிகளுக்கும் நான் என்ன கைமாறு செய்துவிடப் போகிறேன், நன்றி என்று சொற்களில் சொன்னால் அவை சொல்லில் அடங்கிவிடாது என்னிடம் உங்களுக்குத் தர எனது அன்பைத் தவிர பிறிதில்லை. அன்பைத்தவிர பிறிதில்லை, அன்பைத்தவிர பிறிதில்லை.
நாம் அன்பால் என்றும் இவ்வாறே பிணைந்திருப்போம் ஒருவருக்கொருவர் பிறரின் நலம் போற்றி இன்பம் காண்போம். வாழ்க வையகம். வாழ்க நன்னெஞ்சினர்.
அன்பிற்கு நன்றி நவிழ்வதும் தான் இயலுமோ?
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

05 ஜூலை 2017

நாற்பதைத் தொடுகிறேன்!

நேற்று வரை அல்ல இப்போதுவரையும் கூட நான் குழந்தையாகவே இருப்பதாகவும், அதன் மனநிலையிலேயுமே உணர்கிறேன். இனியும் குழந்தையின் மனநிலையை விட்டும் மீளுதல் அவ்வளவு எளிதல்ல ஒரு வேளை மற்றவர்கள் மாற்றிக்கொள்வார்களோ என்னவோ ஆனாலும் நாற்பதாகிவிட்ட்தாக என் நாற்காட்டி அறிவுருத்துகிறது ஆகட்டும் அது அதன் வேலையை செய்கிறது.
இருந்தபோதிலும் இந்த நாற்பது என்பது ஏதோ பெரிய யுகாதி யுகங்களைக் கடந்து வருவதாக தெரியவில்லை.. உலகம் ஓடுகிற வேகத்தில் நாற்பதெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை வந்தடைகிறது. இதையெல்லாம் நினைக்கும் போது மனித வாழ்வு என்பது எவ்வளவு குறுகிய ஒன்று என்று நினைக்க தோன்றுகிறது, குறுகிய என்பதை விட கடுகைப்போல சிறுத்த ஒன்று என்று சொல்வது கூட பொருந்தும். அந்த கடுகைப்போன்ற வாழ்வில் தான் நாம் வாழ்ந்து அனுபவித்து திருப்தியாகி சாதித்து நிறைவடைந்து போக வேண்டி இருக்கிறது ஆனால் இதையெல்லாம் முழுமையாக்கும் பாக்கியம் சிலருக்கு தான் வாய்க்கும் இதற்கு உடல்வலு மட்டும் போதாது தெளிந்த அறிவார்ந்த மனநிலையொடு வயதும் வாய்த்தால் மேற்கண்டவை எல்லாம் சிறக்கும்.
மூன்று வருட்த்திற்கு மேல் இருக்கலாம் முன்பு துபாயின் ஹலோ பண்பலையில் ஹரி என்று ஒரு ஜாக்கி இருந்தார், அப்போதெல்லாம் மாலை நேர நிகழ்ச்சியை அவர் தொகுத்தளிப்பார் நிறைய உற்ச்சாகமூட்டும் சிந்தனைகளை முன்னெடுக்க்க்கூடிய நல்ல தொகுப்பாளர். அந்த மாலை நேரத்தில் எப்போதும் போல காரோட்டிக்கொண்டே வானொலி கேட்டுக்கொண்டே வரும் சூழலில் இதுவரை தான் ஏதும் சாதிக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டேனே.. யார் யாரோ என் வயதில் வாழ்க்கையை சரித்திரத்தில் பதித்துவிட்டார்களே நான் இதுவரை ஏதும் செய்யவில்லையே இனிமேலாவது சாதிக்கவேண்டும்என்று புலம்பிக்கொண்டிருந்தார் அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு மட்டுமே, அதை கேட்ட எனக்கு "அடப்பாவமே இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஹரி இந்த பொலம்பு பொலம்புறாரே.. அப்டீன்னா நாமெல்லாம் என்னா பொலம்புறது" என்று, ஆனாலும் அவரது அந்த எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறி எனக்கு பிடித்திருந்த்து. அவரும் ஒரு இன்ஸ்பிரேசனாகவே தெரிந்தார்.
அந்த மனநிலை மிக அவசியம் தான் அது போல எரியும் வேட்கை தான் என்னுடையதும் ஆனாலும் நதிவழி செல்லும் ஓடம்போல சென்று கொண்டிருப்பவன் தேவையில்லாமல் சலசலப்பை உருவாக்க எண்ணமாட்டேன் ஆனாலும் உள்ளுக்குள் கனல் கனன்று கொண்டே தான் இருக்கும் இருந்தாலும் இன்றைய நாள் எனக்கு இனியும் நேரத்தை விரயம் ஆக்கதே மென்மையான உளப்போராட்டம் இனி உதவாது இனி நீ சுழல வேண்டிய வேகம் இன்னும் அதிக்கரிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது போல தோன்றுகிறது இயற்கை என்னை மிகப் பொறுப்புள்ள இடத்தில் நிறுத்தியிருப்பதாக உணர்கிறேன்.
இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை திரும்பி கொஞ்சம் பாஸ்ட் ரிவைன்டிங் செய்து பார்த்தால் எனது ஆன்மீக புரிதல் அதன் படியான எனது வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது.. அதுவே என்னை நிதம் நடத்திக் கொண்டிருக்கிறது சோர்வான நிலையில் வீழும் நேரத்திலும், இக்கட்டிலும் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறது. அதுவே எனது மேன்மைக்கும் உயர்வான சிந்தனைக்கும் காரணம். எந்நிலையிலும் நம்மை நாம் தேவையில்லாது தாழ்த்திக்கொள்ளுதல் அழகன்று என எனக்கு உணர்த்தி உயர்வான சிம்மாசனத்தில் என்னை அமர வைத்திருப்பது. எனது சொத்து சுகம் என்றால் முதலில் எனது ஆன்மீகமே அதுவே என் ஜீவனெனலாம். அப்போதும் மிகையில்லை.
அந்த ஆன்மீகத்தின் சாராம்சமாகவே உலகில் உதித்து உலகில் சாந்தி நிலைக்க வந்த நபிகளார் ஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை, அவர்தம் திருக்குடும்பத்தை, மதம் கடந்த எல்லா புண்னிய ஆத்மாக்களை பெரியவர்களை நான் மதிப்பவனாக பாக்கியம் பெற்றிருக்கும் எனது நிலை குறித்து பெரிதும் மகிழ்கிறேன், இதற்கு காரணமான என் குடும்பச்சூழல், நன்மக்கள், அன்பான அறிஞர்கள் என எல்லா இறையருளையும் நான் நன்றியுடன் பணிந்து உவக்கிறேன்.
இத்தருணத்தில் நான் எவ்வள்வு தான் நன்றி சொன்னாலும் தகாது என்றால் அது என் அரும்பெரும் தாய், தந்தை, எனது நன்னியம்மா இவர்கள் தான் அடுத்து சொல்வதானால் எனது அருமை இணையாள். என்னோடும் புரிதலோடு வாழ்ந்துவருபவள் எனது ஆன்மீகத்தை மதித்து நிற்பவள் பிறகு நான் மகிழ்ந்து நிற்பது எங்கள் இரு மலர்கள் கல்புக்கனிகள் நளீர், ஜைனப் இவர்களால் தான்.அவர்களது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் எல்லையற்ற இன்பம் காண்பேன். இவர்கள் சிறக்கவே என்னாளும் அவனை தொழுதும் அழுதும் வேண்டுகிறேன் அவர்கள் மகிழ்வாயிருந்தால் என் நெஞ்சத்தாமரை என்றும் நன்றே மலரும். ஒளிரும்.
நாங்கள் விசித்திரமான சகோதர்ர்கள் அத்தனை நெருங்கி பேசிக்கொள்ளாவிட்டாலும் எங்களின் அன்பு நிறைவானது. எனது அன்புத்தங்கை முர்ஷிதா அருமைத் தம்பி காலித் இவர்களெல்லாம் எனக்கான இறைக்கொடையே. எங்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் சந்தோச முல்லைகள் அவர்களின் அன்பு முகம் தான் எனது குதூகலம். எனது அம்மாஜான், ஹாலஜான், பெரியபாப்பு, எம்.ஜே.பி பாப்பு,மாமி, மாமு, ஹாஜா, முஜீப் அண்ணன் மற்றும் இவர்களது குடும்பத்தினர்கள் என எல்லோரின் அன்பில் நனைந்து நிற்பவன். இவர்களே எனது அன்பின் குடை.
எனது மாமனார் எனது பலம், மச்சினன் சிறு பிள்ளை போன்றவர். இதைவிட எனக்கு என்ன வேண்டும். ஆனாலும் என் வாழ்வின் சோகம் எனது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய மாமியாரின் திடீர் மறைவு அதன் ரணம் ஆறவே இல்லை, அது நெஞ்சைச்சுடும் சோகம். அழுது தீராத சோகம் இதே போன்ற ஆறாத சோகத்தை என் தங்கை நஸரீனும் (பெரியபாப்பு மகள்) கொடுத்துச் சென்றாள். இந்த இழப்புகளுக்கு ஈடுடென்று எதுவும் இல்லை.
இத்தனை ஆண்டுகளில் நான் கவிஞனாக அறியப்பட்டாலும் பெயர் சொல்லும் ஒரு ஒலிப்பேழையை தயாரித்திருக்கிறேன் என்ற மகிழ்வு உண்டு. அந்த சங்கை நபிஸல்ல்ல்லாஹு அலைஹிவசல்லம் என்ற ஒலிப்பேழை என்னை நிரம்ப சங்கை செய்த்து, மக்களிடம் என்னை பற்றிய உயர்வான கருத்தையும் இவன் இப்படியெல்லாம் எழுதுவானா என்பதற்கு பதிலாகவும் உயர்வான ஆன்மீகத்தை எளிமையாக கூறிவிட்டீர்களேஎன்றெல்லாம் நிறைய.. நிறைய பாராட்டுக்களையும் எனக்கு கொண்டுவந்த்து. அதை பாடிய பாடகர் அருளிசை அரசு அபுல் பரக்காத் அவர்களுக்கும் அதை ஊரில் வெளியிட்ட பஷீர் மாமு ஆய்வுரை வழக்கிய எனது ஆசான் திருநாவுக்கரசு இவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
மற்றபடி எழுதிவைத்திருக்கும் கவிதைகள் ஏராளம் அவற்றையெல்லாம் இனி தான் புத்தகமாக்க வேண்டும் , தரமான கவியாக்கங்களை செய்யவேண்டும், நிலைத்து நிற்கும் மக்களுக்கு பயனுள்ள இலக்கிய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் சதா இருந்த வண்ணம் இருக்கிறது. அதற்கும் இறைவன் அருள்வானாக. எனது பேச்சும், எழுத்தும் இன்னும் என்னை இனி காட்டும் சமூகத்தில் நேர்மறை விதை விதைக்கும். இன்ஷா அல்லாஹ்.
நான் படித்த புத்தகங்கள் எனக்கு நிறைய புதிய விரிவான சிந்தனைகளை விதைத்தவை, நான் பழகிய பெரிய மனிதர்கள் தூய விதைகளை எனது நெஞ்சத்தில் விதைத்தார்கள். எனது நெஞ்சில் எதிர்மறையே இல்லாது இருக்கும் அளவு என்னை தயாரித்தவர்கள் அவர்கள் தான். எனக்கு இந்த ஆதாய உலகில் அரங்கிற்கு தகுந்தாற்போல பேச தெரியாது அந்த குறையும் எனக்கு உண்டு ஆனால் என்னால் அதை மாற்ற முடியவில்லை எனது அமைப்பு அப்படி தான் போல. அதை மாற்றிக்கொள்ளவும் தேவையில்லை.
என் பொருளாதார வாழ்வு பல போராட்டஙக்ளுக்கிடையே சென்று கொண்டிருந்தாலும் இதுவரை அத்தனை போராட்டங்களிலும் எப்படியோ முண்டி அடித்து இறையருளால் கரை சேர்ந்தே இருக்கிறேன், அது குறித்த நிறைவு என் மனதில் இருக்கிறது. இப்போதும் நான் போராட்டக்களத்தில் நின்றாலும் இப்போதைய சூழலில் நான் சோதனைக்குட்படுத்தப்பட்டாலும் என்னை இதுவரை காத்துவந்த அருள் இதுவரை தொடர் உயர்வை கொடுத்த அருள் இதுவரை மேன்மையாக்கி வைத்திருக்கும் அருள் இப்போதும் கைவிடாது என்றே உற்சாகமாக முன்னெடுக்கிறேன்.
இயற்கையில் நான் இயற்கையின் ரசிகன், தோட்டம் போட்டவன், கோழி, மாடு என வளர்ந்தவன் அவை பிரிந்த வாழ்வு குறித்து எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லையானாலும் நிர்பந்தத்தில் தான் நான் சமரசம் கொண்டு எல்லோரையும் போல வாழ்கிறேன். இந்த மெத்தை வாழ்வை விட எங்கள் தோப்பில் தென்னைமர காற்றில் கயிற்றுக்கட்டிலில் எனது தாத்தாவோடு வாழந்த வாழ்வை நான் பெரிதும் விரும்புகிறவன். அது குறித்த ஏக்க உணர்வு சூழவே என் வாழ்வை தொடர்பவன். ஆகவே அதே சூழலில் விரைவில் ஐக்கியமாக சென்ற வருடம் ஆரம்பித்து இறையருளால் எங்கள் இல்லம் வளர்கிறது விரைவில் நிறைவுரும். கனவு இல்லமாக அது மலரும் அப்போது என் ஆத்மாவின் தேடலுக்கு விடை பகர்வேன். இன்ஷா அல்லாஹ்.
எனக்கு வாழ்வின் முக்கிய ஆன்மீக மற்றும் வாழ்வியல் பொருளாதார திருப்பங்களை தந்தவர் ஆரம்பப்புள்ளியாகவும், ஆதாரத் தொடர் புள்ளியாகவும் இதுவரை இருந்துவருபவர் எனது வாழ்வியல் வழிகாட்டி வழுத்தூர் மண்ணின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிடும் அறிவியல் அறிஞர் பாசமிகு எம்.ஜே.முஹம்மது இக்பால் பெருந்தகை தான்.
அதற்கடுத்து எனக்கு அன்புக்கரம் நீட்டியவர் நல்லமனசுக்கார்ர் அருப்புக்கோட்டை ஜாஃபர் சாதிக் அண்ணன், நண்பர் ராம்நாடு பாஸ்கரன் இவர்கள் தான். ரியாசும், ஹக்கீமும் என்னுடன் வருபவர்கள். சாப்ஜி அண்ணனும் மாலிக்கும் இதயத்தில் அமர்ந்திருப்பவர்கள். மவ்லானா அவர்கள் எனது உயர்வான அன்பிற்குரிய்வர். குலாபு எனது பந்தம், இவர்களன்றி எண்ணிரந்த என்னை நேசிக்கும் முகநூல் அன்பர்கள் உண்டு, என்னோடு படித்த நட்புள்ளங்கள் உண்டு, என்னோடு ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் நேசர்கள் உண்டு அவர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சின் அன்பும் மகிழ்வும் உரித்தாகட்டும்.
ஆன்மீகம் என் இல்லத்திலிருந்தே தொடர்ந்தாலும் நான் பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பயின்ற ஆன்மீக குருகுலம் மறக்க முடியாதது அதையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். நான் சிறிய காலமே அவரிடம் பயின்றாலும் என்னை ஆட்கொண்டவர் தமிழாசிரியர் திருநாவுக்கரசு. காலித் சார் என்னால் மறக்கமுடியாத ஆளுமை. அவரை கட்டாயம் எழுதி பதிய வைப்பேன்.
ஆக இறையருளால் இப்போது நாற்பதை தொட்டிருக்கிறேன் இதுவரை நடத்திக்கொண்டுவந்த தலைவன், இனியும் சிறப்பாய் நடத்துவான் என்ற நம்பிக்கை வழுவாக இருக்கிறது. இயக்கும் அவன் இகம் வாழ நமக்கு நல்லதொரு கதாபாத்திரம் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்ற ஆசையல்லால் மற்றதொன்றும் எனக்கில்லை. இதுவரை செய்ததெல்லாம் ஆயத்தத்திற்காக இருக்கட்டும் இனி சரித்திரத்தை சமைக்க வேண்டும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நாற்பதிலிருந்து தான் தொடங்கினார்கள் உலகையே அறுபத்து மூன்றில் தன்வசம் கொண்டு வந்தார்கள் அந்த உற்ச்சாகம் தான் என்னோடு இருக்கிறது. ஆதலால் நிறைய கனவுகள் இருக்கிறது இறைவா அதற்காக எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அருள்புரி நிறைவான நோய் நொடியற்ற பெருவாழ்வை தந்தருள். நீயே தயாளகுணத்தின் அதிபதி.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லிம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா