27 நவம்பர் 2015

துபாயில் இன்று (27-11-2015) பாடகர் அபுல் பரக்காத் இசை நிகழ்ச்சி





இன்று வெள்ளி (27-11-2015) மாலை துபை நாசர் சதுக்கத்தில் அருளிசை முரசு அபுல் பரக்காத் அவர்களின் தீனிசை நிகழ்ச்சி அனைவரும் வாரீர்.
*********************************************************************
இன்று வெள்ளி (27-11-2015) மாலை சுமார் ஏழு மணிக்கு நாசர் ஸ்கொயரில் இருக்கும் லேண்ட் மார்க் ஹோட்டலில் அருளிசை அரசு அபுல் பரக்காத் அவர்களின் தீனிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, நிகழ்வுக்கு அன்பின் பெருமக்கள், ஆத்மீக உள்ளங்கள் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு பாடகரின் சார்பில் அழைக்கிறோம்.
அருளிசை பருக! அனைவரும் வருக!
பாடகர் அபுல் பரக்காத் அவர்களை நம் எல்லோருக்கும் அவரது இஸ்லாமிய பாடல்கள் மூலம் அறிவோம்.ஆனாலும் அவரைக்குறித்த மேலும் தகவல்கள் நீங்கள் அறிய தந்தால் அவரைப் பற்றிய விடயங்களை நீங்கள் அறிய ஏதுவாக இருக்கும் என்றே சில தகவல்கள் இதோ…
  • பாடகர் அபுல் பரக்காத் அவர்கள் இதுவரை 6500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் சூஃபிப் பாடல்களைப்பாடியவர், அவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட இசைக்கோர்வைகளை அதாவது ஆல்பங்களை வெளியிட்டிருக்கக்கூடியவர்
  • தமிழக இஸ்லாமிய இசை வரலாற்றில் ஈடில்லாத சரித்திரமாக விளங்கிய மறைந்த இசைமுரசு நாகூர் ஹனிபாவிற்கு பிறகு தமிழகத்தில் தரமான இஸ்லாமியப் பாடகராக விளங்கிவருபவர்

பாடகர் அபுல் பரக்காத்துடன் குழந்தை அஹமது நளீர்
  • பாடகர் அபுல் பரக்காத்தின் மிகச்சிறப்பு முறையாக கர்நாடக இசையைப் பயின்றவர். இவரது இசைக்கு ஹுசைன் பாகவதர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் குருவாக இருந்தவர்கள், மற்ற இஸ்லாமிய தமிழ் இசைப்பாடகர்கள் யாரும் கர்நாடக இசையை முறையாக அறிந்தவர்கள் என அறுதியிட்டு கூறிட இயலவில்லை.
  • பாடகர் அபுல்பரக்காதின் பிரபலமான ஆல்பங்களான வேந்தர் நபிகளின் பல பாடல்களை இன்னும் பல பிரபல இஸ்லாமிய பாடகர்கள் பல மேடைகளில் முழங்கி வருகிறார்கள், அந்தப்பாடல்களின் மூலப்பாடகர் இவர் தான் என்பது இவரது சிறப்பு.
  • பாடகர் அபுல் பரக்காத்திற்கு நாகூர் சலீம் உட்பட இசைமுரசு ஹனீபாவிற்கு பாடல் எழுதிய பலர் பாடல் எழுதித்தர பாடி இருந்தாலும் சமீபத்தில் திண்டுக்கல் ஆலிம்புலவர் ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்களின் பாடல்களில் உருவான வேந்தர் நபிகள், கண்ணே ரஹ்மானே, திக்ரு, மாநபி போன்ற இசைக்கோர்வைகள் பெருமளவு மக்களின் வரவேற்ப்பை பெற்றவை.

  • “எம்மை போன்ற மனிதரென்று எப்படி சொன்னாய் எங்கள் நபி நாயகத்தை ஏகன் திரு தூதர் தன்னை” என்பன போன்ற வஹ்ஹாபிய எதிர்ப்புப்பாடல்கள் பலவற்றை இவர்தான் பாடியவர் என்பதும் மேலதிக சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைப்பிடிப்பும், சூஃபியிச வழிமுறைப்பேணல்களும் உள்ளவர் என்பது மிக குறிப்பிடத்தக்கது.
  • நபிகள் நாயகத்தின் மேன்மையை விளக்கியும், நபிக்காதலைப் பிரதானமாகக் கொண்டும் மிக அதிகமான பாடல்களைப் பாடியபாடகர் இவர் தான்.
  • டி.ராஜேந்தர் இசையில் இவரது பல இசைக்கோர்வைகள் பல வெளிவந்திருக்கிறது மேலும் இவர் பல இசை மேதைகளின் இசையில் இசைக்கோர்வைகளை வெளியிட்டிருக்கிறார்.
  • நெல்லையைச் சார்ந்த இவர் ஸையது மரபில் வந்த மேன்மைக்குரியவர் என்பது மிக சிறப்பானது, குடும்பத்தில் பலப்பிள்ளைகளில் கடைப்பிள்ளையாக பரக்காத் பிறந்தார். இவரது தந்தை செய்யது செய்கு லெப்பை  அவர்கள் இலங்கையில் இமாமத் செய்தவர்கள். இன்றும் பரக்காத் அவர்களும்  அடிக்கடி இலங்கை சென்று இசை நிகழ்ச்சி செய்து வருபவர் என்பதும் அறியத்தக்கது.
  • லண்டன் லைவ் காண்சர்ட் எனும் நிகழ்வில் பிரபலமான ஸ்டுடியோவில் இரண்டு முறைப் பாடிய முதல் இஸ்லாமிய இசைமேதை இவர் தான். மேலும் அமீரகம் போன்ற அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மற்றும் பல நாடுகளுக்கு அடிக்கடி சென்று பல தீனிசை நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருப்பவர்.

  • இவர் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும், இவரது பாடல்களில் எதைக்குறிப்பிட்டாலும் அல்லது இசைமுரசு அல்லது காயல் ஷேக்தாவுத் போன்ற பிரபலபாடகர்களின் பாடல்களைக் குறிப்பிட்டாலும் அதை இன்றளவும் மனனமாக மனதில் வைத்திருந்து அப்படியே எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் பாடுவார் என்பது இவருக்கே உரிய தனிச்சிறப்பு.
  • நம் அமிழ்தான தமிழ் மொழியைக் குறித்தும், சமூக நல்லிணக்கங்கள் குறித்தும் இவர் நிறையப் பாடல்கள் பாடியுள்ளார். இவைகளை இன்றளவும் -இணையத்தின் யூ-டியூபில் பார்க்கலாம்.
இவ்வாறான சிறப்புக்களைப்பெற்று கடந்த 45 அண்டுகளாக இஸ்லாமியத்திற்கு இசைச்சேவை வழங்கிவரும் பாடகர் அபுல் பரக்காத் அவர்கள் நம்முன் இன்று மாலை தீனிசை நிகழ்வு நிகழ்த்த இருக்கிறார். அவரது நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள் கூறுவோம், நாம் அனைவரும் கலந்து சிறப்பிப்போம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 நவம்பர் 2015

பிகாரில் நிதிஷ்-லாலு வெற்றி குறித்து - 09-11-2015

புகார் சொல்லி பயனில்லை
இனி யார்மீதும்,
பிகார் தீர்பெழுதிவிட்டது
பகார்* செல்லுங்களென!
கோபாலும் பைசலும்
அன்னை தேசத்தின் பிள்ளைகள்.
பரம பதம் அழைக்கிறது
புறப்படுங்கள்
இராம பக்தர்களே???
இனி இந்தியர்களை
ஏய்க்கமுடியாது!
****
பிடித்திருக்கும் மதமே
ஒருநாள் வதம் செய்யும்
இவர்களை!
பிடித்திருக்கும் பீடையே
ஓருநாள் பதம் பார்க்கும்
இவர்களை!
அடுத்துவரும் தோல்விகளில்
நடித்திருக்கும் விதம் ஜீவசமாதி
இவர்களுக்கே!
தொடுத்துவரும் மாலைகளை
படுத்த விதம் சூடும்பிணங்கள்
இவர்களே!
****
மதத்தால் மனங்களை கூறுபோட்டார்கள் -இன்று
மாட்டால் நாட்டையும் கூறுபோட துணிந்தார்கள்
தூங்கும் பூனைகள் விழிக்கட்டும்..
உலகம் இருட்டவில்லை விழி'காட்டும்'.
பிகாரின் 'தீ' இந்தியா முழுமைக்கும் பரவட்டும்
தகா(த) பார"தீய" வன்மங்கள் வேரறுந்து சாயட்டும்
லா..லா..லா..லு... லா....லு...!!!
****
மதவாதமும், மாபாதகமும் அடிசறுக்கியதில்
தேசபக்தர்கள் எல்லோருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி.
அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம்
இந்த தேசமுழுக்கவும் இதன் நீட்சி!
பாரத் மாதா கி..... ஜே!
****
சமயம் பார்த்து 
கழுத்தறுக்கும் இவர்களது
சமயச் சார்பு!
****


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 நவம்பர் 2015

அபுஹாஸிமா





பெயர் அபுஹாஸிமா..குமரி மாவட்டம் கோட்டாறு
சமூக சிந்தனையில் இவர் காட்டாறு அதன் உந்துதலினாலேயே 
நமது முற்றம் மாத இதழினை போராட்ட குணத்தோடு பல சவால்களுக்கு மத்தியிலும் நடத்தி வந்தவர். 

சிறப்பான கவிஞராகவும், பன்னூல் ஆசிரியராகவும் வலம் வருபவர்.
உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள், அண்ணலே யா ரசூலல்லாஹ், "பெட்டகம்" குமரி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம் உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்.

இன்னும் பல நூட்களை வெளியிட இருக்கிறார். இவரது நூற்களில் நல்ல தமிழ் நம்மை மயக்கும்..சமூக உணர்வு நம்மை செதுக்கும்.. அரிய தகவல்கள் பல நமக்கு கிடைக்கும்.

மட்டுமல்லாது சமூக நல ஆர்வலர்.. நிலத்தில் நிம்மதியும் அமைதியும் தழைக்க வேண்டும்.. எல்லா தரப்பு மக்களுடனும் சிறப்பான உறவு தழைத்தோங்கி பேதங்கள் பொய்த்து போக வேண்டும் என பல வகையில் எழுத்தாலும், பேச்சாலும் முயன்று வருபவர்


தற்போது முகநூலில் நியாயத்தின் குரலை எந்த ஒரு சமரசமும் இன்றி தொடர்ந்து ஒலித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்,

நல்லவர் வாழ்க!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மார்ச் 7-2012 அன்று முகநூலில் எழுதியது.

04 அக்டோபர் 2015

சிராஜுல் மில்லத் 90வது பிறந்த நாள்

தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாஹிப் அவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னால் தலைவர் சந்தனத்தமிழ் வித்தகர், சிந்தனைசெம்மல், சிராஜூல் மில்லத் என்றும் நம் நினைவில் வாழும் A.K.A.அப்துல் சமத் சாஹிப் அவர்களின் 90 வது பிறந்த நாள் இன்று (04-10-2015).
மறைந்த தலைவர் அவர்கள் இரண்டு முறை பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினராகவும், மேல் அவையில் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவ்வாறே தமிழ்நாடு சட்டபையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் மக்கள் பணியை சிறப்புற ஆற்றி இருக்கிறார்கள். தமது அரசியல் வாழ்வில் சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்லாது எல்லா தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுத்து இந்திய இறையான்மையை, சகோதரத்துவத்தை மற்றும் சமயசார்பின்மையை காக்க அயராது போராடிய பெருந்தகை என்றால் மிகையில்லை.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றவர்களிடம் இவர் கொண்டிருந்த நெருக்கம் சமுதாயத்திற்கு பல பலன்களை பெற்றுத்தந்தது. தமிழக அரசியலிலும் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றா எல்லா ஆளுமைகளோடும் அரசியல் நடத்தியவர்.
இவரது சொற்திறம் எல்லா தரப்பினராலும் சிலாகித்து பேசப்படும் உயரிய ஈர்ப்பிற்கு சொந்தமானது. இவரது அரசியல் நாகரீகம் அன்பும் தோழமையும், கண்ணியமும் நிறைந்தது.
திருக்குரானின் தமிழாக்கத்தை தங்கள் தந்தையார் மொழி பெயர்த்துச் சொல்லச் சொல்ல அதை தமது சிறுவயதிலேயே தமது பிஞ்சுக் கரங்களால் எழுதியவர் என்ற சிறப்பையும், அரேபிய அரசாங்க சிறப்பு விருந்தினராய் சென்று புனித காஃபாவெனும் எனும் இறையாலயத்தை தங்கள் கரங்களால் கழுவியவர் என்ற சிறப்பிற்கும் சொந்தக்காரர்.
மேலும் பலவித அறிவு ஞானத்திற்கு சொந்தக்காரர். அத்தகைய மாமேதையின் ஆன்மா எல்லா சிறப்பும் பெற இந்நன்னாளில் போற்றி துஆ செய்வோமாக.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 செப்டம்பர் 2015

வெல்வோம் என்ற நம்பிக்கை

காலையில் எழுப்பிவிட்ட
அழைப்பு மணி 
அவ்வளவாக நல்லச்செய்தியை சொல்லவில்லை.
ஆயினும் பரவாயில்லை
இரவு விடிந்ததையும்
எழும்பவேண்டிய நேரம் தாண்டிவிட்டதையும்
உணர்த்தியதற்கு நன்றி சொல்லி

வெல்வோம் என்ற
வேட்கையிலும் நம்பிக்கையிலும்.

மீண்டும் போராட்டக்களத்தை நோக்கிய
வாழ்க்கைப்பாதையில்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உதவி அண்மையில்

எதிர்பாராத நெருக்கடிகளிலும் நமக்கான உதவி அண்மித்தே இருக்க்றது. அவ்வாறான நேரங்களில் நெஞ்சம் துவளாமல் கொஞ்சம் துடிப்புடன் இருந்தாலே அதை நாம் கண்டு கொள்ளலாம். நலங்களின் பாலத்தை நாமே கட்டமைக்க முதற்கல் எடுத்து வைக்க வேண்டும்.. உலகம் உதவிகளால் சூழப்பட்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 செப்டம்பர் 2015

பழங்களைப் பெற்றுச்சொல்லுங்கள்.

பக்கத்திலிருந்து பார்க்கிறார்கள்
அதனால் அவர்கள்
நன்றாகவே அறிவார்கள்
எங்கள் தோட்டத்தில்
விதைத்ததும்.. 
முளைத்ததும்..
வளர்வதும்...
கனிமரங்கள் தானென!
ஆனாலும் வெளியே சென்று
வினோதக் கூச்சலிடுகிறார்கள்
அவன் விசச்செடியை
விவசாயம் செய்கிறான் என்று.
பிரச்சனை இல்லை
வாருங்கள் அறுவடைக்காலத்தில்
கூடை நிறைய
பழங்களை தருகிறோம்
பெற்றுச்சொல்லுங்கள்.
-முஹையத்தீன் பாட்ஷா
காலை 10.38
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 செப்டம்பர் 2015

அவசரம் ஏன்..?

ஏன் அந்தக் கவிதையை 
அத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
*
பரபரப்புடன் அந்தக்கவிதையை
அப்படிப் படிக்க என்ன தான் அவசியம்?
*
ரசிக்க மறந்து அவசர அவசரமாய்
பசிக்கு திணிக்கும் உணவைப்போல
அந்தக் கவிதையை படிப்பதில்
உன் உணர்வில் உன் சுயத்தில்
என்ன தான் நிகழ்ந்துவிடப்போகிறது?
*
இங்கனம் அந்தக் கவிதை புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே
*
மரியாதையாய் வைத்துவிடு
இல்லையேல் உடன் அதை தீயிலிடு.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மாபெரும் எடுத்துக்காட்டு

பரிபூரண பேரிறிறையின் ஞானச் சுடர்கொண்டு இருபத்து மூன்று ஆண்டுகளில் தனியொருவராய் நின்று இந்த தாரணியையே மாற்றமுடியும் என்றும், தனிப்பட்ட ஒருவரின் குணநல மேம்பாடு எப்படி ஒரு சமூகத்திற்கே எடுத்துக்காட்டாய் அமைந்து அதை அறவழியில் கட்டமைக்க அதுவே வழிவகுக்கும் என்பதை மெய்பித்த மாபெரும் வரலாற்று எடுத்துக்காட்டு தான் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 செப்டம்பர் 2015

சில பேருக்கு சில...!



சில பேருக்குச் சில..!
*****************************

சில பிஞ்சு மாணவர்களுக்கு..
பள்ளி செல்வதை நினைத்தாலே... -அந்த
ஆசிரியரின் கோபமும் கொடுமையும் 
மனசெல்லாம் ஒருவித அச்சமாய் பரவி உருக்கும்;
படியேறும் போதே பதற்றம் சூழும்
பாடத்தைத் விட பயமே பற்றிக் குலைக்கும்!

*
சில அலுவலர்களுக்கோ...
தங்கள் அலுவலகம் பற்றி நினைத்தாலே
வேலைச்சுமையும் மேலாளரும் தான் கண்முன்,
இரவெல்லாம் தூக்கம் வராது
நெஞ்செல்லாம் நெய்யூற்றியது போல் எரியும்
என்ன சொல்வாரோ.. ஏது நடக்குமோவென்றே 
மீண்டும் வேலையில் மட்டும் மனம் லயிக்காது!

*

அதுபோலவே..

சில கணவன்மார்களுக்கும்
எல்லா வேலைக்குப்பின் இன்றும்
வீடுக்கு திரும்பிப்போய்த்தான் ஆகவேண்டும்
வீட்டிலிருக்கும் பேயோடு போராடியேத் தீரவேண்டும்
என்பதை எண்ணினாலே ஜன்னிகண்டுவிடுகிறது
விரக்தியின் வீதிகளில் சோர்ந்து சரிந்து
ஆற்றாமைக்கு ஏதுமிலாது விதிசெய்த சதியை நொந்து
நிர்பந்தத்தின் அழுத்தத்தால் 
தன் வீட்டிலேயே தான் நுழைவான் மனமில்லாது! 

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


02 செப்டம்பர் 2015

காலக்குதிரையின் முதுகில் !



ஒன்று போக
பிரிதொன்று..
இதை முடித்தால்
மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்று! 

அங்கே போ..
அடைந்துவிட்டால் பின்
இங்கே செல்!
ஆதுவும் எய்தினால் மீண்டும் ஓடு
வேரெங்கவது
ஓடு… ஓடு.. ஓடு…!

அயர்ச்சியின் மிகுதியில்சோர்வா..
இருந்தாலும் ஓய்வெல்லாம் கூடாது
ஓடு.. ஓடிக்கொண்டேயிரு..!

பிறகு..
எங்கோ சில புள்ளிகளில்
கொஞ்சம் பெருமூச்சு வாங்கும்;
அங்கும் சிறு ஆசுவாசம்
மட்டும் தான் அனுமதி..!

பின்பும் தொடரும்
ஓடு… ஓடு… ஓடென்ற குரல்
முன்பு போலவே..!

ஒன்று போக
பிரிதொன்று
இதை முடித்தால் மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்றென...?

எதையுமே சட்டைசெய்யாது
அதிவேகமாய்
நீண்டு நகர்ந்திடும்
காலக்குதிரையின்
முதுகில் நாம்!

குதிரையே ஓரு நாள்
நம்மை இடறி சாய்த்துவிட்டு
ஓட்டம் தொடரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

31 ஆகஸ்ட் 2015

எமகாதகன்


"அடடா அவன் என்னமாய் பணிகிறான்...!
அடடா அவன் என்னமாய் குனிகிறான்...!
அடடா அவன் என்னமாய் புன்னகைக்கிறான்...!
அடடா அவன் என்னமாய் அன்பொழுக கதைக்கிறான்...!"
என்றேன்.

"ஐயோ! 
இல்லை.. இல்லை...இல்லவே இல்லை!!!

அவன் பணிகிறானுமில்லை..!
அவன் குனிகிறானுமில்லை..!
அவன் புன்னகைக்கிறானுமில்லை..!
அவன் அன்போழுக கதைக்கிறானுமில்லை..!

எல்லாம் நடிப்படா..
எமகாதகன் அவன்!
அங்கனமதை உண்மையென நினைப்பதுவோ
உன் பத்தாம் பசலித்தனமன்றி வேறில்லை!
அதையெல்லாம்குறித்து
வருத்தப்பட நேரமுமில்லை!

நெஞ்சில் வஞ்சகத் தீகுண்டம் எரிய
அழகாய் மயக்கி அமுதம் தெறிக்கச்சிரிக்க
அவனுக்கு மட்டுமே தெரியும்!

தீய சக்தியை பார்க்காதவர்கள்
அவனைப்பார்த்து பாக்கியமெய்தலாம்
அப்படி ஒரு அற்புத பிறவியவன்

பிழைக்கத்தெரிந்து பவனிவந்துகொண்டிருக்கும்
பிணியவனை குறித்து 
பிழையாய் கருத்து கொண்டிருக்கிறாய்

ஏனோ.. நீ 
இன்னும் திருந்தவே இல்லை 
வெளுத்ததையெல்லாம் பாலென்கிறாய்;
உலகை அறி..உலகோர் புரி!
மனிதர்களில் அவன் 
மனிதன் போலத்தானேயன்றி வேறில்லை"
என்று சொல்லிச் செல்கிறார்
நிழலை மட்டுமே காணமுடிந்த அவர்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 ஜூலை 2015

படத்திற்கான துளிப்பா




"பல்லில்லா நமக்கு அரிசி கூழாகும் கல் செரிக்காதுல்ல.. பாத்து பொறுக்குய்யா!"

மனைவியின் கூவலோடு சேவலும் சேர்ந்து கொண்டது,

கெக்! கெக்..கெக்கோ...!!!





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஜூலை 2015

எங்கே..? மாண்பாய் இருந்த நோன்பு


(நோன்பு வைத்ததும்.. துறந்ததும்...
   ********************************************
இரண்டு மூன்று மணிநேரமே உறங்கினாலும்
அலாரம் அடிக்கும் முன்னே
எழுந்திருத்த சஹர் நேரம் எங்கே..?
பிரம்மமுகூர்த்தத்தின்
சுத்தமான ஓசோன் வாடையை
மொத்தமாக சூவிகரிக்கச்செய்த
முழுமாத தவம் எங்கே..?
அதிகாலை இரம்மியத்தை
துதிபாடி பருகச்செய்த
தூயப்பொழுதுகள் எங்கே..?
குறைவாக உறங்கி எழுந்தாலும்
புத்துணர்வு பூரித்திருந்த
இரவுச்சமயலின் இதம் எங்கே
அது தந்த அலாதி ரிதம் எங்கே
கடைசியாய் குடிக்கும் நீர்துளி எங்கே
நிய்யத் தென்னும் நோன்பின் எண்ணம்
கொடுக்கும் நிரந்தர இன்பம் எங்கே..?
இப்தாரின் உதடுகள்
இறைவனைப்புகழ்ந்து
முதலில் தேடும்
முதிர்ந்த பேரித்தங்கனிகள் எங்கே..?
இழந்த பலத்தை இலகுவாக மீட்டுத்தந்த
இனித்த பழங்கள் எங்கே..?
தாகித்த குடல் தணித்த
குளிர் பானங்கள் எங்கே..?
நெஞ்சம் குளிர நாக்கில் பட்ட
நோன்புக்கஞ்சி சுவைச் எங்கே..?
வயிறுக்குகந்த கடல்பாசி எங்கே..?
வாசமான சமூசா பஜ்ஜிகள் எங்கே..?
வறுக்கும் மணம் மயக்கும் மனம்
முந்திரி திராட்சை மிதந்த வர்மிசல்லி எங்கே..?
விரும்பி உண்ட அரீஸ் வகைறாக்கள்
அரேபிய உணவுகள் திரும்பிய திசைதான் எங்கே..?
இத்தனையும் கிடைத்தாலும்
எல்லாவற்றிலும் இன்பம் நல்கும்
அந்த கடைசி நேர காத்திருப்பின்
இஃப்தார் ஆவல் எங்கே..?
பதிநைந்து மணிநேர நோன்பிற்க்கு
பாசத்தின் தாய்கரமாய் ஊட்டவரும்
பாங்கோசை தரும் பரவசம் எங்கே..?
இவையெல்லாம் பெற இன்னும் ஓராண்டு காத்திருப்போம்
இறையருள் நம்மை மீண்டும்.. மீண்டும் மீட்டுத்தரட்டும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈகைத்திருநாள் கவிதைகள்




தூக்கத்தை உடைத்து
தூய்மையை பலப்படுத்தி இருந்தோம்
இரெவெல்லாம் பகலாய் இருந்தது
உழைப்பும் களைப்பும் பகலாய் இருந்தது
கட்டுப்பாடுகள் நம்மை அறியாமலேயே
நம் கட்டுக்கோப்புகளாயிருந்தது
வேதரீங்காரமும், அருளுரைகளுமே
அன்றாட வாழ்வாய் ஆகியிருந்து
பார்வைகளில் அருளும் குளிரும்
பரிவும் பணிவும் பரந்துகிடந்தது
செவியும் உணர்வும் புவியில் சிறந்ததில்
குவியும் சிந்தனையோடு நிலைத்திருந்தது
கரங்களில் இரக்கச் சுரங்கங்கள் சுரம்பாடி
ஏழைகளை அணைத்துக்கொண்டிருந்தது
பிறருக்காகவும், பிசகருக்கவும்
எட்டுக்கள் வைத்து எட்டியமட்டும் நடந்தது கால்கள்
நகர்ந்துவிட்ட நாழிகைகளும்
தேய்ந்துவிட்ட ரமலான் பிறையும்
பெருநாள் கொண்டாட்டங்கள்
புத்தாடைகளோடு
பிரிய உணவுகளையும்
பிரியாணியையும் தந்துவிட்டு
ஏனோ துடைத்து எடுத்துச்சென்றது
அத்தனை அருமைகளையும்!

*****
ஏதோ சூழ்ந்திருந்த தெய்வீகம் ஒன்று...
நம்மோடிருந்த விண்வளையம் ஒன்று... 
இலயித்திருந்த அருள்சூழல் ஒன்று...
நீங்கி விலகிவிட்டதாக இப்போதைய உணர்வு
ரமலான் சென்றுவிட்டதோ!

*****

பகலெல்லாம் நோன்பிருந்தோம்
பசியே ருசியாய் இருந்தது
நீ சென்றபின் மீண்டும் பழைகுருடி கதவைத் திறந்தாள்
சாப்பாட்டு மூட்டையை சுமந்து திரிகிறோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 ஜூலை 2015



இளங்காலை பனிப்பொழிவில்
குளித்துவிட்டு தலையை
துவட்டியும்... துவட்டாமலும்
சிரித்து நிற்கும் புதுமலர்களை
வழியில் பயணிக்கும் மூர்கனொருவன்
வெறிகொண்டு சிதைக்கிறான்
சிரித்தவண்ணமே சிதையில் வீழ்க்கிறது
புதுமலர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

28 மே 2015

எப்போது தான் இருப்பாயோ வெறுமனே ?



ஓய்வில்லாமல்
எதையாவது செய்துகொண்டிருப்பதே
உனக்கு வேலையாய் போய்விட்டது!
ஏ மனமே!
எப்போது நீ
ஏதும் ஓதாமல்
ஏதும் மோதாமல்
ஏதும் எண்ணாமல்
ஏதும் உண்ணாமல்
ஏதும் பாராமல்
ஏதும் சாராமல்
ஏதும் சோராமல்
ஏதும் சொல்லாமல்
ஏதும் கேளாமல்
ஏதும் கொல்லாமல்
ஏதும் துள்ளாமல்
ஏதும் துவளாமல்
ஏதும் விம்மாமல்
ஏதும் விலக்காமல்
ஏதும் நினைக்காமல்
ஏதும் பணிக்காமல்
ஏதும் விதைக்காமல்
ஏதும் ரசிக்காமல்
ஏதும் புசிக்காமல்
ஏதும் நசுக்காமல்

 இருப்பாயோ வெறுமனே ?

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

23 பிப்ரவரி 2015

என் தாய்மொழி அருந்தமிழ்!!!





தாயவள் மட்டுமே
நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள்
தன் உயிரிருக்கும் வரை!

தாய் மொழியால் மட்டுமே
நம்மால் நினைக்க முடியும்
எதையும் நம் உயிரிக்கும் வரை!
அவசாரத்தில் அழைக்கும்போது
அந்நியமொழி கைகொடுக்காது,
அன்னை மொழிதான்
அநிச்சையாய் வரும்!

நமக்குள் நாமே பேசிக்கொள்ள
ஊருக்காய் கற்றிருக்கும்
உறுகாய் மொழிகள்
ஒத்தே வராது!

“மம்மீ” என்று அழைப்பதற்கும்
“அம்மா” என்று அழைப்பதற்கும்
என்ன வேறுபாடென்று
உங்கள் ஆன்மாவிடம் கேட்டுப்பாருங்கள்!
உயிரற்ற அழைப்பாய் தான்
அம்மாவிற்கு முன்
உங்கள் மம்மீகள் என்று
ஆன்மாவே சொல்லும்!

மனநிறைவு வேண்டுமானால்
ஒருமுறை மம்மீ விட்டு
அம்மாவிடம் தாவிச்சென்று பாருங்கள்
திருத்தமாய் ஒருமுறை
தமிழால் தாயை அழைத்துப்பாருங்கள்
மனசெல்லாம் மகிழ்வீசும்!

ஆங்கிலத்தில் அழுது புலம்பினால்
மனசின் சோகம் இறங்காது
வடமொழியில் “ஹர ஹர ஓம்” போட்டாலும்
பக்தி முக்தி பெறவே பெறாது
மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு
என்னதான் டான்ஸ் ஆடினாலும்
நம்ம ஊர் தமிழ்ப் பாட்டில்
மனம்சொக்கும் மயக்கம் வரவேவராது!

அந்நிய மொழி
வாழ்க்கையின் பாதையில்
பாதியில் ஒட்டிக்கொள்ளும்
பணம் புகழ் அலங்கார ஆடைகள் மாதிரி,
பணம், புகழ், அலங்காரங்கள்
எது பிரிந்தாலும்…..
பிணமாகும் வரை
பிரியாதது உள்ளத்தின் தாய் மொழி!
ஏனென்றால் தனிமையின்
தோழன் தாய்மொழி தான்!

தாய்மொழி
பிறப்போடு பிணைந்து கொள்வது!
இறப்பாலும் இறக்காதது
மொழிந்து விட்ட தாய்மொழி!

பொதுவான தாய்மொழிக்கே
மேற்கண்ட பெருமையெனில்
எல்லாவற்றிலும் மேலான
என் தாய்மொழி,
உலகமொழியின் தாய்மொழி எனும்போது
என்னை விட பேறுபெற்றவன் யார்?

வாழிய வாழியவே!
என் தாய்மொழி
அருந்தமிழ்!!!

இன்று "உலக தாய்மொழி தினம்" என தம்பி அசோக் குமார் என்னை கவிதை எழுதச் சொல்லியிருந்தார். அவசரத்தில் இதை எழுதினேன் இன்னும் சரிசெய்ய நிறைய உள்ளது.
— with அசோக் குமார்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 பிப்ரவரி 2015

வேண்டிய மட்டும் இழந்து...!


எல்லைகளற்ற வானம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்திய 
கணத்தை நினைத்துப்பார்!
ஏதுமற்ற ஒன்றினை எண்ணத்தால் நிர்ணயிக்க 
எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியை கண்டனவே..!
அந்த பரந்து விரிந்த தாத்பரியத்தின் விசாலத்தில் 
வா!.. நாமும் கலக்கலாம் என்றேன்,
ஆனால் நீயோ கூடாரத்தின் கூரை அளவு போதுமென்கிறாய்
நான் வெட்டவெளிக்கு சொந்தக்காரன் என்னை விட்டுவிடு!



பேராழி நமக்கு ஏற்கனவே காட்டப்பட்டிருக்கிறது
பேராழி குறித்து நாம் நிறைய விவாதித்திருக்கிறோம்
ஆனாலும் ஏதோ ஒரு பயத்தால் நீங்கள்
அந்த குளத்திற்கு போவதையே விரும்புகிறீர்கள்.
என்ன செய்ய! உங்களோடு நான் வரப்போவதில்லை,
பேராழியில் வேண்டிய மட்டும் இழந்து லயிப்பேன்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 பிப்ரவரி 2015

ஒரு பத்திரிக்கைகாக


இன்பம் பொங்கும் இனிய மாலைப்பொழுதில்
இனியத் தமிழ் தென்றல் வெளியீட்டுவிழா
இதயமெல்லாம் உற்சாக வெள்ளத்தில்...
உதயமாகும் இப்பொழுதை நினைத்து,

ஆம்..!

துபாய்க்கு அய்யா வந்தார்,
உணர்வுகளுக்கு வடிகால் வேண்டும்
உருப்படியாய் ஒர் தமிழிதல் வேண்டும் என்றார்
பொதுவாய் கூறிய அவரின் வார்த்தை
புகுந்தது உன் நெஞ்சில் மட்டும் தான் - அவர்
ஆதங்கப்பட்டு சொன்ன போதே-நீ
பற்றிக் கொண்டாய்
சிக்கி முக்கியாய் இருந்ததனால்!-ஆனால்
ஒன்று மட்டும் சொல்வேன்
அய்யா வந்ததனாலெல்லாம்
நீ ஆசிரியராக வில்லை
இந்த எண்ணம் ஆழ்மனதில்
தோன்றிய போதே
ஆசிரியராகிவிட்டய்.

தமிழ்த்தென்றல் இதழ் விரிய -அது
மொட்டானதிலிருந்து
நீ செய்த குதிரைச்சவரியில்
எத்தனை குலுக்கல்கள்..
நீ சோர்ந்து வரும் சில நேரத்தில்
உற்சாக வார்த்தை ஒன்று உதித்தால்
ஊதிவிடுவாய் பட்டதையெல்லாம்.

நீ....!
கெஞ்சுபவர்களிடம் கெஞ்சுவாய்
கொஞ்சுபவர்களிடம் கொஞ்சுவாய்
அலுவலகப் பணியும் இருக்கும்-இடையே
அலையவேண்டியப் பணியும் இருக்கும்.

நீ....!
ஐந்து நிமிடத்தில் ஆயிரம் யோசிப்பாய்
காதலன் கூட தோற்றுப்போவான்-நீ
பைத்தியம் பிடித்தவன் போல்
பத்திரிக்கை..பத்திரிக்கை என்றே
மஜ்னூன் ஆனாய்.

நீ....!
பேனாவும் கையுமாவே திரிந்தாய்!
பேசப்படவேண்டும் என்றே
யோசித்து யோசித்து எழுதினாய்!

நீ....!
உன்னோடு எப்போதும்
கையில் பணம் வைத்திருப்பாயோ என்னவோ!
எப்போதும் பை வைத்திருப்பாய்-அதில்
பத்திரிக் கை வைத்திருப்பாய்.


இத்தனை நாட்கள் எத்தனை சஞ்சிகை-உன்
கட்டிலோடு  குடும்பம் நடத்தியது
அவைகளெல்லாம் வெள்ளோட்டம் தான்.
இன்றே நீ சாந்தி முகூர்த்தம் கண்டிருக்கிறாய்.


நீ....!
அயர்ந்து வருவாய்
ஐந்து நிமிட ஆசுவாசம்
அது போதுமென
உடன் எழுவாய் உலகில் கலப்பாய்.


உன்னை விட ஒருவர்
பெண்ணை வர்ணித்து விட முடியுமா!
அடேயப்பா..!
நான் சொல்லுவது- இங்கே
பத்திரிக்கைப் பெண்ணை
எப்படி யெல்லாம் சிங்காரித்து
கர்பனையில் வர்ணம் பூசி வர்ணிப்பாய்


உனக்கு தூக்கமே இல்லை - ஆனால்
அதிகம் கனவு கண்டாய்
உனக்கேற்பட்ட தாகம் தான்
உன்னை தடாகமாக மாற்றியிருக்கிறது.

இதில் நீ..!
பிரசவ வேதனையை விட
அதிகம் பட்டாயோ வென
எண்ணத் தோன்றுகிறது!


இவை யாவும் உனக்கான
புகழ் மாலை யல்ல!
ஓர் தாய்ப்பறவை தன்
எண்ண முட்டைகளை
வண்ணக் குஞ்சுகளாக
பொறிக்கப் பட்ட பாடு- இதற்காக
நீ அடித்த கரணங்களையே
எழுத்தாக்கி யிருக்கிறேன்.


நீ....!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
இது பழமொழி! - இங்கே
தளகர்த்தரே உன் தம்பி தானே!
இளைஞர் மலரிலிருந்து-துபாயின்
இங்கிலீஷ் பேப்பர் வரை
அவர் புகழ்!

அங்கே ஓர் அய்யா,
இங்கே ஓர் அன்வர்,
வலது இடதாக இனியவன், இஸ்மத்
கவுரவ வேடத்தில் பாரத்-இன்னும்
எங்கள் பீர் முதல் பிரபலங்கள் வரை
இருக்கும் போது
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்!

நீ....! கூட
புயலாகத்தான் இருந்தாய்
பத்திரிக்கைக்கு பெயரை வைத்து விட்டு
நீயே மாறி விட்டாய்
தென்றலாக!

அதனால்-இது
படிப்பவரையும் தாலாட்டும்
கருத்தில் தாய்ப் பாலூட்டும்
நீங்களும் தென்றலாக வேண்டுமா?
உங்கள் கையிலும் தென்றல் இருக்கட்டும்.-இது
வாழப்பிறந்த உங்களுக்கு துணையாகட்டும்
தமிழ்த் தென்றல் வாழ்க! வெல்க!!

மனம் நிறைந்த வாழ்த்துடன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

(மனிதர்களின் தரம் பார்த்தப் பிறகு ஏன் எழுதினோம் என நொந்த கவிதை..)
2006 என நினைக்கிறேன்.

கனியார் நூர் முஹம்மத்

இரங்கற்பா: 
அழகாய்ச் சிரித்த வதனமது
நிலையாய் நின்றதெம் நெஞ்சினிலே

பழகும் விதத்தில் அவர்போலே
பண்பாளர் இங் கேதம்மா...

சூரியன் எழும்முன் தாமெழுந்து
தினமும் சுப்ஹை  தொழுதிடுவார்

முறையாய் விருப்பொடு மறைவிரித்து
மணமே கமழ ஓதிடுவார்

பறவை சிறகை தாம்விரித்து
பற்பல விடங்கள் பறந்திடுவார்

ஆர்வத் தோடு அலுவலகம்
சென்றே பணிகளில் தமைமறப்பார்

எறும்புகள் கூட சுறுசுறுப்பை
இவரிடம் கற்றால் நலமாகும்

இத்தனை வயதிலும் இளங்கன்றாய்
எதிலும் துணிந்தே நின்றாரே

நல்வைர மொன்றை மருமகராய்
நல்லவன் அளித்த அருளதனை

நலமே பேசிநா ளெல்லாம்
உளமே என்றும் குளிர்ந்தாரே

அருள் நேசர்அவ்ன் நாதரை
ஆத்மீக குருவாய் ஏற்றாரே

அழகிய பாதையில்தாம் சென்று
அமைதி அகமதில் பெற்றாரே

சோபனம் இங்கே நிறையப்பெற்று
இறைவன் அழைப்பிற்கு தயாரானார்

கண்ணியமாக வாழ்ந்தி ருந்த
கனியார் நூரு  முஹம்மதவர்

கண்ணிமை மூடி அமைதியுடன்
காவலன் அடிதனில் சேர்ந்தாரே

இறையவனே யாம் இறைஞ்சுகிறோம்
இனிய சுவர்க்கப் பதவிக்காய்

சுகமாய் அவர்தமக் கருள்வாயே
சுந்தரர் நபிகளின் பொருட்டாலே

அன்னாரின் ஆத்ம சாந்தியை ஏக இறையிடம் இறைஞ்சி அப்போது எழுதியது.

இறந்த வருடத்தை கேட்டு பதிக்க வேண்டும்.. 2006 என நினைக்கிறேன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உலவிய வெண்புறா




இரங்கற்பா: 
வஹாப் பாப்பே!
ஸய்யித் நீங்கள்
வம்சப் பாரம்பரியத்தில்,
ஸய்யிதாகவே இருந்தீர்
ஊருக்கெல்லாம் நீங்கள்!
வெண்புறா மாதிரி உலாவிய
உங்களின் இதயம் நின்ற செய்தியால்
எங்களின் இதயமும் அதிர்ந்து நின்றது

ஓவ்வொரு *மிஃராஜிலும்
நினைக்க வைத்துவிட்டீர்களே
பதினாலாம் பிறையில்
ராத்திப்கிதாபின் ஒவ்வொரு எழுத்தும்
உங்களைத்தேடுமே..
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

மென்மையான ஆளுமை
தண்மையான சுபாவம்
எல்லோரையும் சிறை செய்த அன்பு
உயர்ந்த குணங்களால்..
உயர்ந்த மனிதர் நீங்கள்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

தெளிந்த அறிவினோர்
சிறந்த சிந்தனையாளர்
கீர்த்திமிக்க செயல்வீரர்
நேர்த்திமிக்க அழகினர்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,


எங்களோடு இணைந்து
சுக துக்கங்களை
சுவீகரம் செய்து கொள்வீர்களே!
எங்கள் நெஞ்சம் தேடும் முன்பே
கண்களுக்கெதிரில் காட்சிதருவீர்களே

இன்னும்..
உங்களின் அனுபவ பழங்களை
சுவைக்க இருந்தோமே
தவிக்கவிட்டுவிட்டீர்களே!
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

சூஃபியாய் சுன்னத் ஜமாஅத்தில்,
மூத்ததலைவராய் முஸ்லிம்லீக்கில்,
முத்தான முத்தவல்லியாய்
முஹ்யுத்தீன் ஆண்டகையின்
பள்ளிவாசலில்..
சில தருணங்களில் தந்தையாய்
சில தருணங்களில் விந்தையாய்
சில தருணங்களில் அன்பராய்
சில தருணங்களில் நண்பராய்
எங்களுக்கெல்லாம்..
உங்களைப் போல் யார் இனி,

குருநாதராய் அவ்ன் நாதரை
திருவுளத்தோடு ஏற்று
சபைதனில் தலைவராய்
அவைநிறை அழகு சேர்த்தீர்
சபைக்காய்..,
பேழைக்காய்..,
மதுரஸாவிற்காய்..,
ஆற்றிய சேவைக்களுக்கெல்லாம்
நிறை சாந்தியோடு
நித்திய ஜீவிதம் அருளி
ஏற்றி வைத்திடும் உங்களை
ஏகம் என்னாளும்.




*வஹாப் பாப்பவர்கள் சென்ற மிஃராஜ் இரவு இறையெய்தினார்கள் 2008, ஆகஸ்ட் மாதம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தூங்கக்கூடாத இரவு


அறிவைப் பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு..!
ஆண்டவனை அடைவதில் தூங்காது விழிப்பாயிரு!!
முக்திநிலை பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு!!!

இரவென்பது இருள் போர்த்தியது!
இருளென்றால் ஒளியில்லாத நிலை!
ஒளியில்லாத நிலையினில் தெளிவிருக்காது!

தெளிவென்பது வேண்டுமெனில் ஆங்கே
அறிவொளி ஏற்ற இருள் தானே விலகும்
ஒளியிருந்தால் எதற்குமே வழியறியலாம்!

ஆனதினால் தானே முன்னவர்
இரெவெல்லாம் விழிக்கப்பணித்தனர்
சிவராத்திரியென்று!

எல்லாமே ஆன்மீக பயிற்சி தான்.
எல்லாமே சொல்லாமல் சொல்வது தான்.

ஈங்கே இரவெல்லாம் என்பதில்
பகலும் அடங்கும்!
உள்ளத்தின் இருள் விலகிவிட்டால்
இரவினிலும் பகல் நிலைக்கும்.

(நேற்றைய சிவராத்திரிக்காக முகநூலில் பதிந்தது)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எல்லா 
"வேறு"களுக்கும் 
"வேரு" ஒன்று தான்.
வேறு வேரென ஏது 
எல்லாம் ஒன்றினில் என்றான பின்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 பிப்ரவரி 2015

கொஞ்சம் *தசவ்வுஃப்!


தியானங்கள் சொல்லவருவது என்ன ?
தியானங்களின் பயிற்சிகள் எதற்கு ?
தியானங்களில் மூழ்குதலின் முடிவு எது ?

அது...
திண்ணமாய் நீ இல்லை,
நீ என்பது எங்கும் இல்லை
நீ என்பது எதிலும் இல்லை
நீ என்பது எப்போதும் இல்லை

இல்லாத நின்னை இழ!
நீயாய் இருக்கும் அனைத்தில் நின்னை இழ!
நீயே அதில் இல்லாமல் போ!
கரை.. கல.. இல்லாமல் போ

நீயே எல்லாமென நில்!
நீயே நித்தியம்!
நீயே சத்தியம்!
நீயின்றி வேறில்லை!
நீயின்றி வேறில்லை!
நீயின்றி வேறில்லை!

இருப்பதெல்லாம்.... தனித்த
நீயே.!.
நீயே.!!.
நீயே..!!!

என்பது தானே..
மூலமந்திரத்தின் மறைபொருள்!
இதில் நிலைக்க செய்வதும்
இதில் லயிக்க செய்வதும்
இதுவாகவே உணரச்செய்வதும்
இதுவாகவே ஆகச்செய்வதும் தானே
தியானம்!

-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

*தசவ்வுஃப் - மெய்ஞானம்
தியானம் - இறைவனை நினைவு கூர்தல் (திக்ரு செய்தல்)
மூலமந்திரம் - கலிமா (அரபியில்)

06 பிப்ரவரி 2015

பொழுதுகளில் சில!


சிலபொழுதுகள் நம்மை அறியாமலே
இன்பம் சூழ்ந்துகொள்கிறது
அந்தப் பொழுதுகளில் அடுத்தடுத்த
இன்பங்களால் நாம் திக்குமுக்காடுகிறோம்
எல்லோரிடமும் இன்முகம் காட்டுகிறோம்
எல்லோரிடமும் இன்சொல் கூட்டுகிறோம்
உடலெல்லாம் எல்லா அணுக்களிலும்
கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படுவதை
ஏதோ ஒரு சிலிர்ப்பு நமக்கு உணத்தாமல் இல்லை
பூரிப்பின் பூபாலத்தால் முகமெல்லாம்
ஜொலி ஜொலிப்பதை குழந்தையைப்போல
மகிழும் நாம் கண்டுணரலாம்
அப்பொழுது பல பட்டாம்பூச்சிகள்
முகத்திலும், முதுகிலும், தோல்பட்டைகளிலும்
ஏன் கழுத்தினில் கூட இடைவெளியின்றி வந்தமர்ந்து
மென்பட்டால் மெய்மறக்கச் செய்கிறது
மனதினில் ஒரு நறுமண பூ மலர்கிறது
குளிர்கால அந்திப்பொழுதின் மென்காற்று வீசுகிறது.
அதைப்போலத்தான் நம்மை அறியாமலே
துன்பமும் சூழ்ந்து "கொல்"கிறது சில பொழுதுகளில்.
அந்த கணங்கள் பல ரணங்களை
கண்ணாடியாக காட்டி
இன்னும் இன்னும் நம்மை துயருறச் செய்கிறது
யாரிடமும் பேசத்தோணாத அந்தச்சூழலில்
யாரிடமிருந்தாவது ஓர் அழைப்பு வந்தால்
கொடூரத்தை தவிர நம்மால் எதையும் தரமுடிவதில்லை
நம் முகத்தையே கூட கண்ணாடியில்
பார்ப்பதற்கு பிடிப்பதில்லை
அந்த சனத்தில்
ஓர் கவிதை புத்தகம்
பார்த்து சிரித்திடும் மழலை
சில்லென்ற புல்வெளியில் ஒரு நடை
கடற்கரையில் அலை விளையாட்டு
பொத்தென்று தண்ணீல் தலையில் விழும் அருவிக்குளியல்
பவுர்ணமியோடு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் வானம்
இவற்றில் ஏதாவதொன்று தேவை - நம்மை
பனிக்கட்டியாய் உருகவைக்க!
மீண்டும் நம்மை மீட்டெடுக்க!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 பிப்ரவரி 2015

சாலையை கடக்கும் பூனை!



அந்தப் பூனை எதையோ
கண்டு மிரண்டு ஓட்டம் பிடித்தது

அந்த நேரத்தில் ஓட வேண்டுமா..
அப்படி ஓடுவது அங்கே மிகத்தேவையா
என்பதெல்லாம் அதற்கு சிந்தனைக்கே எட்டாத ஒன்று.

ஏதோ எலியை வேட்டையாடும் தருணத்தை யொத்த
அத்தனை ஆயத்தங்களையும் மேற்கொண்டு எத்தனித்தது
ஆனால் ஒரே சனப்பொழுதில்!

அதற்கு முன்னங்கால்கள் முதலிலா
பின்னங்கால்கள் முதலிலா என்ற சிறிய சந்தேகம்
ஊடுருவியே இருந்ததை
அந்தப் பூனை காட்டிக்கொள்ளவில்லை.

சரி, ஓட்டம் எடுக்கும் அந்தப் பூனை
ஆயத்தமாகும் முன்பு
அதன் உயிர் கேள்விக்குறியாக்கபடும் அளவுக்கு
அத்தனைக்கும் அது முட்டாளாய் இருப்பதால்
சாலையை இருமறுங்கும் பார்க்கவில்லை

விரண்டு வரும் வாகனத்தை
மிரண்ட பூனை பார்த்திருந்தும்
வாகனத்தின் வலிமை அறியாத அது
இருந்தும் ஓட்டம் பிடித்தது!

வாகனத்தின் சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரு புள்ளியில் சந்தித்தால் சிந்தப்போவது எது
அதன் உயிரா.. அதன் குருதியா
எது முதலில் என பார்க்கும்
யாரோவின் நெஞ்சு
படபடத்து அதிர்ந்தது..
பூனையின் மீது வைத்தக் கண் வாங்கவில்லை!

இதே புள்ளியில் இப்படி சந்தித்து தான்
இதே பூனையில் சந்ததியில் வந்த பல பூனைகள்
சின்னாபின்னப்பட்டு உயிர் பறந்திருக்கிறது!
அப்படித்தான் நாமுமா என்று கணம் அது
சிந்தித்ததா என சாலையோரத்தில் நின்ற
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரே புள்ளியில் சந்தித்த போது
சாவின் கயிற்றை வீசி எமன்
பூனையின் முன்னே எருமையில் நின்றான்

இந்தப்பூனை ஏதோ ஒரு அருள் பெற்றிருக்கிறது
புலியின் வாரிசுகள் தான் பூனையும் என்பதை
அதன் சாவின் நுனிச்சனம் உந்தி அழுத்தி யாபகப் படுத்த
நொடிக்கும் குறைவான பொழுதில்
குபீரென பாய்ந்து சாவின் புள்ளியை
சாவில் தள்ளப் பார்த்தது.

ஆயினும் லட்சத்தின் ஒரு பகுதியில்
அந்தப்புள்ளியில் பாய்தல் சற்று தாமதப்பட
அகப்பட்டுக்கொண்ட வாலின் மிக நுணி
சக்கரத்தில் மாட்ட
உயிர் மீண்டும் கடைசி நேர சர்ச்சைக்குள்ளானது.

வாலறுந்தாலும் பரவாயில்லை நான் வாழனும் என
பூனை நினைத்தச் சனம் சக்கரத்திலிருந்து விடுபட்டது
பூனையின் உயிர்..

ஆபத்து நிறைந்த சாலையை மிகப் பயந்து பார்த்து
மீண்ட பூனை எங்கோ பதுங்கியது
மீண்டும் சாலையை கடக்கவேண்டும் என்ற கவலையில்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 ஜனவரி 2015

மதம் கடந்து தொடரும் ஈமானின் தொண்டுகள்



கத்தாரிலிருந்து ஊர் செல்லும் வழியில் துபை விமான நிலையத்தில் இறந்த கிருத்துவரின் உடலை ஊருக்கு எடுத்துச்சென்று உரியவர்களிடம் ஒப்படைத்தது துபை ஈமான் அமைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டு ஊரைச்சார்ந்தவர் சகாய சிங்கம் லிபோன்ஸி. இவர் கத்தாரிலிருந்து துபைவழியே கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டிரான்சிட்டில் ஊர் செல்ல இருந்தவருக்கு துபாய் விமானநிலையத்தில் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார், இறந்து போன சகாய சிங்கத்தின் உடலை எதிர்பார்த்து அவரது உறவினர்கள் மிகக்கவலையுடன் பரிதவித்து காத்திருக்க அவரின் உடலோ பிரேதக்கிடங்கில் கிடத்திவைக்கப்பட்ட நிலையிலேயேஇருந்தது, செய்தியறிந்தஅறிந்த துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளான செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணைச்செயலாளர் முஹம்மது தாஹா உடலை உறவினர்களுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினர்.
இதனிடையே இறந்த சகாயசிங்கத்தினைப் பற்றிய தகவலை துபாய் காவல் துறை இந்திய தூதரகத்திற்கு முறைப்படி தெரிவிக்க இறந்த உடலின் பிரேதப்பரிசோதனைத் தகவலைப் பெற்றுக்கொண்டு துபாய் மற்றும் இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் ஈமான் அமைப்ப்பினர் அதற்குரிய ஆவண நடவடிக்கைகளை முடித்து ஈமானின் துணைச் செயலாளர் தாஹா அவர்கள் மூலம் இறந்த சகாயசிங்கத்தின் இறந்த உடலும், அவர் கத்தாரிலிருந்து கொண்டு வந்திருந்த பேக்கேஜ் உடைமைகளும் கேரள கோழிக்கோடு விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு வந்த உறவினர்கள் உடலைக் கொண்டுச்சென்ற ஈமான் துணைச் செயலாளரிடம் “இன்று இந்த இறுதிச் சடங்கினைச் செய்ய எங்கள் கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேலுள்ளகுடும்பங்கள் வேலைக்கு கூட செல்லாமல் உடலை எதிர்பார்த்திருந்தோம்.எங்கள் உறவினரின் பிரேதத்தை உரிய நேரத்தில் கொண்டுவந்து எங்களுக்கு உதவிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
எனக் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் துபை அரசாங்கம், துபாய் காவல்துறை மற்றும் இந்திய தூதரகம் என அனைத்து தரப்பினரின் வலுவான ஆதரவே எங்களின் இந்த ஏழைகளுக்கான மதம் கடந்த மனிதநேய உதவிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தது. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் என இந்நிகழ்வு குறித்து பேசிய ஈமான் அமைப்பின் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.
துபாய் ஈமான் அமைப்பின் இது போன்ற தொடர்படியான தொண்டுகள் நிறைய பதிவதற்கும் பகிர்வதற்கும் இருந்தாலும் இதற்கு முந்தைய நிகழ்வாக துபாய் மருத்துவமனையில் ஐந்து மாதத்திற்கும் மேல் சுயநினைவிழந்து இருந்து பின் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலைத்தேறிய ஆதரவற்ற ஏழை நோயாளி பெரம்பலூர் துரைவீராசாமி என்பவரை அவரின் குடும்பத்துடன் சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா