18 பிப்ரவரி 2015

ஒரு பத்திரிக்கைகாக


இன்பம் பொங்கும் இனிய மாலைப்பொழுதில்
இனியத் தமிழ் தென்றல் வெளியீட்டுவிழா
இதயமெல்லாம் உற்சாக வெள்ளத்தில்...
உதயமாகும் இப்பொழுதை நினைத்து,

ஆம்..!

துபாய்க்கு அய்யா வந்தார்,
உணர்வுகளுக்கு வடிகால் வேண்டும்
உருப்படியாய் ஒர் தமிழிதல் வேண்டும் என்றார்
பொதுவாய் கூறிய அவரின் வார்த்தை
புகுந்தது உன் நெஞ்சில் மட்டும் தான் - அவர்
ஆதங்கப்பட்டு சொன்ன போதே-நீ
பற்றிக் கொண்டாய்
சிக்கி முக்கியாய் இருந்ததனால்!-ஆனால்
ஒன்று மட்டும் சொல்வேன்
அய்யா வந்ததனாலெல்லாம்
நீ ஆசிரியராக வில்லை
இந்த எண்ணம் ஆழ்மனதில்
தோன்றிய போதே
ஆசிரியராகிவிட்டய்.

தமிழ்த்தென்றல் இதழ் விரிய -அது
மொட்டானதிலிருந்து
நீ செய்த குதிரைச்சவரியில்
எத்தனை குலுக்கல்கள்..
நீ சோர்ந்து வரும் சில நேரத்தில்
உற்சாக வார்த்தை ஒன்று உதித்தால்
ஊதிவிடுவாய் பட்டதையெல்லாம்.

நீ....!
கெஞ்சுபவர்களிடம் கெஞ்சுவாய்
கொஞ்சுபவர்களிடம் கொஞ்சுவாய்
அலுவலகப் பணியும் இருக்கும்-இடையே
அலையவேண்டியப் பணியும் இருக்கும்.

நீ....!
ஐந்து நிமிடத்தில் ஆயிரம் யோசிப்பாய்
காதலன் கூட தோற்றுப்போவான்-நீ
பைத்தியம் பிடித்தவன் போல்
பத்திரிக்கை..பத்திரிக்கை என்றே
மஜ்னூன் ஆனாய்.

நீ....!
பேனாவும் கையுமாவே திரிந்தாய்!
பேசப்படவேண்டும் என்றே
யோசித்து யோசித்து எழுதினாய்!

நீ....!
உன்னோடு எப்போதும்
கையில் பணம் வைத்திருப்பாயோ என்னவோ!
எப்போதும் பை வைத்திருப்பாய்-அதில்
பத்திரிக் கை வைத்திருப்பாய்.


இத்தனை நாட்கள் எத்தனை சஞ்சிகை-உன்
கட்டிலோடு  குடும்பம் நடத்தியது
அவைகளெல்லாம் வெள்ளோட்டம் தான்.
இன்றே நீ சாந்தி முகூர்த்தம் கண்டிருக்கிறாய்.


நீ....!
அயர்ந்து வருவாய்
ஐந்து நிமிட ஆசுவாசம்
அது போதுமென
உடன் எழுவாய் உலகில் கலப்பாய்.


உன்னை விட ஒருவர்
பெண்ணை வர்ணித்து விட முடியுமா!
அடேயப்பா..!
நான் சொல்லுவது- இங்கே
பத்திரிக்கைப் பெண்ணை
எப்படி யெல்லாம் சிங்காரித்து
கர்பனையில் வர்ணம் பூசி வர்ணிப்பாய்


உனக்கு தூக்கமே இல்லை - ஆனால்
அதிகம் கனவு கண்டாய்
உனக்கேற்பட்ட தாகம் தான்
உன்னை தடாகமாக மாற்றியிருக்கிறது.

இதில் நீ..!
பிரசவ வேதனையை விட
அதிகம் பட்டாயோ வென
எண்ணத் தோன்றுகிறது!


இவை யாவும் உனக்கான
புகழ் மாலை யல்ல!
ஓர் தாய்ப்பறவை தன்
எண்ண முட்டைகளை
வண்ணக் குஞ்சுகளாக
பொறிக்கப் பட்ட பாடு- இதற்காக
நீ அடித்த கரணங்களையே
எழுத்தாக்கி யிருக்கிறேன்.


நீ....!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
இது பழமொழி! - இங்கே
தளகர்த்தரே உன் தம்பி தானே!
இளைஞர் மலரிலிருந்து-துபாயின்
இங்கிலீஷ் பேப்பர் வரை
அவர் புகழ்!

அங்கே ஓர் அய்யா,
இங்கே ஓர் அன்வர்,
வலது இடதாக இனியவன், இஸ்மத்
கவுரவ வேடத்தில் பாரத்-இன்னும்
எங்கள் பீர் முதல் பிரபலங்கள் வரை
இருக்கும் போது
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்!

நீ....! கூட
புயலாகத்தான் இருந்தாய்
பத்திரிக்கைக்கு பெயரை வைத்து விட்டு
நீயே மாறி விட்டாய்
தென்றலாக!

அதனால்-இது
படிப்பவரையும் தாலாட்டும்
கருத்தில் தாய்ப் பாலூட்டும்
நீங்களும் தென்றலாக வேண்டுமா?
உங்கள் கையிலும் தென்றல் இருக்கட்டும்.-இது
வாழப்பிறந்த உங்களுக்கு துணையாகட்டும்
தமிழ்த் தென்றல் வாழ்க! வெல்க!!

மனம் நிறைந்த வாழ்த்துடன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

(மனிதர்களின் தரம் பார்த்தப் பிறகு ஏன் எழுதினோம் என நொந்த கவிதை..)
2006 என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: