17 ஏப்ரல் 2016

தெறி - விமர்சனம்



பொதுவாகவே தெறிக்கு மிக்ஸிங் கமெண்ட்ஸ் தான் வந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலும் வரவேற்பு.. ஆனாலும் எப்போதும் போல விஜய் படத்தை கழுவி ஊற்றவேண்டும் என சிலர் கமெண்ட் போடவும் தவறுவதில்லை. என்டெயிண்மெண்ட்க்குன்னு போனால் பாத்துட்டு ஜாலியா வரலாம்.
படத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏழை குழந்தைகளை வதைத்து பிச்சையெடுக்க வைத்தல், கட்டிட காண்டிராக்டர்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதும் போதிய ஊதியம் கொடுக்காதும் ஏழை வேலையாட்களின் உயிரில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது, அதிகாரத்தில் இருப்பவர்கள் நிகழ்த்தும் கடத்தல் கற்பழிப்பு நிகழ்வுகள் என சில பல மெஸேஜ்களையும் மசாலாவுடன் கலந்து கொடுத்திருக்கிறார் அட்லி. விஜய்யின் வழக்கமான பன்ச் டயலாக், அது இதுவென எந்த எக்ஸ்ட்ரா ஐய்ட்டங்கள் எதுவும் இல்லை. படத்திற்கு தேவையானதை மட்டும் செய்யச்சொல்லி வேலை வாங்கி இருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக மீனா மகள் நைனிகா நன்றாக நடித்திருக்கிறார். சமந்தாவுக்கே படத்தில் வைட், எமிஜாக்சன் கருவேப்பிலை. மொட்டை ராஜேந்தர் படமுழுக்க கதையோடு ஒன்றிவருகிறார்.வில்லனாக வரும் டைரக்டர் மகேந்திரன் எதார்த்தமாக நடித்திருக்கிறார். ராதிகா அம்மா வேடத்தில்.
அட்லி கமெர்ஷியல் முன்னணிடைரக்டராக நிச்சயம் வலம்வருவார். படம் தொய்வின்றி ஓடுவது இயக்குனரின் வெற்றி. பாடல் காட்சிகளில் ஷங்கரை நியாபப்படுத்துகிறார். ஜிவியின் இசை படத்திற்கு பொருத்தம், பாடல் காட்சிகளில் யாரும் பாப்கார்ன், டாய்லெட் என எழுந்து போகவில்லை. படல்களில் தேவா பாடிய ஜித்து ஜில்லாடி மனதில் நிற்கிறது. மற்ற ஒரு பாடலை விஜய் பாடியதாக யாபகம்.
பார்த்தவகையில் தெறி நல்ல பொழுதுபோக்குப்படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம். பிள்ளைகளுக்கு பிடிக்கும், எங்கள் ஷோவிலும் நிறைய பிள்ளைகள். அம்மா சென்டிமெண்ட், அப்பா மகள் பாசம், கொஞ்சம் காதல்,கொஞ்சம் ரொமன்ஸ், அதிரடிசண்டைகாட்சிகள், யூசுவல் விஜய் காமெடி, டாண்ஸ் என எல்லாம் கலந்த கமெர்ஷியல் மசாலா படமாய் விஜய்க்கு புலி கொடுத்த தொய்வை தெறி சரிகட்டி இருக்கிறது,
அமீரகத்தில் மலையாளிகளின் மகத்தான ஆதரவோடு ஹவுஸ்புல். மேற்படி விமர்சனத்தால் என்னை யாரும் விஜய் ரசிகனென விபரீத முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 ஏப்ரல் 2016

சிரி

அகப்பூ மலர
முகப்பூ மலர்ந்தால்
இதழ்பூ விரிய
சிரிப்பூ பூக்கும்
எதிர்ப்படுவோர்
வெறுப்பு வீழூம்
எதிர்ப்பு தாளும்
இணைப்பு நிகழும்
பிணைப்பு இறுகும்
மதிப்பு உயரும்
மனிதம் மகிழும்
மகிழ்வே முகிழும்.
ஆதாலால் நாட்டீரே
சந்திக்கும் வேளையில்
முகமன் கூறி
முதலில் புன்னகைப்பீர்.


# பலபேர் அதுக்கு தா ரொம்பவே யோசிக்கிறாய்ங்க... ஏதோ நாம சிரிச்சு; அவன் சிரிச்சுட்டா.. ஐயோ அவனுக்கு சந்தோசமா போய்டுமே... வேண்டவே வேண்டாஞ்சாமி நான் சிரிக்க மாட்டேங்கிறான்.


30-8-15 ஊர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07 ஏப்ரல் 2016

அபுல்பரக்காத் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்



பிரபல இஸ்லாமிய பாடகர் நெல்லை எஸ்.எம். அபுல்பரக்காத் சமுதாயத்தின் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் முறைப்படி இணைந்தார். நன்றி : மணிச்சுடர் தமிழ் நாளிதழ்
சற்று முன் தொலைபேசியில் கூட என்னிடம் "சமுதாயத்தின் தாய்ச்சபையில் சேர்ந்தது எனக்கு பெருமை அளிக்கிறது. எனெனில் சமுதாய இயக்கங்களில் அமைதியான இயக்கம் சமூகத்திற்காக அயராது சத்தமின்றி உழைக்கும் இயக்கம் அது தான்" என்றார்.
மேலும் தலைவர் முன்னிலையில் 'இது தான் நாங்கள் செய்த துரோகமா இல்லை வகுப்பு வாதமா' என்ற பாடலை பாடிக்காட்டினேன் என்றார்.
வாழ்த்துக்கள் அருளிசை அரசு அபுல் பரக்காத் ஜி!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

05 ஏப்ரல் 2016

ச்சீய்.. நாயே

"சும்மா தானே செல்கிறேன் நான்..
ஏன் கல்லெடுத்து அடிக்கிறாய்..?"
குரைத்துச் சொல்கிறது
தெருவோரம் செல்லும்
அடிபட்ட நாய்.
"அடச்சீய்... மனிதா!'
என்பது தான்
நாய்களுக்கிடையேயான
கோபதாபச் சொல்வழக்காம்.
'ச்சீய்.. நாயே' என்கிறாய்..
சக மனிதனைப் பார்த்து நீ..,
கேவலம் மனிதர்களென
கூடிச்சிரிக்கிறது நாய்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 ஏப்ரல் 2016

நீ போய் வா!

பொய்யாய் வந்து
பொய்யாய் முகம்காட்டி
பொய்யாய் ஆலிங்கனம் செய்து
பொய்யாய் பேசிச்சிரித்து
பொய்யாய் போய்வர வேண்டும்
ஆதலினால் நான் மாட்டேன்,
உனக்கந்த பொய்யோடு உடன்பாடென்றால்
நீ போய் வா!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மென்மழை.

மழை நத்தை
மிக சோம்பலாய் ஊர்கிறது
நகர்வெளியில்
விடுமுறை தினத்தின் 
அதிகாலை ரசமேற்றுகிறது
தூரல்களின் அட்சதையோடு.

1-4-16
அமீரகத்தில் பின்னிரவிலிருதே மென்மழை.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

வலிந்து அழைத்தல்!



வில்முனையில் பூ தொடுத்து
விருப்பமுடன் எய்யும் வேளை

சொல்முனையின் கூரெடுத்து
சுடச்சுட எறிந்துவிட்டாய்
கள்முனை கனைமுறிய
களைந்ததென் கடுந்தவமும்
பல்முனைத் தாக்குதலை
பறிதவித்தே கேட்டு நின்றேன்
வல்முனை வாத ஈட்டி
வலிந்து எனை அழைத்ததுவே
ஓர் ருத்ர தாண்டவமாட!


முகநூல் பக்கத்தில்....

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா