22 டிசம்பர் 2019

வள்ளுவர் முகம்.



குறள் தான்
வள்ளுவர் முகம்.
அது யார்
கொடுக்கும் உருவங்களையும்
அடிக்கும் வர்ணங்களையும் 
மனம்போன போக்கில் தரும் 
விளக்க அறியாமைகளையும்
உள்வாங்கிக்கொண்டு
வெண்மை ஒளிரும்
வள்ளுவ தீபத்தை மட்டுமே 
உயர்த்திக் காட்டும்.
ஈராயிரம் ஆண்டுகளாய்
இப்படியான இழிநாட்களை
பார்த்திருக்க வில்லையென
உள்ளுக்குள் வள்ளுவர்
ஏளனமாய் நகைப்பதாகவும்
ஏகத்திற்கும் மனச்சோர்வாயுமென
ஓர் இரகசியத் தகவல்.
ஆனாலும் அவர்
நெஞ்சிலும் கொஞ்சம் சமாதானமாம் 
தூயவள்ளுவம் சொல்லும் 
சிலரது வாய்மைக்காய்.
நாம் வள்ளவ நெஞ்சின் சமாதானம்.
- ஜா.மு.
6-11-2019, 11.27pm

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தீர்ந்து விட்டதோ நீதி?

தேடித்தேடி
பார்க்கிறேன்
நீதிபதிகளின் தீர்ப்பில்,
தீர்ந்து விட்டதோ
நீதி?
நீதிமன்றங்கள்
மனுநீதி மன்றங்களான பின்
உச்சத்தின் மீதே
மிச்சமீதி நம்பிக்கையும்
அற்றுவிட்டது!
சட்டத்தின் முன் நாங்கள்
சமமானவர்கள் என்றே
நினைத்திருந்தோம்,
தீர்ப்பாகவே சொல்லிவிட்டார்கள்
"ஒதுக்கியிருக்கும்
அந்த இடத்தில்
ஒதுங்கி நில்"!
வரலாற்றுக்கும்
புனைவிற்கும்
நடந்த வழக்கில்
உண்மைக்கும்
நம்பிக்கைக்கும்
நடந்த வாதத்தில்
புனைவும்
நம்பிக்கையும்
வரலாற்று உண்மையின்
கழுத்தை அறுத்துவிட்டது.
தேசமெங்கும்
சிந்திக்கிடக்கிறது
சத்தியத்தின் இரத்தம்
ஒரே நேரத்தில்
ஓராயிரம் துரோகத்தின்
ஈட்டிகள்
எவ்வளவு தான் தாங்கும்
எங்கள் இதயம்.
- ஜா.மு



முழுநிலாக்களின் வாடிக்கை



நம்மை முழுவதுமாக
தின்று விடுவது தான்
இந்த முழுநிலாக்களின்
வாடிக்கை.
இம்முறை நிலா
என்னை தின்னும் போது
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டே
ரசித்து.. ரசித்துத் தின்றது!

12Nov'19

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மழை நாளில்,,,

பெய்யும் மழை
பெய்தே இருக்கவில்லை,
அறையின் கதவை
திறக்கும் வரை.
திறந்தது தான் தாமதம்
"மண்ணில் விழும்
ஒவ்வொரு துளியாயும்
உயிர்த்து பிறப்பது நானா?"
என்றாகிப் போனேன்
***
மழை நாளில்
கொத்திச் சென்றது
கடற்காகம்.
எனைக் கவ்வியிருக்கிறது
அலகில்.
***

மழைக்கென்ன
வானமிருட்ட
இடி மின்னலோடு
அமர்க்களமாய் பெய்துவிட்டு சென்றுவிடுகிறது.
தெருக்கள் பல துரத்த வந்து
அசுத்தத்தோடு தேங்கிய நீரை
போர்க்கால அடிப்படையில்
வெளியேற்றிட
முனிசிபாலிட்டியில் பணி செய்யும்
நம் சோதரர்கள் இரவென்றும் பாராது 
படும் பாடே பெரும் பாடாகிறது!

20thNov'19

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பூச்செடி



பிறர் கண்குளிர..
காணுமட்டும் மனங்குளிர..
கள்ளமிலாது மயக்கும்
மாய கள் சுமந்து
நேற்றுவரை காற்றோடு
சிரித்தாடி நின்ற
சாலையோரப் பூக்கள்
சகதி மண் அப்பி
தரை நோக்கிக்
கவிழ்ந்து கிடக்கிறது.

கனம் மிகுந்து போனது
முகமிழந்து போனது
பலாத்காரமாய் நீர்ச் சொறிந்து
சென்றுவிட்ட மழையால்!

அழகு போனபின்
ஆவதொன்றுமில்லை யென
ஆணை வந்ததையடுத்து
வேரடி மண்ணோடு
பிடுங்கி எறிந்து
குப்பை லாரியில் ஏற்றுகிறான்
மாநகராட்சி பணியாளன்,
சிரித்திருந்த பூச்செடியை.
நடத் தயாராக இருக்கிறது
வேறொரு சிரிக்கும் பூச்செடி .
ஜா.மு.

21 அக்டோபர் 2019

இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்


முழுநேர எழுத்தாளராக இல்லாமலேயே மொழிபெயர்ப்பு, சொந்த ஆக்கமென பத்திற்கும் மேற்பட்ட நூற்களை அரசியல், சமூகம், தன்முனைப்பு என பல தளங்களிலும் எழுதியவர் நண்பர் எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது.
அவரின் சமீபத்திய நூல் தான் "இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்"இந்நூலுக்காக மாதக்கணக்கில் அலுவலக பணிகளுக்கிடையே வீட்டுக்கு சென்ற பிறகும் ஓய்வாக இல்லாமல் அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை கடுகளவு நானறிவேன். அவ்வளவு கடுமையான உழைப்பின் அறுவடையில் விளைந்த வரலாற்றுப் பொக்கிசத்தை இன்றெனக்கு வழங்கினார். இது புதிய விடியலில் தொடராக வந்த போதே சில அத்தியாயங்கள் வாசித்திருக்கிறேன். படிக்க வேண்டிய முக்கிய நூற்களின் வரிசையில் இதுவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
அன்பும் வாழ்த்துக்களும் ஹமீது ஜீ.
தொடந்து உங்கள் பேனா உலகச்சுவற்றின் வரலாற்று பக்கங்களில் எழுதட்டும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறளும் - மகளும்:

குறளும் - மகளும்: முகநூல் இணைப்பு

திருக்குறள் தமிழர் தம் பெருமை, திருவள்ளுவர் தெய்வப்புலவன் என்ற பெருமிதம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது, திருக்குறளை நம் பிள்ளைகள் அதிகமதிகம் மனனம் செய்து அது அவர்களின் சிந்தனையோடு சேர அவர்கள் குறள் நெறிப்படி வாழ வழி வகுக்கும். அவ்வாறான திருக்குறளை நம் பிள்ளைகள் கற்று அதற்கு தக நிற்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு யாரும் உறுதுணை புரிந்தால் அது எவ்வள்ளவு மன நெகிழ்ச்சியாய் இருக்கும் அது தான் இன்று நடந்தது. அந்த நிகழ்வு மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைத்தது.
ன்று கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் அரிமா சங்கம், குடந்தைத் திருக்குறள் அரிமா சங்கம், திருக்குறள் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை இன்னும் சில அமைப்புக்களும் சேர்ந்து நடத்திய திருக்குறள் போட்டியில் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் பாத்திமா ஜைனப் கலந்து கொண்டு குறள் ஒப்பித்து பட்டயம் பெற்றிருக்கிறாள்.
பல பள்ளிகளும் பல மாணவர்களும் பங்கெடுத்த இந்த போட்டியின் பரிசு முடிவு பிறகு அறிவிக்கப்படும்.
போட்டி நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்ட உடனேயே வீட்டில் அதைப்பற்றி சொல்லி ஆர்வமுடன் பெயர் கொடுத்த ஜைனப், அவள் தாயாரின் பெருந்துணையுடன் (அதாவது எங்க வீட்டுக்காரம்மா)
முதல் நாளிலேயே குறித்துக்கொடுத்த பத்து திருக்குறளை உடனே மனப்பாடம் செய்துவிட்டாள், அப்படியா.. உடனே மனப்பாடம் செய்து விட்டாயா என்று அதை பதினைந்தாக ஆசிரியர் உயர்த்த மீண்டும் சிரமமின்றி மனப்பாடம் செய்து மிக இலகுவாய் சொல்லிக்க்காட்டினாள். பிறகும் ஐந்தைக்கூட்டி இருபதாக்க அதையும் உடனே மனனம் செய்து குறிப்பிட்ட நேர வரையறைக்கு முன்னமே முடித்து அசத்தினாள், அதையும் கூட்டலாமா என ஆசிரியர்கள் சொல்ல பிள்ளையை சிரமப்படுத்த வேண்டாமே என்ற எங்களின் எண்ணத்திற்குக்கொப்ப இருபதே இறுதியானாலும் அதிலும் ஒரு குறளை அவளே ஆர்வத்துடன் இணைத்து இருபத்து ஒன்றாய் ஒரு நிமிடம் 48 வினாடிகளில் ஒப்பித்து முடித்தாள்.
இது போன்ற நிகழ்வுகள் பிள்ளைகளுக்கு மிக உந்துதலாய் மன உற்சாகத்தை கூட்டி அவர்களை நன்முறைகளில் வழிநடந்த்தாட்டும், கூச்சம் போக்கும் சாதனைகளை புரிய வழிவகுக்கும்.
இவ்வரிய வாய்ப்பினை வழங்கியதற்காய் மனமுவந்து அலிப் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும் அதன் சிறப்புமிகு தாளாளர் Basheer Ahamed Rabbani அவர்களுக்கும் மனமார்ந்த நனறிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இதற்காய் முழுமூச்சாய் உழைத்த என் உள்ளத்தரசிக்கும் மனதால் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.
இதற்கு முன்னர் 2015 எனது மகன் அகமது நளீர் பாபநாசம் RDB பள்ளியில் படிக்கும் போது இது போன்ற நிகழ்வில் குறள் ஒப்பித்து மாவட்ட துணை ஆட்சியர் கையால் பரிசில் வென்றதையும் இப்போது நினைத்து இன்புறுகிறேன்.
நம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கட்டும்!
நமதினிய நற்றமிழ் எங்கும் செழிக்கட்டும்!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பேரோவியக் குறுநகை

எத்தனை பேரோவியக் குறுநகை
கண்ணெதிரே அரங்கேறிய அதிசயம்
என்ன நினைத்திருக்கும் குழந்தை!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கவிதை என்பது...

உணர்வும் மொழியும் கூடி பிறக்கும் குழந்தை
எண்ணங்கள் வண்ணம் பெற்று 
ஆடிடும் மொழி வழி நடனம்
கவித்துவத்தோடு நாம் மொழியை சுவைக்க வேண்டி ஆக்கிடும் வித வித மொழிச் சமையல்
சலிப்பூட்டும் சொற்களை பொருளை புகுத்தாமல் அதை கவனமாக புதிய முறையில் பயன்படுத்தி, புதிய பொருள்ல்ல.. புதிய உலகிற்கே கொண்டு போவது போலிருந்தால் ரசனை மிகும்.
ஆதலால் வெறும் சொற்களை அடுக்குதலோ அல்லது கட்டாய பொருட் திணிப்போ கவிதைக்கு உடன்பாடானது அல்ல.
உணர்வை, துய்ப்பை, அனுபவத்தை மொழியின் வழியே சுவை கூட்டி சொல்லும் போது ஓரெழுத்து கூட அருங்கவியாகி நிற்கும்
எந்த சூழலில் கவிதை வெளிப்படுகிறதோ அவ்வாறே வெளிப்படுத்தும் போது இது மட்டும் தானெனும் கட்டுப்பட்ட பொருள் எல்லைக்குள் அடக்கிக்கொள்ளாது அது படிப்பவரின் அறிவுக்கேற்ப மனதினுள் விரியும்.
பெற்ற உணர்வை உற்றவாறே மொழிதல் கவிதை.
-ஜா.மு.
சென்ற ஆண்டில் இதே நாள் கவிதை குறித்த விவாதத்தில் நானிட்ட பின்னூட்டம்
முகநூல் இணைப்பு
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 அக்டோபர் 2019

நிலவிடம் நான் இதயமிழந்தவன்

நிஜக்கவிஞர்கள்
கொடுத்துவைத்தவர்கள்
சதா இறைவனின் சொல் கொண்டு
தீராத பிரம்பிப்பை 
எட்டுத்திக்கும் தித்திக்க 
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.


***
இசையிடம் மனதினை
ஒப்படைத்த பின்பே
வசமாகிறது பயணங்கள்.
தூரங்கள் தெரிவதெல்லாம்
இசை தீர்ந்த பிறகு தான்!


***
பெட்டியில் நீந்தும்
தங்கமீன்களெல்லாம்
பெயரளவில் தான்,
நிறத்தை தவிர்த்து
தங்கத்தின் குணங்கள் 
ஏதுமிலாதவை.


***
பாடல் பாடச்சொன்னால்
பால்நிலாவையே
கரைத்து புகட்டுகிறாய்,
நிலவிடம் நான்
இதயமிழந்தவன் என்பதை
யாருனக்குச் சொன்னது?



***
போட்டி போட்டு
பல்லக்கு தூக்குகிறார்கள்
மிகுந்த வாஞ்சையோடு
கடவுளுக்கொப்ப சிலாகிக்கவும் 
தயங்குவ தெல்லாமுமில்லை

தூக்கிவந்த வேகத்தில் கடலில்
போட்டு தாண்டவமாடிக் களித்து
மிதிக்கையில் தான் தெரிகிறது

அவர்கள் ஒருபோதும்
கடமையிலிருந்து
முற்றும் தவறுவதில்லை யென,

புரிந்தவன் எப்போதும்
கால்களால் நடக்கிறான்
அவனது பல்லக்கு சாய்வதேயில்லை.

***
இம்மாநிலமே உன் அரசாங்கம்
நாட்டின் ராஜாவே நீ தான்
இப்பேரண்மனையே உன் குடில் என்றாலும்
வாசல் படியிலேயே சோம்பல் முறித்து 
படுத்துக்கொள்கிறது தெருநாய்.

***
இத்தனை நாளாய்
உயிரூட்டி வளர்க்கிறேன்,
பூக்காமலா போய்விடும்?
வாழ்நாளிலோர் கவிதை!
.
16/10/2019 இரவு எழுதிய கவிதைகள்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 மே 2019

ஆனந்த தேன்மாரி

ஆத்மாவில் சுரக்கிறது
ஆனந்த தேன்மாரி

எல்லை யில்லா மகிழ்ச்சியின்
மரகதப் பெருவெளி
சொல்லிக்கொள்ளாது திறக்க,
நிறத்தோடு மாயும் நீராய்
திளைத்து லயிக்கிறது
பெற்றோர்தம் மனது.

வெய்யிலில் சோர்ந்திடும்
வரண்ட நிலச்செடி போல்
பொய்யில்லா பசி தாகத்தால்
நாள் முழுக்க வாடி வதங்கியும்...

பிள்ளைகள்,
துள்ளிக்கொண்டு
ஆசை பாஷைகள்
ஆயிரம் பேசி
அருளான காட்சிகளால்
நம்மை நனைக்கிறார்கள்

நிறைவு செய்த
முதல் நோன்பிற்கு பிறகும்,
மீண்டும் தொடர்
நோன்பு வைக்க.

இறைவா
நிறைவாய் நீ
அவர்களுக்கருள்!

செய்தி: மகனும், மகளும் இவ்வாண்டின் முதல் நோன்பை இறையருளால் நிறைவு செய்தனர். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கும் தான்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-05-2019

29 ஏப்ரல் 2019

வியாபாரம்

சில சந்திப்புக்கள்
சில சந்தர்ப்பங்கள்
சில மேஜைகள்
சில வியாபாரங்கள்
கெடுத்துவிடுத்துத் தான் விடுகிறது

நம் எதார்த்தத்தை! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

விதித்தது

கதிரில் விளைந்ததெல்லாம்
குதிருக்குள் செல்லாது
வெள்ளாமை ஆனதெல்லாம்
வீடுவரை வந்திடாது
காகம் குருவி கொத்தியதும் கொரித்ததும் போக
வாரி அள்ளும் போது சிந்தியது போக
மூட்டை கட்டும் போது கொட்டியது போக மீதம் தான் நமக்காகும்
கணக்கு போட்ட படியெல்லாம்
கண்டிப்பாய் வாழவே முடியாது
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும்
எப்படி பிணங்கியது என ஓர்த்தாலும்
வாழ்வே நகராது
வாழவே முடியாது
கூடுதலோ குறைதலோ
கிடைத்ததற்கு சுக்கூர் சொல்வாய்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

18 பிப்ரவரி 2019

எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம்

அன்புள்ள தாயே
எங்கே தான் நீயே...

உன் முகம் பார்க்காது
தினமும் எழ வைத்தாயே
ஏங்கிடும் நினைவுகளால்
நிதமும் அழவைத்தாயே!

எனக்கு விடிகிறதென்றால்
சூரியனாய் நீ தான் இருந்தாய்
உன் வெளிச்சம் தானே
எல்லாம் விளக்கியது தாயே!

எனக்கு இரவென்றால்
நிலவென நீ தான் இருந்தாய்
எனக்கான ஆறுதல் வடிகால்
நீயாய் இருந்தாய் தாயே!

எனக்கு என்ன தெரியும்
உன்னை தெரியும்
உன்னை தான் தெரியும்
உன்னை மட்டும் தான் தெரியும் தாயே!

நீ என்ற உலகில் தான்
நான் வாழ்ந்திருந்தேன்
நினைத்திராது அந்த உலகமே
திடீரென அதிருமெனறால்
எங்கே போவேன் தாயே!

எந்னை நீ
பெற்று விட்ட பிறகும்
நானே பிள்ளைகள்
பெற்றுவிட்ட பிறகும்
பக்கத்தில் நீ இருந்ததால்
உன் பேரன்பின் கருவறையில்
கதகதப்பாக இருப்பதாகத்தான் உணர்ந்திருந்தேன்!

அந்தக் கருவறை சுவாசம்
காலமெல்லாம் கிடைக்குமென்று
நினைத்திருக்கையில்,
காலம் இப்படியொரு
அகால கொடுந்தீயைப் பற்றவைத்து
கொடுமையாய் உனைப்பிரித்ததே தாயே!

பிரிவின் தீயும்
நினைவின் தீயும்
தினம் தினம் எறிய
திரும்பிட மாட்டாய் எனினும்
திரும்பத்திரும்ப அழைக்கிறேன்
உன் பிரியப் பிள்ளை!

தாயே!
ஆசையோடு அணைத்தெனக்கு
அன்பின் இதழ் குவித்து
ஒரு முத்தமாவது தந்து செல்லேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


இன்று எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம், அவர்களுக்கு இறைவன் பெருங்கிருபை செய்வானாக! இறைத்தூதர் அருளாசியினால் நிறை சாந்தி நிலவுவதாக.