25 பிப்ரவரி 2012

இறைவனும் குழந்தையும்!



குழந்தைகள்
இறைவனின் அருட்கொடை!

அவனே நமக்கு
அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு!
எல்லையில்லா மகிழ்ச்சியில் 
ஆழ்த்தும் அருட்சுரப்பு!

அவனின் கருணைக்கரங்களால்
கற்ப உலகத்தில் காத்தவன்
மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌
பிள்ளையாய் புதிய மனிதப்பிறவியை
நம் கரங்களுக்கு அவனே சொந்தமாக்குகிறான்!

கற்பக்கோலறையின் இருட்டு வாசத்தில்
சுவர்க்க போகம் கொண்டிருந்த
மென்மையின் தாயே
சேயாய் ஸ்தூல உலகில்..!

உறுப்புக்களை அமைத்து
ஒழுங்குற வடிவம் தந்து
எழிழுடன் முழுமையக்கி 
கொஞ்சமும் நேர்த்தி குறையாது
நம் மடிகளில் தாங்க கொடுக்கிகிறான்!

நீ மட்டுமே என்னை
வளர்த்தாய்.. அணைத்தாய்..
உயிரூட்டினாய்.. உணர்வூட்டினாய்..
அன்னையிடமிருந்தே அமுது தந்தாய்
ஏன் நீ என்னை
வெளியே கொணர்ந்து
மனிதர்களிம் கொடுக்கப்போகிறாய்
வேண்டாம் இறைவா..
உன்னிடமே இருக்கிறேன்
நீயே என்  நிகரில்லா அருந்தாய் ..!
என்றோ என்னவோ கெஞ்சியே
அழுது கொண்டே  வருகிறது

ஆனாலும் இறைவன்
அழாதே கண்ணே..
என் அன்பின் பகுதியைத்தான்
அன்னையிடம் ஈந்துள்ளேன்
அவள் தாய்மையை ருசி
அதில் என்னையே  நீ ரசி
என்று சொல்லி அனுப்புகிறான்.

இது என் குழந்தை என்பதற்கோ
நான் தான் பெற்றெடுத்தது என்பதற்கோ
யாருக்கும் பெருமையடிக்க யாதுமில்லை!

இதில் ஆரம்பம் முதலே
அவனின் வல்லமை மட்டும் தான்!
அவனின் வல்லமைக்கு அவனே நிகர்
பெருமையெல்லாம் பேரிறைக்கே உரியது.

அவனின் அருமைப் படைப்பை எண்ணி
இயற்கையின் இயக்குதலை எண்ணி
பிரமித்து சரண் அடைவது  மட்டுமே
நமக்கு நன்மை பயக்கும்!

அடிமைத்துவத்தை உணர்ந்து
அதில் லயித்தால்
சங்கமம் ஏற்கப்படும்
சந்தோசம் நிலைத்து விடும்

எவ்வளவு பெரியவன் அவன்
எவ்வளவு பெரிய சக்தி அது
எவ்வளவு பெரிய உண்ணதம் இறை!

-ஜே.எம்.பாட்ஷா


(கடந்த டிசம்பர் மாதம் 2011 என் மகள் பிறந்த போது எழுதிய பல கவிதைகளில் இதுவும் ஒன்று)

23 பிப்ரவரி 2012

வழுத்தூரும் வள்ளல் முஹையத்தீன்(ரலி) நாயகரும்!

வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல்

தேங்காய்ப்பூ டவலுடன்.. பொலிவான தோற்றத்துடன் பல முகங்கள் தெருவில் தென்படும்.. எதிரே பார்க்க மிக சந்தோசப்பட்டு ‘சலா….மலைக்கும்..எப்டி இருக்கீங்க..’என்று முகம் மலர்பவர்களை நோக்கி ‘ஆமா எப்பண்ண வந்தீங்க..’ என நாம் விசாரித்தாலோ கொடிச்சீலைக்காகத் தான் தம்பி..!  எப்போதும் நாங்க எல்லா குரூப்பா பிரண்ஸ் எல்லம் சேர்ந்து இப்படி தானே ஊருக்கு வர்ரது வழக்கம் அப்படி தான் இப்பவும் குவைத்ல.. தூபாய்ல.. சவுதிலேன்னு எல்லாம் சேர்ந்து வந்திருக்கிறோம் என்பார்கள்..! ஆம் ரபிய்யுல் ஆகிர் மாதம் நெருங்க நெருங்க பிறை 1 ஐ எதிர்பார்த்து தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் எல்லோரிடமும் ஓர் ஆர்வத்துடனான பரவசம் பற்றிக்கொள்ளும்.

மெய் தான், இது வலிமார்கள் வாழ்ந்து நெறிபுகட்டிய பூமி.. அக்கம் பக்கத்தில் எத்தனையோ இஸ்லாமிய ஊர்கள் இருந்தாலும் அத்தனை ஊர்களுக்கும் கல்வி என்றால் அது மார்க்க கல்வியாக இருந்தாலும் உலக கல்வி யாக இருந்தாலும் வழுத்தூர் என பெயர் விளங்கிய காலங்கள் உண்டு.. அப்பெயரின், புகழின் காரணம்… பெரும் பெரும் அறிவு ஜீவிகளும், செய்யதுமார்களான ஷைகுமார்களும், ஞான மேதைகளும் வாழ்ந்து அக்கம் பக்கத்து ஊர்கள் என்றில்லாது தமிழகம், கேரளம் என்றும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கை என்றெல்லாம் எல்லைகளை தாண்டி தங்கள் அறிவுச்சுடர்களை விரித்து அரசோச்சிய அற்புத தருணங்கள் அவைகள்.

வெளியூருக்கு செல்லும் நேரங்களில் என்னுடைய அனுபவப்படி வழுத்தூர் என்றால் அது எங்கள் உஸ்தாதின் ஊர் என்றும், எங்கள் தகப்பனாரின் ஷைகின் ஊர் என்றும், சொல்லி புலங்காகிதப்பட்டவர்களை பார்த்திருக்கிறேன். ஏன் சிலர் எழுந்தும் விரைந்தும் வந்து கட்டிபிடித்து ஆர்வத்துடன் முசாபஹா செய்து வாழ்த்தி நீங்கள் புண்ணிய பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள் அது சிறு மக்கம் அல்லவா என்று மனதார தன் உணர்வுகளை கொட்டிவர்களை பார்த்திருக்கிறேன்.. குறிப்பாக கடையநல்லூர்.. திருநெல்வேலி… மேலப்பாளையம்.. என இதற்கு சான்றாக எத்தனையோ ஊர்களின் அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அஷ்ஷைகு ஷாஹ்முஹம்மத் வலியுல்லாஹ் மற்றும் பல இறைநேசர்கள் உறையும் நினைவிடம்... இது மிகத் தொண்மையான கலையம்சம் கொண்டது.

‘அல் இல்மி மஸ்ஹூரி..ஃபி பலதி வழுத்தூரி’ அதாவது கல்விக்கு என்றால் வழுத்தூர் தான் பிரசித்தித்தளம் என்னும் பொருள் கொண்ட அரபிய சொற்றொடர்களே பெரியவர்கள் மத்தியில் அன்றைய காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்றால் இதற்கு அப்பாலும் வழுத்தூரின் ஞானமேன்மைக்கும்.. ஞானிகளின் சங்கமமாக அது திகழ்ந்தது என்பதற்கும் ஏதும் மிகையாக சொல்லத்தேவையே இல்லை. வெகு காலங்கள் முன்பு எங்கள் ஊருக்கு பகுதாதில் இருந்து மன்னர் முஹையத்தீன் ஆண்டகையின் இரத்த உறவிலிருந்து வந்து இறைமறை வழிநடத்திய நபிகுல மாணிக்கமான அஷ்ஷைகு முஹம்மது வலியுல்லாஹ் மற்றும் அந்த ஞான ஆலமத்தின் விழுதுகளாக அஷ்ஷைகு பஹாவுத்தீன் வலியுல்லாஹ், அஷ்ஷைகு மீருத்தீன் வலியுல்லாஹ் என்பவர்களும் அவர்களின் வழித்தோன்றுதல்களூமே இச்சிறப்புகளுக்கு காரணம். இவர்களின் விபரங்களையும்.. ஞான முதிர்வையும் சொல்லப்போனால் கட்டூரை நீளும் இன்ஷா அல்லாஹ் அதை வேறொரு கட்டூரையில் பார்க்கலாம் இவர்களின் காரணமாக காதிரியா தரீக்கா இங்கே மிக தழைத்திருந்தது.. மக்கள் மெய்ஞ்ஞான இன்னமுது பருகி களிப்புற்றிருந்தனர்.

…..சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் என ஏதும் இல்லாத காலம் அது.. அந்த சமயத்தில் காலரா என்னும் தொற்று உயிர்க்கொல்லி நோய் மிக வேகமாக பரவியது.. அது பரவி பல உயிர்களை தொடர்ந்து காவு வாங்கிக்கொண்டே இருந்தது ஒரு மய்யித் அடக்கி விட்டு வருவார்களாம்.. மற்றொருவர் இறந்துவிடுவார்களாம்.. சில நேரங்களில் பல மவுத் நேர்ந்து அடக்கம் தொடர்ந்து கொண்டே செல்ல ஊரில் யாருமே மகிழ்வில்லாமல் சோர்ந்து இதற்கு விடையே கிடையாதா என்ன தான் தீர்வு இப்படி ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டிருந்தால் ஊரில் யார் தான் இருப்பார்கள் என மிக நொந்திருந்த வேலையில் தான் ஊரின் மிக மேலான ஞானவான்களை தீர்வுக்காக மக்கள் நாட அவர்கள்.. இறைநேசத்தில் தன்னையே இழந்து மஹபூப் சுப்ஹானியாக.. இறைவனின் மிகக் காதலுக்குரிவர்களாக தங்களை பரிணமித்து கொண்ட இறைநேசர், இரசூல் நபிகளின் ஷரிஅத்தில் இருந்து எள்ளளவும் பிசகாது நபிகள் (ஸல்..) கூறிய ஹதீஸ் குத்ஸியின் விளக்கமான ஞானப்பாட்டையில் திளைத்து இறைவனின் மள்ஹராக அதாவது இறைவனின் அருள் வெளிப்படும் தளமாக தங்களை ஆக்கிக்கொண்ட இறைவனே உவந்த மகிமைமிக்க முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகரை பொருட்டாக்கி அவர்களின் பெயரில் கொடிகளாக நான்கு கொடிகளை சுமந்து வந்து ஊர்முழுவதும் காப்பு பெற அவர்களது வஸிலாவை கேட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நாம் வேண்டிக்கொள்வோம் வல்ல நாயன் அவனின் மஹபூபுக்காக நம் பிரார்தனைகளை ஏற்றுக்கொள்வான் என்று அறிவுரை வழங்க அதுபோல் செய்தனர் அன்றைய தூய உள்ளம் கொண்ட வழுத்தூர் வாசிகள்!

ஆம்! ஆச்சரியமாக உயிர் திண்ற பெருங்கொல்லி காலரா வழுத்தூரை விட்டே வெருண்டோடியது.. காப்பு பெற்றனர் காரணர் முஹ்யித்தீன் ஜீலானி நாயகரால். பாதிப்பிற்குள்ளான உள்ளங்களுக்குத்தான் வலியின் வேதனை தெரியும் இறையருளால் நிவாரணம் வழங்கிய நாதரின் வஸிலா தங்கள் ஊருக்கு தொடரவேண்டுமென தொடர்ந்து எண்ணினார்கள் பிறை ஒன்றில் ஒவ்வொரு ரபிய்யுல் ஆகிருக்கும் வள்ளல் முஹையத்தீன் ஆண்டகையின் நான்கு கொடியும் தொடர்ந்தது.. இன்றும் தொடர்கிறது..இன்ஷா அல்லாஹ் என்றும் தொடரும்…! (இவ்விழாவினை கொடிச்சீலை என்றழைப்பர் அதாவது கொடிக்கம்பத்தில் நீண்ட துணியுடன் கூடிய கொடிகளை ஏற்றுவதால் வந்த பெயர்)

இது இறைவனே தேடிக்கொள்ளச்சொன்ன வஸீலா (சிபாரிசு)..திருக்குர் ஆனில் அவனிடம் முடுகுவதற்கு வஸிலாவை தேடிக்கொள்ளுங்கள் என்கிறான்.. மேலும் அவனே கூட மக்களை நல்வழி படுத்த நினைத்த போது நபிகளின் மூலம் தான் அதை செய்தான்.. அதற்கு வஹீயை அறிவிக்க நாடிய போது ஜிப்ரயீலை கொண்டு தான் கொடுத்தான்.. நபித்துவத்திற்கு பிறகு வலித்துவம் முடிவுநாள் வரை இருந்து கொண்டே இருக்கும்படி அவன் தான் அமைத்தான்.. மக்களுக்கு அல்லாஹ் கிருபை (ரஹ்மத்) செய்ய நாடினான் நபிகளாரை கிருபையாக (ரஹ்மத்தாக) அனுப்பினான் ஆக, நபிகளாருக்கு பிறகு நபித்துவ அகமியங்களை சுமந்து வரும் நெஞ்சங்கள் கொண்ட வலிமார்கள் மூலமாக இந்த ரஹ்மத் புவியை அடைகிறது.. அந்த வரிசையில் வலிமார்களின் தலைவராக முஹையத்தீனாக இருக்கும் மஹபூபுஸ் ஸுப்ஹானி அவர்களை கொண்டாடி இறைவனின் அருள் பெருகின்றனர் வழுத்தூர் வாசிகள் அவர்களை அண்டி அருள் பெற்றிடும் உலகின் பலப்பகுதியில் வாழும் ஈமான்தாரிகளைப் போல!

இறைவன் இது போன்ற வலிமார்களை தான் அத்தாட்சி ‘ஷஆயிரல்லாஹ்’ என திருமறையில் கூறுகிறான்.. அந்த அத்தாட்சிகளை நினைவு கூறவும் பணிக்கிறான்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவனது நல்லடியார்களை நினைவு கூர்ந்து.. கொண்டாடி மன மகிழ்ந்து.. இறைவனின் எல்லா அருட்பேறுகள் அனைத்தையும் பெற்றுக்கொள்வோம். அதே வேலையில் இவ்வுயர்வு மிக்க முஹையத்தீன் ஆண்டகை (ரலி)யின் சிறப்புக்களையும், ஞான உயர்வினையும், தூய வரலாற்றினையும் ஆய்ந்து படித்து..அவர்கள் எந்த இறையிருப்பில் இன்பம் கண்டார்களோ அதே உண்மையில் எங்களையும் ஆக்கி அருள்வாய் இறைவாவென அந்த மன்னர் முஹையத்தீன் நாதரையே பொருட்டாக்கி வேண்டி ஈருலக வாழ்விலும் வெல்வோமாக! ஆமீன்.


-ஜே.எம்.பாட்ஷா

12 பிப்ரவரி 2012

விலை மதிக்க முடியாத திர்ஹம்!




ஒவ்வொரு கனமும் நினைவுபடுத்திக்கொள்- இது 
மேன்மையான உயர்வணக்கமென்று!

அழகான பயன் தரும் பொழுது போக்கு 
சுமையாக அல்ல சுகம் என்று நினை!

சம்பாதிக்கும் ஒவ்வொரு திர்ஹமும்
விலை மதிக்க முடியாதவை!

அவற்றில் உறைந்திருக்கும்
ஏக்கம் பிரிவு தவிப்பு தியாகம்
இன்னும் எத்தனையோ..!

இப்படி ஈட்டிடும் திர்ஹத்திற்கு ஏது விலை..!

ஜே.எம்.பாட்ஷா

@ 2007

பனிக்காலை




சூரியன் வந்தும் கூட‌
வானம் பூமியின்
அந்தப்புற நிகழ்வுகள்
அவிழ்ந்தபாடில்லை
பட்டுப்பனிக்கரங்களால்
பூமியின் மேனியில் இன்னும்
ஆலிங்கணம் தொடர்கிறது



-ஜே.எம்.பாட்ஷா

2005  ஓர் பனிக்காலைப்பொழுதில்..

11 பிப்ரவரி 2012

நீலக்கடலும் அலையும்..!



நீயும் நானும் சேர வேண்டும்
நீலக்கடலும் அலையும் போல –நம்
அழியாக் காதல் அர்த்தம்பெற வேண்டும்
ஒழியா எதிர்ப்புகள் வந்தாலும் கூட,
பாதகங்கள் கூடினால் என்ன – சிலர்
பாயும் புலியாய்  மாறினால் என்ன!!

நீ பூவாய் மலர்ந்தாய்
நான் வண்டாய் வலம்வந்தேன்
நீ நிலவாய் உலவினாய்
நான் வானமாய் இடந்தந்தேன்

நான் உன்னை பெண்ணாய் பார்க்கவில்லை
என் கண்ணாய் தான் பார்க்கிறேன் கண்மணியே! 

அன்பே நீ!
தேடிப் பார்க்க நீ ஓர் ஆழ்கடல் முத்து
சூடிப்பார்க்க சுகந்தம்கமழ் மலர்
ஓதிப்பார்க்க நீ ஓர் அகராதி
தொட்டு ருசிக்க நீ திவ்யத்தேன்
இட்டுக்கொள்ள நீ மென்பட்டு

ஓடையில் மீன் போல
உன்னில் நான் நீந்த வேண்டும்
கோடையில் இளநீர் போல
உனை தீர அருந்த வேண்டும்


ஓடி அலைவோம் தென்றல் போல
கூடிப்பறப்போம் சிட்டுக்குருவியாய்
பாடிக்களிப்போம் பசுங்கிள்ளைகளாய்
நீடித்த மகிழ்வில் தொடர்வோம் வாழ்வை!


-ஜே.எம்.பாட்ஷா

காலம் 1997                                                                                                        (இன்னும் புரியும் )

 உலகம் புரியாத வயதில் கவிதைகள் .. -