கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 பிப்ரவரி 2026

மழை

மனிதனின்பால் 
பொழியும்
இறைவனின் அருட்பால்.
*
சூல் கொண்ட காற்றுக்கு பிறந்த
கால் கொண்ட மேகக்குழந்தைகள்.
*
பூலோக வனத்தின் 
அன்னைக்கரங்கள் 
"கண்ணே வா" என்றழைக்க 
தாவி வரும் தண்ணீர் குழந்தைகள்.
*
வெளியே தெரியாத 
வேர்களின் வேண்டுதல்களை ஏற்ற 
வானத் தாயின் அமுதம்.
*
தண்ணீர் வடிவில் 
தனிப் பெருங் கருணை.
*
பூமி உயிர்க்க வரும் சாமி.
*
ஜா.மு.
21-02-2026



06 பிப்ரவரி 2026

வீண்



காலையில் கண் பட்டதெல்லாம் மலர்மாலை தந்தது
சாலையோர புல் கூட சலாம் சொன்னது
அடி வைத்த மண் அருமை மகனே என்றணைத்தது
காற்றின் இறகுகள் மனதை வருடி இதமான ஊற்றைத் திறந்தது
வேற்று கிரகமாயிருதும் விடியல் நிலா வாழ்த்திசைத்தது.
அகமது குளிர முகமது பூத்தது.

இப்படியாக இனிதே செல்கையில்..

நாளின்  இனிமை எல்லாம் கொன்ற
வெற்று மனிதன்  இவனை மட்டும்
ஏன் பார்த்தோமென்றானது.
*
உள்ளூர புன்னகைத்தாலும்
எள்ளு வெடிக்கும் முகம் காட்டுகிறான்,
வீணானது அவன் மானுடப்பிறப்பு.

-ஜா.மு
06-02-2026

01 நவம்பர் 2025

சிராஜுல் மில்லத் என சீலம் அழைக்கும் சீலர்

அன்புத் தலைவரே

அருள்மிகும் சிங்கமே

சிராஜுல் மில்லத்தென

சீலம் அழைத்த சீலரே


உங்களைக் குறித்து

என் நினைவுகளை எழுத 

நிறைய எழுத்துக்கள் தேவை - ஆனால்

கொஞ்சம் தான் எழுதப்போகிறேன் 

இது என் உணர்வுகளின் கோர்வை!


உங்கள் குணாதிசயம் போலத்தான்

உங்களைப் பற்றி எழுதினாலும்

தமிழும் சாந்தமாகவே பிறக்கிறது

மணக்கும் சந்தனமாகச் சிறக்கிறது!


அமிழ்தாம் மறைகுர்ஆன்

தமிழ் தனில் தர்ஜுமா

கமழ்ந்திட எங்கெங்கும்

ஓதிடும் போழ்தினிலெல்லாம்

அகதோன் மகிழ்கிறான் - அப்துல்

சமதிற்கும் அருள்கிறான்.


ஏனெனில்,

இலட்சம் சிறப்புகள் 

பெற்றத் தமிழ் மொழி

இரட்சகன் பேசிய 

வேதவழியும் பெற,

தந்தையுடன் முழுச்சிந்தையுடன் 

வேதத்தமிழுக்கு செய்திட்ட

திருத்தொண்டு அது

இளம் வயதிலேயே 

இறைவனுக்காய் நீங்கள்

ஆற்றிய பெருந்தொண்டு.


தலைவர்....

பல்துறை சார்ந்த அறிவில்

மேதாவிசாலம் கொண்ட நூலகம்

மண்தரை மக்களை அணைப்பதில்

மாதாவிசாலம் கொண்ட வானகம்.


அவர்...

பாராளும் இறைவனின் 

பேராலயம் கழுவ

அரபு நாடாளும் அரசரின் 

விருந்தினரானார்.


தேவாலயத் தலைவர் 

போப்பாண்டவர் அழைத்து

ரோம் தலைநகர் வாடிகன் செல்ல 

எல்லோரும் அதிரச நல்லிணக்கம் 

அறுஞ்சுவை அருந்தினாரானார்.


சிராஜுல் மில்லத் பேசினால்...

சலசலக்கும் ஓடையும் கூட

சத்தம் நிறுத்தி சந்தம் கேட்கும்

சிலுசிலுக்கும் தென்றல் காற்றும்

உலவ மறந்து உரையைக் கேட்கும்


கொள்கையில்

சுட்டு வீசும் "சூரியனும்" 

கட்டுப்பட்டு தமிழ் சுவைக்கும்.


மக்கள் மனம் வென்ற "சந்திரனும்'

கன்றெனவாகி தமிழ்மடி சேரும்.


'அல்லி'க்கும் கூட அவர்

சொல்லின் மீது பிரியம் வரும்.


அழகிய குரல் நாதவினோதத்தில் 

உள்நுழைந்து வந்த போது தான்

தமிழே தன் குளிர்ச்சியை 

தானே சுவைத்து குளிர்ந்தது

கிளர்ச்சி அடைந்து மகிழ்ந்தது.


மேடைப்பேச்சின் மன்னவரவர்

இனிய சொற்கள் மூலமே

பெரிய சமரொன்றைப் புரிவார்

அவரின் சொல் மாறி

அபாபீல்கள் கால் சுமந்த 

சொற்'கல் மாரியாக

எதிரிகளின் இதயத்தில் விழும்

சிலிர்த்து வியக்கும் நிலம்.


அப்துல் சமது 

சொன்னால்..

சமுதாயம் தமது 

என்று ஏற்றது ஓர் காலம் - அது

சமது என்றால் சமுதாயம் என்ற 

அழகியநிலாக் காலம்.


இஸ்லாமிய சமூகத்தின் இணக்கமான 

கால் நூற்றாண்டுத் தலைமை அவர்

சமுதாயத்தை யார் வந்தும் சீண்டாது

வால் ஒடுக்கி அடக்கிவைத்த தலைவரவர்

நமக்குள்ளேயே நாள் முளைத்து வந்த

இயக்கங்களெல்லாம் கால் பதிக்காமல்

காத்திட்ட பெருஞ் சுவரவர் 

அப்துல் சமதவர்....


எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சிறப்பு

திமுகழகத்திற்கும் 

முஸ்லிம் லீக்கிற்கும் கிடைத்தது.

அது கலைஞர் கருணாநிதி

அறிஞர் அப்துல் சமது என்ற

பன்முக ஆளுமை 

தலைமையாய் கிடைத்தது.


திமுகவோடு கூட்டணி முறிந்தால்

முகவிற்கும் சமது சாஹிபிற்கும்

நடக்கும் பத்திரிகை

அறிக்கை அம்புகளுக்காக

தெறிக்கும் மேடைபேச்சால் நடக்கும் 

வேல் வீச்சுக்களை நாடே ரசித்திருக்கும்

எந்த சூழலிலும் அவர்தம்

தமிழ் இன்பம் கொடுக்கும்.


நிலம் உழுது பயிர்வளர்த்து உணவூட்டும்

உழவன் போல - உணர்வோடு

களம் கண்டு கட்சிவளர்க்கும் 

தொண்டன் மீது

எப்போதும் ஒப்பில்லா 

அன்பைப் பொழிவார் தலைவர்.

பாசத்தலைவரை பார்த்துப்பார்த்து

சீனியில் சிக்கிய எறும்பாவான் தொண்டன்.

மொய்க்கும் தொண்டர்களின் 

மனம் ஜெயித்தது

அவர் கரிஷ்மாவால் மட்டுமல்ல..

காட்டிய கரிசனத்தாலும் தான்.


ஆனால் அவரின் 

முகமலர் பார்க்காத

அகமலர் திறந்த

எழுச்சிப் பிறைக் கொடி 

இளைஞர் கூட்டம் எழுந்து வருகிறது 

அந்த இணையக்கூட்டம்

இணைந்தே தேடி இன்று

புதைந்த சரிதம் மீட்கின்றது.


சரித்திரம் பதிய சகுனம் பார்ப்பதா?

நிகழ்ந்ததைக்கூற நேரம் காலமா?

தியாகத்தை நினைக்க தேதி தேவையா?

இத்தனை நாள் வித்தகரது

முத்தான வரலாறு

எத்தாமல் போய்விட்டதே

என்று நித்தமும் தேடி

இணையத்தில் பகிர்கின்றார்

இன்பத்தைப் பகர்கின்றார்

இதயமெலாம் பசுமை படர்கிறது.


அது மட்டுமல்ல..

சிங்கத்தலைவரவர் 

சங்கத்தமிழ் முழக்கம்

எங்கு கிடைத்திட்டாலும்

யாரிடம் எந்த ஊரிலும் இருந்திட்டாலும்

பிறைக்கொடி பேரிளங்கூட்டமே

ஓடிச்சென்று 

சேகரம் செய்திடுவீர் 

நாடு நகரமெல்லாம் - 

இன்பத் தமிழ்

சாகரம் காணட்டும்

இணக்கத்தமிழை

இணையத்தில் ஏற்றிவைப்பீர்

வணக்கத்திற்குரியவன் உங்களை

எல்லார் இதயத்திலும் ஏற்றிவைப்பான்.


அன்புடன்,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா.


- ஜா.மு

24 அக்டோபர் 2023

ஏது பதில்?.

போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
ஆனால்,
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.
- ஜா.மு

விடை காணாத கதறல்கள்
வாழ்வா சாவா போராட்டம்
ஒவ்வொரு வினாடியும் திகில்
வரலாற்றின் இரத்தம் சொட்டும்
பக்களை எழுதிக்கொண்டிருக்கிறது
விடியலை எதிர் நோக்கும்
வலி மிகுந்த பொழுதுகள்.

- ஜா.மு
09-10-2023

பாவப்பட்ட உண்மை


ஆயிரம் நர்த்தனம் ஆடி
அவரவருக்கு வேண்டியதை
ஆதலால் இதுவே உண்மையென
ஓயாது நிலை நாட்டிடும்
போட்டிகள் எங்கும் அரங்கேற
கேட்டு சோர்ந்தன ஒலி வாங்கிகள்.
அயராத பேச்சின் கம்பளம்
விரிந்து கொண்டே செல்கிறது
மனிதத்தை மாண்பை
பேரன்பை புன்னகையை
மறைத்து மூடிச் செல்கிறது.
தனக்கு நேர்ந்த சேதாரத்தை
காததூரம் தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறது
பாவப்பட்ட உண்மை.
-ஜா.மு.

காஸாவின் பூனை

கருணை உடையோர்க்கு
காஸாவின் பூனையும்
கதறும் மழலையும் ஒன்று தான்.
உள்ளம் இல்லாதவர்கள் தான்
சிசுக்களின் ரத்தம் குடிக்கிறார்கள்.

- ஜா.மு
19-10-2023

சிட்டுக்குருவியை உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்!

இந்தக் குருவியை
பார்த்ததும் சிறுமி ஹனா
மனது வலியால் துடிதுடித்தது
ஹனாவின் வாழ்வே
வலி மிகுந்திருந்தும்
வலிக்கும் இழப்பிற்கும்
தன்னைப் பழக்கிய வாழ்வு
அவளுக்கு விதிக்கப்பட்டது.
ஆனால் பெரும் இரைச்சலுடன்
பூமியை அதிர வைத்து
வந்துவிழும் ராக்கெட் குண்டுகள்
ஒன்றும் அறியாத
காஸாவின் சிட்டுக்களை
நிலைகுலையச் செய்து
பாதித்ததில் வலித்து வலித்து
சோர்வுற்றாள் ஹனா.
பறக்க முடியாதிருந்த சிட்டைத்
தன் சிறிய கையில் ஏந்தி
பக்கத்திலிருந்த மருத்துவமனை
டாக்டரிடம் சொன்னாள்..
"எப்படியாவது
இந்த சிட்டுக்குருவியை
பறக்க வைத்து
உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்".

- ஜா.மு

06 அக்டோபர் 2023

வன்மம் மட்டும் கருப்பொருள்


எங்கு பார்த்தாலும் ரத்தம்,
கொஞ்சமும் ஈவிரக்கமற்று
மனிதத் தன்மையுமற்று
வெறிப்பிடித்த தாக்குதல்.
ஆயுதம் ஒன்றே
அறமென்று காட்டி,
மனதை கல்லாக்கும்
இரக்கத்தை இறக்கப் பழக்கும்
சுடுதல் வெட்டுதல்
இன்னும் கொடூரமாய் உயிர் நீக்குதல்
மட்டுமே கருப்பொருளாய்
மரண இயக்குநர்களின் படத்தையும்
வன்மத்தை ருசிக்கும் காலத்தில்
மக்கள் கூட்டம்
கொண்டாடித்தீர்க்கிறது.
வெறுப்பை நேசிக்கும்
இளைஞர் கூட்டம்,
கழுதைப் புலியின்
வேட்டை இரத்தம் தோய்ந்த
அதே வெறியாட்டத்துடன்
ட்ரைலர் வெளியிட்ட
திரையரங்கைக் கூட
நாசமாக்கி வளர்கிறது.
கண்ணீர் பெருக்குடன் நிற்கும்
அன்பு மறுதளிக்கப்பட்ட கூட்டம்
ஆறுதல் சொல்ல யாருமின்றி
அணைத்துக் கொள்ள பேருமின்றி
வகையின்றி வாடிக்கிடக்கிறது,
அதே இளைஞர்களை நம்பி.

- ஜா.மு

#லியோ  #லோகேஷ் #LEO

22 ஆகஸ்ட் 2023

துரோகிஸ்டார்



பெயரிலேயே இணைந்திருப்பதால்
யோகியும் அல்ல.. - அவன்
யோக்கியனும் அல்ல..

காவி தரித்திருப்பதால்
துறவியும் அல்ல - அவன்
துறந்தவனும் அல்ல..

மத அரசியல்
மாட்டு அரசியல் என
வெறுப்பு அரசியல் செய்யும்
கருப்பு அரசியல் வாதியவன்.

பாமர நெஞ்சத்தில்
பாசிச வெறியேற்றுபவன்,
பாசமுள்ள பக்கத்து வீட்டான்

முஸல்மான் என்றால்
புலிக்கு மான்
அகோர வேட்டையாடு
ஆசி உண்டென்பவன்.

அரசியல் லாபத்திற்காய்
அறமில்லா மனங்களை
அபயங் கொடுத்து வளர்ப்பவன்.

இன அழிப்பின் அட்டூழியம்
நீதி நியாயம் கேட்டால்
வீடு இடிக்க புல்டோசர் வரும்.

அன்பில்லா நெஞ்சத்தார்க்கு
ஆயுதங் கொடுத்து மனிதம் அழிப்பதா?
கேட்டுவிட்டால் எண்கவுண்டர் தான்.

சோசியல் மீடியாவில்
பாசிசம் எதிர்த்துப் பகிர்ந்தால்
போலிஸ் லாக்கப்.

மண்ணில் நடந்ததை
மாற்ற முடியாது - இஸ்லாமிய
மன்னர்கள் ஆண்டதையும்
மறுக்க முடியாது என்பதெல்லாம்
இவன் உச்சந்தலையில் நச்சரிக்கும்.

அதனால் தான்
அலாஹாபாத் உட்பட
அழகிய இஸ்லாமிய பெயர்ப் பலதை
வன்மமாய் மாற்றிப்போட்டான்.

பாலகர்கள் படிக்கும்
பள்ளி புத்தகத்தின் சரித்திரத்தில்
சுள்ளி வைத்து கொள்ளி வைத்தான்.

இதெல்லாம் நாடறிந்தது,


ஊருக்கே அயோக்கியன்
சங்கி ஸ்டாருக்கு மட்டும்
கடவுளாகத் தான் தெரிகிறானாம்.

போடும் வேடம்
ஹீரோவானாலும்,
நம் மண்ணுக்கு
வில்லன் இவன்.

அறிவாளி போல் பேசும்
கோமாளி இவன்.

ஆரிய சித்தாந்தம்
தமிழ் நாட்டில் வேர் பிடிக்க
காவிக்கு ஆள் பிடிக்கும்
கால் பிடி கபடனிவன்.

கலைஞர் முதல் அறிஞர்கள் பலர்
பக்கத்தில் இருந்தும்
மூளை வளராத முடமிவன்.

வானத்து நட்சத்திரம் போல
கொண்டாடிடும் ரசிகர்களால்
சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தும்
குப்பையில் சேரும் சருகு இவன்.

தமிழ்நாடு தலையில் வைத்துக் கொண்டாட
புல்டோசர் வாயன் காலை
உ(த்)திரப்பிரதேசத்தில் தேடி ஓடுபவன்.

நல்லவேளை துரோகிஸ்டார்
கட்சி ஆரம்பிக்கவில்லை,
பத்து பைத்தியம் இவனுக்கும்
கொடி பிடித்திருக்கும்
தமிழ் நாடு தப்பித்தது.

தூத்துக்குடி போராட்டக்காரர்களை
சமூக விரோதிகள் என்று
முதுகில் குத்தியதை ஏனோ தமிழர் மறந்தோம்.

ஆனால், ஆஸ்பத்திரியில்
போராட்ட இளைஞன் கேட்டானே
அந்த கேள்வி தான்
எல்லார் நெஞ்சிலும் இப்போது


ஆமா… யார் நீங்க?
துரோகிஸ்டார்


-ஜா.மு

24 ஜனவரி 2023

நம்பலையே



செய்த வேலைகளை
அப்படியப்படியே விட்டுவிட்டு
தடுப்புக்கூரைகள் நோக்கி
எல்லோரும் விரைந்தோட
நனைந்த ஆடைகளை உதறி
கைகளால் தலையைத் துவட்டி
ஆசுமாசமாகி..
"ச்சோ" வெனப் பெய்யும்
மழையை பார்த்துக்கொண்டே
"ஏம்ப்பா..
எஃப் எம் ரேடியோல ஒன்னும்
மழப் பெய்யும்ன்னு
சொன்னதா தெரியலயே.."
என்றவனைப் பார்த்து
"பொத்துக்கிட்டு ஊத்தியும்
அட..
வெத்துப் பய நம்பலையே"
என்றது மழை.
-ஜா.மு.
23-01-23

உணர்வின் மொழி!

பார்த்த மாத்திரத்திலேயே
உணர்வுப் பொங்க வைக்கிறது
சில எழுத்துக்கள்.
படிக்கும் நிகழ்ப் பொழுதிலேயே
உருகி அழவைத்துவிடுகிறது
சில சொற்கள்.
ஆழ்ந்த சில நொடிகளிலேயே
உருக்குலைய வைக்கிறது
சில வரிகள்.
அது வெறும்
எழுத்துக்களால் ஆன
சொற்கள் என்பதைத் தாண்டி,
அவை..
உயிரைத் தோண்டிக்
கிளற.. கிளறப்
பூதம் போல வெளிப்பட்டவை,
வெறி கொண்டு
மென் உணர்வின் மீது
காழ்ப்புடன் எறியப்பட்ட
கற்களின் ரத்தம் தோய்ந்தவை,
அக்கினி மிகு
அனல் சூழ் வாழ்வில்
யாருக்கும் தெரியாமல்
எரிந்த பெருந்தீக் கருக்க,
உள்ளம் உருகப் பெருகிய
கண்ணீரினால் ஆன
உப்புக்கற்கள் அவை.
- ஜா.மு
24-01-17

03 ஜனவரி 2023

நள்ளிரவில் பிறக்கும் புத்தாண்டு



எல்லா புத்தாண்டும்
நள்ளிரவில் தான் பிறக்கிறது!
இரவு என்பது
இருளின் போர்வையால்
நம்மை கதகதப்பாக்கி
ஓய்வின் கரிசனத்தால்
அணைத்துக் கொள்வது;
மனதையும் உடலையும் சாந்தப்படுத்தி
அடுத்த உழைப்பிற்கு தயார் செய்வது;
இரவு என்பது வாழ்வின் இருளல்ல
இரவின் இருள் என்பது
வாழ்வின் விளக்கிற்கு
பிரகாசத்தை ஏற்றும் ஒளியின் கரம்.
இரவிற்கு ஆயிரம் ரகசியங்கள் இருந்தாலும்
இரவிற்கும் நமக்குமான
ஆலிங்கனம் வெளிச்சம் பட்டு வெடிக்காத மென்மொட்டு.
கண்ணை மூடிக்கொண்டே
அன்பின் மையலோடு
கொஞ்சம் சூரியனை நோக்கி
பூமி சுற்றி நகர
கிழக்கு வெளுத்துவிடும்.
அதுவரை உறங்கி
நிதானமாக நாழிகை நகரட்டும்
உற்சாகமாய் கதிரோன் மலரட்டும்
புத்துணர்வு சூழ
புதிய புலர்ச்சி
இருக்க வேண்டியே
எல்லா புத்தாண்டும்
நள்ளிரவில் தான் பிறக்கிறது!
நம் ஒவ்வொருவரின்
வான் வனத்திலும்
புதிய சூரியப்பூ மலர்கவே!
- ஜா.மு
01-01-2023 12:28 am