27 ஆகஸ்ட் 2012

அண்ணன் தாஹாவின் மகனுக்கு வாகாய் ஓர் வாழ்த்து!


இன்று மணவிழா கண்ட மணமக்கள் எங்கள் 

அமீரக‌ காயிதே மில்லத் பேரவை-யின் 

செயலாளர் பாசமிகு அண்ணன் 

முஹம்மது தாஹா 

அவர்களின் புதல்வர் 


மணமகன் 
"முபாரக் அலி" 
அவர்கள் 

மணமகள் 
"நூரியா பானு" 
அவர்களுடன் 

பதினாறு செல்வங்களான

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இவைகளை பெற்று  முன்னோர்கள் அறுதியிட்டு கூறியபடி பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல நாயனை பிரார்தித்து அவனது திருத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவசல்லம், அவர்களது திருக்குடும்பத்தினர், சஹாபாக்கள் மற்றும் நல்லோர்கள் ஆசிகள் சூழ வாழ்கவென வாழ்த்துகிறேன்.

அன்புடன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


23 ஆகஸ்ட் 2012

கண்ணாடி முன் என் நாடி!


அழகே அற்புதமே
தன்னையே தான் ரசிக்கும் நிலவே!

கண்ணாடியில்
முகம் பார்க்கும் கனியே!

என் நாடியே
எழிலே.. பொழிலே..!

குயிலுலக ராகத்தினை
குதூகலத்துடன்
குழலென இசைக்கும்
குலமகனே!

உன்னையே நீ நோக்கி..
உனக்கே நீ
சொல்லிக்கொள்ளும்
உவமைகள் தான் என்ன கண்ணே!

கண்ணோடு கண்ணோக்கி
உன்னையே நீ
காதலுறும் காட்சி தனை
காணயான் களிப்புற்றேன்  கண்ணே!

நான் தான் நீயா என
நீ கேட்க..- உன் பிம்பமும்
நான் தான் நீயாவென
திரும்ப விளிக்கிறதோ..?
உன்னிடம் கண்ணே!

நாளும் பொழுதும் - உன்
பேச்சிலும் கூத்திலும் குறும்பிலும்
நானடைந்த பேற்றினை எங்கனம் சொல்ல!

எனக்காய் நீ!
அருளாய் அவன் தந்த 
கணக்கினை தான் எங்கனம் விள்ள!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 ஆகஸ்ட் 2012

துபாய் ஈதும்.. பேரிச்சை பழுக்கும் வெம்மையும்!



எந்த ஈத் பெருநாளிலிலும் இல்லாத அளவு துபாயில் வெம்மையும் புழுக்கமும் வதக்கி எடுத்துவிட்டது…ஈத் பெருநாளுக்காக துபாய்க்கு புஜைராவிலிருந்து மைத்துனர் ரிஜ்வான் அவர்களுடன் (ஆகஸ்ட் 19, 2012) அதிகாலை 2.45க்கு புறப்பட்டு சரியாக 4 மணி வாகில் வந்தாலும் பார்க்கிங்கிற்காக படாத பாடுபட்டு ஒருவழியாய் கிடைத்தது பரஹா பெல்ஹூல் ஹாஸ்பிட்டல் அருகில். காரை விட்டு கதவை திறந்தவுடன் தான் தெரிந்தது நாங்கள் இதுவரை புஜைராவில் தெரிந்திருக்காத புழுக்கமும்.. வெம்மையும்.. அதுவும் அதிகாலை மணி 4 – க்கெல்லாம். சரியென வேர்வை வழிய துடைத்துக்கொண்டே வழுத்தூர் ரூம் அடைந்தும் அடையாது கீழிறங்கி உப்புமாவையும்.. சமோசா வகைராக்களையும் பசிக்காக உள்ளே அழுத்திவிட்டு தேனீர் குடிப்பதற்குள்ளாகவே அல்-ஃபுத்தைம் பள்ளியிலிருந்து தொழுகை அழைப்பு ஓசை வர அதிகாலை சுப்ஹு தொழுகைக்கு விரைந்து ஒருவழியாய் பலர் வழியை மறித்து தொழுது கொண்டிருந்தாலும் மாடியில் இடம் கிடைக்க தொழுது முடித்து பிறகு சற்றே குறு நாழிகை இடைவெளிக்கு பின் ஈத்கா விரைந்தால் இதுவரை இல்லாத அளவு அமீரக வரலாற்றில் முதன் முறையாக இந்த ஈத் என சொல்லும் அளவிற்கு புத்தாடை அணிந்து அணியணியாய் வந்த எல்லோரையும் வேர்வைக்கடலில் நீந்தவிட்டிருந்தது காலநிலை! குளித்து புத்தாடை பூண்ட புத்துணர்ச்சியெல்லாம் காலைவேலையின் இறுக்கத்திலும்.. வேர்வையிலும்… எங்கோ ஓடித்தான் போனது. இந்த பெருநாளுக்கு பெரும்பாலும் யாரும் சாப்பிட்டு வரமாட்டார்கள் நாங்கள் ஊரு விட்டு ஊரு வந்ததால் சற்றே சிற்றுண்டி சாப்பிட்டோம், ஆனால் பலரும் ஈத்கா வருவதற்கு முன் காலை உணவு சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை  மூன்றே பேரித்தம் பழம் மட்டும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்களின் வழிமுறையில் சாப்பிட்டு சாப்பிட்டிருக்கலாம்... இத்தனை நாளின் நோன்பின் அயற்ச்சியும் கூட, ஆக பெரும்பான்மையோர் மிக பலகீனமாக உணர்ந்ததாய் தெரிவித்தனர். அந்த நேரம் பார்த்து குத்பா பே........ருரையும் நேரம் பிடிக்கக்கூடியதாய் அமைந்திருந்தது அனைவருக்கும் குத்பா ஓதியது.

பொதுவாக எல்லா பெருநாட்களிலும் தொழுகை முடிந்தும் கூட நீண்ட நேரம் நண்பர்களின் முகமன் விசாரிப்புகளும், ஆரத்தழுவுதல்களும் குழு குழுவாய் நிறைந்திருக்கும் ஆனால் இந்தப் பெருநாளில் விட்டால் போதுமெனத்தான் பெரும்பாலும் இருப்பிடம் நோக்கி நடையைகட்டியதை பார்க்க முடிந்தது.. ஏனெனில் அவ்வளவு இறுக்கம்… வெம்மை… வேர்வை கசகசப்பு! ரூமிற்கு வந்து ஏசியில் கொஞ்சம் ஆசுவாசப்பட்டவுடன் தான் நிம்மதியான மூச்சே வந்தது. பேரிச்சைப்பழம் பழுக்கும் நேரத்தில் பெருநாள் கொண்டாட வேண்டியிருந்ததால் ‘நம்மை வெம்மை கொண்டாடிவிட்டது' பேரிச்சை பழுக்கும் முன் 'பேரிச்சையுடன்' எங்களை பழுக்க செய்துவிட்டது

எது எப்படியோ இறைவன் எல்லோருக்கும் நிறை நலம் வழங்கி சிறப்பான வாழ்வை இந்த ஈத் பெருநாள் பொருட்டால் வழங்கட்டும். இந்த சிறப்பான நோன்பை நமக்கு கற்றுத்தந்து இறைக்கட்டளையை இனிதே நமெக்கெல்லாம் வழங்கி நம்மை மிகச்சிறப்பான அனுபவத்திற்கு இட்டுச்சென்ற வார்த்தைகளால் வடிக்கமுடியாத புகழுக்குறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நாம் என்றும் நினைத்து நன்றி செலுத்த கடமைபட்டவர்கள். அந்த நிறைதூதர் ஸல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களுக்கு என்றும் சுப சோபனம் உண்டாவதாக! ஆமீன்.





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா