31 மார்ச் 2011

அமாவாசை

உலகம் புரியாத வயதில்.. தொடர் கவிதைகள் -1


நிலவே – நீ

இறந்து விட்டதாக

எண்ணி நட்சத்திரங்கள்

மெளனம் அனுஷ்டிக்கிறது..!



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




பகைப்படையின்

அத்துமீறலால்

தப்பிக்க வழியில்லாமல் – ஏன்

கொஞ்சம் கொஞ்சமாக

சிதைத்துக் கொண்டாய்

நிலா தளபதியே!

உன்னைக் காணாமல்

எங்களைப் பார்த்து

வெள்ளை விளக்குகள்

காட்டி ஒளிர்ந்து

உதவி..உதவி..என்றழைக்கின்றனர்

உன் மீண் வீரர்கள்!


இந்த இரு நிலாக்கவிதைகளும் எழுதிய காலம் 1994 மே மாதம் நான் +2 படிக்கும் போது..16 வருடங்களுக்கு முன்

- இன்னும் புரியும்

12 மார்ச் 2011

ஜப்பான் பாபப் பலிகடாவா..?




நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து

மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில்

சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது..!


ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு..

உனக்கா..எனக்காவென நமக்குள்!

எனக்குத்தான் என்று அங்கே

கடல் எழுந்து வந்து

நாடு நகரங்களையே அபகரித்து போனது..!


சுவரைக்கூட விட்டுத்தர மனமில்லை நம்மில்,

சுவடே தெரியாமல் நாற்பது இலட்சத்திற்கும் மேலான

மண்ணின் மைந்தர்களுக்கு அங்கே வீடில்லை..

அலைஅடித்த வேகத்தில் அழிந்து போனது…


விக்கலுக்கு தண்ணீர் தேடுவது மனித இயல்பு

கப்பலையே தண்ணீர் விழுங்கியதே

ஏன்..? ஏன்..?

சீற்றம் கொண்டெழுந்து…

சினங்கொண்டு நடந்தது கடல்…!


வியாபாரத்தில் சிலபேர்..

தொழிற்சார்ந்து சிலபேர்..

பயணத்தில் சிலபேர்..

படுக்கையில் சிலபேர்.. என

எறும்பை போன்ற இயல்பினர்கள்

இயங்கிக்கொண்டிருந்த வேளையில்..

இதயமே இல்லாத இயற்கையே ஏன்

இழுத்து.. புரட்டி.. அடித்து..

மூர்க்கத்தனமாய் மூர்ச்சையாக்கினாய்..?


உன் மேலேயே நடந்து

உன் முதுகையே குத்தி கிழித்து

வதை செய்வதனால் சினங்கொண்டாயோ..!


இயற்கையே தயவு செய்து மனிதர்களை மண்ணித்து விடு

உன் பெருஞ்சக்திக்கு முன் மனிதர்கள் கேவலமானவர்களே..!

உன் அதிர்வும் ஆதிக்கமும் தயவுசெய்து இனி வேண்டாம்

உன்மேல் நடக்கும் செல்லப் பிள்ளைகள் தானே நாங்கள்..,

உன்னிடமிருந்தே அற்பவாழ்வை வரமாக பெற்றவர்கள் தானே நாங்கள்..!


பேராற்றலே..!

உன் சீற்றத்திற்கும்.. சினத்திற்கும்..

ஆக்ரோசத்திற்கும்.. ஆதிக்கத்திற்கும் முன்னால்

எத்தனை ஆயுதங்கள் எங்களிடம் இருந்தாலும்

நாங்கள் நிராயுத பாணிகளே..!

நாங்கள் இயலாதவர்களே..!


எல்லாவற்றுக்குமான எஜமானே..!

இயற்க்கையாயும் அதன் பேராற்றாலாயும் இருக்கும் பெருஞ் சக்தியே..!

உனக்கு மனதால் அழுது விண்ணப்பம் விடுக்கிறேன்

இனி இது போன்ற துயர் தராதே..!

நாதியற்ற நெஞ்சங்களுக்கு

இனியேனும் இதம் தா..

எந்தவித மருந்துகளும் ஆற்றாத அந்த ரணங்களை

உன் கருணை இறகால் தடவி.. தேற்று..!

அன்பு காட்டு.. அணைத்துக்கொள்..!

பாதிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு உன் பரிவு கொண்டு துணையருள்..!

===============================================================================================================

இயலாமையும்.. பரிதவிப்பும் நிறைந்த அந்த சூழலை நினைத்து மனம் கசியவே மட்டும் தெரிந்த..

இவண்..

ஜே.முஹையத்தீன் பாட்ஷா..எனும் சிற்றுயிர் மானுட பிராணி