26 நவம்பர் 2022

அமீரகத்தில் மழை

மழைக்கால காலையில்
பப்ளிக் ட்ரான்போர்டில்
பயணம் செய்து அனுபவித்தோர்
பேறு பெற்றவர்கள் *
ஆபிஸுக்கு போனடிச்சிட்டு போர்வையை இழுத்து போத்திக்கொண்டு
இருட்டறையில் இதமாக குளிரை அனுபவித்து தூங்குவோர்
பெரும் பேறு பெற்றவர்கள் *
இரண்டும் இல்லாமல்
அன்னந் தண்ணி இல்லாது
காரிலேயே காலையிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு ட்ராபிக்கில்
சித்திரவதை அனுபவிப்போர் தான்
கொடுப்பினை யற்ற பிறவிகள்
***
ரவுண்டபவுட் பிரிட்ஜ் என எங்கும் வெள்ளம்
போலிஸார் படுசிரம மக்கள் பணியில்..
ஹெலிகாப்டர்கள் பரந்த வண்ணம்
பல விபத்துக்கள்.. எவ்வளவு அவஸ்தை.
- ஜா.மு
26-11-2018

திறமாக்கித் தந்தருள்வாய்!



இறைவா!

தெரியாத நாளை தன்னை
திறமாக்கித் தந்தருள்வாய்!

புரியாத புதிர்களுக்கு
விடையாகித் திரை களைவாய்!

தேவையில்லாச் சிந்தனைகள்
தெறித்தோட வகைச் செய்வாய்!

எது வந்து எதிர்த்தாலும்
அதைத் தீர்க்கும் உரம் அருள்வாய்!

வாழையடி வாழையாக
குலம் செழிக்கக் குணம் இசைவாய்!

வளமைகளும் செழுமைகளும்
வளர்ந்தோங்க நிதம் அருள்வாய்!

உளம் சிறந்த உடல் நலத்தை
உடனாக்கி உயிர் வளர்ப்பாய்!

-ஜா.மு
03-08-2021
10:14pm


22 நவம்பர் 2022

பாலைவன பரமபதம் நூல் துபாயில் வெளியீடு

எங்கள் அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal குழும உறுப்பினரும் மெட்ராஸ் பேப்பர் வார இணைய இதழ் எழுத்தாளருமான Sivasankari Vasanth சிவசங்கரி வசந்த் அவர்களின் முதல் நூலான "பாலைவன பரமபதம்" வெளியீட்டு நிகழ்வு 19-11-2022 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.
நூலினை Galaxybs Galaxybs கேலக்ஸி பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருந்தது.
விழாவை குழுமத் தலைவர் ஆசிப் மீரான் Asif Meeran அண்ணன் தலைமையேற்று சிறப்பாக தொகுத்தளித்தார், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை நூலாசிரியர் மகள் பூர்ணிகா பாடினார். வரவேற்புரையை குழும உறுப்பினர் சந்தியா தண்டபாணி வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களான இந்தியத் தூதரக அதிகாரி மாண்பமை காளிமுத்து ஐயா அவர்கள் புதிய நூலை வெளியிட, குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பெனடிக்ட் ராஜ் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் திரு புகழேந்தி மற்றும் திருமதி உமா புகழேந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்தனர்.
நிகழ்வில் குழும உறுப்பினர்கள் Suresh Babu, Sasikumar Ssk , Balaji Baskaran Jazeela Banu Bilal Aliyar Subhan Peer Mohamed J Mohaideen Batcha Firdhous Basha மற்றும் சமீபத்தில் மராம்பு என்ற நூலை வெளியிட்ட எழுத்தாளர் Naseema Razak நசீமா ரசாக், வாழ்த்துரை வழங்கினர் பிறகு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினர் அதையடுத்து நூலாசிரியர் சிவசங்கரி ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியில் நூலாசிரியர் சிவசங்கரியின் கணவர் வசந்த் Vasantharaj Krishnaswamy அவர்களை ஆசிப் அண்ணன் அழைத்திட முதன் முதலாக மேடையேறி அவர் நன்றியுரை செய்தது முத்தாய்ப்பு. மேலும் நூலாசிரியர் சிவசங்கரியின் உறவினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டது சிறப்பு.

சுபஹான் அண்ணன் எப்போதும் போல சிறப்பான புகைப்படங்களை எடுத்தளித்தார். Ahamed Zayed அஹமத் ஜாயத், கலைஞன் நாஷ் கலைஞன் நாஷ் வீடியோ பதிவு செய்தனர்.
அபுதாபியிலிருந்து Raja Rajaram Balkarasu Sasi Kumar எழுத்தாளர் நித்யா குமார் எனப் பலர் திரளாக வந்திருந்தனர்.
விழா நிறைவில் அற்புதமான இரவு உணவு அளிக்கப்பட்டது.

அரங்க ஏற்பாடுகளை அண்ணன் FJ tours & Travels Riyas Ahamed செய்திருந்தார்.
நூல் கொரோனா" காலகட்டத்தைப் பற்றி பேசும் புதினம் அதில் குழுமத்தின் Kausar Baig மற்றும் Firdhous Basha இருவரின் அரும்பணியைப் பற்றி இந்த நூலில் பதிவு செய்தது பெரும் சிறப்பு.
மீண்டும் ஒரு நிறைவான நிகழ்வில் அன்பின் உள்ளங்களை சந்தித்ததில் உள்ளம் நிறைந்திருந்தது.

நிறைய நூற்கள் வரட்டும், சிவசங்கரி வசந்த். வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.

ஜா.மு
20-11-2022

சீகல் இன்னும் வரவில்லை!

கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
செப்டம்பரிலெல்லாம் சிறகு விரித்தாடி
செவிக்குணவாய் உன் கூவல்களையும்
கவிக்குணவாய் உன் மேவல்களையும்
புவிக்கழகாய் தருவாயே
பறக்கும் பூவிதழே
நிறக்கும் சோபிதமே
நீ எங்கே..
நீ எங்கேயெனவே..
உன் அழகு சூழும்
பிரதான கடற்கரைகளில்..
நீ சிறகுளர்த்தும் புல்வெளிகளில்
விழிவைத்திருந்தேன்..
ஏமார்ந்தே எதிர்பார்த்திருந்தேன்..
இனிய சீகல் பறவையே
இன்னும் நீ வரவில்லையே
சீகல் நீ இல்லையானால்
சீசன் சிறக்குமோ அமீரகத்தில்..
உனக்கென்ன ஆச்சு
இயற்கைக்கு இழுக்கிறதா மூச்சு
என்றெல்லாம் புலம்பி
துயர் தரித்தேன்..
முந்தாநாள் மாலை
கூட்டம் கூட்டமாய்
ஆகாயத்திற்கு அதிசய
மாலைச் சூட்டி
மகிழ்திருந்திருந்தாய்.
காணாத கண்களுக்கு
எழிலோவியம் காணத்தந்தாய்.
பார்த்துப் பூரித்தேன் - பால்
வார்த்து என்னுயிர் வளர்த்தாய்.
உள்ளம் நெகிழ்ந்து இன்ப
வெள்ளத்தில் ஆழ்ந்துபோனேன்.
21-11-21
10:44 pm
சீகல் - கடற்காகம்

- ஜா.மு

08 நவம்பர் 2022

அமீரகத்தில் பாரதியார் கவிதைகள் அரபு மொழி பெயர்ப்பு வெளீயீடு


• அமீரக எழுத்தாளர்கள்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில் 06-11-2022 அன்று துபாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாகவி பாரதியார் கவிதைகள் முனைவர். ஜாஹிர் ஹுஸைன் அவரகளால் அரபி மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் வெளியிடப்பட்டது. நூலினை திரு.பாலாஜி பாஸ்கரன் அவர்களின் கேலக்ஸி பதிப்பகம் Galaxybs Galaxybs மிக நேர்த்தியாக பிரசுரித்திருந்தது.
• நிகழ்விற்கு அமீரக அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் மாண்பமை ஹெஸ்ஸா தஹ்லக், தகவல் தொழில் நுட்பத்துறை சமூக அமைச்சக ஆலோசகர் சயீத் அப்துல்லாஹ், அமீரக அரபுக் கவிஞர் காலித் அல் ழன்ஹானி, அமீரக அரபு நாவலாசிரியர் அஸ்மா ஸ்ர்வூனி போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க நூல் வெளியிடப்பட்டது.
• விழாவிற்கு அமீர்க எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் தலைவர் திரு.ஆசிப் மீரான் தலைமை தாங்க விழாவினை எழுத்தாளர் ஜஸீலா அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முக்கிய விருந்தினர்கள் மூலம் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பாரதியார் அரபு மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
• சிறப்பு விருந்தினர்கள் முன் அமீரகத்தின் பிரபல பேச்சாளர், பல்துறை வித்தகர் சசிகுமார் அவர்கள் பாரதியை ஏன் போற்ற வேண்டும் என சிறப்பாக விளக்கினார், பிறகு பாரதியின் கவிதை ஒன்றை பொன்மாலைப் பொழுது கணேசன் அவர்கள் அழகுக்குரலில் பாடி அசத்தினார். இருவருரின் மேடைப்பங்களிப்பும் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.
• சிறப்புரை வழங்கிய அமைச்சக செயலாளர் மற்றும் அமைச்சக ஆலோசகர் தென்இந்திய அமீரக உறவு முவாயிரம் ஆண்டு தொண்மையானது என்றும், முனைவர் ஜாஹிர் ஹுஸைன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குறளைப் படித்த போது இஸ்லாமிய நெறிகளை அப்படியே சொல்லி இருப்பதாகவே பட்டது என்றும் கூறி வியந்தார். மேலும் பாரதி பற்றி இந்நூலைப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் தமிழ் மொழியின் பொக்கிசங்களை தாங்கள் எப்போதும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்வில் அமீரக கவிஞர் மற்றும் நாவலாசிரிர் பேசும் போதும் பாரதியின் அறிமுகம் தங்களுக்கு கிடைத்ததின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
• ஏற்புரை நிகழ்த்திய முனைவர் ஜாஹிர் ஹுஸைன் கடந்த பத்தாண்டு காலமாக தனது மொழி பெயர்ப்பு பயணத்தை விளக்கிப் பேசினார். அதற்கு தமிழக அரசின் உறுதுணை மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். தமிழ் மொழியை பரவலாக்க என்ன செய்ய வேண்டும் என பாரதி தனது கவிதைகளில் குறிப்பிட்டவற்றைப் பட்டியலிட்டு அதை நாம் செய்ய வேண்டும் என்று உணரவு மேலிடப்பேசினார். நமது மொழியின் மத நூல்கள் அல்லாதா பொக்கிசங்களை இலக்கியங்களை பிற நாட்டு மொழிக்கு கொண்டு போகும் போது தான் நம் மொழி பற்றி அவர்கள் அறிந்து போற்ற நேரிடும் என்றும் அது போல பல மொழிகளிலிருந்தும் நம் மொழிக்கும் சிறப்பானவற்றை கொண்டு வர வேண்டும் இதைத் தான் பாரதி கூறினான் அதை நான் செய்வதன் மூலம் அவனின் கனவை நனவாக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது என்றார். மேலும் கல் தோன்றி மண் தோன்றா மூத்த மொழி என்பதற்கு ஆய்வின் மூலம் விளக்கத்தை கூறி தமிழர்களின் தொன்மையை விளக்க அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தமிழகத்தின் இஞ்சியும், நறுமணப்பொருட்களும் பல்கீஸ் ராணி, தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளித்த பரிசுப்பொருட்களில் இருந்த ஆதாரம் சொல்ல வியப்பாய் இருந்தது. பிறகு அரபுக் கவிஞர் அண்ணலாரைக் கவிதை மூலம் வியந்த போது இந்திய வாளின் சுடரொளிப் போல என கவித்துவத்தில் வியந்ததை கோடிட்டுக் காட்டினார். மேலும் பாரதிக் கவிதைகளின் அரபு மொழியாக்கத்தை, திருக்குறளை எல்லா அரபிகளுக்கும், அரபு நூலகத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவு செய்தார்.
• பல சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கவும், பாலாஜி அவர்கள் நன்றி சொல்லவும் விழா இனிதே நிறைவு பெற்றது.
• நம் தாய்த் தமிழ் மொழிக்கும் மகாகவி பாரதிக்கும் மறக்கமுடியாத விழாவாக, வரலாற்றுச் சிறப்பு மிகு விழாவாக அமைந்திருந்த இதை அழகிய முறையில் அமீரக எழுத்தாளர்கள் குழுமத்தின் அங்கத்தினர்கள் சேர்ந்து முன்னெடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக Asif Meeran Jazeela Banu Balaji Baskaran Firdhous Basha Bilal Aliyar Charu Mathi - Shroo Kausar Baig Sasikumar Ssk Sivasankari Vasanth போன்றோருக்கும் மற்ற நம் அனைத்து குழும உறுப்பினர்களுக்கும் அன்பின் வாழ்த்துகள்.
அன்புடன்
ஜா,மு.
07-11-2022.
புகைப்படங்கள் Subhan Peer Mohamed & Riyas Ahamed