29 ஜனவரி 2012

நமது முற்றத்திற்கு எனது முத்தம்



முற்றம் பெற்றேன்.. – உடன்
முத்தம் தந்தேன்

எழுத்துக்கள் வாசித்தேன்
இதயத்தை தொட்டது

கருத்துக்கள் ஒவ்வொன்றும்
கல்பினை குளிர்வித்தது

மொத்தத்தில் முற்றம்
ஆசிரியரின் முகம் பார்க்காமலேயே
அவர் முகவரி கூறியது



அபூ ஹாஸிமா –
இவர் பெயரோடு
ஹாஸிம் இருப்பதாலோ என்னவோ
ஹாஸிம் குடும்ப மாசில்லாநேசரானார்

அறிவை அடகுவைத்து விட்டு
சிந்தனைக்கு சிரச்சேதம் செய்துவிட்டு
உண்மையைச் சொல்ல
அல்லாஹுவைத் தவிர
அனைவருக்கும் அஞ்சிவிட்டு
உளத்தால் மாக்களானதால் - சில
உலமாக்கள் எனப் பெயர்கொண்ட
இருண்ட உள்ளத்தாரின் இருட்டடிப்பால்
சமூகத்திற்கு சன்மார்க்கம்
காலம் காலமாகவே மறைக்கப்பட்டு வந்தது
இந்த ஏக்கம் ஏகபோகமாக
எங்கள் இதயங்களில்..!

இதில்,
மார்க்கப்பத்திரிக்கைகளின் கூத்தோ
தாங்க முடியாதது..,
கேள்வி பதில் பகுதியில்
மார்க்கம் கருவாட்டுச் சந்தையாய்
உருமாறும் காலத்தில்..
அத்தர் வாடை வீச
நெற்றிக்கண் திறந்து
நீதம் பேசுகிறது முற்றம்.


நாட்டைக் கெடுத்து நிற்கும்
காட்டு எலிகளுக்கு
சாட்டை தயாராகிவிட்டது
முற்றமே உன்னால் 
எம் மனம் திடம்..திடம்..
இனி நீ புரி..நடம்.. நடம்..


இன்று
எங்களது முற்றம் வந்த
நமது முற்றமே வருக!
அபூ ஹாஸிமாவே வாழ்க.!!
எல்லார் நெஞ்சையும் ஆள்க!!!


2006 என நினைக்கிறேன்.. அப்போது நமது முற்றம் ஆசிரியர் துபை வந்தபோது ஒரு நிகழ்வில் நான் வரவேற்க நான் அவர் முன் மொழிந்த கவிதை..


குறிப்பு;  ஹாஸிம் குடும்பம் - நபிகளாரின் குடும்பம்..


-ஜே.எம்.பாட்ஷா

அண்ணல் நபியும்.. அரசும்..!


மீலாது சிந்தனைகள்; 2


ஆசிரியர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பாணியில் பாடம் நடத்துவர்.. அதில் மாணவனின் மனநிலையை அறிந்து, அவனுகேற்றாற்போல் புரியும் விதத்தில் பாடம் நடத்தி எளிதில் பாடத்தை அவனது மனதுக்குள் புரியவைத்து புகுத்தும் ஆற்றல் சில ஆசிரியருக்குத் தான் கைவந்த கலையாகும். அந்த விதத்தில் வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் பள்ளியில் நான் படிக்கும் போது இருந்த ஆசிரியர் குறித்துத் தான்  இங்கே சொல்லபோகிறேன்..



அவர் பல மாணவர்களை உருவாக்கி பல சீனியர் மாணவர்களாலும் ஊர் பிரமுகர்களாலும் அரசு.. அரசு.. என எப்போதும் முணுமுணுக்கவைத்த அரசு என்கிற திருநாவுக்கரசு ஆசிரியர். பக்கா பெரியார் பக்தர்… பகுத்தறிவுவாதி.. பெரியாரைப்போலவே சடங்கு சம்பிரதாயங்களை தேவையற்ற மூடப்பழக்க வழக்கங்களை எப்போதுமே விமர்சித்தும்.. கிண்டலடித்தும்.. தன் கருத்தை பதிவுசெய்வார் இது அவரது வழக்கம். அதே நேரத்தில் தமிழனின் பண்டைய அடையாளங்களையோ அல்லது பண்பாடுகளையோ விட்டுக்கொடுக்கத் துணியாதவர்.  பள்ளி நேரம் கழிந்தால் இவரைச் சுற்றி எப்போதுமே பழைய மாணவர்கள் பலபேர் சூழவே இருப்பார்.. அவர்களின் சிலாகிப்புகளால் கவரப்பட்ட பலபேரில் நானும் ஒருவன் அதனால் அவரிடம் படிக்கும் வாய்ப்புக்காக ஏக்கப்பட்டதுண்டு… சரி அவரிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என்றால்..

வகுப்பறைக்கு வருவார்.. பாடம் நடத்த வேண்டியதை புத்தகத்தில் பார்த்துவிட்டு அது சம்பந்தமாக ஓர் ஓவியம் மிக எளிதாகவும் விரைவாகவும் வரைந்துவிட்டு பள்ளிக்கு வெளியில் இருந்து ஆரம்பிப்பார் அதில் நம் தினசரி அனுபவம், அரசியல், திரை என வலம்வந்து நடத்தப்படக்கூடிய பாடத்தோடு ஒப்பிட்டு அதனை விளக்க அனைவரையும் அது அசத்திவிடும்.. எளிதில் புரிந்துவிடும்.

ஆசிரியர் திருநாவுக்கரசு
அந்த நாள் எனக்கு மறக்காத ஒருநாள் பதினோராம் வகுப்பு படிக்கையில் திடீரென பாடம் எடுக்க அன்று வந்தவர் ''முஹம்மது'' என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல் என ஒரு நண்பரை எழுப்பி வினவினார்..  திடீரென அதை எதிர்பார்க்காத நண்பர் சிரித்துக்கொண்டு மேலும்கீழும் பார்த்து தனக்கு தெரியாதென உடல்மொழியாலேயே சொல்லிவிட்டார், பிறகு ஓர் முதல் மாணவனை எழுப்பி அவனை பரிசோதிக்க அவனுக்கும் தெரியாதது தெரிந்தது… பிறகு அவரின் பார்வை என்மீது பட மிகுந்த நம்பிக்கையோடு நான் சொல்வேன் என்று எதிர்பார்த்த அவருக்கு நானும் மிகவும் வெட்கத்தோடு தெரியாது எனச்சொல்ல.. அவரே சொன்னார் ''முஹம்மது என்றால் புகழப்பட்டவர் அல்லது புகழுக்குரியவர் என்று பொருள் அதை அழகு தமிழில் கூறினால் புகழேந்தி'' எனக்கூறி விளக்கம் கொடுத்தப் பிறகு ஆரம்பித்தார் புகழ் என்னும் அதிகாரத்தை திருக்குரளில்! (எனது அன்றைய நிகழ்வு என்னை பலகாலம் என்னை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது எத்தனையோ குர்ஆன் மற்றும் ஹதீஸ் பேசி இருக்கும் எனக்கு அன்று அதன் பொருள் சொல்லத் தெரியாமல் இருந்து விட்டேனே என்று!)

பல சமய மாணவர்கள் கலந்து படிக்கும் பள்ளியறை அதானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மற்ற மாணவர்களிடம் ஒப்புதல் கேட்பார் ''நான் ஓர் சம்பவத்திற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்ததை சொல்லப்போகிறேன் சொல்லட்டுமா'' என்று..! ''அறிவு எங்கு கிடைத்தாலும் ஏற்றுக்கொள்வோமே அது முஹம்மது நபியிடம் கிடைத்தாலும் என்ன… ஏற்பதில் தவறொன்றும் இல்லையே'' என்று பல சந்தர்ப்பங்களில் பல விடயங்கள் குறித்து நபிகள் நாயகத்தின் நிலைப்பாட்டையும்.. வரலாற்றையும் கூறி எனக்கு அவர்களைப் பற்றி படிக்கவும், ஆராயவும் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்..

அரேபியாவில் அன்று ஓர் கிழவி தன் ஊரிலிருந்து நிறைய மூட்டை முடிச்சுடன் மிகவும் சிரமப்பட்டு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் வயதான அப்பெண்மணி சிரமப்படுவதை கண்ட நபிகள் நாயகம் (ஸல்..) அம்மா.. உங்கள் பொதிகளை கொஞ்சம் தாருங்கள் நான் உதவி செய்கிறேனே என்று கேட்க அக்கிழவியும் நான் ஊரை விட்டே அடுத்த ஊருக்கு செல்கிறேன் உங்களுக்கு சிரமம் ஏன் என அவள் சொல்ல எனக்கொன்றும் சிரமம் இல்லை வயதான காலத்தில் ஏன் இவ்வளவு சுமைகளை சுமந்து வெளியூருக்கு செல்கின்றீர்கள் என நபிகள் நாயகம் திரும்பக் கேட்க இங்கே முஹம்மது என்ற ஒரு ஆள் இருக்கிறார் அவர் நாங்கள் வணங்கும் தெய்வங்களை.. சிலைகளையெல்லாம் தெய்வம் இல்லை எல்லோருக்கும் ஒரே இறைவன் என்கிறாராம்.. அவரை பார்த்தவர்களை எல்லாம் அவரது மதத்திற்கு இணைத்துவிடும் சூனியக்காராம் அவருக்கு பயந்து தான் நான் அடுத்த ஊருக்கு செல்கிறேன், அவர் மோசக்காரர்.. அவர் அப்படி அவர் இப்படி என ஆரம்பித்து அடுத்த ஊர் வரும் வரை மிக கடுஞ்சொற்கள் கொண்டு திட்டிக்கொண்டே வந்தாளாம் அவள் பொதிகளை சுமந்து வந்த நபிகள் நாயகமோ அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே மறுப்பேதும் சொல்லாது அமைதியாகவே வந்தார்களாம் அடுத்த ஊர் வந்தவுடன் ''சரிசரி நான் வரவேண்டிய ஊர் வந்து விட்டது நீ யார் பெத்த பிள்ளையோ ரொம்ப நன்றி தம்பி.. ஆமா இவ்வளவு தூரம் வந்தோமே உங்க பேரை சொல்லவே இல்லையே'' எனக்கேட்க நபிகள் நாயகம் மிகவும் பணிவாக ''நான் முஹம்மத்.. நீங்கள் இவ்வளவு தூரம் யாரை திட்டிக்கொண்டே வந்தீர்களோ அதே முஹம்மது தானம்மா நான்'' எனச் சொல்ல அந்த கிழவி மிக அதிர்ந்து போய்.. இவ்வளவு சாந்தமும், இரக்க குணமும் உடைய உங்களைப்போயா பிறர் சொல்ல அதை நம்பி நான் வாய் வலிக்க திட்டிக்கொண்டே வந்தேன் என்றும், இத்தனை அருங்குணங்கள் இருக்கும் நீங்கள் எதை போதிக்கின்றீர்கள் எனக்கேட்டு இஸ்லாத்திற்கு அவள் வந்ததாய் ஒரு நிகழ்வு உண்டு.. அதை ஆரம்பத்தில் இந்த அரசு வாத்தியார் சொல்லித்தான் நான் கேட்டேன். மேலும் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு ஞாயிரன்றும் கூடும் கூட்டத்தில் ஒரு நபிமொழியை வாசிக்க செய்தவர் அவர் தான். 

நான் 1984ல் வழுத்தூரில் முஹையத்தீன் ஜீலானி பெரிய பள்ளிவாசல் திறக்கும் போது அதன் சில பொறுப்புக்களை ஊரின் பள்ளி ஆசிரியர் என்பதால் ஏற்றிருந்தேன்.. அப்போது கண்ட காட்சி என்னை மிகவும் திகைப்படைய வைத்தது.. அது என்னவென்றால் காலையிலிருந்து கூட்டம் நடக்க மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சமனின்றி இருந்தார்கள் ஜும்மாவுடைய தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டபின் இகாமத் என்ற மற்ற ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது தான் தாமதம்.. திரண்டிருந்த பிரம்மாண்ட கூட்டம் ஒருசில நொடிகளில் வரிசை வரிசையார்.. ராணுவம் அணி திரண்டு நிற்பதைப்போல சரியான இடைவெளிவிட்டு அழகுற நிற்க கண்டு நான் மிக வியந்தேன்.. ஏனெனில் ஒரு ராணுவத்திற்கு கூட அவர்கள் எத்தனை பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் ஒழுங்கை ஏற்று எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் இயற்கையாகவே இவ்வாறு நடப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என்று அந்த அரசே எங்களிடம் தன் மனவோட்டத்தை பகிர்ந்து கொண்டார்.

ஒருமுறை இரு மாணவர்கள் பலமாக சண்டையிட்டுக்கொண்டார்கள் அவர்களை அவர் அழைத்தார் ''இங்கே வா நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் கட்டடத்தின் கற்களைப் போன்றவர்கள் என்று அப்படி இருக்கும் போது இப்படி ஒருவரின் மீது ஒருவர் சண்டையிட்டால் எப்படி சமூகம் உருப்படும்'' என்றார், ஒருவரின் உணவு இருவர் சாப்பிட போதும்.. இருவர் உணவு மூவர் சாப்பிட போதும் இது நபிகளார் சொன்னவை ஆக பகிர்ந்து உண்ணுங்கள்.. அண்டை வீட்டில் ஒருவர் பசித்திருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் உணமை முஸ்லிம் ஆகமாட்டான் என்று கூறி அண்டை வீடு என்று என்பதற்கு வீட்டிற்கு நாலு திசைகளிலும் உள்ள ஒரு வீடோ இரு வீடோ அல்ல எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் என நினைக்கிறேன் என்பதாக நபிகளார் சொல்லியது எனக்கு யாபகம் வருகிறது ஆகவே பகிர்ந்துண்ணுதலும் ஒரு கடைத் தெருவுக்கு சென்றால் கூட அக்கம் பக்கத்தில் இருக்கும் முதியவர்கள், பெண்கள் என பலவீடுகளுக்கும் சென்று என்ன வேண்டும்.. என்ன தேவை இருக்கிறது... என கேட்டு செல்வார்களாம் அதைப்போல நீங்கள் சமுக அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என அடிக்கடி சொல்லி இருக்கிறார் எனது ஆசான் அரசு. அவரின் நினைவு இந்த மீலாது தினத்தில் இயற்கையாகவே வந்ததால் ஓர் மாணவனின் நன்றி உணர்வை காட்டும் விதத்தில் இங்கே இதை என் எழுத்தாய் பதிவு செய்கிறேன்.

வாழ்க இது போன்ற சமயம் கடந்த நன்மக்கள்..!! வாழ்க நபிப்புகழ்..!!

-வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா


27 ஜனவரி 2012

நபிகள் நாயகம் (ஸல்..)



இம்மாதம் நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் பிறந்த மாதமாக இருப்பதால்  உறவுகளோடும், நட்புகளோடும் ஒரு சில மனப்பகிர்வுகளை பகிர மனம் நாடிய காரணத்தால் சில சிந்தனைகளை இதோ உங்கள் முன் வைக்கிறேன்…

மீலாது சிந்தனைகள்; 1 

நம் எல்லோருக்கும் இறைவனின் சாந்தி (நிம்மதி.. அமைதி..) நிலவட்டுமாக!
சுமார் 1433 ஆண்டுகளுக்கு முன்பு பிறக்கும் முன்பே தந்தையை இழந்தும்.. பிறகு குழந்தை நிலையில் தாயின் அரவணைப்பு தேவைப்படும் ஆறாம் வயதில் அன்னையை இழந்தும்.. பாட்டனாரிடமும், சிறிய தந்தையாரிடமும் வளர்ந்த ஓர் அரபிய அனாதைக் குழந்தையின் பிறப்பை இன்று வரை உலகம் பேசும்படியும், மனித சமுதாயம் பேசும்படியும், எழுதும்படியும், ஆராயும்படியும், நினைந்துருகும்படியும் மெய்ப்பொருள் ஆக்கி இருக்கிறது.

அந்த அனாதைக்குத் தான் இன்று இந்த உலகமே இன்று சொந்தம் கொண்டாடுகிறது.. சொந்தமாகிப்போனது ஏனெனில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "தான்" என்பதையும், தன் இரத்த உறவுகள் என்பதையும், ஊர், மாகாணம், நாடு என்பதையெல்லாம் தாண்டி உலகமாந்தர்கள் அனைவரையும் உவந்த காரணத்தாலும்.., தன்னுயிரென எல்லா உயிர்களையும் நினைத்த காரணத்தாலும் தான்.

மேலும், மாந்தர் இனத்திற்கு சிறப்பான வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்தும் அதை தான் நடந்து காட்டி பிறரையும் நடக்கக் கற்றுக்கொடுத்தும் வழிகாட்டிச் சென்றிருக்கக் கூடிய காரணத்தாலும்.. அம்மாந்தரினத்திற்கு எதுவெல்லாம் சரியானது இல்லையோ.. உடலுக்கும், உயிருக்கும் (ஆன்மாவிற்கும்) எதிரானதோ.. அழிவைத் தரக்கூடியதோ.. அறிவிற்கு அப்பாற்பட்டதோ.. அதை செய்யவேண்டாம் என்று அன்பால் தடுத்தார்கள். ஆனாலும் சிலர் எச்சரிக்கை செய்தும் கட்டுப்படாமல் அறிவின்மையாலும், ஆணவத்தாலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே அழிக்கவும், இவர்களை பின்பற்றுவோர்களை ஒடுக்கவும், அழிக்கவும், துடைக்கவும் துணிந்த போதெல்லாம் துணிவு கொண்டு நிர்பந்தத்தின் காரணத்தால் பகைவென்று நன்னெறி நாட்டிச் சென்றார்கள்.

மேலும், உலகின் பெரும்பகுதி மக்களுக்கு தெளிவான இறைச் சித்தாந்தத்தையும், உலகியல் வாழ்வின் ஒப்பற்ற அணுகுமுறைகளையும் போதித்து சென்றதாலும் அவைகளோடு சிறந்த பழக்க வழக்கங்களையும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம், இரக்கம், அன்பு, நன்றி, பணிவு…  என்று எந்தெந்த உலகின் உயரிய குணங்களெல்லாம் இருக்கிறன்றனவோ அவைகளையெல்லாம் போதித்தும்.. தானே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிம் சென்ற காரணத்தால் தான்..

வரலாறுகளில் மனித சமூகத்தின் அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டக்கூடிய ஓர் ஒப்பற்ற சரித்திர உண்மை சான்றாக இருக்கக் கூடிய காரணத்தால் தான்..

இன்று வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பு ஒப்பற்ற உயரிய பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இங்கே இக்கட்டூரையின் மூலம் பகிர நினைக்கும் முதல் எண்ணம் எதுவென்றால்… நம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பற்றி நாம் குறிப்பிடும் போதும், பேசும் போது நபிகள் நாயகம் என்றே குறிப்பிடுகின்றோம்.. நபிகள் நாயகம் என்றால் யாரைக்குறித்தது என்று தனியே விளக்கி யாருக்கும் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.. எல்லோருக்கும் விளங்கும் அது முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தான் அது குறிக்கும் சொல்லென்று.

குறிப்பாக பிற சமய சகோதர்களுக்கு நபிகளாரைக் குறிக்கும் மற்ற சொல்லை விட நபிகள் நாயகம் என்ற சொல்லே மிக பழக்கமான ஒரு சொல் ஆகும். மாறாக இஸ்லாமியர்கள் நபிகளாரை குறிக்கும் போது சொல்லும் பிற சொற்களான நபியல்லாஹ்..(இறைவனின் அல்லது மெய்ப்பொருளின் தூதர்) ரசூலுல்லாஹ் (இறைவனின் அல்லது மெய்ப்பொருளின் பிரதிநிதி) போன்ற சொற்களெல்லாம் வெகுவாக பரிட்சயம் இல்லாத சொற்கள் என்றே தான் சொல்ல வேண்டும்

ஏன் பிற சமய சகோதரர்களுக்கு நபிகள் நாயகம் என்பதை விட முஹம்மது நபி என்ற சொல்லாடல் பயன்பாடு கூட மிகக்குறைவு தான்.
நபிகள் நாயகம் என்ற சொல்லுக்கு "நபிகளுக்கெல்லாம் நாயகம்' என்று பொருள் அதாவது நபிகள் எனறால் இறைத் தூதுவர்கள்..மெய்ப்பொருளின் பிரதிநிதிகள், நாயகம் என்றால் தலைவர் என்று பொருள். ஆக, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்க மிக கண்ணியமாகவும், அவர்களின் வானலாவிய புகழை உலகிற்கு சொல்லும் ஒரே சொற்றொடர்

"நபிகள் நாயகம்"

என்று நமக்கு அமைத்து தந்திருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.

இதனால் ஒன்றை நாம் சொல்லாமல் விளங்கிக்கொள்ள இயலும், அது..நமக்கு முன் இந்த தமிழ்ச் இஸ்லாமிய சமுகத்தில் வாழ்ந்து சென்றவர்கள் எத்தகைய மேதைமைக்குச் சொந்தக்காரர்கள் என்பதும், அவர்கள் நபிகள் நாயகத்தின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருந்தார்கள் என்பதும், அவர்கள் அறிவின் தெளிவில் எங்கனம் சிறந்திருந்தார்கள் என்பதும் தான்.

இங்கே வேறு எந்த சான்றும் இல்லாது மேற்சொன்னவைகளுக்கு அந்த "நபிகள் நாயகம்" சொற்றொடரே போதுமானதாக விளங்கும்.

ஆக, நபிகள் நாயகம் நபிகளுக்கெல்லாம் அதாவது இறைவன் அல்லது மெய்ப்பொருளுடைய நபியாக அல்லது தீர்க்கதரிசியாக வந்தவர்களுக்கெல்லாம் நாயகம் எனப்பொருள்படும் தலைவர் என்பது தான். 

இங்கே இன்னொன்றையும் இது விளக்கும் அதாவது ஒவ்வொரு தீர்க்கதரசிகளும் எந்தெந்த நல்ல குணங்களை பெற்றிருந்தார்களோ.. அறிவு விசாலங்களை பெற்றிருந்தார்களோ.. இன்னபிற சிறப்புகளை பெற்றிருந்தார்களோ அவைகளை ஒருங்கே பெற்றவர்கள் என்பதையும் இந்தச் சொற்றொடர் நமக்கு சொல்லுகிறது என்பதும் ஆகும்.

நாம் எப்போது சிறப்பாக நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சீரன்போடு.. வாய் மணக்க.. நன்றியோடு அவர்களை அந்த சொல்லான "நபிகள் நாயகம்" என்றே தான் அழைக்கின்றோம். இது நமது முன்னால் சீறிய சிந்தனையுடைய தமிழ் அறிஞர்கள் மூலமாக நாமக்கு இறைவன் அளித்த பெரும் பேறாகும்!
வல்ல பேரிறை முன்பு சென்றோருக்கும், இன்றிருப்போருக்கும், இனிவருவோருக்கும் அந்த நபிகள் நாயகத்தின் பொருட்டால் தன் அருட்பேருகளை குறைவின்றி வழங்கட்டுமாக! ஆமீன்.

-வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 ஜனவரி 2012

அன்பு எய்யும் அம்புகள்..!



பேச நேரம் கிடைக்காமல்
பேசிக்கொள்கிறோம்,
மாலை மட்டும் தொலைபேசியில்,
ஆயிரம் இடையூறுகள் அதிலும்..!

இன்று..,
நீ மனசு முழுவது எதிர்பார்ப்புடன்
வந்தமர்ந்தது எனக்கு ஏனோ தெரியவில்லை!

இன்னும் ஏன் அவன் சொல்லவில்லை…
இப்போதாவது சொல்வானோ..
சொல்லத்தான் போகிறான்..
எப்படி சொல்வான்..
என்னவெல்லாம் சொல்வான்
என்றெல்லாம் நிறைய நிறைத்து
நீ மனசு முழுவதும்
எதிர்பார்ப்புடன் வந்தமர்ந்தது 
எனக்கு ஏனோ தெரியவில்லை..!

ஏதேதோ நான் பேச.. 
புன்னகைத்தே அதிகம் பேசாது
எதையும் வீசாது..
மெளனித்தே பயணித்தாய்!

நீ திடீரென ‘சரியான மரமண்டை’ என்றாய்
செல்லமாய்த்தான் திட்டுகிறாள்,
இதுவென்ன புதுசாவெனத்தான்
மேலும் சிந்திக்கவில்லை…!

‘இன்று என்ன தேதி’ என கேட்ட உனக்கு
தேதி எதுவானாள் என்ன இவளுக்கு..
திடீரென தேதி குறித்தெல்லாம்
கேள்வி தொடுப்பது இவளா..?
நெஞ்சம் கேட்டாலும்…
இன்று இருபத்தைந்து என
நான் பதில் பகர்ந்தேன்.

சனவரி இருபத்தி ஐந்தென
சட்டென தட்டிவிட்டாய்
தட்டச்சில் நீ..!

நானோ நாளை குடியரசு நாளென்றேன்…,
உலக செய்தியெல்லாம் தெரியும் தானென்ற
உன் பொறுமை பொறுமை இழக்க..
எழுதிய இன்றைய தேதியை
தெரியாதா உங்களுக்கு…?
பிறகே உன் பிறந்தநாள்
பறந்து வந்தது சிந்தைக்குள்.

இரண்டு பிள்ளை ஆனதென்றால்
இது தான் நிலையோ..!
இனி இவள் நினைவெல்லாம் பழங்கதையோ..! 
அடுக்கடுக்காய் உன் ஆத்திச்சூடி..!

ஏங்கிய இதயத்தின் அங்லாய்ப்புகளுக்கு
அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

அவசரவாழ்வும்.. பணம் தேடும் பயணமும்..
வாழ்க்கைப்பயணத்தின் ரசவாதத்த்திற்கு
தடைபோடுவதை கண்டு நோகத்தான் வேண்டியிருக்கிறது!

யாரோவென்றால் சரிதான்.. நடந்ததெல்லாம்
யாரோவல்ல அவள் என்றால்..
உள்ளம் கேட்கும் தான் பல கேள்விகளை..!
அன்பு பல அம்புகளை எய்யும் தான்..!

தூர வாழ்வு வாழ்கிறோம்
துயரமல்லவா இதுவும் காதலில்..!

ஆயிரம் செய்திகள் சிந்தனையில் வந்தமர்ந்து
அன்பே நம் செய்திதனை மறைத்ததுவோ..!

நீ பேசி முடித்த பின்னும்
என் நெஞ்சம் தொடுக்கும் வினாக்களுக்கு
என்னால் விடை கொணர முடியவில்லை..!

எது என்னை இவ்வாறாக்கியது..?
ஏன் மறந்தேன் இவ்வளவு..?
என்ன வாழ்கிறேன் நான்…?

-ஜே.எம்.பாட்ஷா

22 ஜனவரி 2012

நீ மறுத்தால்...!







நீ மறுத்தால்...!


கடற்கரை மணல்..
பார்த்து திரும்பிய
கடல் அலை..
உறசிப் போன
உள்ளாசக் காற்று..
இவைகளெல்லாம்
சாட்சி!



தென்றல்!


அவளிடம் என்னை 
அள்ளிச்செல்ல 
அந்தகள்ளி அனுப்பிய 
கைக்கூலிகளோ
இந்த தென்றல்!



-ஜே.எம்.பாட்ஷா

சூறாவளி..!



அமைதியான ஆகாயத்தில்
திடீர் சூறாவளி..!

சூரிய ஈர்ப்பில் வேறெதுவும்
அறியாது சுற்றிக்கொண்டிருக்கும்
கோள்களுக்கு கூட தடுமாற்றம்..!

சலனமில்லாத ஆழ்கடல் கூட
திடீர் வேகப்பேரலையால்
கலங்கி ஆர்பறித்தது..!

என் கண்களுக்குள்..
ஐயோ ..!
ஓர் காட்டுக்தீ..!

நெஞ்சத்தில் பேரதிர்ச்சி..!

சித்தம் பேதலித்து
சேதாரம் ஆகிவிட்டது..!

சிந்தனையே வேறெதுவும் இல்லை
சூழ்நிலைக்கூட சுத்தமாய் மறந்து விட்டது

வேறெங்கும் பார்வையில்லை..!

நுகர்வு நரம்புகள்..
புதிய வாசம் உணர்ந்து தேடியது..!

நரம்பு மண்டலங்களில்
மின்சார பேரதிர்வு..!

எங்கோ அதன் திசையில்
கால்கள் தானாக நடக்கிறது

இத்தனை பரபரப்புக்கும்
காரணம்..

பூகம்பம்


எதிரே அவள்..!

--ஜே.எம்.பாட்ஷா

2008ல் எழுதியது..

நெஞ்சத்தவிப்பு





உன்னோடு
சேர்ந்து வாழும் - அந்த
சந்தன நாட்களை எண்ணி
நெஞ்சம் தவிக்கிறது.

உன்னோடு
இனிமை பொங்கும்
வாழ்வு நடத்த
நிதமும் ஏங்குகிறேன்

எனக்குள்
எத்தனை எத்தனையோ
இனம் புரியாத தவிப்புகளும்..,
இனம் தேடிடும் உணர்வுகளும்..,
ஏதோ ஓர்
அரவணைப்பையும்
தோழ்கொடுப்பையும் தேடி…!

உந்தன்
தேன்முக தரிசனமே - இன்றும்
என் மனத்திரையில்..!

வா…
என்னோடு வாழ..!

நீ தான்
என் எத்தனையோ
உணர்வுகளின் வடிகால் கண்மணி..!


ஜே.எம்.பாட்ஷா


(திருமண நிச்சயம் நடந்த பிறகு எழுதியது)

19 ஜனவரி 2012


காதல் திருமணம் என்ற பெயரில் அதிகரித்து வரும் சமூகம் விட்டு சமூகம் தேடி.. ஓடிப்போகும் அல்லது மிரட்டலுக்கு பணியவைக்கும் சம்பவங்கள்... இது ஏதோ இருவரின் தனிப்பட்ட விவகாரமாக இருப்பதாக தெரிந்தாலும் சமூகத்தில் பின்விளைவை ஏற்படுத்தும் கவணிக்கப்பட வேண்டிய மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய விசயம் இது ஏதோ ஒரு காழ்புணர்வு என யாரும் நினைத்திட வேண்டாம் ஆழசிந்தித்தால் இதை வரவேற்பது முற்போக்கு அல்ல என புரியும் மேலும் இவ்வாறான திருமண வாழ்வுக்கு ஒரே சமூகத்தில் நிகழும் திருமணத்தை ஒப்பிடும் போது உள்ள பாதுகாப்பு, நலைப்பாடு, அல்லது அதன் குழந்தைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சனை என சொல்லிக்கொண்டே போகலாம். 

தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால் சமூக ஒழுங்கில்லாமல் இவ்வாறு ஒழுக்கவியல் சிதைவில் இன்றைய நிலை முன்னேறிக்கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. மேலும் கோ-எஜுகேகசன் மற்றும் அலுவல் என்று இன்று செல்வதின் பின்விளைவுகள் தான் இவைகள். முக்கியமாக இது வெறும் காமம் சார்ந்த தேடலுக்கான விடைதானே தவிர மார்க்கம் சொல்லித் தந்திருக்கும் பண்புநலன்களை அதன் நன்மைகளை அவர்களுக்கு சரியான முறையில் எடுத்துரைக்காத வளர்பாளர்களின் தவறால் வந்த குறைதானே தவிர வேரல்ல! தாய் தந்தைகள் தங்களின் பெண்டு பிள்ளைகளுக்கு மற்றவர்களோடு எவ்வாறு பழகவேண்டும், ஆண்மகனோடு தொடர்பு கொள்ளவோ, சந்திக்க நேர்ந்தாலோ அல்லது எதிர்பட்டாலோ எவ்வாறு நடக்கவேண்டும், இஸ்லாம் அது குறித்து என்ன சொல்கிறது, நபிகள் நாயகம் (ஸல்..)  நமக்கு எவ்வாறு இருக்க  சொல்லி இருக்கிறார்கள், நம் நபிகளார் (ஸல்) அவர்களின் தூய திருக்குடும்பத்தார்கள், பாத்திமா நாயகியார் இவர்களெல்லாம் எவ்வாறு வாழ்ந்து சென்றார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காததன் விளைவைத் தவிர அதற்கு இந்த சமூகம் கொடுக்கும் விலையே தவிர வேறில்லை!

நேற்றும் கூட ஒரு தொலைக்காட்சியில் மர்ஜானா என்ற பெண்ணும் திருமாளன் என்பவரும் தங்களின் காதல் திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு ராஜகிரியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதும் நாம் அறிந்திருக்க்லாம்! 

வேதனை என்னவென்றால் காதலுக்குரிய இலக்கணம் இன்று தவறாக விளக்கப்படுகிறது, சமூகத்தை திரையுலகம் வழிநடத்துகிறது... நல்ல தத்துவங்களும், தலைவர்களும், சிந்தனையாளர்களும் புறந்தள்ளப்படுகின்றனர்!! எதார்த்தங்கள் மறைக்கப்படுகின்றன!!! சதிவலைக்களும் பின்னாலிருந்து அதை ஊக்கப்படுத்தியவர்களும் சிரிக்கின்றனர்!!!

நிலைமாறட்டும்... சமுதாயம் மீளட்டும்...!

-ஜே.எம்.பாட்ஷா

11 ஜனவரி 2012

என் இனிய மகளின் பெயர் சூட்டும் விழா

இறையருளாலும், இரசூல் (ஸல்..) அவர்களின் இனிய அன்பாலும் எங்களுக்கு அழகிய பெண்குழந்தை சென்ற டிசம்பர்-3, 2011 அன்று பிறந்தது.

எங்களின் இறையருட் குழந்தைக்கு சென்ற சனவரி-4,2012 புதன் அன்று 'பாத்திமா ஜைனப்'  என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தோம்.


அன்பர்கள் எங்கள் குழந்தையின் நல்வாழ்வுக்காகவும், அழகிய குணநலப்பேறுகளுக்காகவும் ஆசி வழங்கி வல்ல இறைவனிடம் நல்-துஆ (இறைவேட்டல்) செய்யும்படி மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
குழந்தை ஃபாத்திமா ஜைனப்


இனிப்பு
எடுக்கப்பட்ட சில படங்கள் மட்டும்
எனது தந்தையார் நடுவில், இடதில் இஸ்மாயில்
மாமுவும், வலதில் ராஜா மாமுவும்.
என் மகன் நளீர்(இடது) ..  தன் கூட்டாளியுடன்






முஹம்மது இஸ்மாயில் மச்சான்
 (ராஜா மாமுவின் மருமகன்)
பெரிய பாப்பு, ஜாபர் பாப்பு மற்றும் எச்.அலி மாமு


எங்கள் பள்ளி தலைமையாசிரியர் அப்துர் ரவூப் மாமுவும்,
சி.தா.அலி அக்பர் மாமுவும் அன்வர் பாயுடன்



முஜீப் & பாப்ஜி அண்ணன்ஸ்

வலதில் முஜீப் மாமனார்
தம்பி காலித் 

என் மருமகள் மதீஹாவுட்ன் என் தந்தை




அசீம், இஸ்மாயில், லியாகத் அலி மாமு


பாப்ஜான்

கண்மணி நாதிரா 






















கமால்பாட்சா மாமு







-ஜே.எம்.பாட்ஷா