31 ஜூலை 2014

சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர் பிறந்த நாள்



இன்று கோட்டாறின் பாட்டாறு சதாவதானி ஷைகு தம்பி பாவலருக்கு பிறந்த நாள்.

அதையொட்டி நாகர்கோவில் ரேடியோ நிலையத்தார் விசேட நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும், அதில் என்பிற்கினிய கவிஞர் அத்தாவுல்லா கலந்து கொண்டதாகவும் பகிர்ந்திருந்தார். வாழ்த்துக்கள்.

ஷைகு தம்பி பாவலர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு உடன் வரும் நிகழ்வு ஒன்று அது.. ஒருவர் பாவலரிடம் நூறு ரூபாய் கேட்டுப் போக பாவலர் அவர்கள் அந்த நூறு ரூபாய் கொடுக்கையில் அதைப்பற்றி சொல்லிக்காட்டிய சிலாகிப்புகள் எல்லாராலும் அன்றிலிருந்து இன்று வரை ரசிக்கப்பட்டவை அது

"ஒரு" நூறு தருகிறேன்..
"இரு" நூறு தருகிறேன்
"முன்" நூறு தருகிறேன்
"நான்" நூறு தருகிறேன்
"ஐ" நூறு தருகிறேன்
"அற" நூறு தருகிறேன்
"எழு"  நூறு தருகிறேன்

இன்னும் சொன்னார்களா என எனக்கு தெரியவில்லை. இத்தனை கூறியும் குறிப்பிட்டதெல்லாம் அந்த ஒரு நூறு ரூபாயைத்தான் அது தான் சதாவதானி. நிலத்தில் தசாவதானிகளை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் தசாவதானிகளை காண்பது சிரமம் என்பார்கள்.. ஆனால் தமிழுலகம் ஏற்று போற்றிய தமிழின் உயர்வல்லமை பொருந்திய ஒருவர் இருந்தார் என்றால் அது சதாவதானி அவர்கள் தான்.

பாவலரின் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது கவிஞர் அத்தாவுல்லாஹ் பின்வருமாறு பாவலரின் சொல்லாற்றலுக்கு எடுத்துக்காட்டு தருகிறார்...

பாவலர் சதாவதானம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் ஈற்றடி கொடுத்து பாடச் சொன்னார்...

''கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே"

எல்லோரும் திகைத்தனர்...
அது எப்படி முடியும்...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல் அல்லவா இருக்கிறது...

பாவலர் திகைத்தாரில்லை...
இந்து மத வேதங்களையும் இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்து விளையாடும் அவர்க்கு இந்த ஈற்றடித் தலைப்பு எம்மாத்திரம்...?

அவர்க்குப் பெரிய புராணத்தின் காட்சி ஓன்று கண்களில் ஆடியது.
ஆமாம். திண்ணப்பர் கண்ணப்பரான கதையது..

வேட குல கண்ணப்பர் ஒரு சிவ பக்தர்...
காட்டுப் பொருட்களையும் வேட்டைப் பொருட்களையும் சிவனுக்குக் காணிக்கையாய் படைப்பவர்...
ஆனாலும் அனுதினமும் அயராமல் சிவ பூசை செய்பவர்...

அவரிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிவனுக்கு வந்தது...
என்ன செய்தார் தெரியுமா...?
அவர் பூசை செய்யும் நேரத்தில் தன்னுடைய கண்களில் இருந்து இரத்தக் கண்ணீரை வழிய விட்டார்...

பதறிப் போனார் திண்ணப்பர்...

ஐயையோ...! என்னுடைய சிவன் கண்களில் இரத்தமா...
எப்படித் துடைப்பேன் என்று யோசித்தார்..
ஏதேதோ செய்து பார்த்தார்...
வேடருக்கு என்ன மருத்துவம் தெரியும்...?
பக்கத்திலே கிடந்த மூலிகைகளைப் பறித்து வைத்தியம் செய்தார்...
அப்போதும் இரத்தம் நிற்கவில்லை..

ஒன்றுமே புரிய வில்லை..
திகைத்து நின்றவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது...

அப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று நினைத்தவர் தன கையில் இருந்த வேலைக் கொண்டு தன்னுடைய ஒரு கண்ணைப் பெயர்த்தார்...
அப்படியே சிவன் கண்ணில் பொருத்தினார்...
வழிந்த ரத்தம் நின்றது...
கண்ணுக்குக் கண் சரியாயிற்று.....!

மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் திண்ணப்பர் ...
ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை...
சிவனுக்கு மீண்டும் ஒரு விபரீத எண்ணம்...
இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் என்ன...?

திடீரென்று அடுத்த கண்ணிலும் இரத்தத்தை வழிய விட்டார்..
இப்போது திண்ணப்பர் திணறவே இல்லை..
உடனே தன்னுடைய மற்றொரு கண்ணையும் பெயர்த்துப் பொருத்தி விட்டார்...
அகமகிழ்ந்து போனார் சிவபெருமான்...

இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட வேட பகதனையா சோதித்தோம்...?

அவனுக்கு தன்னுடைய திருக்காட்சியை வழங்கி விட வேண்டியதுதான் என்று திருக்காட்சி வழங்கினார்..

திண்ணப்பருக்கு இப்போது சிவக் காட்சி கிடைத்தது..
ஊனக்கண் போன பிறகு ஞானக் கண் கிடைத்து இதுவரை காணாத காட்சி கிடைத்தது..

திண்ணப்பனே! ...எனக்குக் கண் வழங்கிய காரணத்தால் இன்று முதல் உனக்குக் கண்ணப்பன் என்ற பெயரை வழங்குகிறேன் என்று கூறி திருக்காட்சி வழங்கினார் சிவ பெருமான்...

பக்தனுக்கு இறைக் காட்சியை விட வேறென்ன வேண்டும்...?

இதை அப்படியே கவிதையாக்கி ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்துக் கவிதையாக்கினார் பாவலர்...

"விண் தொட்டசையும் தருமலி கானில்
பண்பட்ட செந்தமிழ் பாவாணர் போற்றும் பரமன் விழி
புண் பட்டதென்று தன் கண்ணைப் பெயர்த்துப் பொருத்தியிரு
கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே..."

இந்த இலக்கிய அழகில் கேள்வி கேட்டவர் மட்டுமா அனைவருமே அழகிய இலக்கியக் காட்சியை அல்லவா கண்டார்கள்...?

தமிழ் அன்பர்களுக்காக மேலும் ஒரு தகவல்....

பாவலர் சொன்ன ஏகம்...!

பல் சமய நண்பர்களுடன் பழக்கம் கொண்டிருந்தும் எந்த மத காழ்ப்புணர்வுக்கும் இடம் கொடுக்காதவர் பாவலர்..

சமயக் காழ்ப்புணர்வுக்கு அப்பாற்பட்டு பிற சமய தெய்வங்களைப் பாடினார் எனினும் அடிநாதமாக ஏகத்துவம் எனும் ஒளியிழை அவர் பாடல்களில் பொதிந்து கிடந்தது...

நபிகள் நாயக மான்மிய மஞ்சரியில் ஏகத்துவம் குறித்து அவர் பாடுவதைப் பாருங்கள்...

எவையெல்லாம் இறை என்று மக்களால் கருதப் படுகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி வைத்து விட்டு
உண்மையான ஏகத்தை நிலை நிறுத்த முயல்கிறார்...

யோகமன்று ஞானமன்று யூகமன்று மோனமன்று
தேகமன்று நாமமன்று சித்தமன்று சத்தமன்று
போகமன்று சுத்த பரிபூரணத்தில் பூரணமா
ஆக நின்ற ஏகம் ...

வானுமில்லை நீருமில்லை வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை பாரமதியோடு வெளி
தானுமில்லை ஏகம்

விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை சார்ந்தகர ணாதிகளின்
கண்ணுமில்லை ஏகம்....


இத்தகு ஆற்றல் பெற்ற  கோட்டாரின் பாட்டாறு சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்
அவர்களின் பிறந்த நாள் இன்று ...


அன்னாரைப்பற்றி இன்னும் கூடுதல் தகவல் நாம் கற்கவேண்டும். தமிழின் சுவையை இவர் போன்ற கடல்களில் கொஞ்சமேனும் நம் சிட்டுக்குருவி அலகாலேனும் பருக ஆசை கொள்ளவேண்டும்.

வாழ்க தமிழறிஞர்கள்!
வளர்க என் தாய்த் தமிழ்!!
உயர்க தமிழர் தம் மாண்பு!!!




படம்: சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர், மற்ற படத்தில் கவிஞர் அத்தவுல்லாஹ் அவர்களுடன் நாகர் கோயில் வானொலி நிலைய தொகுப்பளர் திரு.சண்முகையா அவகர்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: