26 செப்டம்பர் 2014

கல்வி என்பது கடமை - நபிகள் நாயகம்



"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமை" என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது அருள்மொழி
மன அமைதியை நாடுபவர்கள்..தனக்கும், மற்றவருக்கும் நிம்மதியை நாடுபவர்கள்.. ஆன்ம சாந்தியை இலக்காக கொள்பவர்கள் இவர்கள் தான் முஸ்லிம்கள் அதாவது அமைதிப்பாதையில் பயணிப்பவர்கள். இந்த வரையறை மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான சொந்தம். அப்படியான அமைதியாளர்கள்.. உலக அமைதி விரும்பிகள்.. சாந்தமானவர்கள் எல்லோரும் கல்வி கற்பது அவசியம் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்.
கல்வி கற்றால் தான் அமைதி சாத்தியம். கல்வி கற்று ஞானம் அடைபவர்களால் தான் சாந்தியில் நிலைபெற முடியும். கல்வியே சாந்தி தரும். அறியாமை இருந்தால் அன்மசாந்தி அடையமுடியாது. ஆதலால் தான் அண்ணல் நம் பெருமானார் முஹம்மது நபிகள் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவர்கள் சாந்தியாளர்கள் அல்லது சாந்தியாளர்களாக விரும்புவர் அனைவர் மீதும் கல்வி கட்டாயம்.. மிக அவசியம்.. அடிப்படை என அன்றே சொல்லிச் சென்றார்கள். கசடற கற்றால் மனம் தூய்மையில் துய்க்கும். அப்போது பேதம் ஒழியும் அன்பும் அறமும் தழைக்கும் என்றால் எங்கும் நிலைபெறுவது சாந்தி தானே! நிம்மதி தானே! அமைதி தானே!

இப்படி பொருள் கொண்டால் நலம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 செப்டம்பர் 2014

டெல்லி வாலிபனை கொன்றது புலி அல்ல பூங்கா தான்!


டெல்லி உயிரியல் பூங்காவில் தவறி விழுந்த மாணவனை புலி துடிக்க துடிக்க கொன்றவிதம் மிக கொடூரமானது, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி போன்ற பயங்கர மிருகங்களை வைத்திருக்கும் இவர்கள் அதற்கு தகுந்த பாதுகாப்பை கவனத்துடன் செய்திருக்க வேண்டும் பூங்காவிற்கு பலதரப்பட்ட குணமுடையவர்கள் வருவார்கள் உற்சாகமிகுதியால் பலவாறு விளையாட நேரிடும் அவ்வாறான சந்தர்பங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பதற்கும் அவர்கள் முன்னேயே யோசித்து செயலாற்றி இருக்க வேண்டும், சரி விபத்து நடந்தவுடன் கூட சில நிமிடங்கள் வரை புலி அவனை பார்த்துக்கொண்டே பொறுமையாக யோசித்துக்கொண்டே தான் இருந்தது. இந்த சந்தர்ப்பம் அவனை பாதுகாக்க போதுமானது அந்த தருணத்தில் மயக்க ஊசியை புலிமீது பாய்ச்சி இருக்கலாம் அதுவும் ஸ்டாக் இல்லையாம், குறைந்த பட்சம் புலியை சுட்டிருக்கலாம் அந்த அளவு யோசிக்கவும், முடிவெடுக்கவும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் பீதியில் கத்தி கதறி அலப்பறை செய்கிறார்களே ஒழிய யாரும் பாதுகாக்க ஆவண செய்யவில்லை.
இது முழுக்க முழுக்க பூங்கா நிர்வாகத்தின் திறமையின்மை, செயலிழப்பு, ஊழியர்களை விபத்து நேரத்தில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்று பயிற்றுவிக்காமை, முதலுதவிக்கான கருவிகள் அல்லது குழுக்களை தயார்படுத்தி வைக்காமை என எல்லாம் அவர்களின் சீர்கேடே.. இது போலத் தான் என் தாய்த்திருநாட்டில் ஒவ்வொரு அசம்ப்பவிதம் நடந்து ஒன்றோ பலவோ உயிர்கள் பலியானால் தான் அந்த துறையோ அல்லது நிறுவனமோ திடீர் விழிப்படையும் பிறகு பழைய தூக்கத்தில் ஆழ்ந்துவிடும்.. நமது சென்னையில் அடுக்குமாடி கட்டிட சரிவு நிகழ்வு போல.. சென்ற வருடம் பள்ளி வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டை வழி சரிந்து விழுந்து சிதறிய பாலகனை போல.. டெல்லியில் அந்த நல்லிரவில் பேருந்திருந்திலிருந்து கற்பழித்து வீசப்பட்ட இளம்பெண்ணைப் போல ஒரு துறை தற்காலிக விழிப்புநிலையெய்த இது போல சம்வங்கள் இங்கே நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இது என் தேசத்தின் அவலம்.. என்ன செய்ய மங்கள்யானை நினைத்து பெருமைப் படும் இந்தியனான நான் இதையும் நினைத்து வெம்மவேண்டிருக்கிறது.
ஜெய் ஹிந்த்!!!!!!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 செப்டம்பர் 2014

பி.ஜேவின் புதிய தலைமுறை பேட்டி முரண்கள்



பி.ஜே வின் சமீபத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பேட்டி பற்றி என் கருத்தாக இங்கே சிலவற்றை பதிவு செய்கிறேன்.

நானும் அந்த பேட்டி முழுவதையும் பார்த்தேன்.. ரசிக்கும் படியாக இருந்தது.. கேள்விக்கு ஏதும் நேர இடைவெளியோ அல்லது மழுப்பலோ இல்லாமல் பேசியது அவரது திறமையை காட்டியது. இதை பார்த்து அவரது ரசிகர்களும், ரசிகர் அல்லாத பாமரர்களும் ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து தள்ளுகிறார்கள். இவரல்லவா தலைவர் என்பது போல ஒரு பிரமை பிடித்து பேசுகின்றனர். ஆனால் இவரது அந்த திறமை தான் அவர் நடத்தும் பிழைப்பிற்கு மூலதனம். இதை நுணுக்கமாக ஆய்ந்து புரிபவர் மட்டுமே பிழைக்க முடியும் இல்லாவிட்டால் இவரது பொய்யை மெய்யென்றும் மெய்யை பொய்யென்றும் சொல்லும் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவர்.

ஏனென்றால் பொய்யை மெய்யெனவும்.. மெய்யை பொய்யெனவும் மாற்றும் போது முகபாவனையை சற்றும் மாற்றாமல் அப்படியே அப்பட்டமாக பேசும் வல்லமை அவருக்கே அன்றி வேறாருக்கும் இல்லை. இதை அவரது கடந்த கால வரலாறு மெய்பித்திருக்கிறது. பேட்டியில் அவரையும், அவரது ஜமாத்தையும் தவிர ஒட்டுமொத்த சமூகத்தினரையும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவர் எனவும், வரதட்சணை, வட்டி வாங்குபவர்கள், முன்னோர்களை வணக்கம் செய்பவர்கள் எனவும் இல்லாததை இட்டுக்கட்டி சொன்ன விதம் மிகவும் கண்டனத்திற்குறியது.

சமூக மக்களின் அறியாமையையும், அவர்களின் பலகீன நாடியையும் சரியாக விளங்கிவைத்திருப்பவர் என்ற தகுதியே அவரை இன்றுவரை இயக்கத்தின் தலைவரெனவும், இமாம்களை மறுக்கும் இளைஞர்களின் இமாமாகவும், சிலருக்கு இல்லாத தீர்கதரிசியாகவுமே வலம்வரவைத்திருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய சரிந்த செல்வாக்கை நிலைநிறுத்தவே மக்களிடத்தில் எப்படி மீண்டும் தான் விவாதப்பொருளாக மாற வேண்டும் என்று திட்டமிட்டு சூனிய நாடகத்தை அரங்கேற்றி வெற்றி கண்டிருக்கிறார். இதனால் அவர் தன் திட்டமிட்டபடியே எங்கும் வெகுவாக பேசப்பட்டு மீண்டும் சற்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதெல்லாம் இவரது அசாத்திய திறமை என்றால் மிகையில்லை.

மயிலாடுதுறை தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நின்றும் அவர் தங்களுக்கு பிடிக்காத தமுமுகவின் ஹைதர் அலி என்பதற்காகவே நீங்கள் மணிசங்கர் ஐய்யரை ஆதரித்தது வெறுப்பரசியல் தானே என்று கேட்டற்கு அவர் கொஞ்சமும்  அலட்டிக்கொள்ளாமல் தனது வெறுப்பரசியல் முகத்தை வெளிக்காட்டமல் முஸ்லிம்கள் எல்லாம் மணிசங்கர் ஐயர் பக்கம் இருந்தார்கள் என்று தனக்கு செய்தி வந்தது என்றும் அதை தொடர்ந்து அவர் சொன்ன பதில்களும் எல்லோரையும் வியப்பின் உச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

மேலும் கேவை குண்டு வெடிப்பை முஸ்லிம்கள் தான் வைத்தார்கள் என்று ஒத்துக்கொள்கிறேன் என்கிறார்.. உண்மையில் தொன்னூறுகளுக்கு அப்பால் நடந்த பல கலவரங்களின் பின்னணியில் இவர் போன்றவர்களின் பேச்சு இளைஞர்களை எவ்வாறெல்லாம் ஆட்டிவைத்தது என்று எல்லொருக்கும் தெரியும். அவர் முன்பு தமுமுக-வில் இருந்த போது பாபரி மஸ்ஜித் மீட்பு, மறக்கமுடியுமா டிசம்பர் 6 ஐ, இடஒதுக்கீடு போராட்டம், அப்படி இப்படி என உண்மையில் ஒரு ஆணியையும் பிடுங்க வக்கில்லமல் இருந்தாலும் மக்களை ஏமாற்றி இவர் நடத்திய மேடைப்புரட்சிகள் ஏராளம்.அப்படி இருந்தும்  அவருக்கே உரிய திறமையால் தான் தீவிரவாத எதிர்பாளர் என பொதுச்சமூகத்தில் காட்டும் வண்ணம் ஐ.எஸ் விசயத்தில் அவர் திறமையாகவே பேசி இருக்கிறார், பனியன் அணிந்த இளைஞர்களையும் ஒன்றுமே அறியாதவர்கள் ஒரு ஹிரோயிச ஈர்ப்பால் போட்டுவிட்டார்கள் என்றார். ஒரு அரசு தான் ஆயுதம் தாங்கி போராட வேண்டும் தனிப்பட்ட அமைப்பிற்கோ தனிப்பட்ட ஆளுக்கோ அது இஸ்லாத்தில் இடமில்லை என்றெல்லாம் பேசி இவரைப்பற்றி தெரியாத மக்களிடமும், இவருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவர்களிடத்திலும் மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் உண்டாகும் வண்ணம் பேசி பேட்டியை முடித்தார்.


இன்று பி.ஜேவின் கூற்றை ஏற்று ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பேசக்கூடியவர்கள் அன்றே பேராசிரியர் காதர் முகைதீன் போன்ற பழுத்த அரசியல்வாதிகள், சமூகக்காவலர்கள் ஐ.எஸ் அமைப்பினர் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை உடையவர்கள் என சொன்ன போது அவர்களை எள்ளி நகையாடினர்.. பண்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை கிறுக்கர் எனும் அளவுக்கு நிதானமிழந்து விமர்சித்தனர். அப்படியெனில் இன்றைய அவர்களின் நிலைப்பாடு என்ப்து பி ஜே என்ற தனிநபர் துதுயாகவே அறியப்பட வைக்கிறதே தவிர அவரது அடிவருடிகள் தெளிவாக பேசுகின்றனர் அல்லது தெளிவான தீவிரவாத எதிர் நிலைப்படு கொண்டிருக்கின்றனர் என்பதை அல்ல. ஏனெனில் பேட்டிக்கு முன்பு தன் இயக்கத்தினரையோ அல்லது தனக்கு உடன்படும் இந்த சமூகத்தின் சிலரையோ, பனியன் பிரச்சனை வந்த பிறகாவது ஐ.எஸ் குறித்து தனது நிலைப்பாட்டை சொல்லி அவர்களை புறக்கணிக்க வேண்டுமென தெளிவுபடுத்தி இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் இப்போது பொது மன்றத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டி என வருகிறதென்பதால் இப்போது மட்டும் அவ்வியக்கத்தினரை இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லுவது ஊடத்திற்காக அவர் காட்டும் முகமாகவே படுகிறது. இதையெல்லாம் சிந்தித்து பார்த்து நடுநிலை நெஞ்சங்கள் திருந்துமா? உண்மையான் தீவிரவாத எதிர்பாளர்களை.. சமூக நலவாதிகளை கண்டுகொள்ளுமா என்பதே இன்றைய கேள்வி.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 செப்டம்பர் 2014

பேராசிரியர் கண்ட வண்ணக்கனவு நனவானது!

சமுதாயத்தின் சரித்திர நாயகர் யாரென கண்டறிந்து அவருக்கு விருதளித்திட வேண்டுமென எந்தச் சார்புமற்ற ஒரு அறிஞரோ அல்லது குழுவோ ஆய்வு நடத்தி முடிவை வெளியிட போகுமென்றால் அதற்கு முன்னதாகவே நாம் சொல்லிவிடலாம் அதற்கு முற்றும் முழுவதும் தகுதியான சீலர் நம் பேராசிரியப்பெருந்தகை என்ற நம் நெஞ்சத்தில் நிலைத்த தலைவரே என. பேராசிரியர் அவர்களின் சிந்தனைகளும், உழைப்பும், சாதித்த சாதனைகளும் அவர்களை மிக அருகில் இருந்து நுணுக்கமாக பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.



தலைவர் பேராசிரியர் அவர்கள் சாதித்த சாதனைகளை நாம் பட்டியலிட்டால் இதுவரை தமிழக வரலாற்றில் யாரும் செய்திடாத செயல்களை செய்துகாட்டி பெருமை சேர்த்தவர் அவர்களே தான் என்ற உண்மை புலனாகும். பேராசிரியர் அவர்கள் சமூகத்தின் சரித்திர நாயகர். அவர் புதிரான பொக்கிசம், துல்லியமான சமூகக்கலை வல்லுனர்.. அவர் காயிதே மில்லத் மன்ஜிலை கனவுகண்டார்.. காயிதே மில்லத்தின் கல்பும், ரூஹும் குளிரும் வண்ணம் அதை கண்முன்னே எழுப்பி நிலைநிறுத்தி.. சமுதாய இயக்கத்திற்கென ஒரு தகைசால் அலுவலகம் அமைத்து தாய்ச்சபை நெஞ்சங்களின் எண்ணங்களை மெய்ப்பித்து மகிழ்ச்சியில் நீந்தவைத்தார்.

சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அவர்களின் எண்ணத்தில் உதித்து நாளிதழென உயிர்பெற்று மணிச்சுடரென பெயர்பெற்று இருபத்தியெட்டாண்டு காலமாக வரும் பத்திரிக்கையாம் நம் சமுதாய நாளிதழை சிராஜுல் மில்லதிற்கு பிறகு தாம் நடத்தும் பொறுப்பேற்ற பிறகு அதை மேம்படுத்திட, தொய்வின்றி நடத்திட பல சொல்லொண்ணா சிரமங்களை.. துயரஙக்ளை சகித்து பத்திரிக்கை தொடர்ந்து வர எல்லா முயற்சிகளையும் எடுத்து அதை முன்பை விட பட்டித் தொட்டியெல்லாம் சென்று சேர்த்து உலகிற்கு நமது நாளிதழை எடுத்துக்காட்டி வெற்றிகண்டு சிராஜுல் மில்லத் அவர்களின் ஆன்மாவை குளிர்வித்தார் பேராசிரியர் என்றால் அது மிகையே இல்லை.

ஆனாலும், பேராசிரியரின் மனம் இன்னும் எதையோ நாடி நிறைவடையாமல் இருந்தது.. விஞ்ஞானம் வளர்ந்த இந்நாட்களில் எல்லோரும் எப்படி எப்படியான தொழிற்நுட்பத்தினையோ பயன்படுத்தி ஒன்றுமற்ற விசங்களை எல்லாம் பெரிதாக சொல்லி ஏதேதோ செய்கிறார்களே நாம் நம் சமூகத்திற்கான நாளேட்டை.. நம் சமூகத்திற்கான இயக்கத்தின் வரலாற்றை.. இன்னும் நாம் பதிப்பிக்க வேண்டியவைகளை நவீன தொழிற்நுட்பத்தில் செய்தால் எவ்வளவு விரைவாக.. அழகாக.. இன்னும் எளிதாக இருக்கும் என கனவு கண்டார். பணம்.. பொருளாதாரம் போன்றவை அவரது நெஞ்சில் ஏக்கத்தினை உண்டுபண்ணிற்று. கண்களில் கண்ணீர் கசிந்துருகின… இறைவன் ஒருநாள் இதற்கும் வழிவகுப்பான் அன்று நம் கனவு நனவாகும் என்றிருந்தார் நம் பேராசிரியர். இதையெல்லாம் தாங்கள் சென்று வரும் தருணங்களில் மிக நுணுக்கமாக கண்டு மனதில் தேக்கி வைத்திருந்தனர் அமீரக காயிதெ மில்லத் பேரவையின் நிர்வாகிகள்.



சென்ற ஆண்டிற்கு முன்பு நமது அன்பிற்குரிய மில்லத் இஸ்மாயில்அவர்கள் துபை வந்திருந்தார்.. வந்தவர், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் (தாய்ச்சபையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், காயிதே மில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் லியாகத் அலி அவர்களும், செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்களும் மற்றும் பொருளாளர் கீழக்கரை ஹமீது ரஹ்மானும் கூடி அமர்ந்திருந்த அவையில்… “நம் மணிச்சுடர் நாளேட்டிற்காக அதை செவ்வனே நடத்துவதற்காக, இருக்கும் சில அசவுகரியங்களை களைவதற்காக  சந்தா சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டே என்னை இயக்கத் தலைமையும், தலைவரும் என்னை அனுப்பி இருக்கிறார்கள் இது தான் நான் வந்ததின் நோக்கம்” என்றார்.

“நம் சமுதாய நாளேட்டிற்கு சந்தா வாங்க வந்திருக்கிறீர்களா.. சந்தா எத்தனை மக்கள் கொடுப்பார்கள்.. அப்படியே கொடுத்தாலும் இந்த ஆண்டு கொடுப்பார்கள் அடுத்த ஆண்டு கொடுத்தவரே மீண்டும் சந்தா கொடுப்பார் என என்ன நிச்சயம்? இப்போது நமது நாளேடு மிக பழைய இயந்திரத்தில் அல்லவா வருகிறது, நாம் புதிதாக ஒரு நவீன வண்ண அச்சு இயந்திரத்தையே வாங்கிவிட்டல் நன்றாக இருக்குமே, அப்படி வாங்கினால் நமது மணிச்சுடரையும், பிறைமேடையையும் நாம் அதிலே அச்சடித்துக் கொள்ளலாம் மேலும் மற்ற வெளி அச்சு வேலைகளையும் பெற்று நாமே செய்து கொடுத்து சற்றே நிரந்தர நிதியாதரத்திற்கும் வழிவகை செய்யலாமே.. அதனால் நாம் இதுகாரும் எதிர்கொண்டிருக்கும் நிதிச்சுமை சற்றே குறையும் அல்லவா.!” என்று குத்தாலம் லியாகத் அலி அண்ணன் மில்லத் இஸ்மாயிலிடம் சொல்ல.. இஸ்மாயில் அவர்கள் “அதற்கெல்லாம் அதிக பொருட்செலவாகுமே” என தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தினார் “அப்படியானால் ஒன்று செய்யலாமே.. அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக அதன் பாதித் தொகையை நாங்கள் எங்கள் பங்காக அளிக்கிறோம், மீதத்தொகையை மற்றவர்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம் இது தான் சரியாகபடுகிறது” என்றார் அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி அண்ணன் அவர்கள், இந்த யோசனையை அங்குள்ள அனைவரும் ஆமோதிக்க அப்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்த பேராசிரியர் பெருந்தகைக்கு உடனே தொலைபேசி அழைப்பு விடுத்து இது தொடர்பாக தெரியப்படுத்த.. மனதில் மகிழ்ச்சி நிறைந்து பேராசிரியர் வரவேற்றார்கள், அவ்வாறே செய்வோம் என நெகிழ்ந்து போனார்கள். 



அதன்படி அமீரக காயிதேமில்லத் பேரவை தனது பங்காக வண்ண அச்சு இயந்திரத்திற்கு ஆன பெருந்தொகையில் பாதியை ஏற்று அளித்தது, மீதத் தொகை இறைவனருளால் பலரும் அளிக்க அதுவும் சேர்ந்தது, இன்று அப்பொருள் வளம் சமூகவளத்தை சீராக்கும் கருவியாய் செம்மைபடுத்தும் கருவியாய் சமுதாய இதழின் வண்ண அச்சு இயந்திரம் வகையாய் வாங்கப்பட்டு மிளிர்கிறது. இது நாளை தன் பணியை இனிதே துவக்க இருக்கிறது. பேராசிரியர் கண்ட கனவு வண்ணமயமாய் நிறைவேறியிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். நமது அன்புத்தலைவரின் கனவு நனவான இவ்வேளையில் சமுதாயப்பணியை தொடங்க இருக்கும் புதிய இயந்திரத்திற்கு “பேராசிரியப்பெருந்தகைக்கான அமீரக காயிதேமில்லத் பேரவையின் பேரன்புப் பரிசு” என பெயரிட்டால் அமீரக காயிதே மில்லத் பேரவையின் அங்கத்தவர்கள் இன்னும் பாக்கியமாக கருதுவார்கள் என்பதை இங்கே இக்கட்டூரை பதிவு செய்கிறது. 



புதிய இயந்திரம் பணியை துவக்க இருக்கும் இவ்வேளையில் நமது தாய்ச்சபைக்கும் சமுதாய நாளிதழான மணிச்சுடருக்குமாக சேர்த்து செயல்பட்ட சென்னை வாலஸ் கார்டனின் அலுவலகத்தினை நினைத்துப்பார்க்கிறேன்.. மணிச்சுடர் துவங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இவ்விதழுக்காக உழைத்த எல்லா ஊழியர்களையும் குறிப்பாக சமீபத்தில் இயற்கையெய்திய தெய்வத்திரு.ரத்தினசிங் அவர்களையும் நன்றியோடு நினைவுகூறுவது சாலப்பொறுத்தம். அவர்களின் உழைப்பு என்றும் வீண் போகாது. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நிறைவான கூலி நிச்சயம் உண்டு. அவர்கள் சங்கையானவர்கள் என்பதில் ஐயமில்லை.


சற்று முன்புவரை மணிச்சுடர் விடயமாக பலருக்கும் பேச நேர்ந்தது அவ்வகையில் எனது சிரிய தந்தை சவூதியில் இருக்கும் எம்.ஜே.பசீர் அஹமது அவர்களிடம் பேசும் போது அன்றைய தனது இளமைக்காலத்தில் வந்த மர்ஹூம் ஏ.கே. ரிபாயி அவர்களை ஆசிரியராக கொண்டு வந்த உரிமைக்குரல் பற்றியும், அதை மக்கள் படிக்க போட்டிப்போட்டுக்கொண்டு இருந்த நிலைமையையும் பிறகு நாவலர் யூசுப் ஸாஹிப் அவர்களால் நடத்தப்பட்ட மறுமலர்ச்சி பத்திரிக்கை ஏற்படுத்திய அசாத்தியமான புரட்சி பற்றியும், அஞ்சலகத்திற்கு மறுமலர்ச்சி பத்திரிக்கை வரும் போது ஊழியர்கள் மூட்டையாக கட்டி கொண்டு வந்து பட்டுவாடா செய்யும்படியான நிலைமை இருந்தது பற்றியும் பகிர்ந்து கொண்டவர் அது போல நமது மணிச்சுடரையும் மக்களை ஈர்க்கும் வண்ணம் இன்றை காலத்திற்கு ஏற்றார்போல கொண்டு சென்றிட வேண்டும் என்றும், மணிச்சுடர் நாளேட்டிற்காக ஒரு நிதியாதாரத்தை நிரந்தரப்படுத்த ஒரு திட்டம் வேண்டும் என்றும் தனது அவாவை வெளிப்படுத்தினார். இது தான் எல்லாருடைய அவாவும் கூட அதற்கு நமது இயக்க சகோதரர்களும், நண்பர்களும் எல்லா ஜமாஅத்தின் உதவியோடு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் மணிச் சுடர்வீசிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். சந்தா சேர்த்திட வேண்டும். நிதிதிரட்டிட வேண்டும். இன்ஷா அல்லாஹ். 


வல்லவன் அல்லாஹ்வின் அருளோடும், எல்லா நல்லான்மாக்களின் துஆக்களோடும், ஆனந்த பெருமிதத்தோடும் நாளை நடக்க இருக்கும் வண்ண அச்சு இயந்திர துவக்க விழா மற்றும் ரமலான் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்விற்கும் அமீரக காயிதேமில்லத் பேரவை தனது மனமார்ந்த வாழ்த்தினை மற்றும் மட்டற்ற மகிழ்ச்சியினை தெரியப்படுத்திக் புலங்காகிதம் கொள்கிறது.


நம் சமுதாயத்திற்கு... 
வருங்காலம் வளமாகட்டும்! செழித்தோங்கட்டும்!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

12 செப்டம்பர் 2014

"மணிச்சுடர்" நிர்வாகத்திற்கு....


நமது "மணிச்சுடருக்கு" ஒரு முகநூல் பக்கம் அமைக்க வேண்டும், அது தனிப்பட்ட ஒருவர் என இல்லாமல் பதிப்பகத்தின் அங்கமாக இருக்கும் நிர்வாகிகளில் யாரேனும் ஒருவர் இருத்தல் சிறப்பு, அவ்வப்போதான சூழ்நிலைகளை செய்திகளாக, அல்லது இமேஜ்-ஆக பதிவேற்றி மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று சமூக நிலையையும், நமது நலைப்பாடையும் சொல்லிக்கொண்டே இருப்பது அவசியம். அப்போது தான் பலதரப்பட்ட சமூகத்தில் நல்ல புரிதலை உருவாக்க முடியும், தலைவர்கள் என்ற பெயரில் பலரிருக்கும் சமூகத்தில் தலைவருக்கான தனித்தன்மையுடன் இருக்கும் பேராசிரியர் பற்றிய உண்மை விளங்கும், இளைய சமூகத்திற்கு "லீக்" பற்றிய அணுக்கம் ஏற்படும். இது காலத்தின் கட்ட்டாயம்.

நாம் மணிச்சுடர் படிக்க ஒரு முஸ்லிம் லீக்-ன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் வழி வகுத்திருக்கிறோம் ஆனால் இன்றைய மக்களின் சோம்பேறித்தனத்தின் படிநிலை வளர்ச்சியில் யாரும் முஸ்லிம் லீக் இணையதளத்திற்கு போய் அதற்கு பிறகு மணிச்சுடர் பகுதிக்கு போய் அதற்கு பிறகு அன்றைய நாளின் பிரதியை படிப்பதெல்லாம் மிக சிரமம். இன்னும் சொல்லப்போனால் வலைதளமே இன்று வழக்கொழிந்த நிலையில் தான் ஆகிவிட்டது, அதை நாம் அதிகாரப்பூர்வ மற்றும் ஆவணப்படுத்தும் தளமாக வைத்துக்கொள்ளலாமே ஒழிய மக்களை சென்றடையும் வழியாக இன்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் விஞ்ஞானம் அழைக்கும் தொலைவிற்கு நாமும் செல்வது அதி முக்கியம், ஏனென்றால் கொள்கை இல்லாதவர்களும், சகோதரத்துவ, சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானவர்களும் தொழிற்நுட்பத்தை மிக பாதகமாக பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதே என் வேதனை.

நேற்று கூட அண்ணன் அபூஹாசிமா மணிச்சுடர் பற்றிய ஒரு பதிவை இட ஒரு நண்பர் நான் என்றோ பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரிடத்தில் பத்திரிக்கை பார்த்திருக்கிறேன், இன்றும் வருகிறதா என பின்னூட்டம் இடுகிறார். இத்தகைய நிலைமையை களைய நம் ஒவ்வொருவர் மீதும் கடமை இருக்கிறது. இன்று மணிச்சுடர் பல தியாகிகளின் பின்புலத்தில் உத்வேகம் கொண்டு வருகிறது என்பது திண்ணமான உண்மை ஆயினும் அதனை சமூகத்தின் கடைக்கோடியிலும் கொண்டு சேர்ப்பது அதன் இலக்கை நிறைவு படுத்தும்.

பிறைமேடைக்கும் இவ்வாறு அமைத்தல் இன்னும் நலம் பயக்கும். இதை என் போன்ற தாய்ச்சபை ஆதரவாளர்கள் செய்ய நெஞ்சத்துடிப்பு இருந்திடினும் இதை பதிப்பகத்தார் அல்லது நிர்வாகத்தின் சார்ப்பில் இருப்பவர்கள் செய்வதே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது நிலைப்பாடு. அல்லது இதெற்கென இருக்கும் குழு இதை செய்யலாம். (என் போன்றவர்கள் அயலகத்தில் இருக்கிறோம் என்பதும் ஒரு நிலைமை இதையும் கருத்தில் கொள்க).

செய்வதை தொய்வின்றியும், களைப்பின்றியும் செய்வதில் தான் முழுமை இருக்கும்.

மணிச்சுடர் என் இளம்பிராயத்திலிருந்தே என்னோடு இணைந்த, இயைந்த நாளேடு.. அது என் பாட்டனார்கள் எனக்கு இட்ட அமுதம் அதை வைத்தே ஊடகங்கள் இலலாத அப்போதே சமூகத்தை காட்டும் கண்ணாடியாக அதை கண்டு கொண்டேன். அது கொணர்ந்திருக்கும் சமூக சிந்தனைகள், கவிதைகளின் தாக்கம், கட்டூரைகளின் விதை எல்லாம் அளப்பறியது. ஆகவே எனது உள்ளம் விரும்பும் ஒரு நாளேடு பற்றிய எனது எண்ணத்தை ஈங்கன் சொல்லி இருக்கிறேன்.

தொடர்புடையவர்கள் ஆவண செய்தால் மகிழ்வேன்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

__________________________________________________________________________

Reply from Our Vellore Ex.MP Janab.Abdul Rahman Shahib.

abdul rahman rahmanexec@yahoo.com

Sep 14
to jmbatcha+ownersAbduljmbatchame
  
Translate message
Turn off for: Tamil
Thambi,
I appreciate your anguish, anxiety and enthusiasm in propagating our journals.
Your suggestion is very much meaningful.
The said assignment is given to any salaried specific staff, we may see the expected result. If we add this job to any existing staff, I don't know how far it will go smoothly. 
Can I suggest you one thing ?
As you are part of us and with real involvement, why don't you just start and continue for few days as a model.
You will get all info from our party website. At one stage, lets arrange some one to follow the steps you do.
 You should not think that your own suggestion is getting diverted on you only. You know very well that I am a practical man to explore the reality. 
I hope you all will appreciate the effort we took to bring a color machine for all our printing needs. Pl do Dua. It is going to take off on 15th Sept, the day of our National Executive Meet in Chennai. Everything what we dream will happen one after another Insha Allah.
Thanks for your write up.
Regards and Salaam.
Abdul Rahman