28 ஏப்ரல் 2012

அறிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களுடன் சந்திப்பு


இன்றைய தினம் யோகம் என்று தான் சொல்லவேண்டும் எனென்றால் ஒரு சிறப்பான மனிதரின் சந்திப்பு நிகழ்ந்தது அதுவும் சமூக உணர்வுள்ள சன்மார்க்க பிடிப்புள்ள பண்பட்டவரோடு, மேற்சொன்னவைக்கு சொந்தக்காரர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது என்ற நல்ல மனம் கொண்டவர். இணைய முகநூல் தான் நாங்கள் இருவரும் இணைய முழுமுதல் காரணம், பிறகு இருவரின் அலைவரிசையும் பொருந்திப்போனதால் எங்களுக்கிடையே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது அதில் முனைப்போடும் நானே உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்றும் விருப்பப்பட்டு சந்தித்தார்.

பதினைந்து நூற்கள் எழுதிய பழுத்த இலக்கியவாதி, வரலாற்று ரீதியாக ஆராய்வதில் உள்ள ஆர்வம் அவரது சந்திப்பில் வெளிப்பட்டது. இன்று சனிக்கிழமையாதலால் அதிக அலுவலக சுமையின்றி அவரோடு அரை நாள் செலவழிக்கும் பேறுபெற்றேன். மனிதர் எதார்த்தமாக இருந்தார் துபை வந்த உடனே உங்கள் ஒவ்வொருவரையும் நானே இன்ஷா அல்லாஹ் தனிப்பட்ட முறையில் சந்திப்பேன் என முகநூல் நிலைக்குறிப்பு தந்தவரின் உணர்வு மெய்ப்பட்டது இன்று. சந்தித்த நேரத்தில் நாம் முகநூலில் ‘’நபிகள் நாயகம் நேசர்கள் வட்டம்’’ நடத்தி வருவதையும், நமது இஸ்லாமிய மற்றும் சமூக சிந்தனைப்போக்கையும் பாராட்டினார்.

இன்றைய சமூகத்தில் எங்கும் மனவிரோத போக்கு நிலவுவதை சொல்லிக்காட்டி தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் லேனா அவர்கள்.. ‘’கருத்துவேறுபாடு எங்கும் தோன்றும் அது இருக்கலாம் ஆனால் அது மனவிரோதத்தை ஏற்படுத்தாததாக மனவேறுபாடாக மாறாததாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார் அது எனக்கு மிகவும் பிடித்திருந்த உண்மையான சொல் என பகிர்ந்து கொண்டார்.

பிறகு, ஃபுஜைராவில் மலைகளை வெகுவாக அகற்றிக்கொண்டிருக்கும் நிலையை கண்டு பூமியை ஓரளவுக்கு மீறி துன்புறுத்தக்கூடாது இவைகள் நல்லதல்லவே, இயற்கைக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற தன் கருத்தை எங்களிடம் கூறிக்கொண்டு வரும்போது இயற்கையின் ஒவ்வொன்றிலுமாக இறைவனின் தன்மை எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கிறது அவனின் வல்லமையே வல்லமை என இறைவனை துதித்தவரின் உள்ளம் இங்கே உள்ள புஜைராவின் மீயூசியமாக உள்ள கோட்டை, மற்றும் சுமார் கி.பி 1446ல் கட்டப்பட்ட சற்றேறக்குறைய 600 வருடங்களுக்கு மிகாமல் இருக்கும் பழங்கால பிதியா பள்ளிவாசல் இவைகளை பார்க்கும் போதெல்லாம் நபிகளார் எப்படியெல்லம் இது போன்ற சூழலில் வாழ்ந்திருப்பார்கள்.. எப்படியெல்லாம் கஷ்டப்- பட்டிருப்பார்கள் இன்று இந்த மண் சோலைவனமாக, பணங்கொழிக்கும் பூமியாக இருக்கிறது இதெற்கெல்லாம் காரணகர்த்தா அவர்களன்றோ என்று எங்களிடம் அவர் பேசிக்கொண்டு வந்தார்.

கொர்பகானின் பகுதியில் அரபிக்கடலைப்பார்த்து இங்கு அலை இருக்காதோ..எனக் கேட்க ஆதற்கு நான் அரபிக்கடலில் அலை இருக்காது என்றேன்.. அதற்கு அறிஞரின் நண்பர் எஸ்.அப்துல் லத்தீப் நான் மு.மேத்தாவின் நாயகம் ஒரு காவியத்தில் படித்திருக்கிறேன், அதில் அவர் சொல்லுவார் ‘’நாயகமே உங்களின் குணத்தின் சாந்தத்தை போலவே அரபிக்கடலிலும் அலைகள் இல்லை’’ என்று எனக்கூற ஏம்பலார் அவர்களும் இது இறைவன் நபிகளாருக்கு கொடுத்த கண்ணியமாகவும் கூட இருக்கலாம். அவனின் பிரியப்பட்ட ஹபீப் அல்லவா என்றார்.

பிறகு பிரிய மனமில்லாமல் மாலை 5.15 வாகில் விடைபெற்றோம் அப்போது எங்களிடம் அவர் சொன்னது மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள் அவை ’’இன்றைய காலத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லாமல் மனத்தூய்மையுடன் (இக்லாசுடன்) ஒருவர் மற்றொருவரிடம் பழகுவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது அதுவும் இறைவனுக்காக, இறைத்தூதரின் அன்பினுக்காக, மக்களின் உடல் ஆன்ம நலத்திற்காக ஒருவர் மற்றொருவரை நேசிக்கிறார் என்றால் அவரின் தொடர்பை விடாது நாம் பிடித்துக்கொள்ள வேண்டும்’’ என்று அவர் சொன்னதை அறிவுரையாக ஏற்றேன். பின் சமூக ஆர்வலர் அண்ணன் வழுத்தூர். அப்துர் ரஹீம் (சாப்ஜி) அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறப்பான சந்திப்பு சித்தித்ததற்கு இறைவனின்டம் நன்றிகள் சொன்னோம். அவர்களின் தூய்மையான சமூக தொண்டு மற்றும் அறிவுப்பயணத்தில் அல்லாஹ் சிறப்பான வெற்றியை கொண்டுப்பானாக! மீண்டும் இது போன்ற நல்லவர்களை அடிக்கடி சந்திக்க அவனே நாடுவானாக! ஆமீன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

25 ஏப்ரல் 2012

பேச்சிலர்களே..''தீ'' கவனம்!



அலுவலகம் முடியும் ஐந்து மணிக்கெல்லாம் சீட்டை காலிபண்ணுபவன் நானில்லை, அதற்கு பிறகு தான் என் சார்ந்த கணிணி வேலைகளை சற்றே முடுக்கிவிட்டு ஆறஅமர இருந்து விட்டு பிறகு என் கீழ் தளம் நோக்கி வருவேன் மணி ஆறு அல்லது அதற்கு மேல். சில நேரம் ஒரே சூழலில் கணங்களை கழிப்பபதால் சற்றே மனம் களிப்புற ‘’பராக்’’கா கொஞ்சம் மற்ற சக தோழர்களை சற்றே ஐந்தாறு கி.மி களுக்கு அப்பால் விடும் வேன் டிரிப்-ல் ஏறி உலாவந்து மீண்டும் என் இடத்திற்கு திரும்புவது ஒரு சில நாளாய் நான் செய்துவருவது. இன்றைக்கும் அப்படி போய்விட்டு சற்றே அரைமணி நேரத்திற்குள என் தளம் வரும்போது அடுக்ககத்தின் கீழே பெருங்க்கூட்டம்.. உள்ளே உள்ளவர்களும், என் ''சைட்டில்'' வேலை செய்பவர்களும் வெளியே அன்னார்ந்து பார்த்து கொண்டிருந்ததை பார்க்க பகீல் என்றது, வேன் ஓட்டி ஒன்பதாம் அடுக்கில் அடுப்பில் யாரோ அசட்டையாக இருந்து விட்டனர் புகை தெரிகிறது என்றான்…!

ஆகா..நமது எல்லா முக்கிய வஸ்துக்களும் அங்கே தானே இருக்கிறது.. எல்லோரும் வேறு வெளியே நிற்கிறார்களே என இப்படி எண்ணிக் கொண்டிருந்த வேளை வேனை விட்டு கிழிறங்கி பார்த்தேன். ‘’அப்பாடா.. ஒன்பதாம் அடுக்கில் தீ கொண்ட அறையின் பால்கேனியின் கதவு திறக்கப்பட்டு புகைகள் வந்து ஓய்ந்து லேசாக வந்து கொண்டிருந்தது. மிகப்பெரும் தீ இல்லை இறைவன் தடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்! ஆனாலும் பயப்படும் படியான நிக்ழவு தான். இதற்கிடையே எனது எல்லா அலுவலக ஊழியர்களும் பத்தாம் அடுக்கிலிருந்து கீழ் நோக்கி பார்த்து போஸ் கொடுத்துக்கொண்டும்… சம்பந்த பட்டவர்களுக்கு போன் செய்து இருந்தனர். ஒரு பாதுகாப்பு கருவிகளும் சரிவர முறையாக இல்லாத அடுக்ககமாதலால் ஃபயரான பின்னும் லிஃப் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

ரிசப்சனுக்குள் வந்தேன்.. கதவடியில் நின்ற நாலு பேரை சற்றே தள்ளி கொண்டு ஒருவன் ‘’சைடு..சைடு..’’ என லிஃப்டுக்கு அருகில் ஓட பின்னால் வந்த பிற ஆட்களின் முகத்தில் ஈ-க்கும் ஆடாத எறும்பு-க்கும் ஆடாத பதட்டம் ‘’ டேய் மொதல்ல போங்கடா..ச்சே..ச்சே..’’ என்ற ஆதங்கங்களை கொட்டி மேலே விரைந்தனர். பிறகு தான் தெரிந்தது எனக்கும்.. எல்லாருக்கும்... இது நமது தமிழகத்தின் பிரபல மூன்றெழுத்து கம்பெனி ஆட்கள் தங்கியிருக்கும் தமிழ் அறை என. பிறகு அவர்கள் போய் மேலும் புகையை களைத்து அங்கிருந்த ஃபயர் எக்ஸின்குஸைரை பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை பரப்பி ஒருவழியாய் பதட்டத்துடன் பயம் களைந்திருக்கிறார்கள், நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.

எத்தனை மணியிலிருந்து இப்படி ஆனது.. எப்படி ஆனது.. என்ன சமாச்சாரம் என்றெல்லாம் தெரியவில்லை, வெளியே அச்சமடைந்து நின்றிருந்த அடுக்ககவாசிகள் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி ''இப்படி ஆயுடுச்சே.. என்ன பசங்க இவங்க.. இவ்வளவு அஜாக்கிரதையா'' என பேசியும், ஏசியும் மீண்டும் ரிசப்சனிலும், கட்டிடம் எங்கிலும் இருந்த புகை வாடையை நுகர்ந்து பயந்தவாறே கட்டிடத்தின் உள்ளே சென்றனர், அதே நேரம்… மற்ற பேச்சிலர்கள் ''இப்படி தானே நாமும் பலமுறை அசால்ட்டாக இருந்திருக்கிறொம் நல்ல வேலை இது போல் நடக்கவில்லை!'' என மனதுக்குள் சமாதானம் ஆகி இனி கொஞ்சம் விழிப்போடு இருக்கனும் என்று அவர்களும் சென்றர். பகலில் நடந்ததால் புகையை கண்டு உடன் எல்லாம் பாதுபாப்பு பெற்றனர். இறைவன் காப்பாற்றினான்!

பொதுவாக எல்லா பேச்சிலர்கள் தங்கி இருக்கும் தளங்களிலும் இது நடக்க பல வாய்ப்பிருக்கிறது ஏனென்றால் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அவர் பார்க்கட்டும் இவர் பார்க்கட்டும் அல்லது நம் வேலை முடிந்துவிட்டது இனி ஏன் நாம் செய்யவேண்டும் என்ற மனநிலை அதிகம் இருக்கும் மேலும் சோம்பல் சொல்லவே வேண்டாம்!. ஒருவரின் அசட்டையால் அவர் மட்டுமல்ல மொத்த கட்டிடத்தில் இருக்கும் அத்தனை ஆண், பெண், குழந்தைகள் உயிர், உடைமை என எல்லாவற்றிற்கும் தீங்கு நேர வாய்ப்புண்டு.ஆதாலால் அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் இவைகளில் கவனம் எடுத்து நாட்களை பாதுபாப்புடன் நமது கனவுப் பயணம் நோக்கி நகர்த்துவோம்.

பேச்சிலர் நண்பர்களே.. அடுக்ககத்தில் வசிப்பவர்க்ளே கவனமாக இருந்து கொள்வோம். இடர்தனை தவிர்போம். இறைவன் என்றும் பாதுகாப்பு அருளட்டும்.



வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 ஏப்ரல் 2012

உண்மை மீளும்!




அற்பத்தில் மூழ்காதே
அநியாயம் போகாதே
ஆத்மாவின் ரகசியம்
அகிலத்தில் நிலையாகும்!

தேனூறும் உலகியல்கள்..
தேவையில்லா சிந்தனைகள்..
சிறைசெய்யும் சிற்றின்பசீர்கேடு..
சிதைத்துவிடும் உன் உயர்வை!

நிலையான பரமதிலே
நிலைகொண்டு நீ இருக்க
வலையான மாயையிலே
நுழையாமல் நிலைத்திடுவாய்!

எண்ணத்தில் நீ உயர...
நித்தியமாய் நீ மிளிர...
சத்தியமாய் இவையெலாம்
சாதகர்க்கு பகையாகும்!

முக்திபேறு வேண்டுமானால்
முக்தர்களின் நாமமோதி
முழுநிலைஅடைந்த தூயோர்
முன்சென்ற வழியில் செல்!

உள்ளதெது உணர்ந்து விட்டால்
உண்மை யெல்லாம் தெரிந்துவிடும்
உண்மை மட்டும் மனம் நாடும்
உண்மை மட்டும் உன்னில் மீளும்!


2004-ல் எழுதியதாக இருக்கலாம், அப்போதைய மனவோட்டம்.

கருத்து : ஒருவன் மெய்ப்பொருளை அறியாமல் இருக்கக்கூடாது, உலகியல் சங்கதிகள் யாவும் அதனை தேடல் கொண்டு சிந்திப்பதிலிருந்து தடுத்து விடக்கூடாது ஆகையால் அதை மெய்நிலை கண்டமுன்னோர் வழியில் சென்று அறிந்து கொண்டால் சத்தியம் எதுவென்று அதாவது மெய்ப்பொருள் எதுவென்று அறிந்து விடும் அப்படி விளங்கினால் அதை தவிர ஒன்றையும் மனம் நாடாது. எதிலும் அதன் மூலமும், உள்ளமையுமான இறை உண்மையே தெரியும் அவ்வாறான தெளிவு நிலையில் அந்த மெய்ப்பொருளே அவனின் மூலமுமாய் இருப்பதனால் அவனும் அதனுள் ஐக்கியப்பட்டு நித்திய ஜீவனெய்துவான்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஏப்ரல் 2012

நானொன்றும் எழுதவில்லை




தேவி...
இதழோடு தேன் வழிய
இசைத்தேனே உன் பெயரை
முதலேதும் தெரியாமல்
மூழ்கிவிட்டேன் இன்பத்தில்..!
============================


உன் மலர் கூந்தல்
ஓர் மலையாக - அதில்
மல்லைகைப் பூ பால் அருவியாக
பார்த்தேன் தேவி காற்றில் ஆடயிலே!

==============================


இதயத்தில் புகுந்து
இப்படியெல்லாம் இம்சிப்பாய்
எனத்தெரிந்திருந்தால் - உன்
இதழுக்குள் எழும் வார்த்தைக்காக
இப்படி அழைந்திருக்க மாட்டேன்.

=============================

நானொன்றும் எழுதவில்லை
உன் கண்கள்
படித்த கவிதையை
என் கைகள் இன்று
எழுதியது அவ்வளவே!

=============================

உதட்டோரம் உதிர்த்து
உள்ளக்குடி சேர்ந்து
உலகை மறக்க வைத்து - என்
உயிரைக் குடித்ததடி
உன் மொழி!

=============================

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 ஏப்ரல் 2012

அந்த நாள் மான்குட்டி



இந்த கவிதை தோழர் . எச்.தவ்ஃபீக் கஸ்ஸாலி  அமீரகத்திலிருந்து கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றைய தினத்தில் அவருக்கு எழுதி அனுப்பினேன். படித்துவிட்டு ஊரை பிரிந்து அமீரகம் சென்ற புதிதான அந்த நேரத்தில் இருந்த உணர்வுகளால் சூழப்பட்டு எனக்கு அதே அதிர்வுடன் பதில்மொழி கடிதம் பகர்ந்தார்.. வெகுவாக சிலாகித்தார். எழுதியது பிப்ரவரி மாதம் 1996 ஆண்டு அதாவது நான் வெளிநாடு செல்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்.

அந்த நாள் மான்குட்டி நான்
இந்த நாள் தேள் கொட்டியதோ..!

காலையும் முறித்துவிட்டு
கலசமாட சொல்கிறார்கள்
எப்படி ஆடுவேன் அய்யா..!

என் உயிரெல்லாம் ஊரில் உள்ளதே
என் ஒவ்வொரு இரத்த அணுவும்
ஏனடா இந்த சோதனை - இதற்கு
மேலடா நரக வேதனை
என்கிறதே அய்யா!

என் அன்புத்தாயே
ஆருயிர் தந்தையே - என்
மேலுயிர் வைத்த அம்மையே
எப்போது ஆசை மொழி பேசி
ஒத்தாசை சில செய்து
பாசத்தில் உறைவேனோ!

அன்புக்கடன் பட்டுள்ள - என்
உடன் பிறப்பிடம்
கனிமொழி பேச
மனமொழி கூறுதே
கனியுமா..?

உறவே...
உன் அருமை அறியாமல்
உண்மை புரியாமல்
தண்ணீர் பொல் வாழ்ந்தேனே
கண்ணீர் தான் இனி என் காணிக்கை!

மலருக்கு வாசம்
மனிதனுக்கு பாசம்
பிரிவென்பது மிக மோசம்
அன்பிலே தான் சந்தனம் வீசும்
இதையெல்லம் இன்றென் கண்ணீர் பேசும்!

உடல் இங்கே
உயிர் அங்கே
இதயம் இங்கே
துடிப்பு அங்கே
ஒரு நிமிடம்
நூறு வருடம்

ரத்தமென்ற பசையால்
வித்தகமாக அன்பொட்டிய
சுத்தமான உணர்ச்சியெல்லாம்
சத்தமாக மனதுக்குள் அழுது
மொத்தமாக வேகுதய்யா மனசு.. - ஒரு
முத்தம் கூட கிடைக்கலையே பொழுது.

கடனுக்கு கண்ணீர் தாரீகளா..!
உடனோடு இல்லை - இதில்
உப்பும் இருக்காது - அது
ஊரின் உறவில் படிந்துவிட்டது.

எங்கள் சமுதாயம் இப்படியா அழவேண்டும்
இதென்ன இறையே விளையாட்டு
இது தான் விதியா - அல்ல
வாழ்க்கையின் வீதியா..?

பணம் என்ற மாயைக்காக
குணம் கொண்ட இவர்களை - ஒரு
கணம் கூட மறக்க இயலாதே!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 ஏப்ரல் 2012

மக்களவையில் எழும்பிடும் மகத்தான குரல்!


தாய்ச்சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துர் ரஹ்மான் சாஹிப்



தமிழ் இஸ்லாமிய சமூகம் குறித்து மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரல் என்று சொன்னால் இந்நாட்களில் அது நமது தாய்ச்சபையின் பிரதிநிதியாய் விளங்கும் வேலூரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களுடையது என்றே நடுநிலையோடு அரசியலை உற்று நோக்கும் யாவரும் சற்றே தயக்கமின்றி கூறிடுவர்.

ஆனால், ஒளிவுமறைவின்றி இங்கே சொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தான் நமது சமூகத்திற்காக அதன் பாதுகாப்பிற்காக அதன் உரிமைக்காக தனது அயராத சேவையால் அழகான அணுகுமுறையால் தாய்ச்சபை முஸ்லிம் லீக் உழைத்துக் கொண்டிருந்தாலும், காயிதேமில்லத் காலம் தொட்டே இன்றுவரை அதன் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாதுர்யமான மற்றும் சாத்வீகமான அணுகுமுறையால் சமூகத்தின் தேவைகளுக்காக போராடி எத்தனை எத்தனையோ விசயங்களை வென்றெடுத்து பெற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாலும் விசமிகளாய் இன்று சமூகத்தை துண்டாடி இயக்கங்கள் என்ற பெயரில் இதயமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தினரை பயன்படுத்தி பாழ்படுத்திவருவர்கள் அரசியலில் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் சோற்றில் முழு பூசணிச்காயை மறைப்பதைப் போல முஸ்லிம் லீக் சமூகத்திற்கு என்ன செய்தது.. ?என்ன குரல் கொடுத்தது..? என்ன பெற்று தந்தது…?   எங்களை பாருங்கள்.. நாங்கள் போராடுவதை பாருங்கள்.. நாங்கள் கோசமிடுவதை பாருங்கள்.. என படம் காட்டி அரசியலோ அல்லது நேற்றைய நிகழ்வுகளோ தெரியாத பாபப்பட்ட கூட்டத்திடையே ஓர் மாயையை உண்டாக்கி கொண்டிருக்கின்றனர், ஆனால் அந்த ஜம்பம் இனி பலிக்காது.

நேற்றைய காலத்தைவிட இன்று ஊடக ஒளி அதிகம். நேற்றைய காலத்தை விட நிகழ்வுகளை பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் அறிவியல் வளர்ந்துவிட்டது. இனி யாரும் நமது தாய்சபையின் சமூக உழைப்பினையும் அதன் சரித்திரத்தையும் குறித்து கேள்வி கேட்ட முடியாது. அந்த வகையின் நடந்த நிகழ்வின் சரித்திர பதிவு தான் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்களின் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஜானாதிபதியின் உரைக்கு நன்றி கூறும்  மிகச்சிறப்பான  உரை. அதன் மூலம் பொய் இயக்கங்களின் போலி முகத்தில் அச்சரேகைகளை ஓட விட்ட அதே சமயம் அவர் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான எல்லா அம்சங்களையும் அதில் உள்ளடக்கி பேசிய அம்சம் அவரின் சமூக அக்கரையையும் தாய்ச்சபையின் பிரதிநித்துவததையும் வெளிப்படுத்திக் காட்டியது.

பாராளுமன்றத்தில் எல்லா உறுப்பினர்களுக்கும் எல்லா தருணங்களிலும் வாய்ப்பு கிடைப்பது இல்லை.. இது போன்ற சூழ்நிலைகளில் வரும் வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி தங்களின் கருத்தை சமூகத்தின் சார்பாக பதிப்பது என்பது சமூகப்பொறுப்புள்ள உறுப்பினர்களின்  திறமைக்கு சவாலான ஓர் செயல் என்றே கூட சொல்லலாம். அந்த வகையில் தனக்கு வந்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தி இன்றைய சூழலில் தான் சார்ந்திருக்கிற தமிழ் இஸ்லாமிய சமூகத்திற்கும் மற்றும்  தமிழ் சமூகத்திற்கும் வேண்டுவன எல்லாவற்றையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்து மன்றத்தில் பதியவைத்தார் அன்பர்.அப்துல் ரஹ்மான் என்றால் மிகையில்லை.

ஆம்! சென்ற மார்ச் 15ஆம் தேதி நண்பகல் 12.31,  சபாநாயகர் 'அப்துல் ரஹ்மான்' என பெயரை வாசித்ததிலிருந்து தனக்கு கொடுத்த 13.44 நிமிடங்களில் " இந்த நல்ல வாய்ப்பை எனக்கு கொடுத்ததில் தங்களுக்கு நன்றியை முதலில் உரித்தாக்க்குறேன்.. " என ஆரம்பித்து அவர் பேசிய 13.34 நிமிடங்களின் பேச்செல்லாம் நம் ஒட்டு மொத்த சமூகத்திற்கு எது தேவையோ அதுவே நிரம்பி இருந்தன. ஜனாதிபதி உரையில் இடம் பெற்ற அரசின் அறிவிப்பான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27விழுக்காடு இட ஒதுக்கீடில்  உள் இடஒதுக்கீடாக 4.5 விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார் அந்த இடஒதுக்கீடானது இஸ்லாமியர்களோடு சேர்த்து கிருத்துவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என அனைவருக்கும் சேர்த்து தான் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று அல்ல... மத்திய அரசே அமைத்த கோபால்சிங்(1984), சச்சார், ரங்கனாத் கமிட்டிகளெல்லாம் இந்திய இஸ்லாமியர்களில் சமூக பொருளாதார நிலைமை மிக பின் தங்கியுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றது. ரங்கனாத் மிஸ்ரா கமிட்டி குறைந்தது முஸ்லிம்களுக்கு 10விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பரிந்துரைத்துள்ளது அப்படி இருக்க கொடுத்த 27விழுக்காட்டில் எல்லா சிறுபான்மையினருக்கும் சேர்த்து 4.5 என்பது சரியல்ல.. தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையிலான முந்தைய அரசு முஸ்லிம்களுக்கு மட்டும் 3.5 விழுக்காடு கொடுத்திருக்கிறது அதையே அதிகப்படுத்த நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் அப்படி இருக்கும் போது மத்திய அரசும் ரங்கனாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரையை நடைமுறை படுத்தி நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை மேன்மை படுத்த உதவேண்டும் என பாராளூமன்றத்தின் சுவர்கள் எதிரொலிக்க கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பேச்சில் உலக அரங்கில் அமைதி இழந்து தினம் தினம் பாதிப்பிற்குள்ளாகி வரும் பலஸ்தீனியர்களின் விடுதலையை ஆதரித்து பலஸ்தீனத்தின் பக்கம் நிற்கும் இந்தியா மறுபுறம் சில சக்திகளின் அழுத்தங்களுக்காக இஸ்ராயிலின் ஆதரவையும், அதன் படி  எந்த ஒரு முகாந்த்ரமும் இல்லாது பேச்சு, எழுத்து சுதந்திரங்களெல்லாம் இருக்கும் இந்நாட்டில் இஸ்ரேலிய எதிர்ப்பு என்ற ஒரு காரணத்திற்காக உண்மையான பல பத்திரிக்கையாளர்களை டெல்லி போலிசாரால் கைது செய்வது போன்ற செயல்கள் ஏன்? என‌ எதிர்த்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை இஸ்ரேலின் ஆதரவிலிருந்து விடுவித்து கொள்ள வேண்டும் எனவும் எந்த தயக்கமும் இன்றி பேசியவர் அந்த உரையினூடே அடுத்ததாக எடுத்த விசயம் இந்தியா பொருளாதாரத்தில் நிறைவடைய வேண்டும் என்றால் நடைமுறையில் இருக்கும் வங்கி முறைக்கு பதில் அரபுநாடுகளில் கையாண்டு அவர்கள் லாபம் அடைந்திருக்கும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கி முறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்பதாகும். ஐரோப்பிய நாடுகளே தங்களின் வங்கி முறையால் தோல்வி கண்டு பின் அவைகள் இஸ்லாமிய வங்கி முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது ஆதலால் இந்தியா இம்முறையை கையாண்டால் நிச்சயம் நம் பொருளாதாரம் ஓங்கும் இது உறுதி என ஆணித்தரமாக பேசி இறுதியாக அன்று முக்கிய பிரச்சனையாக இருந்த ஐ.நா-வின் இலங்கை எதிர்ப்பு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனவும் அதன் விளக்கங்களை கூறி தன் உரையை நிறைவு செய்து பதியவைத்ததை.. திறமையாக பயன்படுத்தி சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலித்ததை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

இடஒதுக்கீட்டு பிரச்சனை, இஸ்லாமிய வங்கி முறை, பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் ஆதரவு என பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் குரலாக ஒலித்தததே இன்றயளவில் கூட ஹஜ்ஜுக்கு செல்லும் இந்திய இஸ்லாமியர்கள் பாஸ்போர்ட் பெருவதில் எழுந்த சிக்கலால் தங்களின் வாழ்க்கை கனவான இரவுப்பகலின் ஏக்க‌ தூஆவான ஹஜ்ஜு பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் இடுக்கண்களை கலைய அரசு இடைக்கால பிரத்யோக பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் அதுவும் துரிதமாக கிடைக்க வேண்டும் என்றும் ஹஜ்ஜுப் பயணிகளுக்கான எல்லாவித நடைமுறை சிக்கலும் தீர்க்கப்பெற்று அவர்கள் தங்களின் இறுதிக் கடமையை செவ்வனே மனஅழுத்தம் இல்லாது நிம்மதியாக நிறைவேற்ற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் எடுத்த முன்னெடுப்பில் வெற்றி பெற்றுள்ளாரே.. அரசே பதில் கொடுத்து கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி இருக்கிறதே என்று இவைகளை எல்லாம் தாய்ச்சபையின் சார்பாகத்தானே ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் அவர் முழங்கி இருக்கிறார்.

ஆனாலும் இங்கே சிலர் கீழான காழ்புணர்வுக்கு வசப்பட்டு இத்தனை பிரயத்தனங்கள் செய்யும் ஒரு சமூக பிரதிநிதியை..மனமுவந்து பாராட்டாது.. துஆ செய்யாது இவர் மூலம் சமூகம் தானே பலன் பெருகிறதென்றெல்லாம் சிந்தனைக்கூட செய்யாது.. அவர் மன்றத்தில் 'திமுக' வின் உறுப்பினராகத்தானே சுட்டப்படுகிறார் என்று சொல்கிறார்கள் என்றால் அரசியலில் சாதுர்யமான அணுகுமுறை என்றெல்லாம் உண்டென்பது உங்களுக்கு தெரியுமா..? அங்கனம் அணுகியதில் தானே சமூதாயத்திற்கு நாம் பிரதிநிதியை பெற்றோம்.! அன்றைய சூழலில் அவர் அவர்களின் சின்னத்தில் நின்ற காரணத்தால் அங்கனம் குறிக்கப்பட்டாலும் கூட அவர் சமூகத்திற்காக குரலெழுப்பியதில் அவர் மேலோங்கி நிற்கிறாரா இல்லையா..?  அப்படி அவர் திமுக-வின் பிரதிநிதியாக இருந்தால் இங்கனம் அவர் பேச முடியுமா இல்லை திமுக-உறுப்பினர்கள் தான் இவரின் சாராம்சங்களை என்றாவது பேசி இருக்கின்றனரா..? பாராளுமன்றத்தில் எத்தனையோ கட்சிகளை சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்களே அவர்கள் தான் இவர் போன்று சமுகத்தின் வாதங்களை எடுத்துரைத்திருக்கின்றனரா..? நடுநிலையளர்களே.. சமூக மாந்தர்களே இதை உங்களின் மன்சாட்சிக்கு முன் எடுத்து வைக்கிறேன்.

எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு தேர்வாகிவிட்டோம்  பிறகென்ன என்று தங்களின் வழக்கமான அரசியல் சதுரங்க விளையாட்டில் முனைப்பு காட்டி வருபவர்களின் மத்தியில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தான் ஒரு இந்திய இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவர்களுக்காக நாம் எதையாவது செய்தே ஆக வேண்டும்.. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் பயன்படவேண்டும் என்றும்.. அரசியல் சூழ்ச்சிகளூக்கு மத்தியில் இஸ்லாமியர்களை கவசம் போல் எப்படியெல்லாம் காக்க வேண்டும் எனற சிந்தனையில் எப்போதும் இறைவனுக்கு பயந்து சமூக நலனுக்காய்செயலாற்றும் நமது தாய்ச்சபையின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரை நல்லெண்ணம் கொண்டவர்கள்.. காழ்புணர்வுக்கும், கீழான அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் யாராயினும் பாராட்டவும், அவருக்காக துஆ- வும் செய்யவார்கள். அந்த மனநிலையில் நாடெங்கும் அவருக்கு பாராட்டும் துஆ-வும் பொழிகிறது. நன்றிகளும் பல நெஞ்சங்கள் சொல்லிக்கொண்டு தான் உள்ளது என்பதே உண்மை!

வாழ்க தாய்ச்சபை.. வாழ்க அதன் பிரதிநிதித்துவம்!
வாழ்க நல்லெண்ணம்! வாழ்க எம் சமூகம்!

இவண்.
வழுத்தூர்.ஜா.முஹையத்தீன் பாட்சா
மண்டல செயலாளர்
அமீரக காயிதே மில்லத் பேரவை.

13 ஏப்ரல் 2012

பூமிக்கு துணை நில்!



அடுத்தது.. அடுத்தது என பல அடுத்த கட்ட திட்டங்களில் திளைத்திருந்த மக்களின் மன ஒட்டத்தை 'சுனாமி' என்ற ஒற்றை சொல் புகுந்து அனைத்தையும் நிறுத்தி போட்டது..! அது மக்களிடையே அவர்களே அறியாது ஒரு வித பயத்தையும்.. பதட்டத்தையும் பற்றவைத்தது என்பது தான் உண்மை..!

இந்தோனேசியாவில் உருவெடுத்தது தமிழகம் உட்பட இன்னும் இருபத்தெட்டு நாடுகளை தாக்கும் என்ற அறிவிப்பு உலகளாவிய தமிழர்களை அத்தனை திக்கிலும் திடுக்கமுறத்தான் செய்தது.

பல தொலைக்காட்சிகளில் பாடல்களும், சினிமா காட்சிகளும் தொடர்ந்த நேரத்தில் புதிய தலைமுறையின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

அரட்டை..கலாய்ப்பு.. அலுத்துப்போன பலமுறை பார்த்த பதிவுப்படஙகள்.. அரசியல் கேலிகள் என வழக்கமான முகநூலின் திசை சுனாமி பக்கம் திரும்ப நேற்றைய முன் தினம் ஸ்டேடஸிலெல்லாம் சுனாமி மயமாகி போனது. பலர் ஸ்மிங்க் போட சுள்ளானை அழைத்தும், பவர் ஸ்டாரை கலாய்த்தும் பரவலாக காமெடி பரப்பிக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் இறைவனின் மிகப்பெரும் கருணை தான் 8.9ரிக்டர் என பதிவாகியும் ஏதும் பலிவாங்காது சென்றது.மீண்டது பல ஆயிரம் உயிர்கள் என்றே தான் சொல்ல வேண்டும். இன்றைய நம்மின் மூச்சுகளெல்லாம் உலகளவில் பலருக்கு புது மூச்சு தான்.. புத்துயிர் தான்!

மனிதன் இன்னும் இன்னும் திருந்தாமல் பூமியை.. இயற்கையை கோபமுற செய்தால் நாம் தான் பலிகடாக்கள் என உணர்ந்து கொஞ்சமாவது திருந்த முற்பட வேண்டும்.. இதில் வளர்ந்த நாடுகளின் அட்டகாசங்கள் மிக அதிகம்.. வளரும் நாடுகளுக்கும் பங்குண்டு.. ஏழை நாடுகளிலும் இவ்விரு நாடுகளும் ஆதிக்கம் செய்து அங்கும் தங்களின் பங்கிற்கு பூமியை.. இயற்கையை இதயமில்லாமல் துன்புறுத்துகின்றனர்.

போதும் மனிதா நீ தங்கம், நிலக்கரி, இரும்பு, பளிங்கு கல் என ..பூமியை குடைந்தது போதும், பெட்ரோல், கேஸ் என துளைத்தது போதும், மலையை வெட்டியது போதும்.. நிலத்தையும், நீரையும் மாசு ஆக்கியது போதும்... பிளாட்டிக்கை நிறுத்து.. நிலத்தடி நீரை கொஞ்சம் கிடத்து... வயல்களில் வீடு, கட்டிடம் வேண்டாம்.. கழிவுகளால் நதிகளை சீரழித்தது போதும்.. காடுகளை நிர்மூலமாக்கியது போதும் ஒரு சில மரங்களையாவது உன் பங்கிற்கு நட கொஞ்சமாவது முனை.. சுனாமிக்கு பயப்படும் மனிதனே கொஞ்சமாவது உன் குணங்களில் மாறுதல் கொண்டு வந்து பூமிக்கு துணை நில். பிறகெல்லாம் உனக்கு துணையாகும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 ஏப்ரல் 2012

காதலின் அசோகப்போர்



ஆட்டுகுட்டி சண்டையானாலும்
அசோகப்போர் போல நினைத்து நீயும்,
அப்படி என்ன உனக்கு என்று நானும்
எத்தனை இருள் போர்த்திய இரவுகளில்…!

ஒத்தகருத்துடனும் ஒருமித்த மனதுடனும்
நாம் கடந்து வந்த நாட்களினூடே
எத்தனை இரவுகளுக்கு
அது இல்லாமல் போனது
நமக்கு எற்பட்ட ஊடல்களில்!

தேடல் கொண்ட இரவுகளில் எல்லாம்
கூடல் வாய்ப்பது இல்லை ஆனாலும்
நீயும் நானும்
அவரவர் தரப்பின் முறைப்பில்
பலமாய் இருந்த‌
தேடல் இல்லாத நேரம் தான் நமக்குள்
அததனை பெரிய ஊடலையும்
ஜடமாயாக்கி..
ஒரு நொடி வலிமையில்
மாய்த்து சாய்த்துவிடும்
அந்த சனப்பொழுதின் ஸ்பரிசம்.

மீண்டும் நாம்
தோழன் தோழியாய்
பாசம் பொழிந்து
அசோகப்போர் தொடங்குவோம்!


காலம் -2011

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கேட்பாரின்றி!




மனிதனின் உள்ளே
ஓர் ஜீவன்
மறைந்திருக்கும்!

நேரமெல்லாம் ஓயாமல் அது..
கத்திக்கொண்டும்
பேசிக்கொண்டும்
ஆர்பரித்துக் கொண்டும்
அழுதுகொண்டும்
மகிழ்ந்து கொண்டும்
இசைந்து கொண்டுமே
இருக்கும்..!

யாருடைய ஜீவனும்
எப்போதும் அதன்
நாவசைப்பிலிருந்து
ஓய்வெடுப்பதே இல்லை.

ஆனாலும் அமைதியாக
அதை உணர்ந்து கொண்டும்
அதை அறிந்து கொண்டும்
உள்ளே ஓங்கும் அந்தக்குரலை
எல்லோரும் சட்டை செய்யாதே
சற்றே பயணிக்கின்றனர்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -6)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு

பாகம் -6

எதிர்பாராதது
பிறகு வீட்டிற்கு போய் இரவு கழிந்து காலை புலர்ந்தது (டிசம்பர் 31, சனிக்கிழமை), நான் அப்போது மாமியார் வீட்டில் இருந்தேன் காலை 10 மணிக்கு புவ்வா போன் செய்தது அம்மா நேற்றிரவு சாமத்தில் இறங்கும் போது தவறி கட்டிலிலிருந்து விழுந்து விட்டார்களாம் இடுப்பில் அடிபட்டுவிட்டதாக சொல்கிறார்கள் மிகுந்து வலிக்கிறதாம் நான் உடன் செல்கிறேன் வா.. என்றார் என் புவ்வா. உடன் ஓடிப்போய் பார்த்தால் வலியால் துடித்தார்கள் அம்மா.. ஏனம்மா இப்படி செய்துவிட்டீகள் இப்ப நீங்க தானே கஷ்டப்படுகிறீகள் என ஆதங்கப்பட்டார்கள் நம்மவர்கள்.

அன்றே அம்மாவை எழும்பு டாக்டர்களிடம் காட்ட வேண்டி அழைத்துச்சென்றோம்.. அம்மா உடல்நிலை பாதித்ததிலிருந்து எப்போதும் வெளியேவோ அல்லது வீட்டிலேயே வேறொரு இடத்திற்கோ அழைத்துச் செல்வதென்றால் காலித் தான் அம்மாவை இரு கரங்களால் தூக்கி கொண்டு வைப்பது வழக்கம்.. தஞ்சைக்கு அன்று சென்ற பொழுது அம்மாவை முதன் முதலாக ஒரு குழந்தையை தூக்குவது போல் தூக்கினேன்.. அம்மாவை நாம் இப்படி தூக்கும் நிலை வந்துவிட்டதே என்று மனம் உள்ளுக்கிள்ளே குமுறாமல் இல்லை! அன்று இரண்டு டாக்டர்களிடமும் சென்ற வகையில் அவர்களின் அறிவுரையெல்லாம் அறுவைசிகிச்சையையே சொன்னதாலும் இது சற்றே பெரியதுதான் என்றதாலும் நாங்கள் யோசித்தபடியே மூன்று ஊசிகளை போட்டுக்கொண்டு பின் அவர் எழுதிக்கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இன்ஷா அல்லாஹ் பார்த்துக் கொண்டு அடுத்ததுபற்றி யோசிக்கலாம் என வந்து விட்டோம்.. இப்பொழுதெல்லாம் அம்மா அதிகமாக உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.. சில நேரம் பலகீனமாக உணர்வு மங்க இருக்கிறார்களே மீண்டும் அம்மா ஏன் இது போல் ஆகவேண்டுமென ஜனவரி 07 ஆம் தேதி காலை நான் வீட்டிலிருந்து துபைக்கு பயணம் புறப்பட்ட பிறகு அன்று மாலையும் அம்மாவை டாக்டரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்…… இதற்கிடையில் அம்மா மீண்டும் பலகீனமாக மீண்டும் மூன்றாவது முறையாக வாஞ்சலிங்கம் டாக்டரிடம் சென்றதில் அவர் சில இரண்டு நாட்கள் போலவைத்திருந்து டிரிப் ஏற்றியதில் மீண்டும் அம்மாவின் உணர்வு மீள வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.. பிறகு குடந்தை டாக்டரிம் எழும்பிற்கான சிகிச்சை வீட்டில் நடந்தது ஆயினும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை படுக்கையிலேயே இருந்தாலும் அவ்வப்போது அம்மாவை முதுகு தாங்களாக வைத்துக்கொண்டு சாப்பாடு போன்றவை கொடுப்பார்கள்.

இந்நாட்களில் அம்மா யாராவது தன் பக்கத்தில் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என நினைத்தார்கள் ஆதலால் சற்றே யாரும் அறையை விட்டு சென்றால் உடன் அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.. அம்மா உடல் நலம் பாதித்த நவம்பர் மாதத்திலிருந்து எனது தாயார் பாப்பாந்தெருவில் தான் பெரும்பாலும் இருந்தார்கள் முக்கியமாக இரவு அம்மாவினுடனேயே கழித்தார்கள்.. அம்மாவிற்கு பணிவிடை செய்வதில் அம்மாஜான், முஜீப் அண்ணன் மனைவி, முர்ஷிதா என பலரும் உடன்நின்றார்கள் என்றாலும் எனது தாயாரின் இரவுபகல் பாராததும் அயராததுமான தன் தாயாருக்கான சேவை போற்றுதலுக்கு உரியது. இஸ்மாயில் பாயின் ஒத்துழைப்பும் உதவியும் மறக்க முடியாது. காலித் ஊரில் இருந்தவரை அவனால் ஆன உதவிகள் செய்தான்.

நான்காவது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
ஆனாலும் அம்மாவின் உணர்வற்றநிலை மீண்டும் தொடர்ந்ததால் வீட்டார்கள் திரும்பவும் நான்காவது முறையாக மார்ச் 09 ஆம் நாள் வாஞ்சலிங்கம் டாக்டரிடம் காட்டச்செல்ல உடன் அவர் ‘காய்ச்சல் அடித்துக்கொண்டிக்கிறது சற்றே தாமதமாக வந்திருக்கிறீர்கள்’  என செல்லிவிட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை தொடர்ந்தார்..!

சேர்த்து 2 நாட்கள் டிரிப் ஏறிக்கொண்டிருந்த வகையில் சற்றே உணர்வாகத்தான் இருந்தார்கள்.. திடீரென பலகீனப்பட்டதில் ஐ.சி.யூ-க்கு அழைத்துச்சென்றனர்.. மூச்சுவிட கஷ்டப்பட்டடதால் சலியும் இருக்கிறது என வென்டிலெட்டர் வைத்திருந்தனர்.. வென்டிலேட்டர் வைத்ததிலிருந்து அவர்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.. காலை மாலையென பல டெஸ்ட்கள் என்றும்.. அம்மாவிற்க்கு நரம்பு தென்படவில்லை என பலவாறு சிரமப்படுத்தியதிலிருந்து.. உணவுக்காக மூக்கில் டியூப் போட்டது என அப்படி..இப்படி..நிறைய கஷ்டங்களை தந்துவிட்டனர் "அதனால் எனக்கு அம்மாவை பார்க்கக்கூட மனசு வரவில்லை" என என் தாயார் கூறி அழுதார், அம்மாவை   ஐ.சி.யூ வில் சேர்த்த நாட்களிலிருந்து என் தாயார் தங்கும் அறையில்லாமல் அங்கே பிளாட்பாரத்திலும், பொதுநடையிலும் தான் இரவுபகலாக கழித்தனர். எந்த ஒன்றையும் சிரமமென பாராதும்.. சிந்திக்காதும் தன் தாயார் குணமானால் போதுமென ஆஸ்பத்திரியிலேயே இருந்தார் என் தாயார். அந்நாட்களில் பெரும்பாலும் ரஹ்மான்பி ஹாலாபு உறுதுணையாக பக்கம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு மேல் தவ்பீக்கின் தாயார் பரீதா மாமி இருந்தார். இரவில் என் தந்தையார் தங்கிக்கொண்டார்.. ஒரு நாள் முஜீபும் இருந்தது. பகல் காலங்களில் பெரியபாப்பு, அம்மாஜான், பாவாஜிபாய் என வந்து சென்றனர்.

டாக்டர்கள் நாளை சாதாரண வார்டுக்கு கொண்டு வந்துவிடலாம்.. என நாளை நாளை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு இருந்த படியால் இறையருளால் அம்மா நலமடைந்து சாதாரண வார்டுக்கு வந்து விடுவார்கள் எனத்தான் பலமாக நம்பியிருந்தோம்  ஆகையால் அன்றுவரை 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதென நான் என் தாயாரை வீட்டிற்கு போய் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு செல்லுங்கள் என வற்புறுத்தியதன் பிறகு முர்சிதாவும், ஹாலஜானும் அன்று காலை வந்து சேர்ந்து புவ்வா (என் தாயார்) புறப்பட்டு வீட்டிற்கு வர மதியம் மணி 1 ஆனதாம். பிறகு சற்றே அரைநாள் தங்கிவிட்டு பிறகு தஞ்சை நோக்கி அன்று மாலையே சென்றார் ரஹ்மான்பி ஹாலாபுடன் என் தாயார். இத்தனை நாள் எங்களுடன் தூக்கமில்லாமல் எங்களுடன் இரவில் தங்குகிறீகள் இன்று இரவு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வீட்டில் தூங்கிவிட்டு நாளை காலை வாருங்கள் என எனது பாப்பை விட்டில் இருக்கும் படி புவ்வா சொல்லியபடியால் பாப்பும் அன்றிரவு வீட்டில் தங்கியது.

மீளாத்துயர்
அமீரகம் புஜைராவின் கொர்ஃபகான் ரோட்டில் அமைந்திருக்கும் எனது அடுக்ககத்தின் அறையில் அதிகாலை தூக்கத்தில் இருந்தேன்... சரியாக காலை மணி 6.19 க்கு போன் அடித்தது … எனது பாப்பு சொன்ன செய்தி நெஞ்சில் அறைந்தது! "அம்மா இறந்து விட்டார்களென்று..." அழுகைக்குரலில், புவ்வாவிடம் எப்படி பேசுவேன்…?? இருந்தாலும் பேசினேன்! ஆறாத சோகத்தில் ஆழ்ந்த என் தாய் தன் தாயை பரிகொடுத்ததில் அழுது கரைந்தது. 

காலை சரியாக 5.45 மணிக்கு (திங்கள் கிழமை
மார்ச் 19,2012 (ரபிய்யுல் ஆஹிர் பிறை 27,1433) ) ஐ.சி.யூ விலிருந்த நர்ஸ் வந்து "ஆய்ஷா பீவியின் அட்டண்டர் யாருங்க.." என்றதும் என் தாயார் மூச்சிரைக்க மூன்று மாடிகள் ஏறி முன் சென்றாராம்.. "யாராவது ஆம்பிளங்க இருக்காங்களா அவங்களோட பேசனும்" என்றவுடன் (அதிர்ச்சி செய்தியை உடன் பெண்களிடம் சொல்ல வேண்டாமென்பதற்காக) என் தாயாருக்கு பதைபதைக்க ஆரம்பித்து பாப்பிற்கு போன் செய்திருக்கிறது பிறகு விசயம் தெரிய தாயை மீட்டெடுக்க முடியாது போயிற்றேவென சோகத்தில் ஆழ்ந்துவிட்டது. உடன் பாப்பந்தெரு கார் எடுத்துக்கொண்டு எல்லோரும் சற்று நேரத்திற்கெல்லாம் சென்றடைந்திருக்கின்றனர். எல்லா பரிவர்த்தனைகளையும் முடித்துவிட்டு அம்மாவின் பூதவுடல் அவர்கள் மிகப்பிரியம் வைத்த அவர்களின் கீழ்த்தெரு வீட்டிற்கே வந்தது.


அம்மாவை கடைசி வரை நன்றாக இருக்கிறார்கள் என காசுபறித்த டாக்டர்கள் அன்றிரவாவது எங்களிடம் சொல்லியிருந்தால் அவர்களின் வீட்டில்… பிள்ளைகளின் அரவணைப்பில்… தன் இறுதி மூச்சை விட்டிருப்பார்களே! அங்கே ஐ.சி.யூ வில் என்ன நடந்தததோ.. எப்போது நிகழ்ந்ததோ.. அம்மாவின் அந்த நேர நிகழ்வுகள் என்னவாயிருந்ததோ.. தேவையில்லாது என் குலத்தாயை இறுதி நேரம் வரை மிக கஷ்டப்படுத்திவிட்டார்களே மருத்துவ பணப்பேய்கள், அந்த நர்ஸ்களுக்கு என்ன ஆயிரத்தில் இதுவும் ஒரு கேஸ் பத்தோடு பதினொன்று ஆனால் எங்களுக்கு அம்மா மரகதமாயிற்றே.. மணி வைரமாயிற்றே.. பாவிகளே எனத் தான் எங்கள் ஆதங்கங்களெல்லாம்.... தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆனாலும் சிறிய தந்தையார் பசீர் பாப்பு கூறியப்பிரகாரம் 'அல்லாஹ் அந்த புனிதஜீவனுக்கு இங்கே சில உடல்ரீதியான சிரமங்களை தந்தான் இதனால் என் நன்னியம்மா அவர்களின் ஆன்மா மேலும் தூய்மையெய்தி விட்டது அதனால் அவனளவில் அவர்களின் ஆன்மாவிற்கு எல்லா அந்தஸ்துக்களையும், உயரிய பேரின்பங்களையும் அவனின் லிகாவிலேயுமாக வைத்திருப்பதற்காக தயார்படுத்திக்கொண்டான்!' ஆமீன்.

எனக்கு காலையிலிருந்தே போன் ஓயவில்லை மனதின் ஆழத்திலிருந்து எங்கள் தேடக்கிடைக்காத அந்த திரவியத்தாயின் நினைவுகள் எல்லாம் அழுத்த கனத்த மனதோடு மனம் சிதைந்து அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தேன். பலருக்கு தெரிந்து போன் செய்கிறார்கள் ஆனாலும் எல்லோருக்கும் நாம் சொல்ல முடியாது ஆனாலும் தெரிவிக்க வேண்டுமேவென பேஸ்புக்கிலும், ஜீ மெயிலிலும் இவ்வாறு எழுதினேன்….

இறைவ! இன்று அதிகாலை உன்னளவில் மீண்ட எங்கள் அந்த நல்ல ஆன்மாவை பொருந்தி அருள்வாயாக!

நினது பேரன்பர் படைப்பினங்களில் மேலான ரஹ்மத்துலில் ஆலமீனாம் எங்கள் பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மூலம் எல்லா கிருபையையும் அவர்களுக்கு அருள்புரி!

எனது அன்பு பாட்டியார் (நன்னி அம்மா) ஹாஜியா.ஆய்ஷா பீவி அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை இறை புறம் மீண்டார்கள்.

நித்திய ஜீவானே.. ஹய்யுல் கய்யூமே.. நீயே அமைதி சூழ உன் அருளிளேயே ஆக்கியருள்!

எங்கள் ஊரில், உறவில் என எல்லோர் நெஞ்சிலும் மலர்ந்திருந்த செழுமலர் வாழ்வின் பயணம் முடித்தது..!!!!

எங்களனைவரின் நற்பேறுகளுக்காக வாழ்த்திக்கொண்டே இருந்த ஓர் நல்மனம் விடை பெற்று சென்றது..!!!

(
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அன்பர்களே எங்கள் பாட்டியாரின் மஃபிரத்திற்காக தங்களின் வேண்டுதலை வேண்டுகிறேன். அல்லாஹ் எல்லோருக்கும் அருள்வானாக! ஆமீன்.

(
எனது   பாட்டியார் அருங்குணங்கள் ஒருங்கே அமைய பெற்றவர்.. நற்பண்புகளின் சிகரமாய் தான் எங்களின் முன்னே வாழ்ந்த அதிசயம்.. பசித்து வரும் மனிதரை கண்டால் பரிந்து உபசரித்து அவர் குடல் நிறைக்கும் குணாதிசயம் கொண்டவர்.... சற்று நேர மின் தடை யானாலும் தெருவில் போகும் யாரும் வழியில் திண்டாடக்கூடாதேவென அடுத்த வினாடியே திண்ணையில் அயராது விளக்கொளி ஏற்றிவைக்கும் பெருங்குணம் கொண்டவர்    மறைந்த  உயர்ந்த ஜீவன் எங்கள் பாட்டி அம்மா! ) 

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்..ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்..ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைகிவஸல்லம்

என்னை வளர்த்தெடுத்த அம்மையே.. தாயே.. இனி உன்னை நான் நினைவுகளில் தான் தரிசிக்க வேண்டும். நீ மிக நேசம் பூண்ட உன் அண்ணன்மார்களுடன் அவர்களின் அடக்கத்தலம் அருகேயே நீடுதுயில் கொள்ள இடத்தையும் பெற்றுக்கொண்டாயாம். அம்மா நீ ஞான ஒளியுள்ள ஆன்மா.. அண்ணலார் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மீதும் அவர்தம் திருக்குடும்பத்தவர் மீது பெரும் பாசம் கொண்டவர் நீ நித்திய ஜீவனோடும் சத்தியப் பொருளோடும் சேர்ந்துவிட்டாய்! உன்னத சுவனபதியில் நீங்கா அமைதியில்.. ஹவ்லுல் கவ்தரின் குளிச்சியில்.. அர்சின் நிழலில் ஆனந்தமாய் இருக்கிறாய்! இனி உனக்கு ஏதும் சிரமமோ.. கவலையோ இல்லை தாயே இனி எல்லாம் அந்த பேரருளாளனின் பேரானாந்தம் தான்!

நன்னியம்மாவின் அடக்கத்தளம், முஹையத்தீன் ஆணடவர்கள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்.





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா




குறிப்பு ; 


(இத்தனை எழுதியபின்னும் என் ஆருயிர் நன்னியம்மாவைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டதாக தோன்றவில்லை எனக்கு தெரிந்த வகையில் ஒரு அற்புதமான தங்கநிகர் தாயின் வாழ்வியலை சற்றே பதிய எடுத்த முயற்சியே அன்றி இது வேறில்லை)

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -5)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு



பாகம் -5


அடர்ந்திருந்த எண்ணம்
போதும் பூவுலகில் பூத உடலுடன் கூடிய வாழ்வென்று திருப்தி அடைந்த ஆன்மாவாய் எப்போதுமே நிறைவையே அதாவது உடல் துறப்பதையே விரும்பிய ஆன்மா அம்மா! இறப்பின் சிந்தனை மிக அதிகம் அவர்களுக்கு மறைந்த ஒவ்வொருவராக குறிப்பிட்டு அல்லாஹ் என்னையும் ‘கீழ கெடக்காம மேல கெடக்காம மேன்மையாக்கிடனும்’ என்றே தான் எப்போதும் சொல்வார்கள்.. கசிந்துருகுவார்கள்…இறைஞ்சுவார்கள்.

திடீர் நலக்குறைவும் தொடர்ந்தவைகளும்..
அன்று ஹஜ்ஜுப் பெருநாள் நவம்பர் 7ஆம் தேதி அம்மாவின் உடல்நிலை திடீரென மிகவும் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார்கள்… எல்லோரும் அதிர்ந்தனர்.. ஏதும் செய்யமுடியாதோவென பதைத்தனர் பார்த்தவர்களும்.. சுற்றதினரெல்லாமும் கூட அம்மா இனி பிழைப்பதரிது எனத்தான் மனதில் மட்டுமல்ல சிலர் வெளிபடையாகக்கூட சோல்லிவிட்டனராம். இருந்தாலும் அதிதீவிரமாக உடனடியாக முடிவெடுத்து வாஞ்சலிங்கம் டாக்டரிடம் கொண்டு செல்ல தெய்வாதீதமாக பிழைத்துக்கொண்டார்கள். உடலில் சோடியம் உப்பின் அளவு தான் குறைந்திருக்கிறது அது ஏற்றிக்கொண்டிருப்பதனால் எல்லாம் சரியாகும் என்றனர். அதன்பிரகாரமே இறையருளால் அம்மா உடல் நலம் தேறி நலமடைந்தார்கள், ஐந்தாறு நாட்களில் வீடும் வந்து சேர்ந்தார்கள். 

பிறகு நன்றாக இருந்தவர்கள் தான் நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் திடீரென மிகபலகீனமும் இம்முறை உடல் நடுக்கமும் அதிகமாக ஒன்று கூடி வதைக்க  எல்லோருக்கும் மிக வருத்தமாகி மீண்டும் வாஞ்சலிங்கம் மருத்துவமனைக்கு ஏகினர். உடல் நடுக்கம் அம்மாவை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியது..அந்த நேரத்தில் என் நாட்குறிப்பில் இவ்வாறக எழுதினேன் ….
 


 திங்கட்கிழமை, நவம்பர் 21ஆம் நாள் 2011

என் பாசத்திற்குறிய அம்மா.. என் தாயின் தாய்.. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் இருக்கிறார்கள்.இம்முறை இரண்டாவதாக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள், இப்பவும் 4 நாட்கள் ஆகிவிட்டது உடலில் நடுக்கமும், பலகீனமும் தான் அவர்களுக்கு எழுந்து உட்கார்ந்தாலே நடுக்கம் வந்து விடுகிறது, படுத்திருந்தால் பரவாயில்லையாம், கைத்தாங்களாக சாய்த்துக்கொண்டு தான் மற்றொருவர் உணவு ஊட்டுகிறார்கள் இன்று கூட புவ்வா பிடித்துக்கொள்ள அம்மாஜான் ஊட்டி விட்டது. சஃபிக்கா நிறைமாதமாக இருந்தாலும் சஃபிக்காவை சேக்பரீத் ஹாலாபு வீட்டில் விட்டுவிட்டு ஹாலாஜானும் புவ்வாவும் தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள். எனது மனைவியும் சில நாட்களில் இன்ஷா அல்லாஹ் பிரசவம் ஆகிவிடும் நிலையில் இருப்பதால் புவ்வா அங்கு இருப்பதையும், அம்மாவிற்கு உள்ள உடல் நலக்குறைவு குறித்தும் வருத்தமுறுகிறாள். அம்மாவிற்கு உடலில் எதுவும் இல்லை எல்லாம் நலம் தான் ஆனாலும் சத்துக்குறைவும் பலகீனமும் தான் அவர்களை வாட்டுகிறது. தற்போது டாக்டர். வாஞ்சலிங்கம் தான் பார்க்கிறார்.

அம்மா சிறப்பானவர்கள்.. அவர்கள் ஓர் அதிசயப்பிறவி என்ன செய்வது என்றே தெரியவில்லை தங்கத்தை ஒத்த குணம் கொண்ட பெரும் பிறவி அவர்கள். என்னை அவர்கள் சீராட்டி வளர்த்த அருமையெல்லாம் சொல்ல முடியாது. என்மேல் அவர்களுக்கு இருந்த கனிவும் அக்கரையும் அப்ப்பப்பா..! அல்லாஹ் தான் அவனது கருணைமிக்க நபிகள் நாயகத்தின் பொருட்டாலும் அவர்களின் கண்ணியமிக்க உயர் திருக்குடும்பத்தினரின் பொருட்டாலும் பழைய ஆரோக்கியத்தை மீண்டும் அருளி கிருபை செய்ய வேண்டும். காலித்தும் இஸ்மாயில் பாயும் மிகவும் உதவியாக இருக்கின்றனர். அம்மா நலமாக வேண்டும் என்பதே மனதின் பிரதான பிரார்த்தனையாக இருக்கிறது! இறைவா நியே அருள் செய்ய வேண்டும். அவர்களது இரத்த நாளங்களை சீராக்கி நரம்பு மண்டலங்களுக்கு பலத்தை அருள்வாயாக! ஆமீன்! இன்ஷா அல்லாஹ்.என்று எழுதி வைத்திருக்கிறேன்.

பிறகு நவம்பர் 23, 2011 ஆம் நாள் எழுதியதில்….

(நேற்று இரவு தூங்காமல் கொஞ்சம் மூச்சுப் பிரச்சனையால் கஷ்டப்பட்டார்களாம் மதியத்திலிருந்து மிகவும் கஷ்டப்படுவதாக புவ்வா கூறியது, நஜீர் பாப்பு இது குறித்து வாஞ்சலிங்கத்திடம் பேசினார் எனக் கூறி அவரிடம் புவ்வா போன் கொடுக்க சற்று நிறையவே அவரிடம் பேசினேன், வயது காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரியாகும் என்றார், மற்ற யாரிடமாவது காட்டலாமா எனக்கேட்டக அது பற்றி அவருக்கு தெரிந்த மற்றொரு டாக்டரிடம் ஆலோசித்ததாகவும் வாஞ். டாக். நடுக்கத்தினை நிறுத்துவதற்காகவே அனைத்து மருந்தும் கொடுத்திருக்கிறார் ஆனால் இதுவரை எதனால் இந்த நடுக்கம் என யாரும் கண்டுபிடிக்கவில்லை கொஞ்சம், கொஞ்சமாக சரியாகும் இங்கே நீங்கள் அழைத்து வந்தாலும் நாங்களும் முதலிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் அதனால் அங்கே பார்ப்பதே நல்லது என்றும் வாஞ். நரம்பியலில் நல்ல டாக்டர் என்றும் கூறிதயாக கூறினார். தஞ்சையை விடுத்து வேறும் எங்கும் அழைத்து போகும் நிலையில் இல்லை ஏனெனில் படுத்து மட்டுமே கிடக்கிறார்கள் நாம் தூக்கினால் தான் எழுகிறார்கள் நாக்கு முதல் உடல் எல்லாம் நடுக்கம் உள்ளது எனச் சொன்னார், எனக்கு மிகவும் கஷ்டமாகிப் போனது, அந்த நேரங்களில் நஜீர் பாப்பின் ஒத்தாசை மிக பலமாக இருந்தது)

பிறகு மீண்டும் போன் செய்து புவ்வாவிடம் பேசினேன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களைப் பற்றி விசாரிக்க உடன் அவர்களிடம் நான் எதிர்பாட்க்காமலே பட்டென கொடுத்து விட்டது. அம்மா மிகவும் தழுததழுத்த குரலில் ஆனால் அழுத்தமாக நான் நன்றாக இருக்கிறேன் என்றார்கள் அப்போதும் சுயநினைவோடு எனக்கு கவலை தரக்கூடாது என்று 'கவலைப்படாதேம்மா' என்றார்கள் எனக்கு அப்படியே மிகவும் மனது வேதனையாகிவிட்டது என்னை ஆரம்பம் முதலே அருகில் வைத்து வளர்த்த என் அன்னையான என் அம்மாவை இந்த நேரத்தில் பக்கத்தில் இருந்து பார்த்து தூக்கி வேண்டுவன செய்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள முடியவில்லையே என கசிந்துறுகினேன், 'அம்மா.. நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்ல படியாக கிருபை செய்வான் அம்மா.. நலலபடியா சந்தோசமா இருங்க' என்றேன் அதற்கு 'நல்லா இருக்கே..ம்ம்மா சந்தோசமா இருக்கேன்' என்றும் 'உன் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கு' என்றும் கேட்டார்கள் அதை கேட்டவுடன் எனக்கு அழுகைவந்து விட்டது, பின்பு அங்குள்ள என் புவ்வா, ஹாலாஜானிடம் 'ராஜா முஹம்மது ஓட்ஸ் அனுப்பி இருக்கான் அதை சேட் பாயிடம் கொடுத்து விடுங்கள்' என்ற சொல்லிக்கொண்டிருப்பது கேட்டு என் புவ்வாவிடம் உறுதி செய்தேன்.

இறைவா என் அம்மாவிற்கு நல்ல சுகம் அருள், அவர்கள் உடல் நலத்தோடு போராடி கஷ்டப்படக்கூடாது அவர்களை எல்லா வகையிலும் சிறப்பு செய்! உன் ஹபீப் நாயகத்தின் (ஸல்) பொருட்டால் கருணை கொண்டு பார்! ஆமீன்.. அமீன் யாரப்பல் ஆலமீன்!!!

இப்படியாக மிகுந்த சிரமத்திற்கு பிறகு அம்மாவின் உடல் நலம் நவம்பர் 29ஆம் தேதியளவில் சீரடைந்தது.. அந்த நிலையிலும் புண்ணியத்தாயின் உள்ளத்திலும் உதட்டின் அசைவிலும் கலிமாவும் ஸலவாத்தும் இடையறாது ஓடிக்கொண்டே இருந்ததாம். இந்நாட்களில் புவ்வாவும், ஹாலஜானும் மிகுந்த சிரங்களை ஏற்று தம் தாயாருக்கு பணிசெய்தனர். அம்மாஜானும் அதனளவுக்கு அவ்வப்போது வந்து உதவிகள் செய்தது. இஸ்மாயில் பாய் மற்றும் காலித்தின் ஒத்துழைப்பு நிரம்பி இருந்தது. எனது பாப்பு, பெரியபாப்பு, முஜீப் அண்ணன் எல்லாம் அந்நாட்களில் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று நிலைமைக்கு தக்கவாறு முடிவெடுத்து ஆதரவாய் இருந்தார்கள். அம்மாவிற்கு யாரும் எந்த அளவிலும் உதவிகளில் ஒத்தாசைகளில் குறைவைக்கவில்லை.

இதற்கிடையில் எனது மனைவிக்கு இறையருளால் பிள்ளை பிறக்க, அம்மா ‘என்னை பிள்ளையை பார்க்க அழைத்துச்செல்லுங்கள்’  என பிள்ளைத்தனமாக சொல்லிக் கொண்டிருந்ததும் மற்ற எத்தனையோ வஸீயத்துக்களை சொன்னதையெல்லாம் என் தாயார் நினைவு கூர்ந்திருக்கிறார். டிசம்பர் 6 தேதி தான் மாலை முவாபிகாவையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வீடு வர அன்று தான் அம்மாவையும் ஆஸ்பத்திரியிலிருந்து நற்சுகத்துடன் அழைத்து வந்தனர். டிசம்பர் 6 தேதியிலிருந்து டிசம்பர் 30ஆம் தேதி வரை நன்றாக இருந்ததும்.. சுவரைப்பிடித்து நடந்து வீட்டில் நடந்ததும்.. அவர்களின் வேலையை அவர்களே செய்து கொண்டிருந்ததும் மகிழ்வை கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் தான் நான் துபாயிலிருந்து வந்தேன்.. அது "தானே புயல்" வந்த டிசம்பர் 30ஆம் நாள்.

நான் ஊர் சென்றதும் கண்டதும்
மாலை வந்த நான் பாப்பாந்தெரு சென்று அம்மாவை பார்த்தேன் நடுவீட்டு கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருந்தார்கள்.. நான் அவர்களின் பார்வையில் பட என்னை பூரிப்புடன் ஆவலாக பார்த்து உணர்வு ததும்ப ஆனந்த கண்ணீர் விட்டார்கள்.. இங்கே உட்கார் என தனக்கு அருகே என்னை அமர்த்திக் கொண்டார்கள்.. கட்டியணைத்து, உச்சி முகர்ந்து எப்போதும் போல் வாழ்த்தி துஆ செய்தார்கள் பிறகு என்னிடம்… ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..’ என்றும் நான் மகள்களா பெத்துட்டேனே என்று வருத்தப்பட்டேன் ஆனா இப்ப என் மகள்கள் தான் என்ன அப்படி பாத்துகிட்டாங்க.. ஏ மகள்கள பாத்து பூரிப்பு அடஞ்சுட்டேன். மனசு குளுந்து போச்சு..எல்லாரும் என்ன அப்படித்தா ரொம்ப கவனிச்சுக்கிட்டாங்க..’ ன்னு அவங்களுக்காக துஆ செய்து வாழ்த்திக்கொண்டிருந்த அம்மா ‘நீ தான் எனக்கு எல்லாம் செய்யனும் நல்லது கெட்டதுன்னு நடந்தா ஓன்ட்ட சொல்லிப்புட்டே ஆம்மா..’ என எனது கையை பிடித்து சொன்னார்கள் அம்மா. அதப்பத்தியெல்லாம் கவல படாதம்மா.. என நானும் அணைத்துக்கொண்டு சொன்னேன்.

                                                                                                                                                             - மேலும் பாகம் -6-ல் 





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -4)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -4

தனிச்சிறப்பான பண்பு நலன்கள்:
ஈகை
ஏதேனும் தேவை உடையவராய் யார் நாடி வந்து கேட்டாலும் இல்லை என்று என்றும் அச்சொல்லாடலை பயன்படுத்த அறியாதவர் என் நன்னியம்மா! வருபவர்களுக்கு பிறருக்கு தெரிந்தும், தெரியாமலும், மறைத்தும், மறைக்காமலும் பணமாகவோ, விளைந்து வந்த நெல், அரிசி, உலுந்து, பயறு, எள்ளு, தேங்காய், எண்ணைவகைகள் என போன்ற உணவுப் பொருட்களாகவோ, துணிமணி வகைராக்களாகவோ அல்லது எந்த ரூபமாகவோ அது இருக்கும் அம்மாவின் மனநிலை எல்லாம் வந்தவர் மனம் நிறைந்து செல்லவேண்டும் என்றே. ஆதலால் எப்படியாவது உதவி செய்தே தீருவது என்ற கோட்பாட்டில் கோணாது உதவிகள் செய்து வந்தவரை மகிழவைத்திடுவார்.. பெரும்பாலும் மூன்று வேளைகளிலும் ஏழை எளியவருக்கும், வயோதிகர்களுக்கும் உண்ண உணவு ஈயாதிருந்ததே இல்லை.. சோறு சில வேளை அவர்களின் வீட்டுக்கே செல்லும் இல்லை அவர்களை நான் போய் அழைக்க எங்களோடு சாப்பிடுவார்கள் நெருக்கமான சிலர் தினமும் எங்களோடு எப்போதும் சாப்பிட்டு போகும் வழக்கமும் உண்டு. சனிக்கிழமை வரும் மிஸ்கீன்களுக்கு தெரியும் என் அம்மாவின் வழக்கம் அன்றைய காலைகளில் எங்கள் வீட்டு வாசலில் பந்தியே நடக்கும் யார் யாருக்கு எந்த விதத்தில் சோறு, தோசை அல்லது இட்லி  என அவரவருக்கு அம்மா கொடுக்க மிக மனமகிழ்வோடு வாழ்த்திக்கொண்டே எல்லோருமாக சாப்பிட்டு செல்வது வழக்கம். வாழ்வில் பிறரை கடிந்து பேசும் வழக்கமோ அல்லது மனம் வருந்த இவர் பேசினார் என்பதே இதுவரை இல்லை. மிக அன்போடும்.. பரிவோடும்.. இவர் பேசிடும் விதத்தினால் எல்லோரும் பேரன்பு கொண்டு வெள்ளம்ஜி வீட்டிலிருந்து வந்தாலும் சினா தானா வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்ததால் 'சீனா தானா வீட்டு புவ்வா' என்று மிக நெகிழ்ந்து பேசி அவர்களும் அன்புபாராட்டினர்.


சுற்றம் பேணல்
அவரது குடல்வால் ஜனங்களை அம்மா கவனித்தது போலெல்லாம் யாரும் கவனிக்க முடியாது.. பீரத்தா வீட்டார் மீது காட்டிய கனிவு.. பீர்கனி வீட்டார் மீது காட்டிய பாசம்.. மற்ற அவரது பெருமா, ஹாலா  (பெரியம்மா சின்னம்மா) மக்கள் மீது காட்டிய கழிவிரக்கம் எல்லாம் சொல்லில் அடங்கக்கூடியவை அல்ல.


கீழத்தெருவில் உள்ள எல்லா அண்டை அயலர்களான ஒத்தவயது அம்மாக்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் மிக அலாதியான தோஸ்த்கள்... பிரியாத பிரியமானவர்கள், தங்களின் ஒவ்வொருவருக்குமான குடும்ப பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி பகிர்ந்து கொள்வதிலிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வது வரை உள்ள விசய்ங்களில் எங்கள் அம்மா மிக முக்கியஸ்தர். அந்தி வேளைகளில் கொள்ளைகளில் அல்லது வீடுகளில் கூடும் வட்டார நண்பர்கள் எல்லோரும் ஆன்மீகத்தையும் தாங்கள் படித்த இஸ்லாமிய வரலாற்று கிதாபின் குறிப்புக்களையும் பரிமாறி அர்த்தமுள்ள புரிதல்களின் பொழுதாக கூடி பேசி களிப்பர். நட்பு பேணுவதில் உடல் நலத்தை விசாரிப்பதில் அவர்களின் கூட்டாளிமார்களுக்கு ஏதேனுமென்றால் எங்கே இருந்தாலும் போய் பார்த்து ஆருதலாக இருந்து வருவதில் மிக முனைப்பானவர்கள்.



கீழத்தெருவில் அம்மா அவர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுடன் பேணிய உறவுகள் எல்லாம் அத்தனை சுமூகமானவை.. அழகானவை. பக்கத்து தெருவீட்டு தாஜம்மா புவ்வா, கொள்ளைவீட்டு பொண்ணு, எதிர்வீட்டு செ.ப. வீட்டார் என எல்லாம் ஆசையாசையாய் அன்பைப்பறிமாறிய காலங்கள் எல்லாம் அன்றைய காலத்தின் பசுமைகள்.. ஏன் தெருவில் உள்ள எல்லா தரப்பு பிள்ளைகளும், பசங்களும் கூட அம்மா.. அம்மாவெனத்தான் மிகுந்த பாசங்கொண்டாடுவர்.

எங்களின் வீட்டில் மீரான் புவ்வாவும், ரமீஜா ஹாலாபும், பின்னக்குளம் பாத்துமாபியும் இன்னும்..இன்னும் பலரும் மிக நெருக்கமானவர்கள். அத்தா இறந்ததற்கு பிறகு 1995லிருந்தே பின்னக்குளம் பாத்துமாபி துணைக்காக வந்து உதவ ஆரம்பித்து பின்னாளில் அம்மா சாலை வீடு, பாப்பந்தெருவென இருந்த நாட்களில் அத்தனை அற்புதமாக எங்களின் வீட்டை பாதுகாத்து வந்த்திலும் அம்மாவிடம் பேரன்பாக இருந்ததிலும் பாத்துமாபி தனிசிறப்பான இடத்தை பெற்றிருந்தார் அவரின் எதிர்பாராத திடீர்மறைவு அம்மாவை மிகுந்த கவலையில் தான் ஆழ்த்தியது.

மேலும் மேன்மைகள்
வருடத்தில் தனது தாயார், தந்தையார், மாமனார், மாமியாய், நாத்துனாள்மார்கள், கணவர் என யார் யார் மறைந்த மாதம் வருகிறது அவர்களுக்காக அயராது அருள்மறையாம் திருக்குர் ஆன் ஓதி அவர்களுக்காக ஹத்தம் செய்து நினைவை பகிர்ந்து பாத்திஹா ஓதி அந்த ஆன்மாக்களுக்கு எத்தி வைப்பார்கள். ரபிய்யுல் அவ்வல், ரபிய்யுல் ஆஹிர் மாதங்களில் அதற்குரிய சிறப்பாக மவ்லித்களை மகள்களான அம்மாஜான், என் புவ்வா, ஹாலாஜான் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஓதி கண்ணியப்படுத்திடும் நாட்களின் மணம் என் நெஞ்சத்தில் இன்றும் இருக்கிறது.

தெருபயான் தொடராக நடக்கும் அந்த காலங்களில் ஹதீஸ்களை கேட்க பெரும் ஆவல் கொண்டு திண்ணைகளில் தெருவிளக்கு அமர்த்திவிட்டு தாங்களும் மற்ற தோழிமார்களையும் அழைத்து பயான் முடியும் நடுநிசி தாண்டிய நெடுநேரம் வரை மிககவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள் பிறகு நானும் என் அத்தாவும் வந்த பிறகு தான் வீடு தாழிடுவார்கள்.

மாலை நேரம் ஆனால் வீட்டின் தெருக்கதவு முதல் எல்லா கதவுகளையும் திறந்து வைப்பார்கள் மலக்குகள் வரும் நேரம் எனச்சொல்லி.. பிறகு தான் தெரிந்தது இந்த நடைமுறைகளில் எல்லாம் அறிவியலும், இயற்கை மருத்துவமும் இருப்பது. வெள்ளிக்கிழமை இரவை யாஸீனைக்கொண்டும், மற்ற திக்ரு பிக்ருகளை கொண்டும், மறைந்தவர்களையும், மகான்களையும் நினைத்து துஆக்கள் ஓதுவதைக்கொண்டும் உயிராக்கி வைப்பார்கள்.

வீட்டு வேலைகாரர்களிடம் மென்மையும், இரக்கமும் கொண்டு அவர்கள் நடந்த விதமும், நடத்திய விதமும் வீட்டு வேலை செய்த ரஜியாவுக்கு தன் பிள்ளை போல அவர் திருமணம் செய்து வைத்து அனுப்பிய பின்னும் பெற்ற தாய் போல சதா நினைவுகளிலெல்லாம் அவளை நினைத்திருந்து பேசியதும் நான் பார்த்தவை. பண்ணையில் வேலை செய்த வேலையாட்களுக்கெல்லாம் வீட்டுவேலை செய்யும் போது உணவு வேலை வந்தால் அல்லது தேனீர் நேரம் வந்தால் நெஞ்சம் நிறைந்து கொடுத்து உபசரிப்பதினாலும், பரிவான பழகுமுறைகளாலும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருப்பர்.

சுபாவங்கள்
கொசுக்கள் கடித்தால் அம்மாவிற்கு உடனே தடித்துவிடும் அதனால் கொசுவலை இல்லாது அன்றைய காலங்களில் அம்மா உறங்கியதே கிடையாது. ஒரு சில நாட்கள் நான் கூட கட்டிவைப்பேன். அப்படி கட்டிவைத்தால் வாழ்த்து மழையே பொழியும், இரவில் நான் எத்தனை மணிக்கு வந்து மணி அடித்தாலும் கடிந்து ஏதும் பேசாது பிள்ளைத்தனமாகவே கதவு திறந்துவிடுவார்கள் என் அம்மா.

ஒழுங்காக சாப்பிடவே மாட்டார்கள் எவ்வளவு வறுவல் பொறியல் இருந்தாலும் எல்லாவற்றையும் எங்களிடம் வைத்து விட்டு நாங்கள் எவ்வளவு வைதாலும் கேட்காது ஒதுங்கியதையும், கழிந்தததையும் மட்டுமே சாப்பிடுவார்கள்.

                                                                                                                                                               மேலும் பாகம் -5-ல்  







-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -3)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -3




சகோதரம்
அண்ணன் தங்கை உறவின் பாசப்பிணைப்புகளை திரைப்படத்தில் நிறைய பார்த்திருக்கலாம் ஆனால் நாங்கள் நேரில் பார்த்தோம்.. ஆமாம்.. என் நன்னியம்மாவின் தாயார் இவர்களின் சிறுவயதில் மவுத்தாகிவிட தந்தையாரும் உடனே வேறொரு மணம்புரிந்திட சகோதர பாசம் தான் இவர்களுக்கு அத்ம ஆதரவாய் இருந்தது தம் மூன்று அண்ணன்கள் மீது இவர் கொண்ட அன்பிற்கு ஏது விளக்கம்… எங்கும் பார்க்கத்தான் முடியுமா அண்ணன்மார்கள் இவர் மீது பொழிந்த பாசத்தையும் அதற்கு மேலாகவே அல்லும் பகலும் அண்ணன்களை போற்றி புகழ்ந்தே வாழ்ந்த அற்புத தங்கையையும்..!


அம்மாவின் பெரியண்னன் ஜனாப்.அப்துல் கரீம் அத்தா அவர்கள் மாடு கண்ணு போட்டுவிட்டால் சீம்பாலுடன் தானே பிரியமாக கொண்டுவந்து "அய்சம்மா மாடு கண்ணு போட்டுச்சா அதான் சீம்பால் கொண்டுவந்தேன்" என கனிவோடு கொண்டுவருவார்.. இப்படி எல்லா வகையிலும் தங்கையின் மீது சிறப்பான பாசம் கொண்டவரவர். அந்த பெரியண்னன் இறந்த போது எந்த தங்கையும் ஒரு அண்ணனுக்காக இப்படி இராப்பகலாக அழுததை நான் கேள்விப்பட்டதும் கூட இல்லை அந்த அளவுக்கு ஆ..று மாதங்களுக்கு மேல் ஏதோ இன்று இழந்ததை போலேயே சோகத்தோடு அழுதார்கள் 'அண்ணே.. அண்ணே.. நாங்க எங்க போவோம்.. போய்யிட்டியே.. லேசான அண்ணணா.. எங்க அண்ணன் எங்க புவ்வா இறந்து போனப்ப மலேசியாலேந்து லட்டர் எழுதினாரு… அதுல என் தாயை பிரிந்து நாங்கள் அனலில் இட்ட மெளுகு போ……ல உருகுகிறோம்-ன்னு.. எழுதினாரு அத படிச்சுட்டு நாங்கல்லாம் அப்படி அழுதோம், எங்க அண்ணன் மாதிரி அண்ணன் கிடைக்குமா..' என்றெல்லாம் புலம்பியபடியே இருப்பார்கள் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்

இப்படியே தான் தனது தனிப்பிரியத்திற்குரிய அஜ்ஜி அண்ணனான ஜனாப்.ஜமால் முஹம்மது அத்தா இறந்த போதும் அண்ணனை நினைத்தே பழய நினைவுகளை எல்லாம் சொல்லிச் சொல்லியே அழுதழுதே உருகுவார்கள். அஜ்ஜி அத்தாவும் ஆய்சம்மா.. ஆய்சம்மா… தெருவாலும்.. சாலையாலும் தங்கச்சியை கணநெரமாவது பார்த்து பேசவேண்டும் என ஆவலோடு வந்து அந்த வயதிலும் வந்துவிடுவார்கள் என் அம்மா என்னை 'அத்தாவை கையை பிடித்து வீடுவரை கொண்டு விட்டுவிட்டு வா..' என சொல்லி அனுப்பிய என் பிள்ளை கால நினைவுகள் ரீங்காரமிடுகிறது.

சேட்டு அண்ணன் (எ) ஜனாப்.அப்துல் மஜீது அத்தாவும் பாசமாக காலை மாலையென இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வந்து விடுவார்.. குடும்ப விசயங்களெல்லாம் பிரியமாய் பேசிடுவார் அவரின் பிரிவின் போதும் அம்மா மிகவும் பிரிவுத்துயரால் மிகவும் வாடினார்கள்.. அதாவது உடன்பிறந்தவர்களில் இத்தனை தூரம் ஒருவருக்கொருவர் பாசம் பாராட்டுவது அன்பில் மிகைத்திருப்பது உயிரில் கலந்து உறவாடுவது என்ற என் அம்மாவின் ஆச்சர்யத்தக்க குணாதிசயங்களால் நாங்கள் பிரமித்து போன காலங்களில் எங்களுக்குள் 'இப்படி இருக்காங்களே.. அண்ணே.. அண்ணே' என இவர்கள் உயிரை விடுகிறார்களே என பேசிகொள்வது கூட உண்டு.

அண்ணன்மார்களின் மனைவியரிடத்தில் இவர்கள் காட்டிய பரிவும், ஒப்புறவுமெல்லாம் சொல்லில் அடங்காதவை. 'பாச்சம்மா.. பாச்சம்மா' என்றே தான் ஒரு தாயின் பாசத்தை பொழிந்தார்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளாமல் இருக்கமாட்டார்கள், தன் தங்கைக்கும் மற்ற தங்கைகளான ரஹ்மான் பீவி, சிராஜ் ஹாலாபுகளையும் அவர்களின் பாசப்போர்வையால் போர்த்தி நேர்த்தி குறையாத அன்பால் தான் என்றும் அவர்களையும் அணுகுவார்கள்.


ஞானமும் தோழிமார்களும்
வீட்டிற்கு பிரத்யோகமாக தஙக்ளின் நெருக்கமானவர்களான ம.ரா. சல்மா புவ்வா, புண்ணாக்கி ஆமினா புவ்வா, நெருக்கமான தோழி ஹலிமா புவ்வா என இவர்களை வரவழைத்து பேச‌ ஆன்மீக விளக்கங்கள் ஆறாக ஓடும். தங்களின் பழங்கால ஞான வழிகாட்டிகளான மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்த ஓசாடி புவ்வா, சஹர்வான் புவ்வா, தங்களின் நன்னியம்மா மற்றும் பசூர் பாவா என்ற நல்லவர்களின்.. அறிவு ஜீவிகளின்.. விளக்கங்களை சொல்லிக்கொண்டு இதற்கு அவர்கள் இங்ங்கனம் விளக்கம் கொடுப்பார்கள்.. இதன் விளக்கம் இதுவாம்.. என மெய்மறந்து மெய்நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பர். வாப்பா நாயகத்தின் வருகையால் அவர்களின் ஞான விளக்கத்திலும் வழிகாட்டுதலிலும் மிகுந்த ஈடுபாட்டிற்கு உட்பட்டு பேணுதலாய் நடந்தும் மறை ஞானப்பேழை ஒவ்வொரு இதழையும் ஆர்வமுடன் படித்து முடிப்பவராயும் இருந்தார்கள். நான் ஞானவழியில் மிகத்தீவிரமாய் ஈடுபட்ட நேரங்களில் எனது அம்மா அவர்கள் ‘தம்பி, ஹலிமாபி… ஓண்ட்ட மஃரிஃபா விளக்கம் கேட்கனுமா’ என மிக இக்லாஸோடு சொல்லி வர 'ஏங்க.. அப்படில்லா ஒன்னு பெரிசா தெரியாது'ண்ணோ அல்லது எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லியோ சென்ற காலங்கள் கூட உண்டு அதை எல்லாம் நான் இந்நாள் நினைத்துப் பார்க்கிறேன்.


                                                             - மேலும் பாகம் -4-ல் 






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -2)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -2



மகனாய் பேரன்
அம்மா வளர்த்த பேரன் நான். என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என் நன்னியம்மாவுடன் தான் வளர்ந்தேன். என் புவ்வா(தாயார்)வுடன் எங்கள் சாலைத்தெருவீட்டில் மிக அதிகமாக இருந்ததில்லை என்றே கூட சொல்லலாம். அதிலும் இங்குள்ள வழக்கப்படி என் புவ்வாவும் தங்களின் வீட்டிற்கும், சாலையின் எங்களின் வீட்டிற்கும் என இங்கும் அங்குமாகத்தான் இருக்கும் அப்போதும் கூட மிக சொற்ப நாட்கள் தான் சாலையில் இருந்திருப்பேன் பிறகு ஆரம்பப்பள்ளி முடிந்தவுடன் முழுவதுமாக கீழத்தெரு வீட்டிற்கே வந்துவிட்டேன். ஆண்பிள்ளை இல்லாததால் என்னை தங்கள் பிள்ளை எனவே என் அம்மாவும், அத்தாவும் செல்லாமாய் வளர்த்தார்கள். ஆண்பிள்ளை இல்லாதது அவர்களுக்கு மிகத்தீராகுறை தான். அப்படி ஓர் பிள்ளை இருந்திருந்தால் பொருளாதாரத்தில் மிகவும் தங்களுக்கு தோழ் கொடுத்திருக்கவும், வாரிசாகவும் இருந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இல்லாமல் இருக்காது அதை என்னிடம் சொல்லிக்காட்டுவார்கள். ஏதாவது பணம் பற்றிய பேச்சு வந்தால் "கமால் பாட்சாவிடமிருந்து பணம் வரட்டும்" என்பார்கள் "யாரும்மா கமால் பாட்சா" என்றால் "அவன் அரபுநாட்டில் இருக்கிறான், எனது மகனவன் அனுப்பித்தரட்டும்" என்று சொல்லும் போது அவர்கள் ஆண்மகவுக்காக ஏங்கிய ஏக்கம் தெரியும்.

காலை நேரத்தில் எனக்காக முரட்டு தடிமனான பாலாடையை மட்டும் தனியே ஒதுக்கி எடுத்துவைத்து டீயோடு கலந்து கொடுப்பார்கள் மிக ரசனையோடு ரசித்து சாப்பிடுவேன், அத்தனை அருமையாக இருக்கும். காலை பசியாற மெல்லிய மொறுகளான தோசை மட்டுமல்ல அதில் ஒன்று கண்டிப்பாக முட்டை தோசை என சுட்டுக்கொடுப்பதிலிருந்து வாய்மணக்கும் வண்ண வண்ண பதார்த்தங்களை பல செய்து கொடுப்பது வரை எதில் தான் குறைவைத்தார்கள். குளிர்காலங்களில் இருமல் வந்தால் சித்தரத்தை இடித்து பாலில் காய்ச்சி கொடுப்பார்கள். ரமலான் தராவீஹ் வீட்டு இரவில் வரும்போதெல்லாம் பாலில் மஞ்சள், மிளகும் சித்தரத்தையும் இட்டு காய்ச்சி கொடுத்த காலங்கலெல்லாம் மறக்க முடியாது. எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் ரஜியா "ஆம்பளபிள்ளைக்கு இப்டில்லாம் குடுக்கக்கூடாது" என சொன்னாலும் என் அம்மா என்னை அத்தனை கனிவோடு தான் கவனிப்பார்.

நான் பழைய சைக்கிள்களாய் ஓட்டிய நாட்களில் "நீ புதிய சைக்கிள் வாங்கி ஓட்டவேண்டும் நான் அதை பார்க்க வேண்டும்" என சொல்லிக் கொண்டிருந்த அன்பு உள்ளம். எனக்காக நான் வயலூரில் படித்த பொழுதுகளில் காலையில் எனக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்து அதில் ஊருகாயோ அல்லது உப்புக்கண்டமோ வைத்து நடுக்கூடத்தில் உள்ள அலமாரியில் அவர்கள் காசு போட்டுவைக்கும் சிறிய லக்டோஜன் டப்பியிலும் அரை சைசுக்கு இருக்கும் ஒரு டப்பாவில் இருக்கும் காசுகளாக ஐந்து ரூபாய்.. மூன்று ரூபாயென அந்த தொன்னூறுகளில் நாளும் பஸ்ஸுக்கு எடுத்துக்கொடுத்து என்னை வாழ்த்தி வழி அனுப்பிடும் தினங்களை எப்படி நெஞ்சம் மறக்கும்.

இரவு நேரங்களில் நான் விழித்திருந்து படிக்கும் காலங்களில் தேனிர் போட்டு ஃபிளாஸ்கில் வைத்தததும், பிறகு படிப்பு முடிந்தவுடன் புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது விடிய விடிய கவிதை எழுதிக்கொண்டோ இருந்த பொழுதுகளில் 'லைட்ட அமத்தீட்டு தூங்குமா.. உடம்பு கெட்டு போயுடும்' என்று சொல்லிக்கொண்டே இருந்தததையும் மறக்கத்தான் முடியுமா.. ஏன் இப்போது ஊர் போன போதும் "காலகாலத்துல ராத்திரல சீக்கிரமா படுத்திடு" அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும்-ன்னு நீ சொல்லத்தவறவில்லை அம்மா.

என்னை வாழ்த்துவதில் உங்களைப்போல் யார் இருக்க முடியும்.. நினைத்து நினைத்து.. மட்டில்லாமல் வாழ்த்திய நெஞ்சம் தான் நீ. ராஜா.. கண்ணு.. அப்படி இப்படி என்றெல்லாம் தாயுள்ளத்தோடு சொல்லி கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டு முகத்தை வருடி சீமாட்டி கட்டி பேரனான என்னை பேரன்பில் குளிப்பாட்டுவாயே அந்த மனங்குளிர் வாழ்த்து மழை எங்கேயம்மா இனி கிடைக்கும்.

மற்ற பேரப்பிள்ளைகள்
என்னிடம் மட்டுமல்ல எல்லா பேரப்பிள்ளைகளிடமும் எல்லா மகள்களின் பிள்ளைகளிடமும் நிறைவான அன்பினை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட பாசப்பிணைப்பினை கொண்டிருந்தவர்கள் என் நன்னி அம்மா. நாங்கள் ஒவ்வொருவரும் அம்மா என்னிடம் தான் மிகையன்பு கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் அளவுக்கும் யாருக்கும் எள்முனை அளவு கூட விகிதாச்சார வேறுபாடு காண முடியாதவாறு அவர்களின் அன்பு சூழ்ந்திருக்கும். அண்ணன்மார்கள் ஹாஜா மைதீன், முஜீபாக இருந்தாலும் சரி நஸ்ரினாக இருந்தாலும் அவர்கள் காட்டிய தனிப்பட்ட அன்பு மிகையானது. தங்கை நஸ்ரின் மிகச்சிறிய வயதில் வாழவேண்டியவள் சென்றாளே என அம்மாஜானோடு அம்மாவும் பேத்தியின் பிரிவை தாங்காது உருகி.. உருகியே உடல்நிலையிலும், மனநிலையிலும் பலமிழந்தார்கள். தங்கை முர்சிதாவை கரிசனத்தோடு பேணிப்பையும் கலந்து அறிவுரைகளாய் கொடுத்த அவர்கள் வளர்த்தததெல்லாம் சிறப்புத்தான். காலித்திற்கான செல்லத்திலும், சிறுவனாய் அவனிருந்த போது அவனுக்கென எடுத்து வைக்கும் பண்டங்களிலும், ஏன் இப்போதும் கூட கணநேரமும் மறக்காது காலித்தின் வெளிநாட்டு பயணத்திற்கான சிந்தனைகளிலும், மனதார வாழ்த்திக்கொண்டிருத்தலிலும் குறையே வைக்காதவரவர். தன் சின்ன மகளின் ஒரே மகளென்பதால் தங்கை சஃபிக்காவிடம் பேரன்பு பூண்டது மட்டுமல்லாது எல்லா விசயத்தில் தனி அக்கரை எடுத்துக்கொள்வார்கள். தங்கை சஃபிக்காவின் திருமண நிகழ்வில் அவர்கள் காட்டிய முனைப்பும், எண்ண ஒருமையும் கண்ட சான்று.






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா