30 ஜூலை 2011

காதல் ஓவியம்



தேவி…
இதழோடு தேன் வழிய...
இசைத்தேனே உன் பெயரை,

முதலேதும் தெரியாமல்
மூழ்கிவிட்டேன் இன்பத்தில்..!

ஜே.எம்.பாட்ஷா


இன்னும் புரியும்

எழுதிய காலம் 1995 ஆம் வருடம்

வானம்பாடியாய் பாடித்திரிவோம்





ட்ச லட்சணங்கள் கொண்ட பூ- தேன்
தித்தித்திடும் அத்திப்பழமடி நீ...
தீபமாய் என் நெஞ்சில் என்றும்
பாசப் பசுங்குயில் எனக்கு நீ!

முத்தே.. முந்திரியே.. என் சுந்தரியே..!
வா..! வானம்பாடியாய் பாடித்திரிவோம்,
பிறந்திட்டோம் ஒருவருக்காய் யொருவர்
காணுவோம் மகிழ்வெலாம் மணவாழ்வில் நாளும்..!

ஜே.எம்.பாட்ஷா

27 ஜூலை 2011

பசிக்கு இரக்கம் வருமா..?



வெட்டும் வெயிலில்

வெட்ட வெளியில்

எட்டாம் மாடிக்கு

சித்தாள் கிழவி

சட்டி சுமந்து செல்கிறாள்..!


அறுபது வயதிற்கு மேலிருக்கும்

அந்த கிழச்சித்தாளுக்கு,


எடுபிடி வேலை செய்ய

எடுத்து வந்துவிட்டாள்

சும்மாடு தன்னை,

சும்மா விடுமா வயிறு..!


சற்று நேரத்திற்கெல்லாம்

களைப்படைந்த அக்கிழவி

இப்படியா வெயில் அடிக்கும்

'எப்ப்ப்ப்பாடியோ… ஏ..ஆயா'

அவளுக்கவளே சொல்லிவள்,

நிழல் பார்த்தமர்ந்தாள்!


இடுப்பில் கட்டிவைத்திருந்த

குட்டிச்சுருக்குப்பை எடுத்து

கைவிரல் நுழைத்து

கடைந்துத்தொட்டு கடைசியில்

புகையிலைப் பையெடுத்து

வாயில் மென்றதக்கி…


சின்னச்சுண்ணாம்பை

சிற்றுருண்டையாக்கி

வாய்க்குள் அதையும் வீசி,


காம்பினை கிள்ளி

வெற்றிலையை

கசக்கி..மடக்கிப்..போட்டு


மெல்ல எழுந்தாள்..

மென்று கொண்டே எழுந்தாள்


பசித்தால் இரவு உறக்கம் வருமா..? - இல்லை

பசிக்குத்தான் இரக்கம் வருமா..?



-ஜே.எம்.பாட்ஷா


-இன்னும் புரியும்

26 ஜூலை 2011

தாம்பத்யம் மேலானது..


காதல் உணர்வு
மேலோங்கி இருக்க..
உண்மையில் ஆன்மாவின்
ஆருதல் தளமாக
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனுமாக
இருக்க வேண்டும்.

தினமும் புதிதாய்
கனமும் புதிதாய்
இருவருக்கும் இதயம்
னிப்பாய் வேண்டும்.

அவ்வப்போது தனிமையில்
தலை சாய்த்து
கண்ணயற..
நீவும் விரல்களோடு -உன்
நீளமடியும் வேண்டும்

என்னில் வெப்பக்கனல்
வீசினாலோ – உன்
சேலை சாமரத்தால்
குளிர்விக்க வேண்டும்.

கிளிகளைப்போல..
புறாக்களைப் போல..
மானைப் போல..
மயிலைப் போல..
மயக்கநிலையில் - நம்மையே
மறந்த நிலை வேண்டும்.

வம்புகள் செய்த
அம்புகளும் காதலாகி
கவியமுதமாய் நாளும்
கரைசேர்ந்திடல் வேண்டும்.

வருடல்கள் வேண்டும் –கொஞ்சம்
திருடல்கள் வேண்டும்
மணலாய் நானாக
நதிநீராய் நீயோட வேண்டும்..

சலிக்காத தாம்பத்தியம்
சங்கமமாகி..
சாந்தி திளைக்க வேண்டும்.

இளமையில் உடல்
இணைப்பின் உணர்வு
மேலோங்கலாம்..
இளைமை கடந்தும்
உடல் கடந்து உணர்வால்
இணைந்திருக்க வேண்டும்.

பாச வார்த்தைகளை
ஒருவருக்கொருவர்
பந்தியிட்டு பறிமாறிட
முந்திக் கொண்டு
போட்டியிடல் வேண்டும்.

எத்தனைப் பிள்ளைகள்
பெற்றாலும் - பிள்ளைகள்
நமக்கு நாமேயாகவேண்டும்.

இருவரின் மேலும்
ஒருவருக்கொருவர்
சர்க்கரையாய் அக்கறை
மிகக் கொண்டாடுவதில்
வயதும் தடையில்லை..

சிலரை பார்த்திருக்கிறேன்..
வெகுசிலரே அவர்கள்..!

முத்தத்தில் மட்டுமல்ல
மொத்தத்திலும் வாழ்வில்
மிக இணைந்தவர்கள்.
இனிப்பான வாழ்வை
இதயத்தால் நடத்துபவர்கள்,

அன்னியோன்யமான அவர்களை
கண்கொண்டு கண்டாலும்
அத்தனை சுகம்!
பொறாமை கூட
சில சமயத்தில்,

கோலூண்றிடும் *காலையிலும்
காதல் கரையாமல்
கரிசனமும் குறையாமல்
வளர்க்கும் விதம்..,

ஆஹா…

அப்படித்தான் நாமும்…
காதல் உணர்வு
மேலோங்கி இருக்க..

உண்மையில் ஆன்மாவின்
ஆருதல் தளமாக
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனுமாக
இருக்க வேண்டும்.

ஜே.எம்.பாட்ஷா

2008ல் துபாயில் ஒரு பேருந்து பயணத்தின் போது சாலையோர சோலையில் கோலூண்றி நடக்கும் அந்த காலத்திலும் காதலில்.. கரிசனத்தில்.. மிக வாஞ்சையோடு இணைந்து அன்பாய் நடந்து வந்த மிக முதிர்ந்த மேற்கத்திய இணையை காண என்னில் ஊறிய எண்ணங்களை அப்போதே இறக்கிவைத்தேன்…
குறிப்பு; காலை என்பதன் பொருள் காலம் என்பதாகும்

மயக்க நாழிகைகள்



கன்னி மனம் இரண்டுக்கும்
கல்யாணம் நடந்ததுது..,
மகிழ்ச்சி அலைகள் ஓயாது
மோதி..மோதி.. முட்ட
மணங்கண்ட மனங்கள்
இன்பத்தேன் பருகியே
கனவுக்கடலில் மூல்கி
முத்துக்குளித்துக் கொண்டிருக்கிறது

முதலிரவு முந்திக்கொண்டு வந்தது
அழகான அறையினிலே
அலங்கார கட்டில் அமைத்து..
மணங்கமழும் மல்லிகைகள் பரப்பி..
தோரண மலர்களெல்லாம் தொங்கவிட்டு..
மதுர கனிகொத்துகளுடன் மற்ற இனிப்புகளும்!


மன்னவன் காத்திருக்கிறான்
மாதேவி வரவை பார்த்து!

ஆங்கே.. தோழியரின்
கிண்ணலுக்கும்,,, கூத்துக்கும்.. இடையில்
மணப்பெண்ண்ணுக்கு மறுஅலங்காரம்.

பரிகாசப் பேச்சுககளை
எண்ணி.. எண்ணி..
எண்ணத்தாள் சிரிக்கிறாள் கன்னி..,

என்ன பேசலாம்..
எப்படி துவக்கலாம்.. என்று
சித்தமே சிதறி
இன்னுமா..இன்னுமா..
என்று கைகள் பிசைந்து
கதவிலேயே கண்கள் பதித்தான்,
மாப்பிள்ளை..!

பொறுத்துப் பொருத்துப் பார்த்து
படுத்து உருண்டு எழுந்து
பரிதவித்து உள்ள நிலையில்..!

வெட்கப்பட்டு
சற்றே முனங்குவதாய்
கதவு சத்தமிட
லேசாக திறந்த்தது!

தோழியர் கும்மாளமடித்து
புதுப்பெண்ணை அறை புகுத்து
நன்றாக தாழிட்டனர்!

இன்பதேசம் *போந்து
நாணி.. கூணி..
நடை தளர்ந்து..
நாயகி வருகிறாள்

நாயகனும்
வெட்கத்தை வெளிக்காட்டாது
உதட்டில்
புன்னகை பூத்து
அன்ன நடைபழகும்
சின்ன இடையாளாம்
நாயகியை நோக்கி நெருங்கி
எதிர்கொண்டழைக்க..

சின்ன சிரிப்புடன்
முத்துப்பல் முடி
தனக்குள் சிரித்தும் சிவந்தும்,
அழைப்பிற்கிணங்கி..
அருகில் அணைந்து சாய்ந்து
குழந்தையாகி மயங்கி..
அவளும்..அவனிடம்
சரண்புகுந்து சங்கமித்தாள்!


-ஜே.எம்.பாட்ஷா

-இன்னும் புரியும்


எழுதியது 1997 ஆம் ஆண்டு இப்போது சிறிதே சீர்திருத்தம் செய்தது,
போந்து ; புகுந்து

23 ஜூலை 2011

இப்போதைய சத்தியாகிரகம்..!



உலகெங்கும் கவர்ச்சி,

கண்களைத் திறந்தாலே

காமத்தின் வாசல்,

மூக்கின் மொட்டுகளில்

பாலியல் வாசனை,

காதின் பக்கலோ

கேட்கத்தகா சப்தங்கள்,

நாவுகள் அசைகிறது

நாகரீகமில்லா வார்த்தைகளுக்காய்!


உலகில் எங்கனும்

சுகபோக சுவாரஸ்யங்கள்,

மக்களின் நடப்போ

மனோ இச்சையின் வழியில்!


உடலில் துணியோ நேற்றையபழமை,

ஃபேஸன் எனும் போர்வையில்

ஆடைகுறைப்பு அட்டகாசங்கள்,


ஆதி மனிதன் மீண்டும் பூமியில்..!


பாபம் எத்தனை தீர்க்க தரிசிகள்

வந்தாலும் அடங்காத -இவர்களின்

மிருகங்கள் சுதந்திரமாக!


எந்த பெண்ணோடோ எந்த ஆணும் -இது

தற்போது கண்டெடுக்கப்பட்ட

இ-வேல்டு நாகரீகம்


நினைக்கும் நேரம்..

எப்படியும் எங்கேயும்..

ஆனாலும் இவர்களுக்கு ஆறு அறிவாம்.


கேட்டாலோ..?

21ம் நூற்றாண்டு..

குறுகிய வாழ்நாள்

அறிவியியல் யுகம்

வாழ்க்கை வாழ்வதற்கே


இரவு விடுதிகளில்..

கண்ணாற பெண்கண்டு

களைப்பாற தேனுண்டு

ஒய்யாற இடை கோர்த்து

ஓய்வற நடம் நிகழ்த்து..

இவர்களின் முழக்கம்!


பாழாய்போன

திரைச் சேனல்களிலும்..

தரைச் சேனல்களிலும்..

கணினி கர்மங்களிலும்..

முத்தங்களும் முனங்கள்களும்..

சேட்டைகளும் சில்மிசங்களும்..!


இப்போதெல்லாம்

இங்கங்கு என்றிலாது

எங்கனும் பரவிவிட்டது

அயோக்கிய (ஐரோப்பிய) கலாச்சாரம்!


இவற்றிற்கிடையில் தான் -நம்

பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சுகள்

சத்தியாகிரகத்தில்!



-ஜே.எம்.பாட்ஷா



என் மன வேதனையை இரண்டாண்டுக்கு முன் இப்படி காகிதத்தில் கொட்டி வைத்ததை இப்போது அச்சேற்றி இருக்கிறேன்

22 ஜூலை 2011

ஒப்பாரி அரசியல்...




வானத்தில் மேகக்கூட்டம் இலக்கில்லாமல் தவழ்கிறது..

மோகன இறக்கைகளை விசிறியே வண்டுகள் மலர்களில் தேனெடுக்கிறது..


கிளைகொண்ட மரங்ககளில் கிளிக்கூட்டங்கள் பேடைகளுடன் கிளுகிளுக்கிறது..

நிலைமறந்து சோலைகளில் காதலர்கள் மாய மயக்கத்தில் குறுகுறுக்கின்றனர்..


எறும்புகள் ஓரமாய் உணவு சுமந்து சாரை சாரையாய் சுறுசுறுக்கிறது..

ஓடைகள் ரம்ய பாஷை பேசி ஊர்ந்து சிலுசிலுக்கிறது..


புல்வெளியில் ஆடுகள் வேக வேகமாய் புற்களை மேய்கிறது..

மரம் விட்டு மரம் அணில்கள் ஆரவாரமாய் தவுகின்றது..


சிட்டுக்குருவிகள் என்வீட்டு முற்றம் வந்து செல்கின்றது..

கிட்டிப்பிள்ளைகளை கெட்டித்தனமாய் சிறுவர்கள் ஆடுகின்றனர் தெருவில்..


எல்லாவற்றிலும் நிஜத்தில் அமைதி...!


ஏன் இவர்கள் மட்டும்

மதமாச்சர்யங்களை கிளர்ந்தெழ செய்தும்..

சாதி அரசியல் என்றபெயராலும்

பழைய ஒற்றுமைகளை புதைத்தும்

வரலாற்றினை மீண்டும்..மீண்டும்..

வஞ்சம் கொண்டு சிதைத்தும்..

அமைதியை முற்றும் கெடுத்து,

இரத்தத்தை புசித்து பசி போக்கி..

ஒப்பாரியை ரசித்து இன்பமெய்தி

வாழ்வு நடத்துகின்றனர்


ஐயகோ! இவர்களெல்லாம் ஆட்சியாளர்களாம்..!

மக்களை கொல்வதும் மக்களுக்காகத்தானோ..?



-ஜே.எம்.பாட்ஷா


8-4-1997 1 மணி நண்பகல்


-இன்னும் புரியும்

ஓவியன்


நான் ஒரு ஓவியன் - என்

சித்திரங்கள் சிரிக்கின்றதே தவிர

சிரித்ததில்லை நான் இதுவரை,


ஒவ்வொரு நாள்

புலரும் போதும் என்

சித்திரங்கள் சந்தைதனில் - ஆனால்

அவை விலை போகத்தான்

மறுக்கின்றன!


உண்மையில் உண்மைக்கு ஏது விலை..?


-ஜே.எம்.பாட்ஷா


19-04-19997 இரவு 10.27


-இன்னும் புரியும்

17 ஜூலை 2011

அனுபவம் பற்றி சிறுவன் நான்..

14 ஆண்டுகளுக்கு முன்...






என்னை பொறுத்த மட்டில்

வெண்ணெய் எடுக்கும் மத்துபோல

என்னையே கடைந்தெடுக்க இப்படி

கவிகள் புனைவது வழக்கம்!


படைத்தவன் படைத்த மூளை

பகுத்தறிவை தொடும் வேலை - என்னில்

பகுத்துப் பார்க்க பழகிக்கொண்டது,

தொகுத்துப் பார்த்தால் ஐந்தாண்டு இருக்கும்!


வகுத்து கழித்தது போக

பெருக்கி கூட்ட வெண்டியதெல்லாம் –தூய்மையாக

உருக்கி எடுத்துத் பின் தொடுத்தலையும்

பகுக்கும் மூளை பழக வேண்டியவை.


ஏட்டால் வருமறிவு எண்ணிக்கையில் பல

பாட்டால் பெறுமறிவு எண்ணிக்கையில் பல

பார்வை கேள்வியால் பெறுமறிவுகளும் இப்படித்தான்

இவைகள் பற்றியெல்லாம்

இங்கு கூற நான் விளையவில்லை,


நடைமுறையில் பெறும் அறிவு – என்ற

நல்லதொரு அரும் அறிவைத்தான்

அனுபவம் என்பார்கள்.


அடைந்து சொன்னதெல்லாம்

அனுபவம் தான். – சில சமயம்

ஏட்டுக்கல்விகள் எடுபடாதபோது

நேற்று பெற்ற பாடம் தான்

தோற்றுவிக்கும் புதுவழி தன்னை,


பெரியவர்கள் சொன்னதும் அதைத்தான்

பேரறிஞர்கள் சொன்னதும் அப்படித்தான், - இதனால்

ஊரறிய சொல்வது என்னவென்றால்

அனுபவம் போன்ற ஆசிரியன் இல்லை என்றே!


ஊறும் பிள்ளைகள் கூட

ஓடும் பூச்சியைப் பிடிக்க,

கடித்தபின்னர்

கற்றுகொள்வது தான் அனுபவப் பாடம்


தாயின் மார்பறையில்

அமுதம் அருந்திய நிகழ்வுகளெல்லாம்,

அறிவு முளைக்கும் முன்னே என்பதால்

மறந்து போன அனுபவந்தான்,


சில கனங்கள்,

தொல்லை கொடுத்து அழுததனால்

பல்லைக் கடித்துக் கொண்டு கோபம் வர

அடித்து தீர்த்ததனால்… தாய்

தேம்பி அழுத அனுபவங்கள்

தேடினாலும் வருமா..



-ஜே.எம்.பாட்ஷா

17-10-1997 10.27 இரவு,


இன்னும் புரியும்...

15 ஜூலை 2011

சமூக இதயமே நீயேன் நின்று போனாய்..?

இரங்கற்பா:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் மர்ஹூம். அல்ஹாஜ் சிராஜுல் மில்லத் அ.கா.அ அப்துல் ஸமது M.A, Ex MLA, Ex.Mp அவர்கள் 11-04-1999 –ல் இறையடி சேர்ந்தபோது எழுதியது.


பரிதவிக்கிறது மனது

பாரம்பரியத்தை காத்து வந்த

பாரம்பரியமே நீ

பரமனோடு சேர்ந்து விட்டாயென்று

பரபரப்பாக காற்றலைகள்

பரப்பிய துக்கம் கேட்டு

பரிதவிக்கிறது மனம்

பதறுகிறது நம் மரபே

அருந்து போனதோ வென

உள்ளம் உருகி நீர்க்கிறது.


எழுபதைத் தாண்டிய இளைஞனே நீ

உழைத்து உழைத்து

உயிர் தேய்ந்தது போதும்

உறங்கு நிம்மதியாய் என்று

உத்தரவு வந்தததோ..!


ரோஜாவைப் பார்த்து

உன்முகம் பார்த்தால்

ராஜாவே நும்முகமே அழகென்று

அகிலமே கூறிய அழகனே!


அதென்ன சூட்சுமம்

உன் தமிழ் மட்டும்

நீ அம்பாய் எய்தாலும்

மல்லிகையாய் மாறி தூவுமே..


தமிழுக்கே நாவினிக்கும்

சக்கரைத் தமிழே

எத்தனை மேடைகளில் உன்

ஒய்யாரத் தமிழ்

தென்றலாய் உலா வந்தது அந்த

ஆன்மமருத்துவ தென்றலின்

அற்புதம் தெரியாமல் யார்..

இனி உன்னை பேசாமல் செய்தது ?


தீவரவாதம்..மதவாதம்.. இனவாதம்..

பேசிடுவோர் நடுவினில்..

மிதவாதத்திலும் இதவாதமே - என்

கொள்கையென பக்குவ அரசியல் நடத்திய பண்பாளா!


எத்தனையோ பேர்

கல்லெறிந்து.. சொல்லெறிந்து.. - உன்

உள்ளத்தில் முள்ளெறிந்த தருணங்களில் -நீ

புன்னகைப்பூவின் மலர்ச்சரம் கொண்டு

அவர்களுக்கே மணிச்சுடர் ஓலையில்

மாலையிடுவாய்.

அவரே நாணிடுவர்..!

ஏனிந்த பிழைசெய்தோமென..!


நீ தாக்கி பேசநினைத்து பேசிய பேச்சே

மற்றவர்களை வருந்தச்செய்யாது

திருந்தத்தான் செய்யும் எனும்போது..

நீ விட்ட மூச்சா கெடுதல் செய்யும் - இன்னும்

கொஞ்ச நாள் இருக்கச்செய்வதனால் அந்த

விஞ்சும் அருளாளனுக்கு குறைவா வரும்..


அவன் ஏன் இப்படி

அவசர அவசரமாய் - எங்கள்

அன்பை அழைத்துச்சென்றான்

அவனுக்கு ஆசையோ என்னவோ

அமரர்கள் மத்தியில் அருந்தமிழ் பேசச்செய்ய!


பேர் சொல்லும்

பெரும்படைத் திரட்டி

வடநாட்டுச் சிங்கங்களை

மேடையிலே இருத்தி

ஊர்போற்ற உலகு போற்ற

சென்னை சீரணியரங்கில்

சீர்மிகு எழுச்சி மாநாடு

சிறப்பாய் நடத்தி..

திடமான நெஞ்சனே

கொடவேண்டும் எம்மவருக்கு

இடஒதுக்கீடு என - நீ

முதல்வர் முன் - அவர்

மூளை துறுவிடும்

கூவல் தந்த தலைவா..!


காயிதே மில்லத்திற்கு பிறகு நீ

இருக்கிறாயென நாங்கள்

நம்பிக்கை வைத்திருந்ததில்

நச்சுப் பாம்பு கொட்டியேன் எம்மை

அதிக வேதனையிலிட வேண்டும்


இனி எப்படி பார்ப்போம்

என் இதயத் தலைவரை

புலம்ப விட்டு போன எம் தலைவா

எழுப்பவியலா உறக்கத்தில் ஏன் ஆழ்ந்தாய்?


ஓ..! என் சமூக இதயமே..

உன் துடிப்பில் தானே

நாங்கள் இயங்கி வந்தோம்

எங்களை ஜடமாக்கி

நீ யேன் நின்று போனாய்..?


- ஜே.எம்.பாட்ஷா



1997ல் கடையநல்லூரில் மாலை நடந்த பிரமாண்ட பொது கூட்டத்திற்கு முன் காலையில் நகர் முழுவதும் சென்ற மிக நீண்ட பேரணியை தலைமை ஏற்று செல்லும் தலைவர் உடன் அடியேன்.


-இன்னும் புரியும்