06 ஆகஸ்ட் 2017

பெண் நபி கருத்தால் கவிஞர் எச்.ஜி.ரசூலை சர்ச்சை பொருளாக்காதீர்

இஸ்லாம் அப்படி உயர்ந்தது.. இப்படி சிறந்து என்று கூறும் யாரும் உள்ளார ஆராய்ந்து விளங்கி சொல்வது இல்லை, பொத்தாம் பொதுவாகத்தான் இந்த உயர்வு நவிற்சி செய்வதெல்லாம், ஆராய்ந்து சொல்பவர்கள் மிக சொற்பமே.

எதை எதையோ ஆராய்பவர்கள் பக்தியின் வட்டத்தில் சிக்கியபின்பு சிறுபிள்ளையாய் இருக்கும் போது கற்பிக்கப்பட்ட விசயங்களை என்னவென்று கூட ஆராய்வதில்லை, ஏன் என்று கூட சிந்திப்பதில்லை, எத்தனை எத்தனையோ இஸ்லாமிய ஞானிகள், மேதைகள் பல விசயங்களில் தெளிவாக ஞானம் அருளியிருக்க யாரும் அதை அருந்த தயாரில்லை, ஆயினும் எல்லாம் தெரிந்தது போல இரவுப்பகலாய் பேசிக்கழிப்பார்கள்.
அதே போலத்தான் நபிமார்கள், வலிமார்கள் வியசத்திலும் ஏதோ அவர்கள் குறித்த ஓர் அதீத கர்பனையில் மிதக்கிறார்கள் மட்டுமல்ல சைத்தான், ஜின், மலக்குகள்..... என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாம் சொல்லி இருக்கும் எதொன்றின் கருத்து குறித்தும் அவர்கள் அறிவை பெருக்கும் அல்லது ஆராயும் முயற்சியில் ஈடுபடவில்லை, அவ்வாறு ஈடுபட்டு மக்களுக்கு தெளிவை தந்திடும் அறிஞர்களை அவர்கள் நாடுவதும் இல்லை மாறாக இன்னும் திரைகளை போட்டு உண்யை மறைக்கும் கற்பனையை வளர்க்கும் புதிய இயக்கங்களும், சிந்தனைகளும் வளரத்தொடங்கிவிட்டது ஆக இவற்றில் சிக்கி சமுதாயம் இன்னும் அறிவீன நிலையில் வீழ்ந்து கிடக்கிறது.
இப்படியான நிலையில் மறைந்த கவிஞர் எச்.ஜி. ரசூலை பெண் நபிகள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய ஒரு கவிதையை மட்டும் சுட்டிக்காட்டி அவர் குறித்த வேறுவிதமான பிம்பத்தை கட்டமைக்கவும், அவரை தெரியாத நபர்களுக்கு அவர் குறித்த வேறு வித சிந்தனையை விதைக்கவும் செய்கிறார்கள். அறிவு சார் விளக்கமில்லாத சமூகத்தில் திடுமென சொல்லப்படும் இக்கருத்துக்களால் சலசலப்புகள் உண்டாகலாம் அதே நேரம் தவறான பிம்பமும் உருவாகி அவர் குறித்து வேறுவிதத்தில் கருத்து பரப்பப்படும் நிலை உருவாகும்.
கவிஞன் எப்போதும் கேள்வி கேட்பான், பதிலும் சொல்வான் அறிவை விதைப்பான். அதையே கவிஞர் ரசூல் செய்தார். அவர் கேள்வி கேட்டதாலேயே அவரை வெறு விதமாய் சித்தரித்தார்கள், உண்மையில் மக்கள் நபிமார்கள் குறித்த தெளிவை பெற்றிருந்தால் அவர் அந்த கேள்வியையே கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.
மக்கள் கொண்டுள்ள கற்பிதங்களை மக்களே உடைக்க விரும்பவில்லை. உடைத்தால் புனிதம் போய்விடும் அல்லது தெய்வ குற்றமாகிவிடும் நமக்கு ஏன் வேண்டாத சிந்தனை என்று அஞ்சுகிறார்கள்.
அறிவை உள்வாங்கிக்கொண்டால் இருள்விலகி அறிவொளி சூழ்ந்துகொள்ளும்.
இறைவன் பேதங்களற்றவன்.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா.

சமரசம் செய்யாத கருத்தாளர் எச்.ஜி. ரசூல்



ஊன்றிய கருத்தால்
உள்ளத்துள் சமரசமானவர் என்பதால்
உலகத்தோரே எதிர்த்த போதும் அவர்
கருத்தில் சமரசம் செய்யாதவர்
தீட்டும் இலக்கியத்தில்
தீவிரம் காட்டினார்
திட்டும் உலகத்தினை
தரமறிந்து விட்டுக்கொடுத்தார் - ஆனாலும்
அவர்கள் நலம்பெற
ஆக்கங்கள் பலவால்
கற்றுக்கொடுத்தார்
சூஃபியிச கருத்துலகில்
ராஜாளியென பறந்தார்
சூஃபியாக்களின் பாதங்களை
பலமாக பற்றி நின்றார்
அறியாது எதிர்த்தோர்
புரியாது போரிட்டோர்
எவரையும் விட்டதில்லை யவர்
நையபுடைப்பார் பதில்படையெடுத்து அவர்
அதியற்புத கவிதைகள் செய்வார்
அதனினில் பொதிந்திருக்கும்
அத்தனை பொருள்வளம்
வித்தகம் செய்யும்
கற்பனையும் சேர்த்து
சிற்பம் செதுக்குவது போல
செதுக்கிவைப்பார்
தம் படைப்புகள் அனைத்தையும்
எல்லாம் ஒன்றென பேசிய கவிஞர்
வல்ல ஒன்றில்
வகையாய் இணைந்தார்
அதனோடு நிறைந்திட
உடல் கொஞ்சம்
தடையாயிர்ருந்தது
உயிரது உடல்விட்டேக
அத்தடையும் நீங்கிற்று
அதிர்ச்சி செய்தி சொன்ன போது
அந்தோ இங்கனம் நேர்ந்ததே என
அழுதார் ஓர் தோழர்
பின்னர் உரைத்தார்
நிச்சயம் அவருக்கு நிறைந்த
சுவர்க்கம் உண்டென்று!
கவிஞரவர்
சொர்க்கம் தாண்டி
நரகம் தாண்டி
மெய்ப்பொருளின் நடனத்தில்
மெய்மறந்தவர்
ஆதலால் இப்போதும்
அதனிலே தன்மெய்யை கலந்திட்டார்
மெய்யுறவே கலந்திட்டார்
இனி அவருக்கு கவலையில்லை
எதன் குறித்த வருத்தமும் இல்லவேயில்லை
என்று தோழரிடம் நான் உரைத்து
இன்னொன்றும்
திண்ணமாய் சொல்லிவைத்தேன்
"அவரை உலகில் இழந்ததனால்
அவரின் சிந்தனை முத்துக்களை
நாளை நாம் பெறப்போவதில்லை
அவர் பெற்ற ஞானமுதிர்ச்சியில்
எந்தப் புதிய பழத்தினையும்
இனி ருசித்தல் இயலாது
இவ்வாறான வெற்றிடத்தை
இனி யாராலும் நிறப்பிட முடியாது
இது தான் இழப்பு..
அதற்கே தவிப்பு"
***
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
6-8-2017 அதிகாலை.

கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மறைவு மிக வருத்தம் தந்தது, அண்ணன் அபுஹாசிமா அவர்கள் கவிஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியை பகிர்ந்திருந்தார் ஆனால் இத்தனை விபரீதமாய் முடியும் என நினைக்கவில்லை, மாலை (5-8-17)  கவிஞர் தஞ்சாவூரான் அவரின் பிரிவுச்செய்தியை சொன்னபோது மனம் மிக வாடினேன். இறக்கும் வயதல்ல இன்னும் நிறைய இலக்கியம் தரவேண்டியவர், என்ன செய்வது இறைவன் நியதி.
மறைந்த உயர்வான சிந்தனையாளரின் வியாபகத்தை நேற்றிலிருந்து முகநூலில் உணரமுடிந்தது. ஏனோ எப்போதும் அறிஞனை, கவிஞனை செத்த பிறகே போற்றும் சமுகமாய் இது உள்ளது என்ற கேள்வியும் என்னுள் அழமாய் விழுந்தது.
அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை வழங்கப்போதுமானவன்.

04 ஆகஸ்ட் 2017

தேவதூதனின் ஆட்சி

இந்தப் பிரதேசத்தில்
மகிமைமிகு தேவதூதனின்
ஆட்சி வந்தால்
நாட்டையே சொர்க்கமாக்கி
காட்டுவார் என்றார்கள்.
தேவதூதனும்
ஐம்பத்தாறு இன்ச் மார்போடும்
விதவித உயர்ரக
தேவ ஆடையலங்காரத்தொடும்
ஆஜானுபாகுவான
அதீத பலத்தோடும் ஆளவந்தார்
ஆனால்..
மக்களோ அவஸ்தையிலாயினர்
ஆங்காங்கே தேவதூதனின்
அடியாட்களே சிலரை குறிவைத்தும்
தேவதூதனின் அரசே
மக்களுக்கு வரிவைத்தும்
மற்றவர்களுக்கெல்லாம்
பலவிதங்களில் பொறிவைத்தும்
தாக்கி உயிர் பறித்தனர்.
தேவதூதன் தேவவாகனத்தில்
வானில் பறந்து கொண்டே
அவரோடு வீற்றிருக்கும்
தேவதோழர்களிடம்..
பார்த்தீரா!
எம் கொற்றத்தின் பெருமைதனையென
தெய்வீக புன்னகை பூத்துச் சிரித்தார்
பின் கடைசியாக
கீழிறங்கும் வேளையில்
ஓர் மேடை மீதேறி
இதை நான் ஒருபோதும்
சகிப்பதில்லை என்று பேசி இறங்கினார்.
ஆனாலும்,
தேவதோழர்கள்
மக்களின் திசை நோக்கி
நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார்கள்!
வஞ்சிக்கப்பட்டோரின்
உறவுக்காரன் ஒருவன்
அவர்களிடமே வந்து
பார்த்தீர்களா
நம் தேவதூதனின் மகிமையை என்றான்
அந்த குரலற்றவர்கள்
வேறுவழியின்றி
ஆமாம்,
நம் தேவதூதனின் கருணை
நம்மை காக்கவல்லது என்று
கண்ணீர் கசிய பதட்டத்தோடு கூறினர்,
அப்போதாவது
தாங்கள் உயிர் கொஞ்சம் பிழைக்கலாமென்று!
இப்படியன நிலையில்
நம் தேவதூதனின் ஆட்சியில்
சொர்க்கத்திற்கல்ல்லவா
வாக்குறுதி தந்தீர் என்று
அங்கே ஒருவன் கேட்டான்.
ஆமாம் உங்களை
நிரந்தரமாக மகிழ்விக்கும்
சொர்க்கபுரிக்கான
தீவிர ஏற்பாட்டிலன்றோ
நம் தேவ தூதர் இருக்கிறார்
என்று பதில் வந்தது.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா