25 ஜனவரி 2023

அறியாதபுரம் நூல் அறிமுக விமர்சனம் - திரு. கரந்தை ஜெயக்குமார்


ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பு. இனி அறியாதபுரம் நூல் பற்றி..
***
"தொண்ணூறு வயது முதியவர் மடியில்
முன்னூறு நிமிடத்திற்கு முன்
பிறந்த குழந்தை ஒன்று
சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது
முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து
மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து
இறையை நிறைய துதிக்கிறது."
படிக்கும் பொழுதே மனம் நெகிழ்ந்து போகிறது. முதுமையின் பெருமையினையும், வாழ்வின் உன்னதத்தையும், முழுமையாய் உணர்ந்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன, இவரது எழுத்துக்கள்.

இன்றைய உலகு அவசர உலகாகி விட்டது. எதற்கெடுத்தாலும் அவசரம். இரண்டு சக்கர வாகனப் பயணம்கூட, பறத்தலுக்கு இணையாகிவிட்டது. உணவு கூட, துரித உணவாகிவிட்டது.
எதற்கு இந்த அவசரம். இந்த அவசரத்தையும் கவியாக்கி இருக்கிறார் இக்கவிஞர்.
"ஏன் அந்தக் கவிதையை
இத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
பரபரப்புடன் இப்படிப் படிக்க
என்ன தான் அவசியம்?
இங்ஙனம் அந்தக் கவிதைப் புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே.
உன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதும் கவிதை இல்லையா?
உன் வாழ்வே ஒரு கவிதைப் புத்தகம் இல்லையா?"
கவித்துவமாய் வாழ வேண்டிய வாழ்வில், நட்பு என்பதைக்கூட, ஒரு கருவியாக்கி, சுயநலத்தினை மட்டுமே முதன்மையாக்கி வாழும் மனிதர்களை வேதனையோடு எண்ணிப்பார்க்கிறார்.
"அறம் பொருள் இன்பமெல்லாம் பேசினாய்
அக்கறை இருப்பதாய் காட்டிக் கொண்டாய்
பேச்சில் எப்போதும் தேன் கூட்டுவாய்
மூச்சில் எனை வானெனச் சாற்றுவாய்
நண்பர் என்றே எண்ணியுமிருந்தேன்.
…..
…..
பாவி நான் அறிந்திருக்கவில்லை
நீயொரு இரயில் சிநேகிதன் என்பதனை.
உன் நிறுத்தம் உனக்கு தெரிந்திருக்கிறது
நீ கவனத்தோடு இறங்கி விட்டாய்."
இவருக்கு உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுவதில் என்றும் விருப்பம் இல்லாதவர். இதனையும் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறார்.
"பொய்யாய் வந்து
பொய்யாய் முகம் காட்டி
பொய்யாய் ஆலிங்கனம் செய்து
பொய்யாய் பேசிச் சிரித்து
பொய்யாய் போய் வரவேண்டும்.
ஆதலினால் நான் மாட்டேன்."
பொய்யாய் வாழவிரும்பாத இவர், ஒரு தனிமையின் ரசிகர். தனிமையைத் திருவிழாவாய் கொண்டாடுபவர். தனிமையில் இவரது சந்தோச சாம்ராஜ்யம் பரந்து விரிகிறது.
"என் நண்பனான நானும்
என் எதிரியான நானும்
நானான நானும் இணைந்திருக்கையில்
நீங்களெல்லாம் நினைப்பது போல
எனக்கேது தனிமை… ?
…..
…..
என் சூரிய சந்திரர்களை
நீங்கள் சந்திக்கவில்லை தானே.
என் இல்லத்து வின்மீன்கள்
உங்கள் கண்களுக்கு
அகப்பட்டவை இல்லைதானே.
பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்?
நானே நிரம்பிய என் பரப்பில்
என்மையின் வட்டம் மிக நிரம்பிக் கிடக்கிறது."
தனிமையை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வாழ்வின் ஒரு பகுதி, காத்திருப்பதிலேயே கழிந்து விடுகிறது. பிறந்தது முதல், வளர்ந்து முதுமை அடைந்த பின்னும், ஏதோ ஒன்றிற்காக காத்துக் கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது.
"காத்திருப்பு
சில நெருப்பை அணைத்து விடுகிறது
சில நெருப்பை வளர்த்து விடுகிறது.
காத்திருப்பு
ஒரு தவத்தை வலிந்து தினித்து விடுகிறது.
….
….
காத்திருப்பு
ஏதேனும் ஒரு சேதியை தாமதப் படுத்துகிறது.
பரபரப்பின் நகங்களை கடித்துத் தின்கிறது
இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது
எதையோ தீவிரமாக எதிர்பார்க்கிறது
அதுவரை நம்பிக்கையை வளர்க்கிறது."
மனிதனாய் இப்புவியில் வாழும், ஒரு சிறு வாழ்வில், ஒரு பக்கம் அவசரம், மறுபக்கம் காத்திருப்பு, நடுவில் ஏமாற்றங்கள், துன்பங்கள் , துயரங்கள் எனச் சுழலும் இவ்வுலகில், மனித மனங்களுக்குள் மறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை கண்டு எள்ளி நகையாடுகிறார்.
"வாழும் இச்சிறு வாழ்வில்
ஆகுவதாம் … ஆகாததாம்
உறவாம் … வஞ்சகமாம்
பணமாம் … பரதேசித்தனமாம்
அரசியலாம் … ஆட்டுக்குட்டியாம்
மதமாம் … மசிராண்டியாம்"
கவிஞரின் வார்த்தைகளில் கோபம் ததும்பி வழிகிறது. தொண்ணூறு கவிதைகளால் கோர்க்கப் பெற்ற, கவி மாலையாய் மலர்ந்து மணம் வீசுகிறது இவரது நூல்.
இவர் யார் தெரியுமா? அதையும், இவரே கூறுகிறார், கேளுங்கள்.
"அனல் காற்றினிலே
அல்லாடும் சிறு கொடி நான்.
ஆதரிக்க யாருமின்றி
பேதலித்துத் தவிக்கிறேன்.
காட்டாற்று வெள்ளம்
கழுத்துவரை செல்கிறது.
நான் கடுகளவும்
எதிர்பாராதது வதைக்கிறது.
எந்தக் கொழுகொம்பும்
இதுவரை கிடைக்கவில்லை.
நெஞ்சமோ கூப்பாடு போடுகிறது.
எங்கிருந்தாவது உன் உதவிகள் வரட்டும்.
அறியாத புரத்திலிருந்து
செல்வமும் உதவியும் வரும்
என்பது என் பாட்டியார் வாக்கு."
இவர், தன் பாட்டியார் மீது கொண்டிருக்கும் பற்றால், பாசத்தால், நம்பிக்கையால், பாட்டியார் வாக்கினையே, இந்நூலுக்கு, தன் முதல் நூலுக்கு, கவிநூலுக்கு வைத்திருக்கிறார்.
இவர் வாய்மொழி அறியாதிருந்த போதே, தமிழ் மொழியால் சுவீகரிக்கப் பட்டவர். என்ன எழுதுகிறோம் என்று அறியாமலே, கிடைக்கும் காகிதங்களில் எல்லாம், எழுதும் பழக்கம், இவரது பால பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டது. இள வயது கவிதைகள் இவரிடத்தில் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, எழுந்து வா என்னும் இவரது, இளவயது கவிதையை, இலங்கை வானொலி, பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் காந்தக் குரலில் ஒலிபரப்பியபோது, நோபல் பரிசு பெற்ற உணர்வு இவருக்கு.
மேலும், இளவயதில் இவருக்கு வாய்த்த தமிழாசான்கள் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களும், புலவர் கலியபெருமாள் அவர்களும், எழுது, எழுது என இவரை உசுப்பிவிட்டனர், உற்சாகப்படுத்தினர், இவரும் மனமகிழ்ந்து கவிஞராய் வளர்ந்தார், உயர்ந்தார்.
கவிதை இவரது உயிராகிப் போனது. கவிதைகள் இவர் மனவானில் ததும்பி வழியத் தொடங்கின.
"விடாப்பிடியாக
தரதரவென எழுத்துக்களின்
கழுத்தைப் பிடித்திழுத்து
கவிதை செய்பவன் நானல்ல.
தானே ததும்பி வருவதற்கு
தடம் அமைக்க
தெரியாதவனும் நானல்ல …
கவிதை பயிர் செய்வது
என் தொழிலல்ல….
அதுவே என் உயிர்."
இவர் தன் கவி நூலை, தன் முதல் நூலை, தன் தாய், தந்தையாரிடம் இருந்துதான் தொடங்குகிறர்.
"நேர்படும் இறையருள்
நேத்திரங்களின் குளிர்ச்சி
எந்தாய்."
"வாழ்வில் கிடைத்த வரம்
நாளெல்லாம் ரசிக்கும் ஸ்வரம்
எந்தை."
இந்நூலுக்கு உயிரினிய முதல் வாழ்த்தை வழங்கி இருப்பவர்கள், இவரது பெற்றோர்கள்தான்.
"எங்களது வாழ்த்து எனும் தாலாட்டு
எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்" என்ற மனதார, மகிழ்ந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.
தாலாட்டி, சீராட்டி வளர்த்தவர்களின் வாழ்த்து, இவரை மேலும் உயர்த்தும்.
ஒரு நல்ல கவிதை கிடைத்துவிட்டால்
பிரபஞ்சம் மகிழ்ந்து நிறையுமே
அதுபோதும். என இவரது கவிதை வரிகளாலேயே, அகம் மகிழ்ந்து, வாழ்த்தியிருக்கிறார், இவரது தமிழாசான் கவிஞர் ப.திருநாவுக்கரசு.
கோர்க்கப்படாதிருந்த மணிகளைக் கவிதை நூலாக, அறியாதபுரமாக, அற்புதமாகக் கோர்த்துள்ளார்
இது ஆரம்பம்
வரவுகள் பல உள்ளன
வாழ்த்தி மகிழ்வோம். என வாழ்த்தியிருக்கிறார், அமீரகத் தொழிலதிபர் மற்றும் அறிவியல் அறிஞர் விருதாளர் முனைவர் வெள்ளம்ஜி.எம்.ஜே.முஹமது இக்பால்.
"ஆழ்மனக் கிடக்கையில் அரும்பிய மலர்களை
அறியாத புறமெனும் ஆரத்தில் கோத்துமே
தோழமைக் கவிமொஹி தீன்படைத் தளித்துள்ளார்
தமிழுக்குச் சூட்டிடும் சரமென வாகுமே"
என வாழ்த்தியிருக்கிறார், இதுவரை பதிமூன்று காவியங்களை, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, கவி வடிவில் வழங்கிய, இலங்கை காப்பியக்கோ. ஜின்னா ஷரிபுத்தீன்
"தாயே… தமிழே
உன் அன்பு உயிரெல்லாம் வேண்டுமடி
என்றும் நீ அணைக்க மகிழ்வேனடி.
நான் வாழ இதயமும்
என் வாழ்வின் உதயமும் நீ தானடி.
நாளும் நீ இன்றி நான் ஏதடி"
என நாளும், தமிழ், தமிழ் எனத் துடிக்கும், தமிழிதயம் பெற்றவர்தான் இந்நூலின் ஆசிரியர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
வாசித்துப் பாருங்கள்.
அறியாதபுரத்தில்,
தங்களையும் அறியாமல் கரைந்து போவீர்கள்.
"அறியாதபுரம்"
கேலக்ஸி பதிப்பகம்,
1068, என்.பெருமாள் பட்டி,
ஆட்டுகுளம் விளக்கு,
சிவகங்கை சாலை,
மேலூர்.
மதுரை- 625 106.
99944 34432
admin@galaxybs.com
விலை ரூ.150
கரந்தை ஜெயக்குமார்
ஜனவரி 24, 2023.
கரந்தை ஜெயக்குமார் அவர்களின் இணைய தளப்பதிவு. http://karanthaijayakumar.blogspot.com/.../blog-post_24.html
FB post Link

24 ஜனவரி 2023

நம்பலையே



செய்த வேலைகளை
அப்படியப்படியே விட்டுவிட்டு
தடுப்புக்கூரைகள் நோக்கி
எல்லோரும் விரைந்தோட
நனைந்த ஆடைகளை உதறி
கைகளால் தலையைத் துவட்டி
ஆசுமாசமாகி..
"ச்சோ" வெனப் பெய்யும்
மழையை பார்த்துக்கொண்டே
"ஏம்ப்பா..
எஃப் எம் ரேடியோல ஒன்னும்
மழப் பெய்யும்ன்னு
சொன்னதா தெரியலயே.."
என்றவனைப் பார்த்து
"பொத்துக்கிட்டு ஊத்தியும்
அட..
வெத்துப் பய நம்பலையே"
என்றது மழை.
-ஜா.மு.
23-01-23

உணர்வின் மொழி!

பார்த்த மாத்திரத்திலேயே
உணர்வுப் பொங்க வைக்கிறது
சில எழுத்துக்கள்.
படிக்கும் நிகழ்ப் பொழுதிலேயே
உருகி அழவைத்துவிடுகிறது
சில சொற்கள்.
ஆழ்ந்த சில நொடிகளிலேயே
உருக்குலைய வைக்கிறது
சில வரிகள்.
அது வெறும்
எழுத்துக்களால் ஆன
சொற்கள் என்பதைத் தாண்டி,
அவை..
உயிரைத் தோண்டிக்
கிளற.. கிளறப்
பூதம் போல வெளிப்பட்டவை,
வெறி கொண்டு
மென் உணர்வின் மீது
காழ்ப்புடன் எறியப்பட்ட
கற்களின் ரத்தம் தோய்ந்தவை,
அக்கினி மிகு
அனல் சூழ் வாழ்வில்
யாருக்கும் தெரியாமல்
எரிந்த பெருந்தீக் கருக்க,
உள்ளம் உருகப் பெருகிய
கண்ணீரினால் ஆன
உப்புக்கற்கள் அவை.
- ஜா.மு
24-01-17

18 ஜனவரி 2023

அன்பென்ற மழையிலே - Islamic version

1
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
புகழோங்கும் இறைவனே
புகழ்ந்தேற்றும் புனிதராய்
புவிமீது தோன்றினாரே
 
நற்செய்தி பகிர்ந்திடும்
நாநிலத் தூதராய்
நாயகம் தோன்றினாரே
 
2
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
நிலம் அழிக்கும் பேதங்கள்
நிஜமாக நீங்கவே
நிறைநாதர் தோன்றினாரே
 
குலப்பெருமை பேசியோர்
கொடுஞ்செயல்கள் ஒழியவே
குணநாதர் தோன்றினாரே
 
நூற்றாண்டு காலமாய்
புதையுண்ட பெண்சிசுக்கள்
விசும்பல்களில் தோன்றினாரே..
 
அறியாமை காலத்து
அநீதங்கள் பொசுங்கிடும்
நெருப்பாக தோன்றினாரே
 
பாலைவன நிலத்திலே
பால்சுரக்கும் ஊற்றாக
பாசநபி தோன்றினாரே
 
3
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
 
- ஜா.மு
02-05-2020

14 ஜனவரி 2023

அறியாதபுரம் வெளியீடு குறித்த பதிவுகள்















- ஜா.மு

04 ஜனவரி 2023

"அறியாதபுரம்" துபாய்க்கு வந்து சேர்ந்தது

"அறியாதபுரம்" நூல் பிரதிகள் துபாய்க்கு வந்து சேர்ந்துவிட்டது, பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன்.



கேலக்ஸி பதிபகத்தின் வெளியீடாக வரும் இந்நூலை FJ tours & Travels மூலம் கேலக்ஸியின் பாலாஜி அண்ணன் Balaji Baskaran சுடச்சுடத் தருவித்து அளித்தார்.

நூலின் தரம் சிறப்பாக வந்துள்ளது. கையில் வாங்கும் போதே தரத்தின் நிறைவில் மனம் நிறைந்தது. இந்நூலுக்கு உழைத்த கேலக்ஸியின் ஆமினா முஹம்மத் Amina Mohammed உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

நூலின் பிரதிகளை கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி அண்ணனுக்கும் எழுத்தாளரும் Proactive safety consultancy உரிமையாளருமான ஜெஸிலா பானு Jazeela Banu அவர்களுக்கும் அளித்து மகிழ்ந்தேன்.
நூல் வரும் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 156&157ல் கிடைக்கும், மேலும் ஆன்லைனில் galaxybs.com Galaxybs Galaxybs
என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கும்.

மகிழ்ச்சி.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
-ஜா.மு.

முகநூல் இணைப்பு

03 ஜனவரி 2023

நள்ளிரவில் பிறக்கும் புத்தாண்டு



எல்லா புத்தாண்டும்
நள்ளிரவில் தான் பிறக்கிறது!
இரவு என்பது
இருளின் போர்வையால்
நம்மை கதகதப்பாக்கி
ஓய்வின் கரிசனத்தால்
அணைத்துக் கொள்வது;
மனதையும் உடலையும் சாந்தப்படுத்தி
அடுத்த உழைப்பிற்கு தயார் செய்வது;
இரவு என்பது வாழ்வின் இருளல்ல
இரவின் இருள் என்பது
வாழ்வின் விளக்கிற்கு
பிரகாசத்தை ஏற்றும் ஒளியின் கரம்.
இரவிற்கு ஆயிரம் ரகசியங்கள் இருந்தாலும்
இரவிற்கும் நமக்குமான
ஆலிங்கனம் வெளிச்சம் பட்டு வெடிக்காத மென்மொட்டு.
கண்ணை மூடிக்கொண்டே
அன்பின் மையலோடு
கொஞ்சம் சூரியனை நோக்கி
பூமி சுற்றி நகர
கிழக்கு வெளுத்துவிடும்.
அதுவரை உறங்கி
நிதானமாக நாழிகை நகரட்டும்
உற்சாகமாய் கதிரோன் மலரட்டும்
புத்துணர்வு சூழ
புதிய புலர்ச்சி
இருக்க வேண்டியே
எல்லா புத்தாண்டும்
நள்ளிரவில் தான் பிறக்கிறது!
நம் ஒவ்வொருவரின்
வான் வனத்திலும்
புதிய சூரியப்பூ மலர்கவே!
- ஜா.மு
01-01-2023 12:28 am