27 மார்ச் 2021





நண்பர்களே நபிகளாரைத் தெரியுமா - அவர்
நாட்டிச்சென்ற  கொள்கை என்ன தெரியுமா. அற்றை அரபுமண்ணிலே 
ஒற்றை வீரராகவே
மனித சமுதாயம் நலம் காண உழைத்தவர்

கொடுமையான அடிமைத்தனத்தை ஒழித்தவர் - அவர்
விடுதலையின் வீரவுணர்வை விதைத்தவர்
அறிவின் ஒளியேந்தியே
பரிவின் திசைகாட்டினார் - உயர்
செறிவான சன்மார்க்கம் பொதுவாக்கினார்

ஏகத்துவ இறைஞானம் பேசினார் - அவர்
சமத்துவத்தின் சாமரமாய் வீசினார்
போகப் பொருளாகவே 
பெண்ணை நினைத்தோருக்கு - அவர்
பெருமதிப்பை தனிச்சிறப்பை பறைசாற்றினார்

பாசிசத்தின் நீச எண்ணம் ஓட்டினார் - அவர்
பாசமுள்ள பெருவெளியை காட்டினார்
அன்பின் சாம்ராஜ்யமே
அண்ணல் சாம்ராஜ்யமாம் - அந்த
பண்பாளர் வழிதனிலே நடைபோடுவோம்

அண்ணல் வழியை நமது வழியாய் ஆக்குவோம் - பிறர்
இன்னல் துன்பம் விரைந்தோடி நீக்குவோம்
பறந்த கண்கொண்டு தான்
அன்பின் துணைகொண்டு தான் - இங்கு
எல்லோரின் மனந்தனையும் தழுவுவோம்.

"பாவரசு" வழுத்தூர்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
05-02-2021
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: