இதற்கோர் இலக்கணமாய் வாழ்ந்த
இறைநேசப் பெருவேறு!
வழுத்தூர் பதியில்
வாழ்ந்து முடித்த
கடைஞான வள்ளல்!
சூஃபி தத்துத்துவத்தை
சூசகமாய் வாழ்ந்து காட்டிய
எதார்த்தத்தின் ஏகாதிபதி!
ஞாலத்தின் ஞானம் பேசி
கோலத்தில் வெண்நரை தரித்த
குழந்தை மனக் கோமான்!
நாயகம் விரும்பிய எளிமையை
தாயகமாக்கி ரசித்து
வாழ்ந்த சீமான்!
எளிமையாக வாழ்ந்து
வலிமையான தவக்கோலம்
பூண்டிருந்த புண்ணிய பிறவி!
தாயுமானவர் தான் இவர்,
எந்தத்தாய் தான் இவர்க்கு நிகர்!
இல்லறத்தில் கட்டினீர்
ஆரணம்
நல்லறம் நடத்த விரும்புவோர்க்கு
நீங்களே தலை சிறந்த உதாரணம்!
ரத்தின முத்தான திங்களை
கண்டு கொண்டவரெல்லாம்
இதய ஒளி பெற்றனர்!
வாழ்வினில் உண்மையாய்
வாழாதவர் மத்தியில்
மனத்தூய்மையுடன் மணந்த
நறுமணத் திருமனம்!
தத்துவம்
ஆயிரம் பேசினும்
'அஸி'த்'துவம்' அறியா
மாந்தரில்
'தத்துவமஸி'யாய் தனித்துவம் பெற்றீர்!
ஜீவனோடிருந்த போதே
சதா சமாதிநிலை கண்டீர்!
ஜீவன் துறந்த நிலையில் இன்று,
ஜீவசமாதியில் நித்தியம் கொண்டீர் !
சத்தனில் நித்தமும்
சங்கமம் ஆன நீங்கள்
நித்திரை கொள்வதும் சங்கையின் சந்நிதி!
அங்கே என்றும் பொங்கிடும் நன்றே பெருகிடும்
முத்திரை தூதின் தங்கிடும் அருள்நிதி!
அல்லாஹ் அருள்க!
அவன் அருட் தூதர் அருள்க!
எல்லா நேசரும் அருள்க!
நீங்களும் எங்கட் கருள்க!
-வழுத்தூர்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
பொருள் :
செம்மேரு : குறைகளற்ற மலை
பெருவேறு : பெரு+ஏறு (ஏறு : சிங்கம்)
பதி : இடம்
கடை : கடைசி அல்லது இறுதி
கோமான் : அரசர்
சீமான் : செல்வ செழிப்புள்ளவர்
தத்துவமஸி : என்பது ஆன்மீக உயர்நிலையை விளக்கும் வடமொழி வேதச்சொல் (தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய்)
சமாதி : சமம் + ஆதி அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
சத்தன் : இறைவனை குறிக்கும் சொல், நித்தமும் : எப்போதும்
சங்கை : கண்ணியம் முத்திரை : இறுதி, தூது : நபித்துவம்