31 ஆகஸ்ட் 2022

யுவன் வாழ்க! இசையை ஆள்க!!



தன்னை,
தான் எவன்? என்று கேட்டவன்
தனக்கோர் அங்கீகாரத்தை
தன் தனிவழியில் தானே அமைத்தவன்.
பழகிய இசையை பற்றி நின்றால்
பழைய இசை தானே என்றிருப்பார்கள்
இளையவர் நெஞ்சத்தை வசீகரிக்க
இன்னோர் தடம் தனியே வகுத்தவன்
தந்தை மட்டும் சுயம்புவல்ல
தானும் தான் என்பதை
தன் இசைத் திறத்தால் நிரூபித்தவன்.
கிறக்கம் கொடுக்கும் காதல் பாடல்களில்
அழுகை பிறக்கும் சோகப்பாடல்களில்
இளமை துடிக்கும் குத்துப்பாடல்களில்
இவன் குரல்.. என்றுமே தனிக்குரல்.
பெரிதாக இசை பயிற்சி இல்லை
இசைப்பலகைக்கூட தேர்ச்சியில்லை
மனதின் ஈர்ப்புவிசையோடு பயணித்தான்
திசையெட்டும் ஒளிக்கிறது இவன் பாட்டுத் தான்.
யுவன்,
என்றும் வாழ்க!
இசையை ஆள்க!!
வாழ்த்துடன்
ஜா.மு.
31-08-2020

29 ஆகஸ்ட் 2022

கலைஞருக்கு நினைவஞ்சலி!




அறியா தோருக்கும்
அரை வேக்காடு களுக்கும்
அறிய முடியாத
அரிய அதிசயம் நீ!
அரை நூற்றாண்டு தமிழகம் நீ!
உரை எழுத முடியாத தமிழ் அகம் நீ!
ஆரிய பகை வென்ற
திராவிட திருமகன் நீ!
தேரோடும் திருவாருர் தந்த
திரவியம் தான் நீ!
தாழ்ந்திருந்த தமிழகத்தின்
வீழ்ந்திருந்த தமிழினத்தின்
மாற்ற முடியாத தலையெழுத்தை
மாற்றிடப் பல கையெழுத் தீந்தவன் நீ!
சாதனை தமிழன் நீ!
சாதித்த திராவிடன் நீ!
சோதனை சூழ்ந்த
போதிலெல்லாம்
சோதனைக்கே சோர்வை
தோதாய் அளித்தவன் நீ!
வையகமே வியக்கும்
வைராக்கியன் நீ!
வலிகளை வழிகளாக்கிய
வைரமாய்ந்தவன் நீ!
படித்து... படித்து...
பண்பட்டவன் நீ!
எழுதி... எழுதி...
விண் தொட்டவன் நீ!
விழித்து... விழித்து...
சமூக அறம் காத்தவன் நீ!
விதைத்து... விதைத்து...
சமூக விருட்சமானவன் நீ!
உருகி... உருகி...
தமிழ் வளர்த்தவன் நீ!
பெருகி..பெருகி..
தமிழானவன் நீ!
மூத்தகுடி தலைவனுக்கு
முஹைதீன் பாட்ஷாவின்
நினைவஞ்சலி!

- ஜாமு
2018

இமாம் ஹுஸைன் (அலை...) பொன்மொழிகள்




இன்று முஹரம் பிறை 10, ஆஷுராவுடைய நாள்.
இன்றைய நாளில் முந்தைய நபிமார்களுக்கு எத்தனையோ பிரதான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப்பெயரர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்தம் திருக்குடும்பத்தார்கள் கொடுங்கோலர்களை எதிர்த்து உயிர் நீத்த துயர்மிகுந்த நாள் என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாள் உலகெங்கிலும் உள்ள உணர்வாளர்களால் வரலாற்றின் சோக நிகழ்வுகளை நினைவுகூறும் விதமாக எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. முஹரம் முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் ஆசுரா நிகழ்வுக்காக இராக்கின் கர்பலாவில் பல லட்சம் திருக்குடும்ப நேயர்கள் சென்று புனித தியாகிகளை குறிப்பாக இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நினைவகத்தில் ஒன்று கூடி பங்கேற்கிறார்கள்.
உலகமே முஹரம் பிறை ஒன்றுக்கு இஸ்லாமிய புத்தாண்டு என விடுமுறை வழங்க, நம் இந்திய அரசு வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்களின் வழிகாட்டுதலில் ஆங்கிலேய காலந்தொட்டே முஹரம் பத்து அன்றுக்கு விடுமுறை அளித்து அளப்பறிய தியாகத்திற்கு கவுரவம் அளித்துவருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நாளில் அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகத்தின் குலக்கொழுந்து அருமை ஹுஸைனாரின் ஒருசில பொன்மொழிகள் இதோ..
1. அறிவைத் தேடுவது உங்களை ஞானத்தையும் உயர்வையும் நோக்கி அழைத்துச் செல்லும்.
2. உறவினர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்வையும் தரும்.
3. உங்களுக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் உங்கள் செயல்களில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இருங்கள்.
4. உங்கள் பயணம் வலியும் சவால்களும் நிறைந்ததாக இருந்தாலும் சரி, சரியானதை நோக்கிய பாதையில் உறுதியாகவும் திடமாகவும் இருங்கள்.
5. மக்களே! என் வார்த்தைகளைக் கேளுங்கள், போரைத் தொடங்க அவசரப்படாதீர்கள், அதனால் எனது புரட்சிக்கான காரணத்தை நான் தெளிவுபடுத்துகிறேன்.
6. எனது புரட்சியின் நோக்கம் சமுதாயத்தை சீர்திருத்துவதும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை அசலை உயிர்ப்பிப்பதாகும்
7. நான் ஒரு கலகக்காரனாகவோ அல்லது கொடுங்கோலனாகவோ வீண் கலகம் செய்ததில்லை; மாறாக, நான் இஸ்லாமிய தேசத்துக்கான சீர்திருத்தத்தை நாடி எழுந்தேன்.
8. ஆஷுரா நாளில், அவர் தனது தோழர்களிடம் பேசினார்:
“பொறுமையாயிருங்கள், உன்னதமானவர்களே. மரணம் என்பது உங்களை துன்பத்திலிருந்தும் இழப்பிலிருந்தும் பரந்த சொர்க்கத்திற்கும் நித்திய கிருபைகளுக்கும் அழைத்துச் செல்லும் ஒரு பாலம் மட்டுமே."
9. ஆஷுரா இரவில், இமாம் ஹுஸைன் அவர்கள் கூடாரத்தில் தனது ஆதரவாளர்களைக் கூட்டி, விளக்கை அணைத்துவிட்டு கூறினார்:
“கவனமாயிருங்கள்,
இந்த இடத்தை விட்டு வெளியேற நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன்; இனி உங்கள் மீது எந்தக் கடமையும் இல்லை, நீங்கள் அனைவரும் வெளியேறலாம்."
இருப்பினும், அவர்களில் ஒருவர் கூட அவரை விட்டு வெளியேறவில்லை.
10. இறைவன் மீது ஆணையாக, நான் ஒரு அவமானப்படுத்தப்பட்ட மனிதனைப் போல என் எதிரிகளிடம் ஒருபோதும் சரணடைய மாட்டேன், அடிமைகளைப் போல அவர்களுக்கு விசுவாசத்தை ஒருபோதும் உறுதியளிக்க மாட்டேன்.
11. என்னைப் பொறுத்தவரை, சத்தியத்திற்காக சரியான காரணத்திற்காக ஏற்படும் மரணம் மகிழ்ச்சியேத் தவிர வேறில்லை, கொடுங்கோலர்களின் கீழ் வாழ்வது நரகத்தில் வாழ்வதைத் தவிர வேறில்லை.
12. இழிவான வாழ்க்கையை விட கண்ணியத்துடனான மரணம் சிறந்தது.


தமிழாக்கம் - ஜா.மு
09-08-2022