19 ஜூலை 2015

ஈகைத்திருநாள் கவிதைகள்




தூக்கத்தை உடைத்து
தூய்மையை பலப்படுத்தி இருந்தோம்
இரெவெல்லாம் பகலாய் இருந்தது
உழைப்பும் களைப்பும் பகலாய் இருந்தது
கட்டுப்பாடுகள் நம்மை அறியாமலேயே
நம் கட்டுக்கோப்புகளாயிருந்தது
வேதரீங்காரமும், அருளுரைகளுமே
அன்றாட வாழ்வாய் ஆகியிருந்து
பார்வைகளில் அருளும் குளிரும்
பரிவும் பணிவும் பரந்துகிடந்தது
செவியும் உணர்வும் புவியில் சிறந்ததில்
குவியும் சிந்தனையோடு நிலைத்திருந்தது
கரங்களில் இரக்கச் சுரங்கங்கள் சுரம்பாடி
ஏழைகளை அணைத்துக்கொண்டிருந்தது
பிறருக்காகவும், பிசகருக்கவும்
எட்டுக்கள் வைத்து எட்டியமட்டும் நடந்தது கால்கள்
நகர்ந்துவிட்ட நாழிகைகளும்
தேய்ந்துவிட்ட ரமலான் பிறையும்
பெருநாள் கொண்டாட்டங்கள்
புத்தாடைகளோடு
பிரிய உணவுகளையும்
பிரியாணியையும் தந்துவிட்டு
ஏனோ துடைத்து எடுத்துச்சென்றது
அத்தனை அருமைகளையும்!

*****
ஏதோ சூழ்ந்திருந்த தெய்வீகம் ஒன்று...
நம்மோடிருந்த விண்வளையம் ஒன்று... 
இலயித்திருந்த அருள்சூழல் ஒன்று...
நீங்கி விலகிவிட்டதாக இப்போதைய உணர்வு
ரமலான் சென்றுவிட்டதோ!

*****

பகலெல்லாம் நோன்பிருந்தோம்
பசியே ருசியாய் இருந்தது
நீ சென்றபின் மீண்டும் பழைகுருடி கதவைத் திறந்தாள்
சாப்பாட்டு மூட்டையை சுமந்து திரிகிறோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: