01 ஜூலை 2016

27ஆம் கிழமை எனும் லைலத்துல் கத்ரு இரவு

இன்றைய தினம் அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் ரமலான் பிறை 27, புண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு. லைலத்துல் கத்ர் இரவு பற்றிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொன்மொழிகள் ஏராளம் இருக்கிறது, அதில் பல கடைசிப்பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் தேடச்சொல்லி இருக்கிறது. ஆனாலும் அறுதியிட்டு என்றைக்கு என்று சொல்லக்கூடுமா எனும் விசயத்தில் பல மேன்மையான மார்க்க மேதையர்களால் மாற்று கருத்திற்கு அப்பாற்பட்ட 27ஆம் ரமலான் இரவே லைலத்துல் கத்ரு என்று நிருவப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படும் நிலையில், நவீன வஹ்ஹாபிய சித்தாந்த தலையீடுகள் ஈமான் கொண்ட பாமர ஜனங்கள் மத்தியில் அவர்களினின் குழப்பத்தை புகுத்தி 27ஆம் இரவு கொண்டாட்டத்தை அர்த்தமற்றவை என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது என்பது இன்றைய துர்ரதிஷ்டங்களில் ஒன்று.

ஏனெனில் இஸ்லாத்தை வெறும் கொண்டாட்டங்களற்ற மார்க்கமாக நிலைநிறுத்த நினைக்கும் நவீன சிந்தனை கொண்டவர்கள் ஆன்மரீதியான கொண்டாட்டங்களை, சமூகம் ஒருங்கிணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியான தருணங்களை எப்படி ஏற்றுக்கொள்வர் தனிமனித ஆன்மா மகிழ்ச்சி அடைவதையோ அல்லது சமூகம் மகிழ்ந்து நற்பேறடைவதையோ, எல்லோரும் கூடி ஒன்றித்து பிரார்த்தனை செய்து இன்று தான் லைலத்துல் கத்ர் என்ற அழுத்தமான எண்ணவோட்டத்தின் வெளிப்பாடாக அதையே பெற்றுக்கொள்ள நேர்வதையோ, அன்றைய இரவில் முகல்லாக்களில் எல்லோரும் ஒன்று கூடி குதூகலித்து சமூக  சுமூகம் நிலவுவதையோ அவர்கள் என்றென்றும் விரும்பமாட்டார்கள் ஆகவே தான் அவர்களுக்கு சாதகமாக “ஒற்றைப்படையின் இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள்”என்று நபிமொழி சொல்லி இருக்க எப்படி நீஙகள் 27ஐ கொண்டாடுகிறீர்கள் என்கிறார்கள். ஆக அவர்களின் பார்வையில் இந்த கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும்.. இந்த பாரம்பரிய நிகழ்வு நிறுத்தப்படுவதன் மூலம் அவர்களின் மூலக்கொள்கையின் சாரம்சம் உயிர்பெற வேண்டும் அவ்வளவு தான்.

தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் எண்ணிரந்த மார்க்க பெருமேதைகள் இருந்தார்கள், அவர்களுக்கு தெரியாத விசயங்கள் இல்லை எனும் அளவுக்கு அத்தனை ஆராய்ச்சி அறிவு பெற்றிருந்த உயர்வான கண்ணிய உலமாக்கள் இருந்த பூமி நம் தமிழகம். அவர்களுக்கு “கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் தேடிக்கொள்லுங்கள்” என்ற ஹதீஸ் தெரியாமல் இல்லை ஆனாலும் அவர்கள் 27 ஐ குறிப்பாக லைலத்துல் கத்ரு என்று பறைசாற்ற நிறைய காரணங்கள், ஆதாரங்கள் இருக்கத்தான் செய்தது. அதனால் இப்போது இருப்பது போன்ற  குழப்பஙக்ள் இருந்ததில்லை, மக்கள் ஒரே மனநிலையில் 27ஐ கத்ருடைய இரவாக புண்ணிய இரவாக ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக கொண்டாடினார்கள் லைலத்துல் கத்ரை பெற்றும் கொண்டார்கள். 

அந்த வரிசையில் நாம் கண்ட நன்முத்து மறைந்த மாபெரும் சூஃபி
 இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் போன்ற மாமேதைகள் இப்போது இல்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் வெதும்துகிறது... கண்ணியம் பொருந்திய இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது அரபி, உருது, பார்ஸி, ஆங்கிலம் என பல மொழி பாண்டித்தியம் பெற்ற பெருமேதை. அத்தனை மொழிகளிலும் பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை வாழ்ந்த நிறைய மார்க்க வல்லுனர்கள், ஞானப்பெருமான்கள் யாத்தளித்த நிறைய பொக்கிச கிரந்தங்களை கற்று கரைகண்ட அவர்களது விரிந்துபட்ட ஹதீஸ்கலை ஆராய்ச்சியின் ஊடாக தான் நடத்தி வந்த “அஹ்லுஸ் சுன்னத்” மாத இதழில் தொடர்ந்து நிறைய ஆதாரங்களை அடுக்கடுக்காக குறிப்பிட்டு குறிப்பாக அப்துல்லா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு போன்ற நிறைய சஹாபிகளின்  ஆதார கூற்றுகளின் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் முந்தைய நிலையில் எப்படி அறிவித்தார்கள், அதற்கு பின்னான ஒவ்வொரு நிலைகளில் எவ்வாறு லைலத்துல் கத்ரு இரவை பற்றிய அறிவிப்புகள் இருந்தன, பிற்கு 27ஆம் கிழமை குறித்து அது தான் லைலத்துல் கத்ரு என்று எப்படி உணர்த்தினார்கள், நமது பாரம்பரிய முன்னோர்கள் எப்படி 27 என  உறுதியாக்கினார்கள் என தர்க்கப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக தெள்ளிய நீரோடைப்போல விளக்கிய ஆக்கங்களை படித்த நினைவுகள் இன்று ஆட்கொள்கிறது.  (இந்த ரமலானின் லைலத்துல் கத்ரு இரவின் பொருட்டால் அல்லாஹ் அவர்களை இன்னும் இன்னும் மேன்மை படுத்துவானாக!)

சூஃபி மாமேதை இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத்
ஆகவே லைலத்துல் கத்ரை பூவுலோருக்கு கிடைக்கும் இறை பரிசை புண்ணிய இரவை மகிழ்ச்சி பொங்க புத்தாடை பூண்டு குடும்பத்தோடு புலங்காகிதம் பொங்க எப்போதும் போல நாம் கத்ருடைய இரவை மிக உற்சாகமாக கொண்டாடுவோம். நல்லமல்களை செய்வோம், திக்ரு, துஆக்கள் செய்வோம் இன்றைய இரவை பஜ்ரு வரை உயிர்ப்பிப்போம்.  நமது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரிய பெருமேதைகள் விட்டுச்சென்ற தடங்கள் குறித்து போதிப்போம்.நவீனசார்பு சிந்தனைகளை புறக்கணிப்போம். வஸ்ஸலாம். 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: