05 ஏப்ரல் 2011

பொன் அந்திப்பொழுது..







அழித்து... அழித்து...

எத்தனை முறை தான்

அழகு பார்ப்பாய் சிற்பியே!


அந்திவான மேகத்தில்

பொன்துகள்கள் தூவி

எரியும் சூரியன் மேல்

குங்குமம் குலைத்துப் பூசி

மங்களம் செய்வதன்

நோக்கம் தான் என்ன..?


மறையப்போகும் நேரம் நெருங்குவதால்

சூரியனுக்கும்.. மேகத்திற்கும்..

சூசக அலங்காரம் தொடுத்தாயோ!


அட! அதற்குள் என்ன மாற்றம்

மேகம் வேறுரு பெற்றுவிட்டதே,

பொன் துகள்கள் இரத்தக்கட்டியாகியதே

என்ன! நொடிக்குள் சமாதானமா

இரத்தம் மறைந்து

லேசான கருமை சூழ்கிறதே


அடடா..

இரவின் அத்துமீறலை

அந்தி வானத்தால்

கட்டுப்படுத்த முடியவில்லையே

பகலை வென்ற அந்தி வீழ

ஆதிக்கம் செலுத்த முந்தி வந்தது கருமை…

சாதித்து வந்தது இரவு...இரவு...








இந்த கவிதை கூட என் அந்த காலத்தின் ஓர் அந்திப்பொழுதில் .........பள்ளிக்கூடம் சென்று விட்டு களைப்பு நீங்க என் மனதையும் உடலையும் புத்துணர்வு செய்யும் வழக்கம் கொண்ட நான் உடற்பயிற்சி செய்து கொண்டே உள்ளப்பயிற்சியாய் இயற்க்கையோடு இன்முகம் காட்டி இனிதே தழுவுவேன் இதமாய் எனக்குள் பூரிப்பேன் அப்படித் தான் அன்றைய பொழுதுகளின் மாலையில் என் அத்தா (என் தாய்வழி பாட்டனார்) வீட்டின் மாடியில் அந்தி வான எழிலினை ரசித்த போது என் இதய உதடு எழுதச்சொன்ன அந்த சின்னஞ் சிறு வயதின் வார்த்தைகள் (அகவை 16 இருக்கும், காலம் 1994 அல்லது 1995 இருக்கலாம்)

ஜே.எம்.பாட்ஷா

- இன்னும் புரியும்

கருத்துகள் இல்லை: