சரணம்:
நபியே..
நான் என்றும் உங்கள் அன்பனல்லவா
கதியே..
நீங்கள் என்றிருக்கும் அடிமையல்லவா
அனுபல்லவி:
நிதியே..
அருட்பார்வை யன்றி வேறு இல்லையே
பதியாம்..
மதினா எனக்கு புனித சுவனமல்லவா
சரணம் 1
சின்னஞ்சிறு வாழ்வில் கிடைத்த பெரிய பொக்கிசம்
எண்ண மெலாம் ஊறிகிடக்கும் இஷ்கின் மதுரசம்
நபி இஷ்கின் மதுரசம்
எண்ண எண்ண நானும் இல்லை என்னில் என்வசம்
எண்ணி விட்டால் அடைந்திடுவேன் மோட்சபரவசம்
நபியால் மோட்சப்பரவசம்
எது இருந்த போதும் வாழ்வின் நிரப்பம் இல்லையே
நபியருள் போதும் வேறு வேண்டியில்லையே
வேறெதுவும் வேண்டியில்லையே
காசுபணம் பாசமெல்லாம் மாயை அல்லவா
காசினியை தாண்டி வரும் நேசமல்லவா
அழியா நேசமல்லவா
சரணம் 2
காலதூரம் எம்மை நபியை பிரித்திருக்கலாம்
வாழும்நபி காலங்கடந்தும் அணைக்கும் அன்னையே
நபி அணைக்கும் அன்னையே
நாளும் என்னில் சுவாசம் போல வாழும் நாதரே
காலமெல்லாம் ஆளுமுங்கள் புகழைப்பாடுவேன்.
என்றும் புகழைப்பாடுவேன்
கற்றுத்தந்த தெல்லாமும் ஞானமல்லவா மெய்ஞ் ஞானமல்லவா
பெற்று பெற்று வாழ்வதெனது வாழ்க்கையல்லவா
நபியிடம் பெற்று பெற்றே வாழ்வதெனது வாழ்க்கையல்லவா.
முற்று பெறா ஆத்மஉறவின் தூயவடிவமே
வெற்றிபெற தயவு வேண்டும் மறைந்த பின்புமே.
நான் மறைந்த பின்புமே
07-07-2020
பாடகர் அபுல் பரக்காத்திற்காக எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக