26 பிப்ரவரி 2017

தேசியத் தலைவரானார் பேராசிரியர் காதர் மொகிதீன்

எங்களிடை மட்டுமிருந்த ஒளிவீசும் வைரம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது *** பெருந்தன்மைப் பண்பினாலும் பேரறிவின் ஒளியினாலும் தன்னிகரில்லா தகைசால் அடக்கத்தாலும் இதுகாரும் தன்னைத் தானே மறைத்துக்கொண்டிருந்த நட்சத்திரத்திற்கு இனி நீங்கள் தான் எங்கள் வானின் சூரியனென மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது *** காதர் மொகிதீன் தங்களைத் தான் வாழும் காயிதே மில்லத்தென நாளும் பார்ப்பதனாலோ என்னவோ கேரள சிங்கங்களும் தாய்ச்சபை தங்கங்களும் சிங்கார சென்னைக்கு தேடிவந்து சிங்காசனம் தந்தார் தங்களுக்கே. *** துறவுக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம், அதிலும் நித்தியப் பகை - ஏனெனில் தலைமை, பதவி, பவிசு அது ஈனும் புகழிவற்றால் நித்தம் நிலையறியாது நிலத்தில் கால் ஊன்றாது ஆகாயத்தில் பறப்பவர்கள் தான் அதிகம் இங்கே. - ஆனாலும் அரசியலில் இருந்தும் துறவியாய் கட்டுச்சோறு கூட இல்லாத எதார்த்த வழிப்போக்கனாய் எங்கள் முன்னே வாழும் தங்களைத் தவிர எட்டுத்திக்கும் தேடினாலும் ஒட்டுமொத்த அரசியலில் யாரைத் தான் சொல்லமுடியும் என் தலைவா?. *** நீங்கள் தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் இந்நாள் இந்திய இஸ்லாமியர்களின் வாழ்வில் இனிய பொன்னாள். *** தேசிய ஒறுமைப்பாட்டிற்காய் மதநல்லிணக்கம் காப்பதற்காய் மதம் கடந்து நேயமுடன் எல்லா சிறுபான்மை சமூகத்தாரின் அடையாளம் காப்பதற்காய் நீங்கள் என்றும் முழங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை பயணத்திற்கு நீங்களே தளகர்த்தரென தலைமை வகிக்கிறீர்கள். *** இனிவரும் நாட்களில் உங்கள் தலைமை நலிவடைந்த இந்திய சிறுபான்மை சமூகத்திற்கு பொழிவு பல பெற்றுத்தரட்டும் இறையவனோடு இனிய அவன் தூதரும் மறையுணர்ந்த நாதர்களும் என்றும் தங்களை வாழ்த்தட்டும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுடன் - வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா. கொள்கை பரப்புச் செயலளாலர் துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் அமீரக காயிதே மில்லத் பேரவை. ******


குறிப்பு: சென்னையில் இன்று (26-02-2017) கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க்கின் தேசிய செயற்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக சமுதாயத் தலைவர் பேராசிரியர் K..M. காதர் மொகிதீன் அவர்களும், பொது செயலாளராக P.K.குஞ்சாலி குட்டி,M.L.A அவர்களும், அமைப்பு செயலாளராக E.T. முகம்மது பஷீர் M.P அவர்களும், பொருளாளராக P.V. அப்துல் வகாப், M.P அவர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மகிழ்வான செய்திக்கு வாழ்த்துமடல்.

மனசிருந்தால்...

இருவரும் ஒரு குடையில் 
கொஞ்சம் கஷ்டம் தான்!
மனம் இருந்தால்
ஊசியின் காதில்
ஒட்டகமும் உலா வரலாம்!

***

இறந்த காலம் போட்டு வைத்த
காலடி தடங்கள் தான்
வழிகாட்டுகிறது!
நிகழ்காலத்தில்
ஊர் செல்ல நினைப்பவர்களுக்கு.

2014-ல் இதே நாளில் எழுதியது

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 பிப்ரவரி 2017

புத்தகம் பற்றி..

ஒவ்வொரு புத்தகத்தை படித்து நிறைவு செய்த பின்னரும் எவ்வளவு மன நிறைவு.. மன மகிழ்வு..!
மூடப்பட்டு கிடந்த அந்த புத்தகப் பெட்டகம் திறந்தவுடன் தான் எத்தனை.. எத்தனை.. புதையல்கள்.. எத்தனை.. எத்தனை.. செல்வக்குவியல்கள் இத்தனை நாளும் உன்னை நான் ஏன் நாடாமல் இருந்தேனோ என்று உள்ளுணர்வு புலம்பிடடும். என் அறிவுக்கண்ணை இத்தனை நாளாய் மறைத்த பேரிருளை நீ விளக்கும் விதம் தான் என்ன புத்தகமே நீ தான் என் மொத்த அகமே!
(ஒரு புத்தகம் படித்து விட்டு புத்தகங்களை பற்றி நான் எழுதியது)

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

எனக்கு மிகப்பிடித்த பாடல்:

எனக்கு மிகப்பிடித்த பாடல்:
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.
- திருநாவுக்கரசர் பாடியது
பாடலின் பொருள் : நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம்.எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா