21 அக்டோபர் 2011

ஆதரிப்பீர் தாய்ச் சபை வேட்பாளர்களை....

09 -அக்டோபர்-2011 அன்று அனுப்பப்பட்ட மின்மடல்.. இது பதிவுக்காக மட்டுமே

ஆணவமும்,அகந்தையும் கிடையாது;

ஆன்மீகமும்,அடக்கமும் நிறைந்திருக்கும்.

அடிதடியும்,அடாவடியும் கிடையாது;

அரவணைப்பும்,ஒருங்கிணைப்பும் மிளிர்ந்திருக்கும்.

ஆடம்பரமும் ஆரவாரமும் கிடையாது;

ஆர்த்தெழும் தக்பீர் முழக்கமும்,ஆர்ப்பரிக்கும் கொள்கைப் பிடிப்பும் நிலை பெற்றிருக்கும்.

பணவேட்கையும்,பதவி மோகமும் கிடையாது;

உளங்குளிர்தலும்,உதவி செய்தலும் உயர்ந்து நிற்கும்.

கட்டப்பஞ்சாயத்தும்,வெற்றுப் பஞ்சாயத்தும் கிடையாது;

அல்லாஹ்வை அஞ்சும் கூட்டமாகவும்,அடியார்களை கொஞ்சும் கூட்டமாகவும் பவனி வரும்.

அதனால் ஆர்த்தெழுந்து ஆதரிப்பீர் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை....

-----------------------------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும், இறைத்தூதர் (ஸல்..) அவர்களின் நல்லாசியும் என்றும் நிறைந்து சூழட்டுமாக!

தற்போது தான் மின்னஞ்சலை பார்க்க நேர்ந்தது!

சகோதரர் முஜீப் அவர்களின் சமூக அக்கரை வரவேற்கத்தக்கது, அல்லாஹ் அருள்வானாக!

நானும் இங்கே என் கருத்தை அன்புள்ளத்தோடு பதிவு செய்கிறேனே அல்லாது வேறெந்த நோக்கமும் இல்லை.

நான் அனுப்பிய மின்மடல் பறிமாற்றம் முஸ்லிம் லீக்கின் மாதம் இருமுறை பத்திரிக்கையாக வரும் 'பிறைமேடை' யில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தலையங்க வாசகங்கள் அவை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் சமுதாய பேரியக்கத்தின் பிரதிநிதி என்னும் அடிப்படையிலும் ஒரு பொறுப்பான சமூகவாதி எனும் அடிப்படையில் நல்லெண்ண ரீதியில் மக்கள் மன்றத்திற்கு பொதுவாக அனுப்பியது. அம்மின்மடல் நமதூருக்கு மட்டுமல்ல தமிழகம் தழுவிய எல்லா நண்பர்களுக்கும் அனுப்பப்பட்ட ஒன்று.

முஸ்லில் லீக் என்பது நமது பாரம்பரியம் காத்த வரலாற்றுக்கு சொந்தமான இயக்கம். இந்திய தேசிய காங்கிரஸோடு அந்நாளில் இருந்த இரண்டு பேரியக்கங்களில் பிரிதொன்று தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்திய சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் அனைவரும் இந்தக் குடையின் கீழ் தான் ஒன்று திரண்டனர். இதுநாள் வரை அதன் மாண்பு மாசுபடாது இஸ்லாமிய சமுகநலன் கருதி உழைத்து வருகிறது.

அந்த மடலில் குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் நிறைந்த இயக்கம் தான் இ.யூ.முஸ்லிம் லீக் ஆகும், அந்த அம்சங்கள் உள்ளவர்களால் நிறம்பியது தான் முஸ்லிம் லீக் எனும் சமூக பேரியக்கம். இதற்கு அன்று முதல் இன்று வரை உள்ள அரசியல் தெரிந்த இஸ்லாமிய நல்லுள்ளங்களே சாட்சி.

இதுவரை முஸ்லிம் லீக் எந்த ஊழலில் ஈடுபட்டு மக்களை ஏய்த்து குடித்திருக்கிறது என எப்போதாவது உண்டா.. இல்லை சாதி அல்லது இன வெறியைத்தூண்டி கீழான அரசியல் நடத்தி மக்களுக்குள் பகைமையை உண்டுபண்ணி சுயலாபம் சம்பதித்தது என யாராலும் கூற இயலுமா அல்லது பணமோசடி..நிலமோசடி..என சத்தியத்திற்கு அப்பாற்பட்டு அது தன் செயல்பாடுகளை ஊக்குவித்த இயக்கம் என எந்த நாளிதழ்களாவது பிரசுரித்த தினங்கள் புலர்ந்தது தான் உண்டா.. இல்லை மக்களின் உணர்வுகளை மோசமான வகையில் தூண்டி வன்முறையால் போராடவைத்து வேடிக்கை பார்த்து அவர்கள் சிறை செல்லவும், குடும்பங்கள் சிதறுண்டு போகவும் காரணமான இயக்கமாக வளர்ந்ததாய் அறியப்பட்ட ஒன்றா.. இது இயற்கையிலேயே அற்புதமான, தலைவர்களால் வழிகாட்டப்பட்ட கண்ணியமான அமைதிப்பேரியக்கம். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அன்று முதல் இன்று வரை மிக சாதுர்யமாக கையாண்டு அரசியல் தீர்வு காணும் ஓரியக்கம்.

நீங்கள் குறிப்பிடுவது போன்று எந்த தனிநபரையும் வைத்து எல்லாவற்றையும் சட்டென விமர்சிப்பது தகாது! மேலும் அது குறித்து இங்கே முழுவிவரங்கள் இல்லாமல் வாதப் பொருளாக்குவது சாலச்சிறந்த ஒன்றல்ல,.

மேலும் இறைமறையின் கூற்றுப் பிரகாரம் மனிதப்பிறவிகள் எல்லோரும் தவறிழைக்கக் கூடிய, பலகீனமானவர்கள் தான், தவறுகளை நயம்பட கூறினால் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சமூகத்தின் கட்டுமானத்திற்கு, சமூகவியலில் சிதைவு நேறாதவண்ணம் காப்பதற்கு, கொள்கை உறுதிக்கு, நம்மவர்களின் மற்றும் நமதூரின் வளர்ச்சிக்கு, இன்றைய சமுதாயத்திற்கு எது தேவை.., யார் அவசியம்.. எந்த இயக்கம் அவசியம் என நாம் சிந்தித்து பார்த்தல் மிக அவசியம். இல்லாது போனால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது போல் ஆகி மாற்றாருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகிவிடும். எல்லோரிலும் உள்ள குறைகளையே கண்டால் குற்றமற்ற யாரும் இருக்கமாட்டார்கள்

ஒரு குடிகாரன் இஸ்லாத்தில் உள்ளவனாக இருந்து அவனின் செயல்பாடுகளால் ஒருவர் ஒட்டுமொத்த இஸ்லாத்தினையே தவறாக விமர்சித்தால் நாம் ஏற்ப்போமா.. அதுபோலவே தான் ஒரு நிறுவனம், ஒரு இயக்கம் இவைகளை யாரையும் வைத்து எடைபோட்டு விடுதல் சரியாகாது.

இதெற்கெல்லாம் ஒரு அப்பாற்பட்ட ஒரு கேள்வி.. நீங்கள் ஆதரிக்க சொல்லும் வேட்பாளர் நூற்றூக்கு நூறு சதம் அரிச்சந்திர வம்சத்தில் வந்த வாய்மையாளராக, இந்தியன் தாத்தாவின் அனைத்து அம்ச குண பாவங்களும் ஒன்றிணைந்து பொது சொத்திற்கு பாதுகாவலராக.. இரவு நேரங்களில் அரசு அலுவல்களை பார்க்கும் போது மட்டும் அரசாங்க விளக்கையும், இடையே ஒருவர் குறுக்கிட்டு பேச வந்த போது அது தனிப்பட்ட விசயம் என சொல்ல அந்த விளக்கை அணைத்துவிட்டு தனது சொந்த விளக்கை ஏற்றி பேசிய கலிபாக்கள் இருந்தது போல இருப்பரென்றெல்லாம் நீங்கள் உத்தரவாதம் தருகிறீர்களா.. நாம் கொஞ்சம் நம் சமூகவியலோடு தொலைநோக்காய் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு நம் நிலைப்பாடு அமைதல் அவசியம்.

மேற்சொன்னவைகளை ஒரு கருத்திற்காகத்தான் சகோதரத்துவத்தோடு பறிமாறிக்கொண்டேன், அவர் கெட்டவர்.. இவர் இப்படி.. என வேறுபாட்டை நமக்குள் நிலைநிறுத்தாமல் எல்லோரும் நம் சகோதரர்கள் என்ற அடிப்படையில் மனதோடு கூடிய முகமலர்ச்சியோடு நாம் எல்லோரும் ஒன்று பட்டு நேசம் பூண்டு, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கிட.. இக்லாசான முறையில் நம்மக்களுக்குள் சிறந்த ஒருவரை.. மக்களுக்காய் உழைக்கும் ஒருவரை யாரின் மனமும் நோகாத வண்ணம் தேர்ந்தெடுத்திட தயவுசெய்து பாடுபட வேண்டும். நம் இஸ்லாமிய சமூகத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.

நேர்மறை சிந்தனையோடு வாழ்வினைத் தொடருவோம்.. சமூகத்தினை ஒருங்கிணைப்போம்!

வஸ்ஸலாம்.

ஜே.முஹையத்தீன் பாட்ஷா (ராஜா முஹம்மத்)

(17-10-2011 அன்று நடைபெறவிருந்த உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி என்னால் அனுப்பபட்ட மடலுக்கு எழுந்த சர்ச்சைக்கு நான் அனுப்பிய பதில்.. இதை முதுவை ஹிதாயத் அவர்கள் உடனே அனைவருக்கும் அனுப்ப நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் உடன் உற்ச்சாக பதில் எழுதி நன்றி தெரிவித்தார்)

கருத்துகள் இல்லை: