29 அக்டோபர் 2011

அவர்கள்..!


அவர்கள்..!
உன்னையே நினைத்தவர்கள்
உயர்நபியை துதித்தவர்கள்
சத்திய சஹாபாக்களை,
சன்மார்க்க சீலர்களை,
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
சந்தோசமாய் நேசித்தவர்கள்
சதா உன் அருளையே யாசித்தவர்கள்.

முன் சென்ற சிலர்
முகங்கள் யாபகம் இல்லை,
அவர்கள் எனக்கு
முகவரி தந்தவர்கள்.
மூத்தவர்கள் சொல்ல-அவர்களின்
முத்தான விசயங்கள் அறிவேன்.

சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சிலர் சென்றனர், - சிலர் சென்றனர்...
சிலகாலம் முன்னர்.

இளவயதில் அவர்களோடு
இன்பமான காலங்கள்,
இதயத்தில் நிறைந்த
இதமான தாளங்கள்.

ஆயிரம் அனுபவங்கள் நிறைந்த
அறிவுப் பொக்கிசங்கள்
அவர்கள் .

வாழ்க்கையை கற்றுத்தரும்
வண்ணமிகு களஞ்சியங்கள்
அவர்கள்.

வசந்தம் தேடிச்செல்லும்
வாசமலர் தோட்டங்கள்
அவர்கள்.

வெற்றாய் விரவிய
வெட்டவெளிக்கு ஒப்பானவர்கள்
அவர்கள்.

மனதால் வெகுளிகள்,
பாமர ஞானிகள்
அவர்கள் மீது பாபமில்லை.

சரிஅத்தின் சட்டம் மீதும்
சடங்கான விசயங்கள் மீதும்,
சங்கை நபிக்காதல் மீதும்,
சற்குண வலிமார் நேசத்தின் மீதும்
ஆசான்கள் அவர்கள்.

திருநபிக் குடுபத்தாரெனில்
திருவுளத்தோடு சங்கை செய்வர்,
பாசநபியின் பெயரைக் கேட்டால்
பயபக்தியோடு சலவாத்து சொல்வர்.

அவர்கள்.....! - நம்
கண்களுக்கு மறைந்திருக்கிறார்கள்,
தூலஉடல் இப்போது இல்லையாயினும்
மறைவாய் வாழ்கிறார்கள்..!
மகிழ்வாய் வாழ்கிறார்கள்..!

ஆத்மாவில் அண்ணலாரின் நேசம்
சுமந்ததால் என்றும் சுகமாய்
நம்முடன் அவர்கள்!.

இறைவ..!
அவர்களுக்கு ஆத்ம சுகமருளி
ஆனந்தம் செய் நாயனே!
அருளால் அணைத்துக்கொள் நாயனே!
அகமதிய அம்சத்தில் பிணைத்துக்கொள் நாயனே!
அனைத்திலும் நிறைத்துக்கொள் நாயனே!




-ஜே.எம்.பாட்ஷா


4 அல்லது 5 வருடங்களுக்கு முன் எழுதியது

கருத்துகள் இல்லை: