24 அக்டோபர் 2011

அநியாயம் இல்லையா..!



பல்லவி
அஹ்லுல் பைத்தை மறந்து நாம் வாழ்வதா
அநியாயம் இல்லையா.. அநியாயம் இல்லையா..!
அல்லா ஹுவே வாழ்த்திக் கூறினான்
குர்ஆனில் இல்லையா.. குர்ஆனில் இல்லையா..!

அனுபல்லவி
அவர்கள் தந்ததே இந்த வாழ்வு நமக்கு..!
அவர்கள் தியாகத்தில் நம் வாழ்க்கை இருக்கு..!

சரணங்கள்
அன்னையவர் கதிஜாவின் வாழ்க்கை யெல்லாம் தியாகமம்மா
ஆருயிராம் பாத்திமாவின் ஆயுளெல்லாம் சோகமம்மா
ஆட்சிசெய்ய விடவில்லையே மாட்சிமிக்க அலிதனையே
சூழ்ச்சிசெய்து விசம்கொடுத்தார் ஆட்சிக்காக ஹஸனவர்க்கும்
நம்மநபி குடும்பம் பட்ட பாடிதுதான்…!

ராஜநபி பிரியர்ஹுஸைன் பீடமேற விரும்பவில்லை
இறைவனையே விரும்பியவர் இரவுபகல் இயம்பிவந்தார்
(கூஃபா)மக்களெல்லாம் மிகஅழைக்க விருப்பமின்றி மனதிசைந்தார்
மிக்கமோச மானஏஜீது படைஅனுப்பி சினந்து நின்றான்
கலிமாவின் முஹம்மதை மறந்து நின்றான்...!

பொறுமையுடன் வீரர்ஹுஸைன் போர்வேண்டாம் என்றுரைத்தும்
கருமையுள்ளம் கொண்டவர்கள் கர்பலாவில் தொடங்கினரே
பிறைஒன்றில் ஆரம்பித்து முறையின்றி போர்நடக்க
இறைத்தூதர் வம்சத்தாரின் உயிர்குடித்தார் பாவிகளே
சத்தியத்தை காத்து நித்ய மானார்ஹுஸைன்…!

ஹக்கன்நபி நாட்டிவைத்த தத்துவத்தை மீட்டெடுக்க
இத்தனைபெரும் தியாகங்களை செய்ததந்தத் திருக்குடும்பம்
இன்றுநாம் முஸ்லிமென முழங்குதற்கு காரணமே
அவ்வுத்தமர்தம் இணையில்லா நெக்குருகும் தியாகங்களே..
அதைநித்தம் நினைத்தாலே ஈமானில் முக்திபெரும்!

குறிப்பு : கூஃபா என்பது மாத்திரை அளவு குறைவாக ஒலிக்க வேண்டும்.


சங்கை நபி இசைக்கோர்வையில் 2016ல் வெளிவந்தது.

-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: