13 அக்டோபர் 2011

தாலாட்டு - புன்சிரிப்பு பூமகனே


பல்லவி :
புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணேஉன்
பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே

அனுபல்லவி:

பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே
இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே

சரணங்கள்:

சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே - அந்த
நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே
நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணேநீ
நாமமதில் அடங்கிடாத மறைபொருள் கண்ணே

அனுபவிக்கும் யாவையுமே ஆய்ந்துபார் கண்ணேஅதில்
ஆன்மீக விளக்கங்கள் கிடைத்திடும் கண்ணே
தெளஹீதின் தெளிவில்நீ லயித்திடு கண்ணேஎன்றும்
லெளஹீக வாழ்விலும்நீ ஜெயித்திடு கண்ணே

பார்ப்பதிலே பரமனையே பார்த்திடு கண்ணேஉன்
கேள்வியுணர்வு இவையணைத்தும் வேறல்ல கண்ணே
அகமியத்தை சுமந்தவர்கள் உயிரடா கண்ணேஉன்
உயிரைவிட உணர்வைவிட மேலடா கண்ணே

கொடும்கள்ளக் கூட்டங்களை வெறுத்திடு கண்ணே - அதை
கடும்சீற்றத் துடனேநீ எதிர்த்திடு கண்ணே
இறையின்பகைகள் விரைவிலேயே அழிந்திடும் கண்ணே -நம்
மறையின்நாதர் மாண்புகளே ஜொலித்திடும் கண்ணே

இகமதிலே பலர்அகம்மலர உழைத்திடு கண்ணேஇந்த
ஜெகமதிலே வேறுமகிழ்வு ஏதடா கண்ணே
இதயத்தூதர் இன்பநெறியில் நிலைத்திடு கண்ணே - அதில்
உதயமாகும் உண்மையில்நீ உயர்ந்திடு கண்ணே


-ஜே.எம்.பாட்ஷா 

என் மகன் சுல்தான் அஹமது நளீர்- ஐ மனதில் வைத்து வாழ்த்தாய் 2002-ல் எழுதியது, 2016ல் சங்கை நபி இசைக்கோர்வையில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை: