28 செப்டம்பர் 2011

ஸலவாத்தை ஓதிடுவோம்



நபிகள் நாயகம் துயில் கொள்ளும் சுவர்க்கத்தளம் (மதினா, அரேபியா)


பல்லவி:

ஸலவாத்தை அனுதினமும் ஓதியே புகழ்ந்திடுவோம்

அல்லாவின் அருளுண்டு அண்ணலாரின் ஆசியுண்டு


இணைப்பு:

சங்கைநபி பேரினிலே...

பொங்கும் இன்ப உளமுடனே...


அனுபல்லவி:

வல்லோனும் அவன் மலக்கும் சொல்லும் உயர் ஸலவாத்தை

எல்லோரும் ஓதிடுவோம் ஏற்றமெல்லாம் பெற்றிடுவோம்


சரணம்:

காதலராம் ஆதம்நபி கன்னிஹவ்வாவை கைப்பிடிக்க-முதல்

மகராகத்தந்த சிகரமதைச் சிறப்புடனே பகர்ந்திடுவோம்

போதகராய் வந்த எல்லாத் தூதரெல்லாம் துதித்துவந்த

தூயப்பொருளை இதயஅருளை நேயத்துடனே சுகித்திடுவோம்

சரித்திரங்கள் படைத்துவிட்ட

சஹாபாக்கள் யாவருமே

சதாநேரமும் சொல்லியவாரே சாந்த உருவினரை உவந்திடுவோம்!


போராட்ட வாழ்க்கையது அழகு தேரோட்டமாகிடவே-இறைன்

பாரட்டும் நபிமீது சீராட்டைச் சாற்றிடுவோம்

வறுமையெனும் சூறாவளியில் சுழற்றியெறிந்து சுருளும்போது

மிடுமை நீங்கி மீண்டுவரவே அருமைநபியை பாடிடுவோம்

கண்ணீர் மழையில் கண்ணம் நனைந்தால்..

உள்ளக்குமுரலில் உயிரே சிதைந்தால்..

நல்லநேரம் பிறக்க வேண்டி நாயகரைப் போற்றிடுவோம்!


பாவமூட்டைச் சுமந்துக்கொண்டு தேவசமூகம் நிற்கும்போது-எதும்

தேவையற்ற ரஹ்மானின் தீர்க்கதரிசிக் காப்பற்ற,

கோபப்பார்வை வீழ்ந்திடாமல் கோபுரநயகர் நம்மீது

தாபப்பட்டு தலையுயர்த்தி தகையோன் சந்நிதி மன்றாட

மீஜான் தட்டில் நன்மை கணக்க

கொடிய பாலம் நொடியில் கடக்க

புகழின்கொடியில் நன்றே ஒதுங்க புகழானோரை புகழ்ந்திடுவோம்!


ஸலவாத்து: நபிகள் நாயகம் (ஸல்) மீது சொல்லப்படும் சோபனம்


-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது 2001


1 கருத்து:

Qaseeda Tk சொன்னது…

கண்ணீர் மழையில் கண்ணம் நனைந்தால்..
உள்ளக்குமுரலில் உயிரேச்சிதைந்தால்..
நல்லநேரம் பிறக்க வேண்டி நாயகரைப் போற்றிடுவோம்! Aameen Masha Allah