03 மே 2016

கொலைகாரி!


(கத்திரி வெயிலுக்கு ஓர் குச்சி ஐஸ்) ஏனடி இப்படி படுத்துகிறாய் என்னை கேட்காமலேயே எண்ணத்திலெல்லாம் உன்னையே உடுத்துகிறாய் * உன்னைப் போல் மானில்லை மாநிலத்தில், மானினம் அறியாத துடுக்கு நடையழகி நீ! * அகத்தினை காவியம் பாடியவர்களுக்கே செகத்தினில் குளிர்காய்ச்சல் பாய்ச்சிடும் முகத்தினை உடையவள் நீ! * மகாகவிகளின் சிலகவிகள் சாகாவரம் பெற்று என்றென்றும் சகங்தனில் சஞ்சரிக்குமே அப்படியொரு மகாகவிதை நீ! * எதிர்படும் ஒவ்வொரு முறையும் எழுகிறது எழுத்துக்களில் சூழ்கொள்ளாத கவியோடை! * உன்னை மெச்சும் கண்கள் பிற பேரழகிகளையும் துச்சமென பார்க்கிறது * நீ நடக்கும் இடமெல்லாம் அரங்கமாய் அங்கீகரிக்கப்படுகிறது * சூழ்ந்திருக்கும் மக்களெல்லாம் சூலையில் இட்ட களிமண்ணாய் சிவக்கிறார்கள் * நடமாடும் கொலைக்களமே நீ எட்டெடுத்து வைத்தாலே செத்துச் சுண்ணாம்ப்பாகிறார்கள்... விசவாயு தாக்குதல் கூட இவ்வளவு விஷமம் செய்யாதே… பாவம் ஆண்கள் பிழைத்துவிட்டுத்தான் போகட்டுமே. * ஈவிரக்கமெல்லாம் உன் நெஞ்சத்தில் கொஞ்சமும் இல்லையா * உன் குலத்தார் உன்னை இப்படி எங்கள் சித்தம் குடிக்கவா சிலையென வீதியில் விட்டனர் * ஆயிரம் கூர் ஊசிகளால் அடுத்தடுத்து தைக்கிறாயே இதெல்லாம் எப்படி இம்சிக்க்குமென கொஞ்சமும் தெரியாதா… * வஞ்சம் தீர்க்க வழியா இல்லை வகையில்லாது பொங்கி வழியும் வனப்பால் வதைத்தால் இனிப்பாய் நீ வந்து அணைப்பாயென மனப்பால் குடித்திருக்கிறார்களே உன் சித்துவிளையாட்டு தெரியாமல். * ஐயோ கொலைகாரி! குளிர்முகம் காட்டி வெளியேவெல்லாம் சென்று தொலையாதே இது தேர்தல் நேரம் ஏற்கனவே எம்மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள். * -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா 12.53 பிற்பகல்

கருத்துகள் இல்லை: