02 மார்ச் 2016

எங்கே செல்லும் இந்த பாதை!



எங்கேயோ அழைத்துச்செல்கிறது
வாழ்க்கை,
எங்கே என்று தான் தெரிவதில்லை!

போட்டிருக்கும் பாதையில்
போடலாம் நடை என்றால்
சற்றும் அறியாத
முற்றும் தெரியாத
புதியதோர் பாதை 
புரியாது விரிகிறது
புதிராகவே விரிகிறது!

எடுத்த அடி தான் எங்கேயோ
அடுத்த அடி தான் எங்கேயோ
என்பது தான் விளங்கவில்லை!

நடப்பது தான் நடக்கும்
இதில் நாடாள்பவனும்
நாதியற்றவனும் அடக்கம்!

மாட்டேனென 
மறுதலிக்க முடியாது,
எனக்கானதல்லவென - யாருக்கும்
மாற்றிவிட முடியாது!

இயற்கையின் நியதியாய்
இயங்கிவரும் இதையெல்லாம்
எள்ளளவும் மனிதனினால்
வெல்லவெல்லாம் முடியாது!

எப்படி.. எப்படியெல்லாம்
எட்டியவரை சிந்தித்து
எதைச்செய்து சுழன்றாலும்
சுற்றிவரும் காடிகாரம்
எப்படிச் சுழற்றுமென்று
எவருக்குமே தெரியாது!

நொடிமுள்ளின் அடுத்த நொடி
இன்பத்தின் பிடியிலா - அல்ல
இதயம் நொருங்கும் இடியிலா
இது யாருக்கும் தெரியாது!

எல்லாம் அவன் செயலென
எல்லோரும் சொல்லுகின்றார்
எல்லாமுமான அவனை
எதுவுமே அறியாது! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: